Thursday 21 June 2012

வாரி அணைத்துக் கொஞ்சலாம்




மனிதன் பண்டைய நாள் தொட்டு, இன்றுவரை ஊஞ்சல் கட்டி ஆடுகிறான். குருவிகளைப் போல் மிருகங்களைப் போல கொடிகளிலும், விழுதுகளிலும் ஆடியமனிதன் இன்று  எத்தனையோ வகை வகையாக ஊஞ்சல் செய்து ஆடுகிறான். ஆனால் இன்றும்  நாட்டுப்புறங்களில் ஆலம் விழுதில் ஊஞ்சல் செய்து ஆடும் வழக்கமும், ஆழம் விழுதில் தொங்கி ஆடும் வழக்கமும் இருக்கிறது. அப்படி ஆழமர விழுதில் ஊஞ்சல் ஆடுவது மிகவும் ஆனந்தமாக இருக்கும். ஈழத்தமிழரும் அந்த ஆனந்தத்தை இரசித்தவர்களே.
அந்நாளில் பாலியாற்றங்கரையில் வாழ்ந்த விடலைப் பையன் ஒருவன் வாழ்ந்தான். அவன் ஒரு கன்னிப்பெண்ணுடன் ஆலமர விழுதில் கட்டிய ஊஞ்சலில் எப்படி ஆடினான் என்பதை தன் நண்பர்களுக்குக் கூறுவதாக அமைந்துள்ள ஒரு நாட்டுப்புற ஊஞ்சற்பாடல் இது.
ஆண்: “ஆலமரத்து விழுதிலே
                     ஊஞ்சல் கட்டி ஆடலாம்
          ஆள ஆள பாத்துமே
                     ஆனந்தமாய் ஆடலாம்”
ஆண்:  “கீழ கண்ணால் பாத்துமே
                      கிறுகிறுக்க செய்யலாம்  
             மேல கீழ போகயில
                       மெதுவாகொஞ்சம் வருடலாம்”
 ஆண்: “சேலமெல்ல நழுவயில
                      திருத்துமழகை ரசிக்கலாம்
             வாலகுமரி தன்னையே
                     வாரியணைத்துக் கொஞ்சலாம்”
                                         -  நாட்டுப்பாடல் (பாலியாறு)
                            - (பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து)
 
வவுனிக்குளத்தை 'பாலிவாவி' என பண்டைத் தமிழர் அழைத்தனர். 'வாவி' என்றதும் சிங்களமொழிச் சொல் எனச்சிலர் கருதுகின்றனர்.  சிங்களத்தில்  'wewa' என்பதையே தமிழில் வாவி என்கிறார்கள் என்கின்றனர். அது பிழையான கருத்தாகும். சிங்களமொழி தோன்ற  முன்பே தமிழில் வாவி என்னும் சொல் இருக்கிறது.   முதலாம் கரிகாற்சோழன் கி மு இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவன். அவனைப் பாடிய சங்ககாலப் புலவரான கடியலூர் உருத்திரங் கண்ணனார் பட்டினப்பாலையில்
"செறுவும் வாவியும் மயங்கி நீரற்று
அறுகோட்டு இரலையொடு மான்பிணை உகளவும்"
                                                  - (பட்டினப்பாலை: 244- 245)
என நீர்நிலைகளில் ஒன்றாக வாவியையும் குறிப்பிட்டுள்ளார். இந்த நாட்டுப்பாடல் பாடப்பட்ட இடமான பாலியாறு இன்றும் வவுனிக்குளத்திற்கு நீரைக் கொடுத்துக் கொண்டு இருக்கிறது. 
இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment