Wednesday 15 July 2015

நேர்மையைக் காட்டுவது எப்போதோ?


குஞ்சுகள் நாம் இங்கு கூடிநின்றோம்
கூடுகள் இன்றி வாடுகின்றோம்
வஞ்சம் உள்ள மானுடரே உங்கள்
வன்மம் தீர்வது எப்போதோ?

பச்சை மரம்  இங்கு காணவில்லை
பதுங்கி இருக்க நிழலுமில்லை
அச்சம் உள்ள மானுடரே உங்கள்
ஆசை மாய்வது எப்போதோ?

தஞ்சம் எமக்கு இங்கு யாருமில்லை
தந்தை தாயரை கண்டதில்லை
விஞ்சும் எண்ண மானுடரே உங்கள்
வேட்கை தணிவது எப்போதோ?

மிச்சம் எமக்கு இங்கு ஏதுமில்லை
மேதினி எங்கும் யாதுமில்லை
இச்சை மிக்க மானுடரே உங்கள்
இச்சை குறைவது எப்போதோ?

பஞ்சம் உமக்கு இங்கு வந்ததில்லை
பாரின் பசுமைக்கு ஈடுமில்லை
நெஞ்சம் கொண்ட மானுடரே உங்கள்
நேர்மையைக் காட்டுவ தெப்போதோ?
                                                                    
இனிதே,
தமிழரசி

No comments:

Post a Comment