Sunday 14 October 2012

என்னவள கூட்டிவாவே!



பண்டைய இலங்கையில் இருந்த சங்ககாலப் பழமைமிக்க ஊர்களில் குதிரைமலையும் ஒன்று. அக் குதிரைமலை இப்போதும் மன்னாரில் இருந்து புத்தளம் செல்லும் பாதையில் உள்ள வில்பத்து பூங்காவனத்தின் ஒருபகுதியாக இருக்கிறது. அந்தக் குதிரைமலையின் இடிந்தகரை என்ற ஊரில் அந்நாளில் வாழ்ந்த தமிழர் இயற்கையோடு இயைந்து வாழ்ந்தனர். அவர்கள் தேவைக்கு அதிகமாக பொருளைத் தேடாத பெருளாதார நிறைவு உடையவர்களாக இருந்தனர். அங்கு  ஓர் இளைஞன் வாழ்ந்தான். அவனுக்கு வசதிகள் இருந்தும் திருமணம் நடைபெறவில்லை. அவ்விளைஞனின் மன ஏக்கத்தை குதிரமலையின் நாட்டுப்பாடல் சொல்கிறது.
குதிரைமலை

ஆண்:
இடிஞ்சகர ஓரத்தில
          இத்திமர நிழலிருக்கு
கடிச்சுத் தின்ன கரும்பிருக்கு
          கட்டழகி யாரிருக்கா!

ஒத்தமாட்டு வண்டிகட்டி
          ஓட்டிச்செல்ல நானிருக்க
கத்தும்கிளி குரலசைய  
          கதையளக்க யாரிருக்கா!

முத்துச்சம்பா நெல்லிருக்கு
          மூணுகாணி நிலமிருக்கு
பக்குவமாய் சமச்செடுக்க
           பக்கத்துணை யாரிருக்கா!

காளைமாடு நாலிருக்கு
           காவலுக்கு நாயிருக்கு
களத்துமேடில நானிருந்தா
           கஞ்சியூத்த யாரிருக்கா!

ஐஞ்சுவெள்ளி குடமிருக்கு
           ஐம்பொன் நகையிருக்கு
பஞ்சுமெத்த தானிருக்கு
           படுத்துறங்க யாரிருக்கா!

ஆறுகடந்து வந்தா
           அழகான வீடிருக்கு
ஆற்றுமண மேட்டில 
            அடியளக்க யாரிருக்கா!

பத்துபடி பால்கறந்தா
            பகிர்ந்துதர யாரிருக்கா
எத்தித்திரி காக்கையாரே
            என்னவள கூட்டிவாவே!
                                                      -  நாட்டுப்பாடல் (குதிரைமலை)
                                          - பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து) 
இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment