Thursday 14 April 2016

சித்திரைப் புத்தாண்டில் சித்திரக் கவிதை வாழ்த்து!

இன்பச் சித்திரைப் புத்தாண்டைக் கொண்டாடும் உறவினர்க்கும், நண்பர்க்கும், வாசகர்கட்கும், என் மாணவர்கட்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்து. தமிழ் கூறும் நல்லுலகிற்காக என் இனிய வாழ்த்தை ஒரு சித்திரத் தேரினில் சித்திரக் கவிதையாக அனுப்புகிறேன். வாசித்துப் பார்த்து மகிழுங்கள்!
சித்திரத்தேரினுள் சித்திரக்கவிதை

புத்தாண்டு வாழ்த்துக்காக நான் கீறிய சித்திரத் தேரினுள் இருக்கும் எனது சித்திரக் கவிதை இதோ!
ஆயதமிழிசை நாடுவா ரானந்த மெல்லாம்
தூயஏழிசை போலமின்னும்நற் றமிழ்புத்தாண்டி - லேயபுவிமிசை
மேழியோர் ஏத்தயின்ப மனையறம் பொழிய
வாழிய தமிழ்போல் வாழிய!

சித்திரத்தேரினுள் இருக்கும் சித்திரக் கவிதையை எப்படி வாசிப்பது என்று சொல்லவா!

இந்தச் சித்திரத் தேரின் இடது சில்லில் இருந்து தொடங்கி மேலேறி வலது சில்லில் இறங்கி, அடித்தட்டின் வலது நுனியிலேறி இடப்புறமாகச் சென்று, அதற்கு மேல் தட்டின் இடது நுனியிலிருந்து வலப்புறமாகச் சென்று, வலது நுனியிலேறி முன்போல் மாறி மாறி ஒவ்வொரு தட்டாக ஏறி தேரின் உச்சிக்குச் சென்று, நடுவழியாக நேரே கீழே இறங்கி வரவும். இக்கவிதையின் கடைசி அடியிலுள்ள ‘வாழிய தமிழ்போல் வாழிய’ எழுத்துக்கள் யாவும் முதல் மூன்று அடியிலும் மறைந்து கிடக்கிறது. இதுவே இச்சித்திரக் கவிதையின் சிறப்பாகும்.

ஆயதமிழ் இசையை விரும்புவோர்[நாடுவார்] ஆன்ந்தம் எல்லாவற்றையும்
தூய ஏழிசை போலமின்னும் நற்றமிழ் புத்தாண்டில் - உலகத்து[ஏயபுவிமிசை]
உழவர்கள்[மேழியோர்] போற்ற[ஏத்த] இன்ப இல்லறம்[மனையறம்] நிறைய[பொழிய]
வாழிய! தமிழ்போல் வாழிய!

தமிழிசையை விரும்புவோர் யாவரும் எல்லா ஆனந்தத்தையும் ஏழிசை போல மிளிரும் தமிழ்ப் புத்தாண்டில் உலகத்தில் உள்ள உழவர்கள் போற்ற இன்ப இல்லறம் நிறைய வாழ்க! தமிழ்போல் வாழ்க!

எமக்கு உணவு கொடுப்பவர்கள் உழவர்கள். ஆதலால் உலகிற்கு உணவளிக்கும் உழவர்கள் மனம் நிறைந்து போற்ற வாழ்தலே சிறந்த வாழ்வாகும்.
இனிதே,
தமிழரசி.

2 comments:

  1. வாழிய தமிழ்போல் வாழிய!

    அருமையான பதிவு

    இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. மங்கலம் நிறைந்த சித்திரைப் புத்தாண்டு வாழ்த்து.

      Delete