Monday 29 September 2014

தென்றல் அசையக் கற்றது யாரிடம்?


காற்று வீசுகிறது. அதாவது ஓரிடத்தில் இருந்து இன்னோர் இடத்துக்கு அசைந்து - இயங்கிச் செல்கிறது. அப்படி காற்று இயங்கும் திசையை வைத்து அத்தத்திசையில் இருந்து வீசும் காற்றுக்கு நம்முன்னோர் ஒவ்வொரு பெயர் வைத்துள்ளனர்.
கிழக்கில் [குணக்கில்] இருந்து வீசும் காற்றை ‘கொண்டல்’ என்றனர்.
தெற்கில் இருந்து வீசும் காற்றை ‘தென்றல்’ என்றனர்.
மேற்கில் [குடக்கில்] இருந்து வீசும் காற்றை குடக்காற்று என்றனர். அதுவே கோடைக்காற்று.
வடக்கில் இருந்து வீசும் காற்றை ‘வாடை’ என்றனர். 

மதுரை நகரில் நடைபெற்ற காதல்விழா பற்றி சொல்லும் இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் ‘கொண்டற்காற்று பாண்டிய மன்னனின் கூடல் நகரிலே புகுந்து நெடுவேள் என்று சொல்கின்ற மன்மதனின் வில்விழாவைக் [ காதல்விழாவைக்] காணும் பின்பனிக்காலத்து [பங்குனி] பனியரசன் எங்கே உள்ளான்?’ எனக் கேட்டதாம் என்கிறார். அதனை

“கொண்டலொடு புகுந்து கோமகன் கூடல்
வெங்கண் நெடுவேள் வில்விழாக் காணும்
பங்குனி முயக்கத்து பனியரசு யாண்டுளன்”     - (சிலம்பு: 14:110 - 112)
எனும் சிலப்பதிகார வரிகள் சொல்கின்றன. இது கிழக்கே இருந்து வீசிய பின்பனிக்கால கொண்டல் காற்றை எடுத்துச் சொல்கிறது.

ஆனால் பண்டைத் தமிழரால் காற்றுகளிலே மிகச்சிறந்த இடத்தில் புகழ்ந்து கூறப்படும் காற்று தென்றல் காற்றாகும். தம் முன்னோர் வாழ்ந்த தென்திசையிலிருந்து வீசுவதாலோ அன்றேல் என்றும் தென்கடலே தமிழருடைய கடலாக இருந்ததாலோ தென்றல் காற்றின் மேல் பற்று அதிகமாகவே இருந்திருக்கிறது. தென்கடற்கரையில் நின்று மெத்தென எம் உடலை வருடித் தழுவிச் செல்லும் தென்றற்காற்றை நுகர்ந்தோருக்குத் தெரியும் அதன் இதமான சுகத்தின் உண்மை. அந்தத் தென்றல் வந்து எம்மைத் தொடும் போது தோணும் இன்பத்திற்கு ஈடேது? மென்மையாக பய பக்தியோடு இயங்கத் தென்றல் யாரிடம் கற்றது?

கிழக்கே இருந்து வந்த கொண்டலும் மதுரை நகரில் வில்விழாக்காணவந்த பனியரசன் எங்கே உள்ளான்? எனக்கேட்டது என்றாரே இளங்கோவடிகள். அதுபோல தெற்கே இருந்து வந்து மதுரைக் ‘சோலையில் நுழைந்து, வாவிக்குள் புகுந்து, தாமரைமலரைத் தடவிப் பார்த்து, பசுமையான இருவாட்சி, முல்லை, மல்லிகைப் பந்தர்களில் எல்லாம் தாவிச் சென்று மகரந்தங்கள் விரிந்த மலர்களின் நறுமணத்தைச் சேகரித்து, குளிர்ச்சியோடு மென்மையாய் இயங்கும் தென்றலானது அங்கங்கே பல இடங்களிலும் சென்று அந்தக்கலை என்ன சொல்கிறது? இது என்ன சொல்கின்றது? என கலைகளை ஆராய்ந்து கற்று அறியும் மாணவனைப் போல இயங்குமாம்’ என்கின்றது திருவிளையாடற் புராணம்.

“பொங்கரில் நுழைந்து வாவி புகுந்து பங்கயம் துழாவிப் 
பைங்கடி மயிலை முல்லை மல்லிகைப் பந்தர் தாவிக்
கொங்கலர் மணங்கூட்டு உண்டு குளிர்ந்து மெல்லென்று தென்றல்
அங்கங்கே கலைகள் தேரும் அறிவன் போல் இயங்கும் அன்றே” 
                                  - (திருவிளையாடற் புராண திருவாலவாய்க் காண்டம்: 19) 

“பொங்கரில் [சோலையில்] நுழைந்து வாவி புகுந்து பங்கயம் [தாமரை] துழாவிப் [தடவி]
பைங்கடி [பசுமையான] மயிலை [இருவாட்சி] முல்லை மல்லிகைப் பந்தர் [பந்தல்] தாவிக்
கொங்கலர் [மரந்தம் விரிந்த] மணங்கூட்டு [மணத்தை] உண்டு [சேகரித்து] குளிர்ந்து மெல்லென்று [மென்மையாகத்] தென்றல்
அங்கங்கே [பல இடங்களிலும்] கலைகள் தேரும் [தேர்ச்சிபெறும்] அறிவன் [மாணவன்] போல் இயங்கும் அன்றே”

கலைகள் பல கற்கும் மாணவர் பொறுமையோடு பாடசாலை, கல்லூரி, பல்கலைக்கழகம் நூலகம் என்று சென்று தேடி ஓடித் திரிந்து படித்து, ஒவ்வொன்றாய் ஆராய்ந்து குறிப்பெடுத்து நல்லனவற்றைச் சேகரித்து கற்று மகிழ்வோடு மென்மையாகத் திரிதல் போல தென்றலும் இயங்கித் திரிகிறதாம். கற்கும்  மாணாக்கர் போல் தென்றல் அசைகிறதாம். 
இனிதே,
தமிழரசி.

Sunday 28 September 2014

பாரின் பசுமை மீண்டிடுமோ!!


காட்டுமரம் தேடிவெட்டி
காலை மாலை சமையல் செய்தோம்
துட்டுநிதம் காணவேண்டி
ஆலை ஆலை கடுதாசி செய்தோம்
கட்டுமரம் கட்டிகொண்டு
அலை மேலை கப்பல் செய்தோம்
நாட்டுமரம் யாதுமில்லை
நாளை வேளை யாது செய்வோம்
வீட்டுமரம் நடுவாரில்லை
வேலை வேலை யாது செய்வோம்
பட்டமரம் காணவில்லை
பாலை நிலை ஆகச் செய்தோம்
பட்டமரம் தளைத்திடுமோ!
பாரின் பசுமை மீண்டிடுமோ!!
                                                       - சிட்டு எழுதும் சீட்டு 91

Saturday 27 September 2014

தளிர்க்கரம் நீட்டவல்லாய் அல்லாயோ!

என்போடு கசிந்துருகி
இன்னிசை பாடவல்லேன் அல்லேன்
அன்போடு  ஒருதரம்
அலர்மலர் சூட்டவல்லேன் அல்லேன்
இன்போடு உன்நாமம்
            இதயத்தே மீட்ட்வல்லேன் அல்லேன்
துன்போடு துவழாது
             தளிர்க்கரம் நீட்டவல்லாய் அல்லாயோ!

Thursday 25 September 2014

ஆசைக்கவிதைகள் - 95


ஆண்: விழிகள் இரண்டும் மூடியே
வார்த்தை ஏதும் பேசாது
மௌனமாக நின்றாளே
மனதை தட்டி சென்றாளே!
- நாட்டுப்பாடல் (ஈழம்)
                                                       (பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து)

Wednesday 24 September 2014

குறள் அமுது - (95)

குறள்:
பயந்தூக்கார் செய்த உதவி நயந்தூக்கின்
நன்மை கடலின் பெரிது                                         - (குறள்: 0103)

பொருள்:
எதுவித எதிபார்ப்பும் இல்லாமல், ஒருவர் செய்த உதவியின் அளவைச் சீர்தூக்கிப்பார்த்தால் அதன் நன்மை கடலைவிடப் பெரிதாக இருக்கும்.

விளக்கம்:
பிறருக்கு உதவி செய்யும் பொழுது அதனால் தனக்குப் பயன் கிடைக்கும் என்று எதிர்பாராது செய்கின்ற உதவியின் தன்மை எப்படிப்பட்டது என்பதை இத்திருக்குறள் எடுத்துச் சொல்கிறது. நாம் இவருக்கு உதவி செய்தோமேயானால் இவர் எனக்குப் பின்னர் உதவுவார் என எதிர்பார்த்து உதவுவோர் பலராவர். அத்தகைய எதிர்பார்ப்பு சிறிதும் இன்றி பிறருக்கு உதவுவோரும் இருக்கின்றனர்.

தாம் செய்யும் உதவிக்கு எத்தகைய பயன் திரும்பக் கிடைக்கும் என்று எண்ணாது, ஒருவர் மற்றவருக்கு செய்கின்ற உதவியின் பெருமதியை அளவிட்டுப் பார்ப்போமேயானால் அதனால் கிடைக்கும் நன்மை கடலைவிடப் பெரிதாய் இருக்கும்.

இந்த உலகில் தன்னலம் கருதாப் பெருங்கொடையாளி இயற்கை அன்னையே. உலக உயிர்கள் வாழ்வதற்கு தேவையான அனைத்தையும் அள்ளிக் கொடுப்பது இயற்கையே. கடலும் இயற்கையின் ஒரு கூறே. இன்றைய மனிதர்களாகிய எமக்கு இயற்கையின் தொழிற்பாடுகள் அந்நியமாய்ப் போய்விட்டன. ஐபாட், ஐபோன் என மணிக்கணக்கில் மூழ்கிக் கிடக்கும் எமக்கு காடென்ன? மலையென்ன? கடலென்ன? எல்லாமே வேண்டாப் பொருளாய் மாறிவிட்டதில் என்ன வியப்பு?

கடற்கரையில் நின்று கடலை, கடலலையைப் பார்த்து இரசித்து, கடற்காற்றை நுகரும் நாம் எப்போதாவது கடல் எமக்கு அள்ளித்தரும் பொருட்களைப்பற்றிச் சிந்திக்கிறோமா? கடல் எம்மிடமிருந்து எதுவித பயனையும் எதிர்பாராது மீன், நண்டு, இறால், கணவாய், சிப்பி, சங்கு, முத்து, பவளம் என எத்தனையோ பொருட்களை எமக்குத் தருகிறது. அத்தகைய கடலைவிட பயனைச் சிறிதும் எண்ணிப்பாராமல் செய்கின்ற உதவி பெரிதாகும்.

Tuesday 23 September 2014

அடிசில் 84

அவித்த முட்டைப்பொரியல்
 - நீரா -      

தேவையான பொருட்கள்:
முட்டை - 6
மிளகு தூள் - ¼ தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - ½ தேக்கரண்டி
எலுமிச்சம் பழச்சாறு - ½ தேக்கரண்டி
எண்ணெய் - பொரிப்பதற்கு  
உப்பு - தேவையான அளவு

செய்முறை: 
  1. முட்டை மூழ்கும் அளவுக்குத் தண்ணீர்விட்டு உப்பும் சேர்த்து, நன்கு வேகவைக்கவும்.
  2. வெந்ததும் தண்ணீரை வடித்து குளிர்ந்த நீரில் மூட்டையைப் போட்டுவைக்கவும்.
  3. முட்டை ஆறியதும் அதன் கோதை உரித்து முட்டையை எடுக்கவும்.
  4. அவித்தமுட்டையை முள்ளுக்கரண்டியால் சுற்றவரக் குத்திக்கொள்க.
  5. ஒரு கண்ணாடிப்பாத்திரத்தில் மிளகுதூள், மிளகாய்த்தூள், எலுமிச்சம் பழச்சாறு, உப்பும் சேர்த்து இரண்டு தேக்கரண்டி தண்ணீர் விட்டு கலந்து கொள்க.
  6. அக்கலவையுள் முட்டையைப் போட்டு புரட்டி 15 நிமிடம் ஊறவிடவும்.
  7. வாயகன்ற பாத்திரத்தில் எண்ணெய்விட்டுச் சூடானதும் முட்டைகளைப் போட்டுப் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.

Sunday 21 September 2014

பரம் இருப்பது எவ்விடம்?



பரம் பொருள் எங்கே இருக்கின்றது? என்ற கேள்வி ஞானிகளுக்கும் சித்தர்களுக்கும் மட்டும் எழவில்லை. அது என்ன? இது என்ன? என்று கேள்வி கேட்கும் சிறு குழந்தைகளும் கேட்கும் கேள்வியே? எங்கள் வீட்டு சுவாமி அறையில் தங்கையுடன் விளையாடிக்கொண்டிருந்தான் என் மகன். அவன் சுவாமி படத்துக்குக் காலை நீட்டிக் கொண்டிருப்பதைக் கண்ட நான் ‘சுவாமிப்படத்துக்குக் காலை நீட்டக் கூடாது’ என்றேன். ‘ஏன்?’ என்றான். ‘இறைவன் பரம்பொருள் அல்லவா? பரம்பொருளுக்கு நமது காலை நீட்டுவது நல்லதா?’ என்றேன். 

‘பரம்பொருள் படத்தில் மட்டுமா இருக்கிறார்? எத்தனை கடவுளின் படங்கள் காற்றில் பறக்கின்றன. குப்பைத் தொட்டிக்குள் நிறைகின்றன. அவர் எங்கும் நிறைந்தவர் தானே! தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் தானே! நான் நின்றாலும் நடந்தாலும் ஓடினாலும் பரம்பொருள் என் காலடிக்குக் கீழேயும் இருக்கிறார் என்று நினைத்தேன். அம்மா! பரம்பொருள் இல்லாத இடம் இருக்கிறதா காலை நீட்ட’ என்றான். ஏழு வயதுச் சிறுவனாக இருந்த போதும் அவன் கேட்ட கேள்வி என்னைச் சிந்திக்க வைத்தது. அவன் கேட்ட கேள்வியில் எத்தகைய பெரிய உண்மை அடங்கி இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டேன். நாம் சற்றும் சிந்தித்துப் பாராது எதனையும் சிறுபிள்ளைகள் என்று சொல்லக்கூடாது என்பதையும் உணர்ந்து கொண்டேன். எனினும் அவனிடம் எமது காலில் அழுக்குகள் இருக்கும் அல்லவா. கடவுளும் குழந்தைகளும் இருக்கும் இடம் சுத்தமாய் புனிதமாக இருக்க வேண்டும் அதற்காகச் சொல்வது என்றேன்.

ஆனால் என் மனமோ சிவவாக்கியர் என்னும் சித்தர் சொன்ன 

பரமிலாத தெவ்விடம் பரமிருப்ப தெவ்விடம்
அறமிலாத பாவிகட்குப் பரமிலை யதுண்மையே
கரமிருந்தும் பொருளிருந்தும் அருளிலாது போதது
பரமிலாத சூன்யமாம் பாழ் நரகமாகுமே                  
                                        - (சித்தர் பாடல்: சிவவாக்கியர்: 501)

என்ற பாடலை அன்று முழுவதும் இசைபோட்டது.

பரம் இ(ல்)லாதது எவ்விடம் பரம் இருப்பது எவ்விடம்
அறம் இ(ல்)லாத பாவிகட்டு பரம் இ(ல்)லை அது உண்மையே
கரம் இருந்தும் பொருள் இருந்தும் அருள் இ(ல்)லாது போது அது
பரம் இ(ல்)லாத சூன்யமாம் பாழ் நரகம் ஆகுமே

பரம்பொருள் இல்லாத இடம் எந்த இடம்? பரம் பொருள் இருக்கும் இடம் எந்த இடம்? மனித வாழ்க்கையின் முறைமை என்று சொல்லப்படும் அறத்தைச் செய்யமுடியாத பாவிகளுக்குப் பரம்பொருள் என்று ஒன்று இல்லை என்பது உண்மையாகும். பண்டைத் தமிழர் தமது வாழ்க்கையை அறம் எனக்கொண்டு வாழ்ந்தனர். அதனால் அறத்தை - வாழ்க்கையை இல்லறம், துறவறம் என இரண்டாகப் பிரித்து வாழ்ந்தனர். இல்லறத்துக்கு உரிய கடமையைச் செய்து வாழ்தல் ஒருவகை அறம். துறவறத்துக்குரிய கடமையைச் செய்து வாழ்தல் இன்னொரு வகை அறமாகும். இல்லற வாழ்க்கையில் ஈடுபட்ட போதும் இல்லறத்துக்குரிய செயல்களைச் செய்யாது இருப்போரையும்  துறவறம் பூண்ட சுவாமிமார் என்று கூறியவாறு துறவறத்துக்குரிய செயல்களைச் செய்யாது செய்வது போல நடித்து உலகை ஏமாற்றுவோரையும் அறமில்லாத பாவிகள் என சிவவாக்கியர் திட்டித் தீர்த்துள்ளார். அடுத்து அறமில்லாத அந்தப் பாவிகளால் பரம்பொருளைக் காணமுடியாது என்பதும் உண்மையே என்று சத்தியம் செய்துள்ளார்.

அறம் என்றால் என்ன என்பதை திருவள்ளுவர் இனியவை கூறல் எனும் அதிகாரத்தில் மிக நேர்த்தியாக எடுத்துக் காட்டுகிறார். அவர் காட்டும் அறம் மிக அற்புதமானது. பாருங்கள்.
“முகத்தான் அமர்ந்துஇனிது நோக்கி அகத்தான்ஆம்
இன்சொல் லினிதே அறம்”                                  - (குறள்: 93)

ஒருவரைக் கண்டதும் முகமலர்ச்சியுடன் அன்புடன் பார்த்து மனம் கனிந்து இனிய சொற்களைச் சொல்வதே அறம் என அறத்துக்கு ஒரு வரைவிலக்கணம் தந்திருக்கிறார். இத்தகைய அறமாகிய மனமில்லாத பாவிகளுக்கு பரம்பொருள் இல்லை என்பதும் உண்மைதான். 

அள்ளி அள்ளிக்கொடுக்கக் கரம் இருந்தும்  பொருளிருந்தும் அருள் என்று சொல்லப்படும் இரக்ககுணம் இல்லாத போது அது பரம்பொருள் இல்லாத சூன்யமாகும். அதுவே பாழ் நரகமாகும். 

அதாவது பரம்பொருள் இல்லாத இடம் எது? பரம்பொருள் இருக்கும் இடம் எது என்ற உண்மையை சிவவாக்கியர் இப்பாடலில் கூறியுள்ளார். அன்போடு மனம் கனியக்கனியப் பேசமுடியாத பாவிகளுக்கு பரம்பொருள் தெரியாது. தன்னைப்போல் மற்ற உயிர்களையும் எண்ணிப் பார்க்கும் அருள் நிறைந்த மனம் இல்லாது, கையிருந்தும் கொடுக்காது, பொருளிருந்தும் பிறருக்குக் கொடுக்க நினைக்காது இருப்போரின் மனம் பரம்பொருள் இல்லாத சூன்யமாய் பாழ் நரகமாகுமாம்.

ஆதலால் மனங்கனியப் பேசி, கருணையோடு தன்னிடம் இருக்கும் பொருளைத் தேவையானோருக்குக் கொடுப்போர் மனமே பரம்பொருள் இருக்கும் இடமாகும் என்பதை சிவவாக்கியர் சொல்லாமல் சொல்லியிருக்கிறார்.
இனிதே,
தமிழரசி.

Saturday 20 September 2014

பிறவிக்குணம்


மனிதரை நீரில் நீந்தப் பழகுவது போல் மீன் குஞ்சுக்கு எவரும் நீந்தப் பழக்குவதில்லை. நீரில் பிறக்கும் மீன் குஞ்சு நீரில் அலையடித்தாலும் புரண்டு புதண்டு நீந்தித்திரியும். ஏனெனில் நீந்துவது அதன் பிறவிக்குணம். காட்டில் வாழும் புலி உயிரினங்களைக் கொன்று தின்று வாழ்கிறது. புலிக்குட்டிகளும் பெற்றோரைப் பார்த்து அல்லது பார்க்காமலும் கூட உயிரினங்களை வேட்டையாடி உண்டு வாழ்கின்றன. ‘புலி பசித்தாலும் புல் தின்னாது’ என்ற தமிழ்ப் பழமொழியும் புலியின் பிறவிக்குணத்தை அழகாக எடுத்துச் சொல்கிறது. அதாவது வேட்டையாடுவது புலியின் பிறவிக்குணமாகும். வேப்பங்காய் கைக்கும், புளியங்காய் புளிக்கும், மிளகாய் உறைக்கும், பாக்கு துவர்க்கும் இவை அவற்றின் பிறவிக்குணம். 

நம்முன்னோர்கள் பிறவிக்குணங்களின் தன்மைகளை இளமையாய் இருக்கும் போதே சிறுபிள்ளைகளுக்கு மிக நுணுக்கமாய் கற்றுக்கொடுத்தமையை பண்டைய தமிழ் இலக்கியங்கள் எடுத்துக்காட்டுகின்றன. ஏனெனில் 'இளமையிற் கல்வி சிலையில் எழுத்தாய் குழந்தைகள் மனதில் இருக்கும் என்பதை அறிந்திருந்தனர். அதனால் தமிழ் வளர்த்த பாண்டிய மன்னர்கள் சிறுகுழந்தைகளுக்கான நூல்களை தாமே இயற்றி வைத்துள்ளார்கள். அதில் ஒன்று ‘நறுந்தொகை’ என்று அழைக்கப்படும் மிகச்சிறிய நூலாகும். வளரும் குழந்தைகளின் உலகியல் அறிவு வளர்ச்சிக்குத் தேவையான நல்லனவற்றைத் தொகுத்துச் சொல்வதால் அந்நூலை நறுந்தொகை என்றனர். அதனை அதிவீரராமபாண்டியன் என்னும் பெயருடைய பாண்டிய அரசன் இயற்றினான். அதனை நீங்களும் ‘வெற்றிவேற்கை’ என்ற பெயரில் படித்திருப்பீர்கள்.

“அடினும் ஆவின்பால் தன் சுவை குன்றாது
சுடினும் செம்பொன் தன் ஒளி கெடாது
அரைக்கினும் சந்தனம் தன் மணம் அறாது
புகைக்கினும் கார் அகில் பொல்லாங்கு கமழாது
கலக்கினும் தண்கடல் சேறு ஆகாது
அடினும் பால்பெய்து கைப்பறாது பேய்ச்சுரைக்காய்
ஊட்டினும் பல்விரை உள்ளி கமழாது
பெருமையும் சிறுமையும் தான் தர வருமே”             
                                         - (நறுந்தொகை: 23 - 30) 


பசுவின் பாலை நன்றாக வற்றக் காச்சினாலும் அதன் சுவைமாறாது. பொன்னை நெருப்பில் போட்டு சுடச்சுட பொன்போல் ஒளிருமே அல்லாமல் கருகிப்போகாது. சந்தன மரக்கட்டையை எடுத்து தண்ணீர்விட்டு நன்றாக அரைத்து குழையலாக எடுத்தாலும் சந்தனமணம் மாறாது அப்படியே இருக்கும். அகில் கட்டையை எடுத்து எரித்து புகை உண்டாக்கினாலும் அந்த புகையிலும் அகில் மணம் மணக்குமே அல்லாமல் கெட்ட மணத்தைக் கொடுக்காது. கடலைக் கலக்கினாலும் அதனைச் சேறாக மாற்றமுடியாது. பேச்சுரைக்காயைப் பால்விட்டு நன்றாய்க் காச்சினாலும் அதன் கைப்பு மாறாது அப்படியே இருக்கும். பலவித நறுமணங்களை  உள்ளிப்பூண்டிற்கு ஊட்டினாலும் உள்ளியின் மணம் எப்போதும் மாறாது. இவை யாவும் அவ்வப்பொருட்களின் பிறவிக் குணங்களாகும். இக்குணங்களை யாரும் அவற்றுக்கு கொடுக்கவில்லை. இவை இயல்பானவை. இவை போல் மனிதர்களிடையே இருக்கும் பெருமையையும் சிறுமையையும் அவரவர்களே உண்டாக்கிக் கொள்ள வேண்டும் என்கின்றான் அதிவீரராமபாண்டியன்.

பிறவிக்குணம் என்று சொல்லப்படுகின்ற ஜெனட்டிக் மெமொரிஸ் [Genetic Memories] ஆகவரும் மரபணுத் தன்மைகளை நாம் நம் செய்கைகளால் மாற்றி அமைத்துக் கொள்ள எமக்குத் தேவையானது திடமான மனவுறுதியே. அந்த மனவுறுதியை நாம் குழந்தைப் பருவத்திலேயே ஊட்டவேண்டும் என்பதையே நம் முன்னோர் எமக்கு எடுத்துச் சொல்லிச் சென்றிருக்கிறார்கள். நாம் பிறமொழி மோகத்தில் மயங்கி அவற்றை தொலைத்து நிற்கிறோம். 

படங்களைக் கீறிக் கீறிப்பழக சித்திரம் கீறவரும். அது கைப்பழக்கத்தால் வருவது. செந்தமிழை நன்றாகப் பேசிப்பேசிப் பழகப் பழக செந்தமிழ் பேசவரும். அது நாக்கின் பழக்கத்தால் வருவது. பாடசாலையில் படித்ததை மீண்டும் வீட்டில் வந்து படிப்பது எமது மனப்பழக்கத்தால் வருவது. ஒழுக்கம் [நடை] என்பது நாம் ஒவ்வொரு நாளும் ஒழுகும் விதத்தால் வருவது. ஆனால் பிறரிடம் கொள்ளும் நட்பும், இரக்கமும் [தயை], தனக்கென வாழாது பிறருக்குக் கொடுத்தலும் பிறவிக்குணமாக [Genetic Memories] வருவது. இந்த நல்ல குணங்களை குழந்தைப்பருவத்திலிருந்தே பழக்குவதற்காக குழந்தைகளுக்கு கற்பிக்கும் நூல்களில் அவற்றை நம் முன்னோர் எடுத்துச் சொல்லி இருக்கிறார்கள். குழந்தைகளுக்காக ஔவை சொன்னதைப் பாருங்கள்.

“சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்
வைத்ததொரு கல்வி மனப்பழக்கம் - நித்தம்
நடையும் நடைப்பழக்கம் நட்பும் தயையும்
கொடையும் பிறவிக் குணம்”                        
                                          - (ஔவையார் தனிப்பாடல்: 7)

நாம் இனத்தால் மனிதர்கள். நாம் ஒவ்வொருவரும் நட்புடன் வாழவேண்டும். எம்மைப் போல் மரம், செடி, கொடி, பறவைகள் விலங்குகள் யாவற்றையும் இரக்கத்துடன் நேசிக்க வேண்டும். பிறருக்குப் பகுத்துக் கொடுத்து பல்லுயிர் ஓம்பி வாழவேண்டும் மென சிறுகுழந்தையிலிருந்தே சொல்லிவளர்த்து வர அந்தக் குழந்தைகளின் பிறவிக்குணமாக நட்பும் தயையும் கொடையும் இருக்கும். ஏனெனில் மனிதன் 70% தான் சேர்ந்து வாழும் இடத்தின் தமையையே தன் குணமாக வெளிப்படுத்துகிறான். 

நட்பும், தயையும் கொடையும் குழந்தைகளின் பிறவிக்குணமாக இருப்பின் போட்டி, பொறாமை, பூசல் அற்று இந்த உலகம் வெற்றி நடை போடுமே! அத்தகைய உலகை நினைத்துப் பாருங்கள். அதுவே சுவர்க்கம்.
இனிதே,
தமிழரசி.

Friday 19 September 2014

இனிய தமிழும் இயற்கையும் நடனமிடும் தீவகங்கள்

எழுதியவர் பண்டிதர் மு ஆறுமுகன்
[தினகரன் ஞாயிற்றுவாரமலர், கொழும்பு: 07 - 01 - 1951]


புலவர்கள் பிறப்பிடமாகத் திகழும் நயினாதீவின் சிறப்பு
தெள்ளுக்கு எள்ளுவமை கூறிய நாகமணிப்புலவரின் கவிதாவிருந்து

தீவுகள் என்று மெத்த இலேசாகச் சொல்லுவார்கள், அந்த வட இலங்கைத் தீவகங்களை. இயற்கை அன்னை நடமிடும் பூங்கா வனங்கள் அவை. பெரிய வள்ளல்கள், அறிஞர்கள், புலவர்கள், கற்புக்கரசிகள் வாழும் மணிமாடங்கள் தான் அவை.

அவற்றைப் பாருங்கள்:-
ஆழியங் கடலின் வலம்புரி முழக்கம்
       ஏழிசை மானும் நெடுந்தீவெனும் பதி
பணியெந்து செல்வி அணியுற விளங்கும்
       மணித்தீவகமெனும் நயினைமா நகரும்
நிலநலம் பொதுளிக் கனியுயிர் சோலை
       கலகல வெனமிளிர் அனலையம் பதியும்
வாரிதி தருநிதி பெண்ணையம் பெருநிதி
       ஓரிரு நிதியமுங் குறைவிலா எழுவை
நீரகம் பொலிந்து சீரிய செல்வர் வாழ்
       ஏரகம் மலிந்துள்ள காரை மாநகர்
எண்டிசைப் புகழும் இன்புற அடக்கும்
       மண்டைதீ வகமெனும் மாண்புறு நகரும்
பாற்கடல் நடுவண் முத்தென விளங்கும்
       பொன்கொடு தீவகமெனும் பெரு நகரும்
பாற்கடற் பூங்கா வனமெனு மேழு
       தீவகங் காக்கும் ஊர்காவற் றுறையே
                                         - (பண்டிதர் மு ஆறுமுகன்)
ஊர்காவற்றுறையுடன் மண்டைதீவு இணைந்துள்ள படியால் இவை சப்ததீவுகள் என அழைக்கப்படும். 

ஆதியில் அருமையான தமிழர்கள் இத்தீவகங்களில் குடியேறினார்கள். கல்வியையும் செல்வத்தையும் தங்கள் கண்போலப் போற்றினார்கள். சீரிய ஒழுக்கம் விழுப்பந்தர வாழ்வு நடத்தினார்கள். அக்காலந்தொட்டு இன்றும் தமிழ் மணம் அங்கே கமழ்ந்து கொண்டே இருக்கின்றது.

அவற்றுள் நயினாதீவு புலவர்களின் பிறப்பிடமாக விளங்குகிறது. அருட்சக்தியாகிய நாகராஜேஸ்வரி அம்பாளின் திருவடித் தாமரைகள் இயைந்து வீற்றிருக்கும் பதி அது. இன்று சிங்கள சகோதரர்களும் தங்கள் பூமியாக அதனைக் கொண்டாடுகிறார்கள். அங்கே தான் நாகமணிப் புலவர் பிறந்தார். அவரை அனைவரும் நயினை நாகமணிப் புலவர் என்றே வழங்குவார்கள்.  

அவர் ஒரு இயற்கைப் புலவன் - வரகவி. கம்பர், காளமேகம் இவர்களுடன் வைத்து எண்ணத் தகுந்த புலமையாளன். ‘நயினை நீரோட்டயமக அந்தாதி’ புலவரது நுட்பமான புலமையின் சிகரமாக விளங்குகின்றது. ‘நயினை மாண்மியம்’ என்னும் பெரும் காப்பியம் ஒன்று  இவராற் பாடப்பட்டுள்ளது. அது இன்னுமச்சில் வரவில்லை. எத்தனையோ மணிமணியான தனிப்பாடல்கள் இவராற் பாடப்பட்டுள்ளன. 

முப்பத்தைந்து ஆண்டுகள் இருக்கும், அந்நாளில் திருக்கேதீஸ்வரம் புனருத்தாரணஞ் செய்யப்பட்டது. தமிழர்கள் - இந்துக்கள் இலங்கையின் பலபாகங்களில் இருந்தும் அங்கே போனார்கள். யாழ்ப்பாணத்தில் இருந்தும் பலர் திருக்கேதீஸ்வரம் போனார்கள். யாழ்ப்பாணம் இருந்து வள்ளமேறி, விடத்தல் தீவில் இறங்கி, அங்கிருந்து நடந்துதான் அவர்கள் எல்லோரும் சென்றார்கள். அந்தப் பாதைதான் நெடுங்காலமாக யாழ்ப்பாணத்தார் திருக்கேதீஸ்வரம் போகும் பாதை.

நயினை நாகமணிப்புலவரும் சில நண்பர்களும் திருக்கேதீஸ்வரம் போக யாழ்ப்பாணத்தில் வள்ளமேறி விடத்தல் தீவில் இறங்கினார்கள். அந்நேரம் பொழுதுபட்டு இருண்டுவிட்டது. அதன்பின் அங்கிருந்து திருக்கேதீஸ்வரம் போக முடியாது. ஆனபடியால் கடற்கரையில் இருந்த ஒரு வாடிவீட்டில் புலவரும் நண்பர்களும் படுத்துக் கொண்டார்கள். நித்திரை கொள்ள முடியவில்லை. ஏதோ ஒன்று அவர்கள் எல்லோருக்கும் பெரிய உபத்திரவங் கொடுத்துக்கொண்டு இருந்தது. புரண்டும், எழுந்தும், இருந்தும் நித்திரை கொள்ளப் பார்த்தார்கள். முடியவில்லை. 

இப்படியே அவர்கள் வருந்திக்கொண்டு இருக்கக் கோழிகள் கூப்பிட்டன. காகங்கள் கரைந்தன. கிழக்கு வெளுத்தது. நண்பர்கள் புலவரைப் பார்த்தார்கள். “என்ன ஐயா! கொஞ்சமும் துங்க முடியவில்லையே” என்றார்கள். அப்பொழுது புலவர் இந்தப் பாடலை எழுதி அவர்களிடம் கொடுத்தார்.

“எள்ளிற் சிறிய பாதியிற் பாதி இருண்டுருண்ட
தெள்ளுக் கொடுமையத் தேவரலாதெவர் திர்க்கவல்லார்
முள்ளிற் செடியிற்படுத்தாலும் முன்பின் உறக்கம்வரும்
துள்ளித் துடித்துக் கடித்தூர்ந்திடின் எவர்தூங்குவரோ”


பாருங்கள்! அத்தனை சிறிய பிராணி தெள்ளு, என்னவெல்லாம் செய்கிறது. துள்ளுகிறது. பலமுறை துடிக்கிறது. பின்பு கடிக்கிறது. கடித்த இடத்தில் இருக்கிறதா! இல்லை! மெல்ல ஊர்ந்து விடுகின்றது. தெள்ளுக்குத் திருவிளையாட்டு, மனிதனுக்கோ தூக்கமில்லை. விடியும்வரை தெள்ளை அகற்ற எடுத்த நடைமுறையொன்றும் பலிக்கவில்லை. ஆதலால் தெய்வந்தான் இந்தக்கொடுமைக் குணத்தைத் தெள்ளில் இருந்து தீர்க்க வேண்டும் என்று கூறுகிறார் புலவர். 

இறைவனது சிருஷ்டிகள் வாழ்வதில் தனக்கு ஒரு குறையும் இல்லையாம். ஆனால் பிறஉயிர்களுக்குத் தொல்லை கொடுக்கும் குணத்தைமட்டும் மாற்றிவிட்டால் போதும் என்கின்றார். தெள்ளுக் கொடுமைமட்டும் இல்லாமல் முள்ளோ செடியோ கிடைத்து அவற்றில் படுத்தாலும் முன்இரவிலோ அன்றிப் பின்இரவிலோ அலுப்பு நீங்கத் தூங்கி இருக்கலாமாம். 

தெள்ளுக்குப் புலவர் பிடிக்கும் உவமை மிக அற்புதமானது. சிறிய எள்ளு எடுக்க வேண்டும். அதனை இருபாதியாக்க வேண்டும். அதில் ஒரு பாதியைத் திரும்பவும் இரண்டாக்க வேண்டும். சிறிய எள்ளு நாலில் ஒன்றாகியும் தெள்ளுக்கு உவமிக்க இயலாதாம். திரும்பவும் அதனை உருட்டிக்கொள்ள வேண்டும். உருட்டும் போது கொஞ்சம் இருள்வர்ணமுஞ் சேர்த்துக்கொள்ள வேண்டும். இனிச்சரி - இப்பொழுது தெள்ளு போல இருக்கும்.  அப்படிச் செய்துபாருங்கள் தெள்ளுதான். 

சத்திமுற்றப் புலவர்
“பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன
பவளக்கூர்வாய்”
உவமை கண்டதற்குப் பெரும் பரிசில் பெற்றமை அறிஞர்களுக்கு ஞாபகம் இருக்கும். இந்த எள்ளு உவமைக்கு உண்மையில் நயினை நாகமணிப்புலவரும் பரிசில் பெறவேண்டியவரே.
இனிதே,
தமிழரசி.

Wednesday 17 September 2014

அன்பே உயிர்

அன்பின் பிணைப்பில் அகிலம் மகிழின் 
துன்பின் துயரம் துளியும் அணுகா
இன்ப நலங்கள் இனிதே நிறைய
என்போ டியைந்த உயிர்கள் யாவும்
அன்போ டியைந்து அமைதி காணும்
இன்ப நாளை இன்றே காண
சின்னச் சின்ன சேட்டை செய்யும்
சின்னக் குரங்கு செங்கரம் தன்னால்
அன்பொடு அணைக்க அமைதி காத்து
இன்பம் காண இசையும் குட்டிப்பூனை
மன்னுயிர் யாவும் மகிழ்ந்து வாழ
அன்பே உயிரென அரற்றல் காண்க!
இனிதே,
தமிழரசி.

Sunday 14 September 2014

அதிகாரி புலமேவி இருந்தருளு இளவழகனே!

புங்குடுதீவு மடத்துவெளி பாலமுருகன் வணக்கப் பாமலர்
-இயற்றியவர் பண்டிதர் மு ஆறுமுகன் -

கங்காசலந் திகள் செஞ்சடைக் கடவுளின் 
கருணைமழை பொழியு நெற்றிக்
கண்ணில்வரு மாறுபொறி காற்றுச் சுமந்துபோய்
கருதினைய சரவண மிசை
பொங்கிவளர் செங்கமல மலர்மீது பெய்திடப்
பூரித்த புத்த ழகுடன்
போக்குவரவற்ற பொருள் புனிதமுறு புதல்வராய்
பொய்கை தவழ்ந்த பெருமான்
மங்கலம் பதினாறு மன்னிவளர் பொன்கைநகர்
வடபால் மடத்து வெளியில்
மருவுமொரு திருமுருக சண்முக சடாச்சர
சரவண பவாய நமவே
எங்குமொலி செய்ய இகபர இரண்டிடை
எமையாள வந்த பாலா
எஞ்ஞான்றுங் காத்திட அதிகாரி புலமேவி
இருந்தருளு இள வழகனே! 
இனிதே,
தமிழரசி.

Saturday 13 September 2014

புங்குடுதீவு கல்விப்பாரம்பரியத்தின் முதுபெரும் சொத்து

எழுதியவர் - பேராசிரியர் கா குகபாலன், யாழ் பல்கலைக்கழகம்


யாழ்ப்பாண மாவட்டத்தின் வடமேற்கே அமைந்துள்ள சப்த தீவுகளில் ஒன்றான புங்குடுதீவுக்கிராமம் நான்கு பக்கங்களும் கடலால் சூழப்பட்டு பாய்க்கப்பலின் உருவத்தைப் போன்ற நிலத்தோற்றத்தினைக் கொண்டு உள்ள தீவாகும். இத்தீவு வாழ்மக்கள் வரலாற்றுக் காலத்திலிருந்து யாழ்ப்பாணக் குடாநாட்டுடனும் தென்னிந்தியாவுடனும் சமூக, பொருளாதார, பண்பாட்டுத் தொடர்பினைப் பேணிவந்துள்ளதை பல்துறைசார் அறிஞர்களால் எடுத்துக் கூறப்பட்டுள்ளது. குறிப்பாகத் தென் இந்தியாவில் ஏற்பட்ட பௌதிக மற்றும்  அரசியல் மாற்றங்களால் தமிழக மக்களில் குறிப்பிடத் தக்கோர் புங்குடுதீவு உட்பட்ட தீவுப்பகுதிகளில் வந்து குடியேறிய சந்தர்ப்பங்கள் இருப்பதாக வரலாற்றறிஞர்கள் தெரிவிக்கின்றனர். 

குறிப்பாக வல்லிபுரத்தில் கண்டெடுக்கப்பட்ட சாசனத்தில் பியாங்கு தீபம் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. பியாங்கு தீபம் காலப்போக்கில் புங்குடுதீவு என மருவியதாக தெரிவிக்கின்றனர். தென்னிந்தியாவில் இஸ்லாமியப் படையெடுப்பின் விளைவாக, அவர்களது கொடுமையின் காரணமாக தப்பி தமது கன்னிப் பெண்களைப் பாதுகாக்கும் நோக்குடன் இத்தீவில் வந்து குடியேறினர் எனவும் அவர்களால் இடப்பட்ட பூங்குடி என்ற பெயர் காலப்போக்கில் மருவி புங்குடுதீவு என வழக்கில் வந்துள்ளது எனக்கொள்வாரும்  உளர். ஐரோப்பிய ஆட்சிக்காலத்தில் குறிப்பாக போர்த்துக்கீசர் கொங்கடிவா (Congardiva) ஒல்லாந்தர் மிடில்பேக் (Middleburg) எனவும் பெயரிட்டு அழைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

இத்தகைய வரலாற்று சிறப்புமிக்க புங்குடுதீவுக் கிராமத்தில் 1901ம் ஆண்டுக் குடித்தொகைக் கணிப்பீட்டின் பிரகாரம் 5201 மக்கள் வாழ்ந்தனர் எனத் தெரிவிக்க்ப்பட்டுள்ளது. 1982ம் ஆண்டு 14622 மக்களாக அதிகரித்த போதிலும் 1980களைத் தொடர்ந்து நாட்டில் ஏற்பட்ட அசம்பாவிதம் காரணமாக புங்குடுதீவிலிருந்து 1991ம் ஆண்டு நிகழ்ந்த மாபெரும் மக்கள் வெளியேற்றத்தினால் 2012ம் ஆண்டு 4750 மக்களே வாழ்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. வரலாற்றுக் காலத்திருந்து இத்தீவில் வாழ்ந்து வந்த மக்கள், வாழ்வியலில் விவசாயத்தை  முதன்மைப்படுத்தி தமது பொருளாதாரத் தேட்டத்தினை பெற்றுக்கொண்ட சமூக அமைப்பில் கல்விப்பாரம் பரியமும் மக்களோடு இணைந்து வளர்ந்து வந்ததை வரலாற்றுக் காலங்களிலிருந்து செவிவழிச் செய்திகளாக, ஆவணங்களாக எம்மூத்தோர் தொகுத்து அளித்துள்ளதை காணமுடிகின்றது. 

குறிப்பாக குருசீட பரம்பரையாக திண்ணைப்பள்ளிகள், நிலாப் பள்ளிகள், குருகுலப்பள்ளிகளை நிறுவி கல்வியில் ஆர்வம் உள்ளோரின் கல்விவளர்ச்சிக்குத் தம்மை அர்ப்பணித்துள்ளனர். உதாரணமாக ஏறத்தாழ 200 வருடங்களுக்கு முன்னர் சட்டம்பி சேதுகாவலர், பெருங்காடு புட்டினிக் குளத்தின் வடகரையில் திண்ணைப்பள்ளி நிறுவி கல்வி போதித்தார் என வரலாறு கூறுகின்றது. இவர்களைத்தவிர குமரகுரு சட்டம்பியார், பரமானந்த சட்டம்பியார், சி கணபதிப்பிள்ளை, நீ சேதுபதி, வைத்தியர் வே கணபதிப்பிள்ளை, நீ ஆறுமுகவாத்தியார், நாகமணியர், நா தில்லையம்பலவாத்தியார் போன்ற பலர் 19ம் நூற்றாண்டின் பின்னரைப்பகுதியிலும் 20ம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் புங்குடுதீவுக் கிராமத்துக் கல்வியில் பெரும் பங்கு கொண்டிருந்தனர் எனலாம். 1830களைத் தொடர்ந்து ஆங்கிலேயர் ஆட்சியில் கத்தோலிக்க மற்றும் அமெரிக்க மிசனரிமார் மடத்துவெளி, சந்தையடி, பெருங்காடு, சின்ன இறுப்பிட்டி கிராமங்களில் முறைசார்ந்த கல்விக்கூடங்களை நிறுவினர். றிச்சட் கணபதிப்பிள்ளை அவர்களைத் தொடர்ந்து பொன்னையா வாத்தியார், அமரசிங்க வாத்தியார் போன்றோர் மாணவர்களின் கல்விவளர்ச்சிக்குத் தம்மாலான பங்களிப்பினை நல்கினர். 

இந்நிலையில் தமிழையும் சைவத்தையும் வளர்த்தற் பொருட்டு கல்வியியாளர்கள் பசுபதிப்பிள்ளை விதானையாருடன் சேர்ந்து சைவப் பாடசாலைகளை நிறுவ முயற்சி செய்து 1910ம் ஆண்டு புங்குடுதீவு கணேசவித்தியாசாலையினை ஆரம்பித்தார்கள்.  இதனைத் தொடர்ந்து படிப்படியாக இந்துப் பாடசாலைகளின் எண்ணிக்கை அதிகரித்து 1940களில் ஒன்பதாக இருந்துள்ளது. இவை தவிர 1945ம் ஆண்டு மூன்று அரசபாடசாலைகளை அரசு ஆரம்பித்ததன் விளைவாக 1990ம் ஆண்டு புங்குடுதீவுக் கிராமத்தில் 15 பாடசாலைகள் இயங்கி வந்துள்ளன. 1991ம் ஆண்டு இடப்பெயர்வின் பின்னர் தற்போது எட்டுபாடசாலைகளே இயங்கிவருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

பௌதீக ரீதியாக பலம் குறைந்த புங்குடுதீவுக் கிராமத்தில் 20ம் நூற்றாண்டின் ஆரம்பம் முதல் மக்கள் எண்ணிக்கை படிபடியாக அதிகரித்துக் கொண்டு செல்லவே சகலரும் விவசாயத்தில் ஈடுபட்ட போது அவர்கள் தம் வாழ்வாதாரத்திற்கு உற்பத்திகள் போதுமானதாகவிருக்காத நிலையேற்படவே திரை கடலோடியும் திரவியம் தேடு என்பதற்கிணங்க யாழ்குடாநாட்டிற்கும், நாட்டின் ஏனையபகுதிகளுக்கும் தொழில்நிமித்தம் இடம்பெயரத் தொடங்கிய போதிலும் அவ்விடப்பெயர்வு தற்காலிக இடப்பெயர்வாகவே காணப்பட்டது. 

இவை தவிர இக்கிராம மக்கள் தமது பிள்ளைகளை கல்வியினூடாக வளம்முள்ளவர்கள் ஆக்கவும் முயற்ச்சி செய்யலாயினர். இதன் விளைவாக இக்கிராமத்தினைச் சேர்ந்த பலர் ஆசிரியர்களாகவும் அரச தொழில்களில் ஈடுபடுபவர்களுமாக உருவெடுத்தனர். குறிப்பாக மருத்துவம், பொறியியளாளர், கலை, விஞ்ஞானம், இயல், இசை, நாடகத்துறைகளில் கணிசமானவர்கள் உள்வாங்கப்பட்டனர். இந்நிலையானது 1940களிலில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட போதிலும் 1960களைத் தொடர்ந்து புங்குடுதீவு மாணவர்களின் கல்வி மேன்மையுறலாயிற்று எனலாம். இவர்களின் கல்வி, கலாச்சார, பண்பாட்டு வளர்ச்சிக்கு இக்கிராமத்தில் வாழ்ந்த பலர் தமக்குரிய பங்களிப்பை நல்கி உள்ளனர். அவர்களின் கிராமத்து வாசம் கல்விப் பாரம்பரியத்தைக் கொண்ட சமூகத்தினை உருவாக்குவதற்கு பெரிதும் பங்கு கொண்டிருந்ததைக் காணமுடிகின்றது.

இவர்களில் புங்குடுதீவுக் கிராமத்தின் கல்விப்பாரம்பரியத்தில் ஒளிவிளக்காக திகழ்ந்தவர் பண்டிதர் முத்துக்குமாரு ஆறுமுகன் அவர்களாவர். இக்கிராமத்தின் கல்வி கேள்விகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தியது மட்டுமல்லாது ஈழத்தமிழர்களின் கல்வி, சமூக, பண்பாட்டு வளர்ச்சிக்கு பெரும்பங்காற்றிய பெருமைக்குரியவராகத் திகழ்கின்றார். குறிப்பாகத் தமிழ் இலக்கியத்தில் மிகுந்த பாண்டித்தியம் கொண்டவராக திகழ்ந்தமையினால் உள்நாட்டிலும் தமிழகத்திலும் கல்விப் புலத்தினரால் பெரிதும் மதிக்கப்பட்டவர். தீவகத்தில் சமூக அடக்குமுறைக்கெதிராக குரல் கொடுத்து சமூகப் புரட்சியை ஏற்படுத்தியவர். கல்வியை வேண்டி நிற்போருக்கு தனது பட்டறிவைக் கொண்டு கல்விச்செல்வத்தை வழங்கியவர்.

இவ்வாறான பல்முகப்பார்வை கொண்டவராக வாழ்ந்த உயர்திரு பண்டிதர் மு ஆறுமுகன் அவர்கள் இக்கிராமத்தின் முதுபெரும் சொத்தாக விளங்கியவர். படோபாகாரத்தை விரும்பாது தனது அறிவையும் ஆற்றலையும் தமிழ் சமூகத்திற்கு வாழ்நாள் முழுதும் வழங்கியவர். நாட்டில் நிகழ்ந்த அசாதாரண சூழ்நிலைகளினால் அவரால் வெளியிடப்பட்ட ஆய்வுகளை முழுமையாகப் பெற முடியவில்லை. குறிப்பாக அவரது சமகாலத்தவர்கள், மற்றும் மாணவர்களின் இழப்புக்கள், மற்றும் புலம்பெயர் இடப்பெயர்வின் விளைவாக அவரால் வெளியிடப்பட்டாய்வுகள் கிடைக்கப்பெறா விடினும் பெற்றுக்கொள்ளக்கூடிய ஆய்வுகளும் முத்தமிழுக்கு ஆற்றிய அரிய தொண்டுகள் பற்றிய அரிய பல தகவல்களின் மூலமும் இவர் ஆழ்ந்த புலமை கொண்ட பண்டிதராக இக்கிராமத்தில் வலம் வந்துள்ளார் என்பதையிட்டு நாம் ஒவ்வொருவரும் புளகாங்கிதம் கொள்கிறோம்.

புங்குடுதீவு கிழக்கு முத்துடையார் பரம்பரையினரான முத்துக்குமாரு நாகம்மை தம்பதியினர் செய்த தவத்தின் பயனாக பிறந்த எட்டுக்குழந்தைகளில் பண்டிதர் ஆறுமுகம் 1914ம் ஆண்டு பிறந்தார். பல்கலை விற்பன்னரான முத்துக்குமாருவால் அவர் சிறுவயதிலிருந்தே தமிழ் இலக்கியம், சமயம், இசை, சோதிடம், வைத்தியம், சித்திரம் போன்ற துறைகளைக் கற்றுத்தேர்ந்தார். இளவயதிலேயே மாகாவித்துவான் கணேசையர், பண்டிதமணி கணபதிப்பிள்ளை போன்றவர்களுடன் கல்வி தொடர்பான நட்பு கிடைக்கப் பெற்றது. சங்க இலக்கியங்களையும், இலக்கண நூல்களையுங்கற்று இத்துறையில் தனக்கெனவுரிய இடத்தைப் பெற்றுக்கொண்டார்.  

இதன் விளைவாக இவரது 15 வயதிலேயே சைவ வித்தியா விருத்திச் சங்கத்தினால் திருநெல்வேலி முத்துத்தம்பி வித்தியாசாலையில் ஆசிரியப்பணி வழங்கப்பட்டது. 18வது வயதில் பயிற்றப்பட்ட ஆசிரியராக வெளியேறி தான் கல்விகற்ற புங்குடுதீவு கணேசவித்தியாசாலையில் ஆசிரியராக இணைந்து கொண்டார். பண்டிதர் ஆறுமுகன் அவர்கள் இளமைத் துடிப்புடையவராக இருந்தமையால் தனது கிராமத்தில் சகலரும் கல்வியினூடக உயர்வடைய வேண்டும் என்று எண்ணி, பாடசாலைக் கல்விக்குப் புறம்பாக தனது வீட்டில் இரவு வேளைகளிலும் லீவு நாட்களிலும் திண்ணைப்பள்ளியினை நடாத்தி கிராமமக்கள் கல்வியில் நாட்டம் கொள்ளவைத்தார்.

பண்டிதர் ஆறுமுகன் அவர்கள் தனது கல்விப் பரப்பினை விரிவுபடுத்தும் முகமாக மதுரைத் தமிழ் சங்கத்தாருடன் நெருங்கிய தொடர்பினை ஏற்படுத்தி பண்டிதர் பரீட்சையில் சித்தியடைந்து, புங்குடுதீவில் முதலாவது பண்டிதர் என்ற பெருமைக்கு உரியவரானார். தமிழ் இலக்கியத்தில் பெற்ற புலமையானது பண்டிதரை ஒரு பெரிய ஆய்வாளராக உருவாக்கியது. இவரால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள்  ஈழத்திலும், தமிழ் நாட்டிலும் பல அங்கீகரிக்கப்பட்ட ஆய்விதழ்களில் வெளிவந்தமை பற்றி எமது கிராமத்தினைச் சேர்ந்த மறைந்த இலக்கிய கலாநிதி க சிவராமலிங்கபிள்ளை அடிக்கடி கூறுவதைக் கேட்டிருக்கிறேன். மேலும் இவர் தான் பெற்ற கல்வியையும் கௌரவத்தினையும் தனது கிராம இளைஞர்களும் பெறவேண்டும் என்ற நோக்கில் பலரை வித்துவான்களாக, பண்டிதர்களாக, இசைக்கலைஞர்களாக, சைவ சித்தாந்தவாதிகளாக, சமூகத் தொண்டர்களாக உருவாக்கிய பெருமைக்குரியவராகத் திகழ்கின்றார்.

தந்தையாரின் வழிகாட்டலுக்கு அமைய வைத்தியத்துறையில் குறிப்பாக ஹோமியோபதி மருத்துவம் கற்று, சிறப்புத் தேர்ச்சி பெற்று பகுதிநேர மருத்துவராக தன்னை இணைத்துக் கொண்டார். தமிழ் இலக்கியத்தில் கொண்டிருந்த அளவற்ற காதலின் விளைவாக தமிழ் அறிஞர்களுடன் இணைந்து பல மகாநாடுகளை நடத்திய பெருமையும் பண்டிதருக்குரியதாகும். குறிப்பாக திருக்கேதீஸ்வரத்தில் சைவமகாநாடு, திருவாசகவிழா, மற்றும் பண்டிதர் கா பொ இரத்தினம் அவர்களுடன் இணைந்து கொழும்பில் தமிழ் மறைக்கழகத்தினை நிறுவி திருவள்ளுவர் ஈராயிரம் ஆண்டுவிழா, கிளிநொச்சியில் 16வது திருக்குறள் மகாநாடு, புங்குடுதீவில் சிலப்பதிகார மகாநாடு போன்ற பல இலக்கிய மகாநாடுகளை நடாத்துவதற்கு பெரும்பங்கு கொண்டுழைத்து அம் மகாநாட்டு மலர்களின் ஆசிரியராக இருந்தும் அதில் பல ஆய்வுக்கட்டுரைகளை எழுதியும் புங்குடுதீவுக்கு புகழ் சேர்த்த பெருமகனாவார்.

பண்டிதர் ஆறுமுகன் அவர்கள் சமூகரீதியாக ஒதுக்கப்பட்டமக்கள் சமூகத்தில் சம அந்தஸ்துடன் வாழவேண்டும் என்ற சிந்தனையை புங்குடுதீவுக் கிராமத்தில் முதன்முதலாக வெளிப்படுத்தி அதனைச் செயலிலும் செய்துகாட்டியவர். குறிப்பாக இவரது இளைமைக் காலத்தில் சாதி அமைப்பு முறை இறுக்கமாக கடைப்பிடிக்கப் பட்டதால் சமூகரீதியாக நலிவுற்ற மாணவர்கள் உயர் சாதி மாணவர்களுடன் சேர்ந்து படிப்பதில் வேறுபாடு காட்டப்பட்டது. இதற்கெதிராக விழிபுணர்வினை ஏற்படுத்தியதுடன் ஏனைய தீவுகளுக்குச் சென்று பரப்புரையில் ஈடுபட்டவர். பின்னாட்களில்  எழுத்தாளர் மு தளையசிங்கம் சாதி வேறுபாட்டுக்கு எதிராக குரல்கொடுத்து வெற்றிபெற்ற போதும் அதில் தன்னுயிரையும் மாய்த்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

பண்டிதர் ஆறுமுகம் அவர்கள் தனது கிராமத்தில் அளவற்ற அன்பு கொண்டவராக இருந்த நிலையில் தனது ஆசிரியப் பணியின் நிமித்தம் அதிக காலத்தினை வன்னியிலும் தென்னிலங்கையிலும் வாழவேண்டிய நிலை உருவானது. பின்னாட்களில் கிராமத்துடன் ஆன தொடர்புகள் சற்றுத் தளர்வுற்ற போதும் அவரது சொல்லும் செயலும் கிராமத்துக்கு உரமூட்டியவையாகவே இருந்துள்ளன.

பண்டிதர் அவர்கள் புகழ்பூத்த குடும்பத்தைச் சேர்ந்த மகேஸ்வரிதேவியுடனான திருமண வாழ்வில் தமிழரசி என்ற மகளை ஈன்று தான் எவ்வாறு கல்வி கேள்விகளில் பாண்டித்தியம் பெற்றாரோ அதே போல மகளையும் கல்விப் புலத்தினூடாக உலகுக்கு அறிமுகப்படுத்தினார். திருமதி தமிழரசி ஆளுமைமிக்க கல்வியாளராக, இலக்கியவாதியாக, கவிஞராக, கலை கலாசார விழுமியங்களில் தெளிந்தவராக பேச்சுத்திறனில் வல்லவராக, சாதி, சமய வேறுபாட்டுக்கு அப்பாற்பட்டவராக, வரலாற்றைத் தெளிவுறக்கற்றவராக வளர்தாளாக்கிய பெருமை பண்டிதர் ஐயாவையே சாரும். உதாரணமாக திருமதி தமிழரசி அவர்கள் 1977ம் ஆண்டு அம்பலவாணர் அரங்கு திறப்பு விழாவில் ஆற்றிய உரை பற்றி எமது கிராமத்துப் பெண் ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில் தந்தையார் தமது மகளுக்கு கல்வியையும் பேச்சாற்றலையும் சிறப்பாகவே கொடுத்துள்ளார் எனக்கூறி தந்தையையும் மகளையும் வாயாரப் புகழ்ந்ததை நேரில் கேட்கக் கூடியதாகவிருந்தது.

பண்டிதர் மு ஆறுமுகன் அவர்கள் தொடர்பாக என்னால் எழுதப்பட்ட புங்குடுதீவு வாழ்வும் வளமும் என்ற நூலில் அவரது கல்விப்புலமை பற்றி எழுதும் வாய்ப்புக் கிடைத்தது. அவர் பல கனதியான ஆய்வுகள் பல எழுதியுள்ளமை பற்றி பலரும் தெரிவிக்கின்ற போதிலும் அவ்வாய்வுகளில் பல எங்கோ மறைந்து கிடக்கின்றது. யாழ்ப்பாண பல்கலைக்கழக தமிழ்த்துறையினர் அவரது ஆய்வுகளைச் சேகரித்து ஆய்வு செய்வதன் மூலம் தமிழ்த்துறையைப் பெருமையடையச் செய்யலாம். தற்போது அவரது நூற்றாண்டு மலரில் என்னால் சேகரிக்கக் கூடிய தரவுகள், தகவல்களைக் கொண்டு இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையை எழுதுவதற்குக் கிடைத்த வாய்ப்பினை பெருமையாக கொள்கிறேன்.

பண்டிதர் ஐயா அவர்களின் நாமம் எமது கிராமம் தொடர்பான கல்விப்பாரம்பரியத்தில் என்றும் நிலைத்து நிற்கும் என்பது வெள்ளிடைமலை.
இனிதே, 
தமிழரசி.

Sunday 7 September 2014

பொன் ஏட்டில் புகழ் பெற்ற புங்குடுதீவு

எழுதியவர் பண்டிதர் மு ஆறுமுகன்
புங்குடுதீவு ஶ்ரீகணேச வித்தியாசாலை பழையமாணவர் சங்க  வெள்ளிவிழா மலர் (1951)

புங்குடுதீவு பெயர் குறிக்கப்பட்ட வல்லிபுரம் பொன் ஏடு - கி பி 2ம் நூற்றாண்டு

புகழ் மலர்ந்த நாடு புங்குடுதீவு. இதன் புகழ் இற்றைக்கு ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளின் முன் பொன் ஏட்டில் பொறிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் புதை பொருளாராய்ச்சியாளர் யாழ்ப்பாண நகரின் வடகிழக்கேயுள்ள வல்லிபுரக் கோவிற் பகுதியை ஆராய்ச்சி செய்வித்தார்கள். பல புதையல்களுடன் ஓர் ஏடும் அகப்பட்டது. அது பொன் ஏடு. அதிற் பொறிக்கப்பட்ட உரையின் சாரத்தைப் பாருங்கள்.

“புங்குடுதீவில் ஒரு புத்த விகாரை இருக்கின்றது. அங்கே வாழும் மக்கள் விருந்தினரை வரவேற்று உபசரிப்பதில் மிகவும் ஆர்வமுள்ளவர்கள். நாகரிகமும் வீரமும் ஒற்றுமையும் உடையவர்கள்.” என்பது. இப்பொன் ஏடு இப்பொழுது கொழும்பு மாநகரிலுள்ள நூதன காட்சிச் சாலையில் இருக்கின்றது. இற்றைக்கு ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளின் முன் பண்பட்ட மக்கள் புங்குடுதீவில் வாழ்ந்தனர் என்ற உண்மையை பொன் ஏட்டின் மூலம் அறிகின்றோம்.

ஆனால் இற்றைக்கு இரண்டாயிரத்து ஐஞ்ஞூறு ஆண்டுகளின் முன்னர் தென்னிலங்கை அடர்ந்த வனமாக இருந்தது. கொடிய விலங்குகளும் இயக்கரும் அங்கே வாழ்ந்திருக்க வேண்டும். அப்பொழுதும் அதற்கு அப்பாலும் நாகரிகம் முதிர்ந்த தமிழ் மக்கள் வட இலங்கையில் - நமது தீவகப் பகுதியில் வாழ்ந்தார்கள். ஏன்! இலெமூரியாக் கண்டம் கடல் வாய்ப்படுமுன் நமது அருமையான சிறு தீவகம் அதன் பகுதியாய ஒரு பெருந் தமிழகமாய்க் கூட இருந்திருக்கலாம். அதற்குரிய சான்றுகளைத் தொடர்பான சரித்திர வாயிலாக இன்னும் மக்கள் அறியவில்லை. இங்குள்ள நில அமைப்பும் மக்களின் கலாச்சாரப் பண்பாடுகளும் தென் இந்தியாவுடன் ஒத்தனவாகவே இருக்கின்றன.

காப்பியன் வகுத்த தமிழை நமது தமிழகம் மறந்ததாயினும் இப்பொன் தமிழ்த்தீவகம் மறக்கவில்லை. ஏனைய பல நாடுகளில் வாழும் தமிழ் நண்பர்கள், ‘சிரட்டையை’ சிறட்டை என்றும் ‘முகிழைப்’ பணுவில் என்றும் ‘புகையிலையைப்’ பொயிலை என்றும் மழலை பயிலுகின்றார்கள். புங்குடுதீவு மக்கள் பண்பட்ட பழந்தமிழ்ச் சொற்களையே வழங்கி வருகின்றார்கள்.

பண்டைக் காலந்தொட்டே வட இலங்கைத் தீவகங்கள் மாதோட்டத்துடன் தொடர்புள்ளனவாய் இருந்தன. தமிழ் மக்களும் தமிழரசரும் இப்பகுதிகளில் நிலைபெற்றிருந்தார்கள். திருக்கேதீஸ்வரத்தில் வைத்தே சிங்கள வமிசத்து முதல் அரசன் விசயனுக்கும் பாண்டிய இராசகுமாரிக்கும் மணம் நடந்ததென யாழ்ப்பாண சரித்திர ஆராய்ச்சியாளர் கூறியுள்ளார்கள். இத்தொடர்புகள் யாவற்றையும் ஆராயுமிடத்து நமது தாயகமாகிய தீவகத்தில் மக்கள் ஆதிதொட்டு வாழ்ந்து வருதல் புலப்படுகின்றது.

சோழ சேர பாண்டிய சாம்ராச்சியங்கள் வன்மை பெற்று மரக்கலமோட்டி மாகடல் கடந்து வாணிபஞ் செய்த அந்த நாளிலும் இத்தீவக மக்கள் அவர்களுக்கு உறுதுணை புரிந்து சோறு கொடுத்து உதவினதன்றியும் அறத்தையும் தமிழையும் வளர்த்தும் வந்தனர்.

சாத்தனார் கூறும் மணிமேகலையில் பேசப்படும் மணிபல்லவம் நயினாதீவைக் குறிக்குமென ஆராச்சியாளர் கூறுகின்றனர். அதற்கு அருகேயுள்ள ‘இரத்தினத்தீவம்’ எனப்பேசப்படும் இடம் புங்குடுதீவுதான் என்பது சிங்கள சரித்திரமூலம் உண்மையென வலுப்பெறுகின்றது. அதாவது புத்தபகவானின் உபதேசங்களைப் பயின்று கொண்டு தொள்ளாயிரம் புத்த குருமார் புங்குடுதீவில் வாழ்ந்தார்கள். அதனால் “போதத்தீவென’  இத்தீவகம் அழைக்கப்பட்டது. இந்தியர் இங்கே இறங்கி மாதோட்டத்திற்குத் தரைமார்க்கமாகச் செல்லும் வழக்கம் இருந்தது என்றும் சிங்கள சரித்திரம் கூறுகின்றது. இதுவரை கூறிய விஷயங்கள் யாவும் இத்தீவுடன் பண்டைய வெளிநாட்டு மக்கள் கொண்டுள்ள தொடர்பைக் காட்டுகின்றன.

இவ்வூரின் பழங்குடி தமிழ்மக்கள் தங்களுக்கு வேண்டிய உணவு, உடை ஆகியவற்றைத் தாங்களே ஆக்கினர். பிறருக்குங் கொடுத்துத் தாமும் உண்டு, உடுத்து வாழ்ந்தனர். ஒரு நாட்டின் உயர்ந்த நாகரிகம் அந்நாட்டில் வாழும் மக்களின் தொழில், கலை, பண்பாடு, இயற்கைவளம் ஆகியவற்றிலேயே தங்கியிருக்கின்றது. இற்றைகுப் பல நூற்றாண்டுகளுக்கு முன் மேலைத் தேசத்தினர் பருத்தியாடை அணியாது வாழ்ந்தார்கள். அந்நாளில் இந்நாட்டு மக்கள் பருத்தியை உண்டாக்கினார்கள். பஞ்சை எடுத்தார்கள். அதிலிருந்து நூல் உண்டாக்கி நுண்ணிய ஆடைகள் செய்து உடுத்து மகிழ்ந்து வாழ்ந்தார்கள்.

நிலத்துக்கு உரமிட்டு வளம்படுத்தி நெல்விதைத்தார்கள். குளம் தோண்டி நீர்தேக்கிவைத்து நெல் விதைத்தனர். அன்றியுஞ் சிறு தானியங்கள் செய்தனர். வைத்தியம், சோதிடம், சித்தாந்த தத்துவம் ஆகிய துறைகளில் கைதேர்ந்த பரம்பரையான எத்தனையோ குடும்பப் பெரியோர்கள் இன்றும் தமது கலைச் செல்வங்களை நாட்டுமக்கள் அநுபவிக்க வாழ்கின்றார்கள். ஊணழகும் உடையழகும் கொண்டு உடலழகு பார்க்காமல் உயிரழகு கொள்ள வழிகண்டிருந்தார்கள். எங்குமாகிய இறைவனை திருக்கோயில்களில் நியமித்துப் பூசித்தனர். இன்றும் பழந்தமிழ்க் கோயில்கள் பலவுள. கோயிலால் பேர்பெற்ற கிராமங்களும் உள. அவற்றிலொன்று “கோயிற்காடு”. அக்கிராமம் தற்பொழுது வீராமலை’ என வழங்கப்படுகின்றது. ‘வீராமலை’ என்பது வீர + அமலை - (கற்பு) வீரம் பொருந்திய அம்பாள் - கண்ணகி வந்து சேர்ந்த இடம். வீரபத்தினியின் சிலைவந்து அடைந்த பின்பு வீராமலை என வழங்கப்படுகின்றது. ‘வீராமலை’யுடன் கர்ணபரம்பரையாக ஒரு கதையும் வழங்கி வருகின்றது பாருங்கள். 

இன்றைக்கு அறுநூறு வருடங்களுக்கு முன்பு இங்கே வாழ்ந்து கொண்டிருக்கின்ற ஒரு பெருவேளாளனுடைய எருமை மாடுகள் வழக்காமாகாக் கிடக்கும் குளத்தில் ஒருநாள் காணப்படவில்லை. அவற்றை ஊருக்குள் பல இடங்களிலும் தேடினார். காணப்படவில்லை. அவர் தென்கரை ஓரமாகப் பார்த்துக்கொண்டு போனார். கடலில் ஒரு கூப்பிடு தூரத்தில் எருமைகள் கிடந்தன. சந்தோஷத்துடன் ஓடிப்போனார். கரைப்பக்கமாக அவற்றைக் கொண்டு வரும் பொருட்டு அடித்து நடத்தினார். தாம் கிடந்த இடத்தையே அவை சுற்றிச் சுற்றி ஓடின.

இப்படி அவற்றைக் கரையேற்றக் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் பொழுது அவைகளின் நடுவில் ஒரு பெட்டி கிடப்பதைக் கண்டார். உடனே அதனைத் தூக்கிக் கொண்டு கரைக்குப் போனார். அந்த அந்தறிவுப் பிராணிகள் எல்லாம் கதறிக் கொண்டு அவர்பின்பு சென்றன. அவர் கரையில் இரண்டு கயிற்றடி தூரம்* [176 அடி] போனதும் பெட்டியை வைத்துவிட்டுத் தனது உடையை இறுக்கிக் கட்டிக் கொண்டு பின்னரும் அதனைத் தூக்கினார். ஆனால் அவரால் பெட்டியை அசைக்க முடியவில்லை. இந்தச் செய்தி வாய்த்தந்தி மூலம் ஒரு கணப்பொழுதில் ஊரெங்கும் பரவியது. ஊரார் பலரும் வந்து பெட்டியைத் திறந்து பார்த்தார்கள். 

அதனுள் அவர்கள் கண்டதென்ன! வீராமலை!! வீரபத்தினித் தெய்வம். ஆம்! கண்ணகியம்பாள் உருவம் இருக்கக் கண்டார்கள். அந்த அம்பாளுக்கு கோவில்கட்டிப் பூசித்தார்கள்.

ஆம்! அந்த அம்பாள் கோவிலுக்குப் போனால் உண்மையில் திருச்செந்தூரில் நிற்கின்றோம் என்ற நினைவே தோன்றும். பரந்த நீலக்கடலலை ‘வா! வா! ஏன் வந்தாய்?’ எனப்புரண்டு மோதிக் கொண்டிருக்கும். ‘வெண்மணற்கரை, இப்படிக் கொஞ்சம் இருங்கள், ஏன் கால்வலிக்க நிற்கவேண்டும்?’ என்னும், குளிர்ந்த பிராணவாயு மெத்தனத் தவழ்ந்து வந்து, நம்மை அன்புடன் அழைத்துக்கொண்டு போகும்.

தெய்வசக்தியும் இயற்கை அன்னையின் அழகும் ஒருங்கமைந்து அந்தக் கண்ணகையம்பாள் கோவில் பூலோக சுவர்க்கமென எவரையும் ஆனந்தமடையச் செய்யும். வரகவி முத்துக்குமாரப் புலவரால் (ஊரதீவு) இற்றைக்கு நூற்றைம்பது ஆண்டுகளின் முன் பத்தும் பதிகமும் பாடிப் போற்றப்பட்ட தலமது. “மணிமந்திரரூபிநீ”  என்று தொடங்கும் புலவரது செய்யுள் "கன்னலொடு செந்நெல் விளை புங்கைநகர் தன்னிலுறை கண்ணகைப் பெண்ணரசியே” என முடிகின்றது. இவையாவும் நம் தமிழ் மக்கள் பண்பாட்டைக் காட்டுகின்றன. 

இனி, மேலை நாட்டினருள் ஒல்லாந்தரும் முதலில் நமது நாட்டில் வந்து தங்கள் மிருகபலத்தினால் இங்குள்ள மக்களையும் அடக்கி கோட்டை கட்டி வாழ்ந்தனர். இந்தத் தீவகமும் அவர்கள் சுயதேசத்தைப் போலக் கடல்வளமுடைமையினால் போக்கு வரவுக்கு வசதியாய் இருந்தது. அவர்களின் கோட்டைகள் இருந்த இடம் *’கோட்டைக்காடென’ இன்றும் பெயர் வழங்கிக் கொண்டிருக்கின்றது. அவர்களின் கோட்டைகள் அழிந்து சிதைந்து இப்பொழுதும் இப்பொழுதும் காணப்படுகின்றன. தற்பொழுது கோட்டைக் காட்டில் ‘மன்னியாகுளம்’ என்று சொல்லப்படும் ஓர் இடம் உண்டு. போர்த்துக்கீச ஒல்லாந்த தளபதிகள் பல இடங்களில் இருந்து வந்து மந்திராலோசனை செய்த இடமென்பர். (கோட்டைக்காடிலுள்ள சிதைந்த கோட்டையின் சுவடுகள் மேலை நாட்டினர் கட்டியதல்ல என்பதை இக்கட்டுரை எழுதிய பின், அவரது தந்தை கொடுத்த வீரமாதேவியின் ஏடுகள் மூலம் அறிந்து கொண்டார்). ‘மன்னியாகுளம்’ - ‘மன்னர்குழாம்’ என அந்த நாளில் வழங்கியதென்று முதியோர் சொல்கின்றார்கள். அவர்கள் அரசு புரிந்த காலத்தில் ஒரு நன்மையும் செய்து சென்றுள்ளார்கள். அதுதான் அவர்கள் கிறிஸ்தவ மதத்தை விட்டுச் சென்றதாகும்.

இவற்றைக் கூறுமுன்பு இநாட்டில் அன்று தொட்டு இன்றுவரையும் சைவசமயமே தழைத்தோங்கி வருகின்றது. புத்த மதத்தினர் இடையில் வந்து போனார்களே யொழிய இந்நாட்டு மக்கள் அம்மதத்தை அனுட்டிக்கவில்லை. அதன்பின் வந்த ஆங்கிலராட்சியில் இந்நாடும் மற்றைய நாடுகளுடன் அடிமைப்பட்டிருந்தாலும் ஓரளவு நன்மையும் அடைந்திருக்கின்றது. கல்வி, சமயம், போக்குவரத்துச் சீர்திருத்தம், நீதி என்பவற்றில் ஈழத்து ஏனைய நாடுகளுடன் போட்டி போடக்கூடியதாக இருத்தலே அது. 

யான் இங்கே இத்தீவகத்தின் பழம் பெருமைகளை எடுத்துக் கூற வல்லேனல்லேன். இதைச் சரித்திரப் பேராசிரியர் திரு வையாபுரிப்பிள்ளை, தமிழாராச்சித் தலைவர் சுவாமி தனிநாயக அடிகள் போன்ற பெரியார்களுக்கு விட்டுவிடுவோம். அவர்களால்தான் இந்நாட்டின் பண்பு நலனையும் மக்களின் பொற்றமிழ் நலனையும் சரித்திர நில அமைவுகளையும் நன்றாக நுணுகி ஆராய்ந்து கூறமுடியும்.

இவ்வளவு நேரமும் நம்முடன் ஈடுபட்டுக்கொண்டிருந்த எங்கள் தந்தையார் நாட்டின் நீளம் ஆறுமைல், அகலம் நான்கு மைல், கோடைத் தென்றலும் மாரி வாடையும் பெறும் நாடு. தென்றல் தவழும் தென் சமுத்திரக்கரை ஓரத்திலே மாலை நேரத்திலே தண்டு கொண்டு தோணி தள்ளுதலே பேரின்பம். கீழைக் கடல் மதியும் மேலைக்கடல் ரவியும் நீலக் கடலலையில் உயர்வதும் தாழ்வதும் பூரணத் தினத்தில் பார்க்கும் அதிஷ்டர்களை இயற்கை என்னும் இறைவன் தனதிரு கண்களினால் அன்புடன் பார்ப்பதை ஒக்கும். மேற்குக் கடலின் ஓரத்தில் குறிகாட்டுவான் இருக்கின்றது. அதில் நின்று சப்ததீவுகளையும் பார்க்கும் பொழுது பாற்கடலில் மரகதப்பேழைகள் மிதந்து கொண்டு நம்மை நாடி வருவன போலத் தோன்றும்.

பண்டைக்கால சேர சோழ பாண்டிய வாணிபம் இன்றும் நடைபெறுகின்றதோ எனச்சிந்தனை பண்ணும் படி மகாபெரிய உருக்களும் படகுகளும் பண்டங்களை ஏற்றிப் பாயிழுத்து ஓடிவந்து மணிபல்லவத்தீவுக்கும் எங்கள் இரத்தினத்தீவுக்கும் இடையே பாயிறக்கி நிறுத்தி அவற்றிளுள்ள மரக்கலமோட்டிகள் கரையிரங்கி நல்ல நீர் மொள்ள விரைந்து செல்வர். அவர்களுடன் உரையாடினால் பண்டைய  மன்னர் வாணிபமல்ல என்பதும், இன்றைய மக்களின் வாணிப மரக்கலங்களே என்பதும் நினைவுக்கு வரும். ஆனால் இந்தமேற்குக் கடற்பாதையின் கதை பெரிய பாரதக்கதை போன்றது. திசையறி கருவி முதலிய நவீனசாதனங்கள் இல்லாத பண்டைக்காலத்தே இயற்கையோடு இசைந்து மரக்கலமோட்டிய பண்டையோர் தென் இந்தியக்கரை மறைய, வட இலங்கைத் தீவகங்களை தமது வெறுங்கண்ணாற் காணக்கூடியதாக இருந்தது. அதனால் அவர்கள் பண்டை தொட்டு இன்றும் இப்பழம் பெருங் கடற்பாதையையே உபயோகித்து வருகின்றனர். வீடும் தலைவாசலும் போலப் புங்குடுதீவும் நயினைமணித்தீவும் இருப்ப அவற்றின் இடையேயுள்ள நீலமணி முற்றம் போல எங்கள் மேலைக்கடல் காட்சியளிக்கும்.



கீழைக்கடல் ஆழமான வாய்க்கால் போன்றது. யாழ்ப்பாண நகரம் போகும் இந்திய மரக்கலங்கள் எங்கள் தீவகத்தில் மேற்கு, தெற்கு, கிழக்கு ஆகிய மூன்று புறக்கடலிலும் ஓடியே போகவேண்டும். சுருங்கச் சொன்னால் எங்கள் தீவகத்தை வியாபார மரக்கலங்கள் வலம் வந்து கொண்டே எப்பொழுதும் இருக்கவேண்டும் என்பதுதான். ஈற்றில் வடகடற் புறத்தே போவோமேயானால் பச்சைப்பசேலென்ற மாணிக்கத் தீவுகளையும் மரகதத்தீவுகளையும் அவற்றினிடையே அழகான கடல் நீரோடைகளையும் காண்போம். சின்னஞ்சிறிய அந்தத் தீவுகளில் மாரிகாலம் நீர் நிறைந்திருக்கும். அதனாலேதான் அதனை மேடுறுத்தி வீதிசமைத்து வெளிநாட்டினருடன் தொடர்பு கொண்டுள்ளோம்.

எங்கள் நாட்டில் இன்று பதினையாயிரம் மக்கள் வரையில் வாழ்வு நடாத்துகின்றார்கள். தமிழ்ப்பாடசாலைகள் பதிநான்கும் ஓர் ஆங்கிலப் பாடசாலையும் உட்பட பதினைந்து பாடசாலைகள் உள்ளன. நாட்டு மக்கள் கமத்தொழில், வாணிபத்தொழில் என்பவற்றில் ஈடுபட்டுள்ளனர். வாணிபத் தொழிலில் இவர்கள் பழம் பெருமை படைத்தவர்கள். இன்று நேற்று வாணிபத்துறையில் இறங்கவில்லை. பண்டுதொட்டே பல தேசங்களிலும் சென்று வாணிபம் நடாத்தி வருகின்றார்கள். இலங்கையில் சிறந்த நகரங்கள் எல்லாவற்றிலும் இத்தீவக மக்களின் வியாபாரத் தலங்கள் பிரபலமாக விளங்குகின்றன.

மேல் நாட்டினர் இலங்கைப்பக்கம் வருமுன்னரே அதாவது அஞ்ஞூறு ஆண்டுகட்கு முன் தென்னிலங்கையில் உள்ள நகரங்களில் இவர்கள் சென்று அந்நாட்டு மக்களுடன் அன்புபெறப் பழகி “தமக்கென வாழாப் பிறர்க்குரியாளராய்” “யாதும் ஊரே யாவரும் கேளிர் தீதும்நன்றும் பிறர்தர வாரா” என்னும் புனித மொழிக்கு உவமைபெற வாழ்ந்து வருகின்றார்கள்.

இவர்கள் சுறுசுறுப்பும் சுயமுயற்சியும் உடையவர்கள். எவரையும் எதிர் பார்ப்பவர்கள் அல்லர். திடகாத்திரமான உடலும் அதிவிவேகமும் உடையவர்கள். அறிஞர் பெரியோர் ஆதியோரை அன்புபெற வரவேற்று வணங்குவார்கள். தாம் எவ்வளவு பெருமை உடையவராய் இருந்தாலும் தம்மிடம் வரும் வயது முதிர்ந்தோர்க்கு என்றும் தளர்ந்து படியும் வழக்கமுடையர். ஒற்றுமையும் நன்றி மறவாத குணமும் உடையவர்கள். எப்பொழுதும் தாய்நாட்டின் நலனுக்காக கல்வியையும் செல்வத்தையும் முன்னரிலும் பார்க்க முனைந்து வளர்த்துக் கொண்டு வருகிறார்கள். உள் நாட்டிலும் வெளிநாட்டிலும் கல்விபயின்ற மக்கள் இலங்கை அரசாங்கத்தின் பல பகுதிகளிலும் இருந்து தொண்டாற்றி வருகின்றார்கள்.

இந்திய இலங்கைச் சுதந்திரப் போரிலும் இவர்கள் பங்குபற்றி உள்ளார்கள். மகாத்மா காந்தியின் ஒரு சீடராக, தம் நாட்டையும் ஆடம்பர வாழ்வையும் விடுத்து மனையுடன் சென்று காந்தீய சேவா கிராமத்தில் நாலுமுழத் துண்டுடுத்து வாழும் தேசத் தொண்டர்களும் இங்கே பிறந்து போயிருக்கிரார்கள். கலையே பெரிது, கடமையே பெரிது, அறிவே பெரிது, ஒழுக்கமே பெரிது என்று போதிக்கும் ஆழ்ந்த அநுபவம் உள்ள ஆசிரியர்களும் பலர் இங்கே இருக்கின்றார்கள். விருப்பு வெறுப்பற்ற தேவபூசை செய்யும் ஞானிகளும் உளர். தம்நாட்டிற்காகப் பெருங்கடல் கடந்து மலாய்நாடு சென்று பொருளும் புகழும் வளர்க்கும் வீரப்பெருமக்களும் உளர். 

ஈழநாட்டின் பல பாகங்களிலும் சென்று காடுதிருத்திச் செந்நெற் கழனிகளாக்கி வீடுங்கட்டிக் குடியேறி வாழும் வீராதிவீரர்கள் எங்கள் நாட்டினரிற் பலர் இருக்கின்றார்கள். இவர்கள் தங்கள் வருங்கால சமுதாய உயர்ச்சிக்குரிய கோட்டையை அமைக்கும் தீவிர சிற்பிகள் போன்று திகழ்கின்றனர். இவர்களின் எதிர்கால இலட்சியம் ஈடேறுவதாக.

குறிப்பு: 
தந்தை எழுதிய இவ்வாக்கத்தை எனக்கு அனுப்பிவைத்த பேராசிரியர் கா குகபாலன் அவர்களுக்கு எனது மகிழ்ச்சியை அறியத்தருகிறேன்.

*இரண்டு கயிற்றடி தூரம் [தமிழர் நீட்டலளவை]
2 கோல் = 1 பெருங்கோல் = 11 அடி
8 பெருங்கோல் = 1 கயிறு
2 கயிறு = 176 அடி 

இக்கட்டுரையில் என் தந்தை புங்குடுதீவை 'நாடு' என்றே குறிப்பிடுக்கிறார். குறையாத விளைச்சலும் கற்ற அறிஞரும் நிறைந்த செல்வரும் உடையதே நாடு என்பது திருவள்ளுவர் முடிவு (குறள்: 731).  ஊர்கள் பல சேர்ந்திருப்பது நாடாகும். இவை புங்குடுதீவுக்குப் பொருந்துவதால் உயர்வு நவிச்சி அணிக்கமைய - தந்தையார் நாடு எனத் தான் பிறந்த புங்குடுதீவை புகழ்ந்து கூறியுள்ளார்.
இனிதே,
தமிழரசி.