Wednesday 21 November 2018

தாயகமண்ணை நினைத்திடும் போது



தாயக மண்ணை நினைத்திடும் - போது
         சேயென துள்ளம் சிவக்கின்றதே
காயுள் கனியும் சுவை போல - என்
         கருத்துள் கனிந்த காவியமே
தீயுன் உடலைத் தழுவிடுங்கால்தீரா
         துயரென் உள்ளம் தழுவியதே
தோயும் நினைவுச் சிற்றலையில் - நெஞ்சு
         தீட்டும் துயரம் பற்பல காண்

படிக்கும் காவியச் சொற்களிலே - நின்
         பருவ இனிமை மின்னலிடும்
துடிக்கும் எந்தன் உளங்கூட  - உன்
         தூய காதலில் தாளமிடும்
கடிக்கும் சுவை மாங்கனியுமே - இளங்
         காலக் களிப்பை நினைவூட்டும்
வடிக்கும் ஓவிய வரியெல்லாம் - உந்தன்
         வடிவ அசைவின் எழில்காட்டும்

இருளைக் கண்டே அஞ்சுகிறேன் - நின் 
         எழிலே இருளில் மிஞ்சுவதால்
கரிய கடலைக் காணுகையில் - சுழல்
         காவிய விழிகளை மீட்டுகிறாய்
கருத்த வானைப் பார்த்திட்டால் - என்
         கனவுத் துடிப்பின் தாரகையாய்
விரிந்தே கண்ணைச் சிமிட்டியெங்கோ - எனை
         வாவென் றழைத்தே மறைகின்றாய்

பூரண நிலவின் பொற்கதிரில் - மது
        பொங்கும் இளமைப் பேருருவாய்
தாரணி மகிழப் பண்மீட்டும் - ஓடை
        தாளங் கூட்டும் இசையொலியாய்
சீரணிக் கனவின் கருத்தெனவே - என்றன்
        சிந்தனைக் கவியின் உயிர்த்துடிப்பாய்
பாரினில் வாழ்ந்த உனைமீண்டும் - நான்
        பார்த்து இரசித்து மகிழ்வேனோ!

No comments:

Post a Comment