Wednesday 24 September 2014

குறள் அமுது - (95)

குறள்:
பயந்தூக்கார் செய்த உதவி நயந்தூக்கின்
நன்மை கடலின் பெரிது                                         - (குறள்: 0103)

பொருள்:
எதுவித எதிபார்ப்பும் இல்லாமல், ஒருவர் செய்த உதவியின் அளவைச் சீர்தூக்கிப்பார்த்தால் அதன் நன்மை கடலைவிடப் பெரிதாக இருக்கும்.

விளக்கம்:
பிறருக்கு உதவி செய்யும் பொழுது அதனால் தனக்குப் பயன் கிடைக்கும் என்று எதிர்பாராது செய்கின்ற உதவியின் தன்மை எப்படிப்பட்டது என்பதை இத்திருக்குறள் எடுத்துச் சொல்கிறது. நாம் இவருக்கு உதவி செய்தோமேயானால் இவர் எனக்குப் பின்னர் உதவுவார் என எதிர்பார்த்து உதவுவோர் பலராவர். அத்தகைய எதிர்பார்ப்பு சிறிதும் இன்றி பிறருக்கு உதவுவோரும் இருக்கின்றனர்.

தாம் செய்யும் உதவிக்கு எத்தகைய பயன் திரும்பக் கிடைக்கும் என்று எண்ணாது, ஒருவர் மற்றவருக்கு செய்கின்ற உதவியின் பெருமதியை அளவிட்டுப் பார்ப்போமேயானால் அதனால் கிடைக்கும் நன்மை கடலைவிடப் பெரிதாய் இருக்கும்.

இந்த உலகில் தன்னலம் கருதாப் பெருங்கொடையாளி இயற்கை அன்னையே. உலக உயிர்கள் வாழ்வதற்கு தேவையான அனைத்தையும் அள்ளிக் கொடுப்பது இயற்கையே. கடலும் இயற்கையின் ஒரு கூறே. இன்றைய மனிதர்களாகிய எமக்கு இயற்கையின் தொழிற்பாடுகள் அந்நியமாய்ப் போய்விட்டன. ஐபாட், ஐபோன் என மணிக்கணக்கில் மூழ்கிக் கிடக்கும் எமக்கு காடென்ன? மலையென்ன? கடலென்ன? எல்லாமே வேண்டாப் பொருளாய் மாறிவிட்டதில் என்ன வியப்பு?

கடற்கரையில் நின்று கடலை, கடலலையைப் பார்த்து இரசித்து, கடற்காற்றை நுகரும் நாம் எப்போதாவது கடல் எமக்கு அள்ளித்தரும் பொருட்களைப்பற்றிச் சிந்திக்கிறோமா? கடல் எம்மிடமிருந்து எதுவித பயனையும் எதிர்பாராது மீன், நண்டு, இறால், கணவாய், சிப்பி, சங்கு, முத்து, பவளம் என எத்தனையோ பொருட்களை எமக்குத் தருகிறது. அத்தகைய கடலைவிட பயனைச் சிறிதும் எண்ணிப்பாராமல் செய்கின்ற உதவி பெரிதாகும்.

No comments:

Post a Comment