Friday 19 October 2012

இவர் செய்யும் பூசைகள் சர்ப்பனையே! (வஞ்சனையே!)




இதனை நான் சொல்லவில்லை. அதுவும் பூசை செய்வோரைப்பற்றி “இவர் செய்யும் பூசைகள் வஞ்சனையே” என்று பட்டினத்தார் கூறியுள்ளார். அவர் அப்படிக்கூறக் காரணம் என்ன? அவர் மட்டுமல்ல எம் முன்னோர்கள் பலரும் பலவிதமாக எடுத்துக் கூறி இருப்பினும் நாம் அவற்றை சிறிதும் பொருட்படுத்துவதே இல்லை.

அதனாலேயே உலகெங்கும் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் கோயில்கள் கட்டி, கும்பாபிஷேகம் செய்து காலம் தவறாது பூசைகள் நடாத்திக் கொண்டு இருக்கிறோம். அந்தப் பூசைகளுக்காக எவ்வளவு பொருட்களை நாம் அள்ளி வழங்குகிறோம். நம்மை பிறர் பக்தன் என்று சொல்லவேண்டும் என்பதற்காகவும் எம்மைப்போல் திருவிழாச்செய்ய யார் இருக்கிறார் என்று கூறிப் பெருமை கொள்வதற்காகவும் பொருளை அள்ளி இறைப்போரும் இருக்கின்றனர். நாம் செய்யும் பூசைகள் யாவும் உண்மையானவையா? அவர் சைவக்குருக்கள், இவர் சிவாச்சாரியார், மற்றவர் பரம்பரை ஐயர் என்று ஏதேதோ காரணங்கள் கூறி, பட்டங்கள் சூட்டி கடவுளுக்கு பூசை செய்வோரை கடவுளுக்கும் மேலாக மதிப்பது சரியா?


பட்டினத்தார் என்ன கூறியுள்ளார் என்பதைப் பார்ப்போமா?

“நேமங்கள் நிட்டைகள் வேதங்கள் ஆகம நீதிநெறி
ஓமங்கள் தர்ப்பணம் சந்தி செபமந்திர யோகநிலை
நாமங்கள் சந்தனம் வெண்ணீறு பூசி நலமுடனே
சாமங்கள் தோறும் இவர்செய்யும் பூசைகள் சர்ப்பனையே” 

‘முறைகள்(நேமங்கள்), நம்பிக்கைகள்(நிட்டைகள்) என்று சொல்லியும், வேதங்கள், ஆகமங்கள் ஆகியவற்றின் நீதிநெறி என்று கூறியும், ஓமங்கள் செய்யவேண்டும், நீர்க்கடன் (தர்ப்பணம்) செய்யவேண்டும் எனவும், காலை, உச்சிப்பகல், மாலை நேரங்களில் மந்திரங்களால் செய்யும் வழிபாடு (சந்தி செபமந்திரம்) என்றும், தியானத்தில் மூச்சை அடக்கி இருக்க வேண்டும் (யோகநிலை) என்றும், கடவுளின் பெயர்களைக் கூறுங்கள் (நாமங்கள்) என்றும், சந்தனத்தையும் திருநீற்றையும் பூசி அழகாக சாமங்கள் தோறும் இவர்கள் செய்கின்ற பூசைகள் வஞ்சனையே (சர்ப்பனையே)’.  என்று பூசைகள் செய்வதற்காகச் சொல்லப்படும் அத்தனை செயற்பாடுகளையும் சேர்த்துத் தொகுத்து எல்லாவற்றையும் வஞ்சனையே என்று கோடிட்டு பட்டினத்தார் காட்டித்தந்தும் நம் தமிழ்ச்சாதி இன்னும் அவர் சொல்லைப் புரிந்து கொள்ளவில்லையே!

வஞ்சனை என்றால் என்ன? உள் ஒன்று நினைத்து, புறம் ஒன்று செய்வது வஞ்சனையாகும். தாங்கள் செய்வது மடமை என்பதும் கபடம் என்பதும் பூசை செய்வோர் பலருக்கு நன்றாகத் தெரியும். மனித வாழ்க்கைப் போராட்டத்தின் வெற்றிக்காகவே தெரிந்தும் அவர்கள் பூசைகளை செய்கிறார்கள் என்பதை நாம் உணர்ந்து, நம்மை நாமே திருத்திக்கொள்ளவேண்டும். ‘வஞ்சனைகள் செய்வாரோடு இணங்க வேண்டாம்’ என்பது தமிழர் சொன்ன உலகநீதி அல்லவா?
இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment