Sunday 21 February 2016

அறங்கள் இரண்டா?முப்பத்திரெண்டா?


பண்டைத்தமிழன் வகுத்ததோ இல்லறம் துறவறம் என அறங்கள் இரண்டே. இவ்விரு அறங்களும் உணர்த்தியது ஈகையும் விருந்தோம்பலும். இவற்றால் பிறந்த முப்பத்திரெண்டு அறங்களையும் பார்ப்போமா! 
1. நிழல் தரும் மரங்கள் நட்டு சோலை அமைத்தல்
2. படிப்போர்க்கு உணவு கொடுத்தல்
3. மறு சமயத்தார் நட்பு
4. ஆதுலர்க்கு சாலை அமைத்துக் கொடுத்தல்
5. சிறையில் இருப்போருக்கு உணவு கொடுத்தல்
6. ஆதரவற்றோருக்கு உணவு கொடுத்தல் 
7. குழந்தைகளை தத்து எடுத்து வளர்த்தல்
8. தாயில்லாக் குழந்தைகளுக்கு பால் அளித்தல்
9. ஆதரவற்றோருக்கு உடைகள் கொடுத்தல்
10. ஆதரவற்று இறந்தோரின் உடல்களை எரித்தல்
11. நோய் உற்றோருக்கு மருந்து வாங்கிக் கொடுத்தல்
12. எண்ணெய் வாங்கிக் கொடுத்தல்
13. கண் மருந்து கொடுத்தல்
14. தோடு கொடுத்தல்
15. கண்ணாடி கொடுத்தல்
16. திருமணம் செய்து வைத்தல்
17. போக வீடு கட்டிக் கொடுத்தல்
18. ஐயம் - இரப்போருக்குக் கொடுத்தல்
19. மகப்பேறுவுக்கு உதவுதல்
20. பிறர் துயர் தீர்த்தல்
21. தண்ணீர் பந்தல் வைத்தல்
22. வழிப்போக்கர்களுக்கு உதவுதல் 
23. மடம் கட்டிக் கொடுத்தல்
24. தடம் அமைத்துக் கொடுத்தல் - குளம் அமைதல்
25. வைத்தியசாலை கட்டிக் கொடுத்தல்தல்
26. தலைமயிர் வெட்டுவதற்கு பணம் கொடுத்தல்
27. ஆடை வெளுக்கப் பணம் கொடுத்தல்
28. பசுவுக்கு உணவு கொடுத்தல்
29. ஆ- உராய்ஞ்சிக் கல் - ஆடு, மாடு உராயக் கல் அமைத்தல்
30. ஏறு விடுதல் - பசுக்கள் கருத்தரிக்க ஏற்ற எருதுகளைக் கொடுத்தல்
31. மற்றைய விலங்குகளுக்கு உணவு கொடுத்தல்
32. விலை கொடுத்து உயிர் காத்தல் - கொல்வதற்கு கொண்டு செல்லும் உயிரினங்களின் உயிர்களை காசு கொடுத்துக் காத்தல்


இந்த முப்பத்திரண்டு அறங்களில் முதலாவது அறமாக நம் முன்னோரால் போற்றப்பட்ட அறம்நிழல் தரும் மரங்கள் நட்டு சோலை அமைத்தலே ஆகும். பனைமரத்தில் இருந்து கிடைக்கும் பனங்கள் 'ஆதுலம்' என்று அழைக்கப்படும். அதனால் குடி வெறியில் அலைவோரை ஆதுலர் என்பர். தம் நிலைமறந்து குடித்து உற்றோரால் கைவிடப்பட்டு வறுமையோடு நோயுற்றுக் கிடப்போரை மீண்டும் நல்வழிப்படுத்தும் வைத்தியசாலையே ஆதுலர்சாலையாகும். இத்தகைய அறங்கள் எல்லாம் இருக்க இவற்றுள் ஒன்றாகக் கூடக் கருதப்படாத கோயில்களைக்கட்டி குடமுழுக்குச் [கும்பாபிசேகம்] செய்து நாம் மகிழ்வதும் ஏனோ!!

இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment