Wednesday 10 October 2012

உண்மையான கடம்பமலர் எது?

முருகன் அணிந்த வெண்கடம்ப மரப்பூ


சங்க இலக்கியம் சொல்லும் கடம்பமலரை, விக்கிபீடியா (Wikipedia) கடம்ப மலர் என்று சொல்லவில்லை. கிருஷ்ணன் கோபியருடன் ஆடி மகிழ்ந்த மரத்தை ஹிந்தியில் “கடம்ப்” என்பார்கள். அதனையே விக்கிபீடியா சொல்கிறது. அதன் தாவரவியற் பெயர் கடம்ப(Cadamba) என முடிவதால் இந்திய மொழிகளில் எல்லாம் அதனை கடம்ப (Neolamarchia Cadamba) என அழைப்பர். அந்த மரத்தை சங்க இலக்கியம் சொல்லும் கடம்பமரம் (kadamba) என பலரும் நினைக்கிறார்கள். அப்பூவை கீழேயுள்ள படத்தில் பாருங்கள். உருண்டையாக கோளமாக இருக்கின்றது.  அதன் நிறமோ மஞ்சளும் வெள்ளையும் சேர்ந்தே இருக்கின்றது.

கிஷ்ணன் கோபியருடன் ஆடிய கடம்பா[கடம்ப்] மரப்பூ

எமது சங்ககாலப்புலவர்கள் சங்க இலக்கியங்களில் கூறியிருக்கும் கடம்பமரத்தில்  வெண்கடம்பு (Barrintonia Calyptrata), செங்கடம்பு(Barringtonia Acutangula) என இருவேறு கடம்பமரங்கள் இருக்கின்றன. கடம்பமரத்தை மராமரம் என்றும் தமிழில் சொல்வர். கடம்பமலர் எப்படி இருக்கும் என்பதை சங்க இலக்கியப் பாடல்களால் அறிவோமா?

“நெடுங்கான் மரா அத்துக் குறுஞ்சினை பற்றி
வலஞ்சுரி வால் இணர் கொய்தற்கு”               
                                             - (ஐங்குறுநூறு: 383)

வலமாகச் சுழன்று ஒவ்வொரு பூவாக கீழிறங்கி வந்து, தொங்குகின்ற வெள்ளைநிறப் பூங்கொத்தைப் பறிக்க உயர்ந்த கடம்பமரத்தின் சிறுகிளையைப் பற்றிப் பிடித்ததாக ஐங்குறுநூறு சொல்கிறது. ‘வலஞ்சுரி வால் இணர்’ எனும் சொல் வலமாகச் சுரித்த வெள்ளைநிற(வால்) பூந்துணரை கடம்பம் பூந்துணராகச் சுட்டுகின்றது. வெண்கடம்ப மரம் இருந்ததையும் அதன் மலர் பூந்துணராகத் தொங்குவதையும்  இந்த ஐங்குறுநூற்றுப் பாடலால் அறியலாம்.

முருகன் அணிந்த செங்கடம்ப மரப்பூ

“செங்கான் மராஅத்து வரிநிழல் இருந்தோர்”     
                                             - (ஐங்குறுநூறு: 381)
சிவந்த பூ(செங்கான்) உள்ள கடம்பமர நிழலில் இருந்தவர்களை இப்பாடல் வரிகாட்டுகிறது. ஆதலால் செங்கடம்பு மரமும் இருந்தை நாம் தெரிந்து கொள்ளலாம். 

விக்கிபீடியா காட்டும் கடம்பபூப் போல் கோளமாக, சங்க இலக்கியம் சொல்லும் கடம்ப பூந்துணர் இருக்காது என்பதை முருகனின் மார்பில் அசையும் கடம்பபூமலையை 
“இருள்படப் பொதுளிய பராரை மராஅத்து 
உருள் பூந்தண்தார் புரளும் மார்பினன்”     
                                          -(திருமுருகாற்றுப்படை: 10 -11)
என்று நக்கீரர் சொல்வதும் எடுத்துக் காட்டுகிறது.

“உருள்பூந்தண்தார்” என்பது உருளை வடிவான பூந்தார் என்பதையே குறிக்கின்றது. அது உருண்டை (கோளம்) வடிவான பூந்தாரைக் குறிக்கவில்லை. மேலே படத்தில் உள்ள வெண்கடம்பு மலரும் செங்கடம்பு மலரும் உருளையாக இருப்பதைப் பாருங்கள். அத்துடன் இன்று திருப்பதி என அழைக்கும் இடம் அந்நாளில் வெண்கடம்புக் காடாக இருந்ததால் வெண்கடம் என்றும் வேங்கடம் என்றும் அழைக்கப்பட்டது. அதனை திருப்பதி இறைவனை வெங்கடேஸ்வரன் என்றும் வேங்கடேஸ்வரன் என்றும் சொல்வதால் அறியலாம். 

உடம்பெனும் மனையகத்துள் உள்ளமே தகளியாக
மடம்படும் உணர்நெய் அட்டி உயிரெனும் திரிமயக்கி
இடம்படும் ஞானத்தீயால் எரிகொள இருந்து நோக்கில்
கடம்பமர் காளைதாதை கழல் அடி காணலாமே
                                                            - (பன்.தி: 4: 75:4)
இத்தேவாரத்தில் திருநாவுக்கரசு நாயனார் காட்டும் கடம்பமர் காளையான முருகனின் கழுத்தில் எப்படி உண்மையான கடம்பமலர் மாலையைக் காண்பது? அதை மட்டுமா இழந்தோம்? கள்ளிமரத்தின் உள்ளே இருக்கும் அகில் பிளவு, அகில் குறடுகள் எம்மைவிட்டு போய் தற்போது அகில் எனும் போர்வை போர்த்தி அகரு மரக்கட்டைகள் வலம் வருகின்றன. கடம்பமரம் 'கடம்ப்' மரமாக உருமாற, கள்ளியின் அகில் அகருமரமாக காட்சிதர, உண்மையான கறிவேப்பிலையும் கண்ணை விட்டு மறைய போலிக் கறிவேப்பிலையும் ஒருவருடமாக வலம்வரத் தொடங்கிவிட்டது. இப்படி நோய் தீர்க்கும் மரங்கள் பலவற்றை எம்மை அறியாமலேயே நாம் இழந்து கொண்டு இருக்கிறோம்.  தமிழர் மரங்களை மறக்கும் மனிதர் என்பதை உலகம் நன்கு அறிந்து வைத்துள்ளது.

எனவே நம் முன்னோர் சொன்ன உண்மையான கடம்பமலர் எது என்பதை நாம் அறிந்துகொள்வதோடு அதனை எமது இளம் தலைமுறயினர்க்கு எடுத்துச் சொல்வோமா!
இனிதே,
தமிழரசி.

6 comments:

  1. மிக்க நன்றி
    அருமையான தகவல்
    கொஞ்ச காலமாக தமிழ் படிக்கும் ஆசை
    திருமுருகாற்றுப்படை படித்தேன். கடம்ப மலர் பற்றி ஆராய்ந்தபோது உங்களிடமிருந்து கிடைத்த தகவல் உபயோகமாகவும் உற்சாகமாகவும் இருந்தது
    மேலும் எதிர்பார்க்கின்றோம்

    ReplyDelete
    Replies
    1. மகிழ்ச்சி. கடம்பமலர் பற்றி ‘கடம்பும் கண்டியும்’ என்ற தலைப்பில் எழுதியுள்ளேன். அவற்றையும் பாருங்கள்.
      https://inithal.blogspot.com/2013/01/1.html

      https://inithal.blogspot.com/2013/01/2.html


      Delete