Monday 6 July 2015

மணிவாசகர் வாக்கில் வண்டோதரி

இராவணன் வண்டோதரி புடைப்புச் சிற்பம் - களனி

இதிகாச காலத்திற்கு முன்பிருந்தே பண்டைய மனிதர்களால் அறியப்பட்ட பெருமை மிக்க நாடுகளில் ஒன்று இலங்கை. உலகின் பண்டைய சரித்திரங்களைக் கூறும் பண்டைய மொழி நூல்களும் கூட இலங்கையின் வளத்தை - செல்வச்செழிப்பைக் கூறத்தவறவில்லை. சமஸ்கிருத வேத, இதிகாச நூல்களும், தமிழ் இலக்கிய சங்க நூல்களும் இலங்கையில் வாழ்ந்தோரின் புகழையும் சேர்த்துச் சொல்கின்றன.

அவை இலங்கையின் மாந்தையை அரசாண்ட மயனைப்பற்றியும் கூறுகின்றன. அவனை நாகர்களின் அரசன் என்றும் அவை சொல்கின்றன. மதுரையை நாகநாடு எனவும் தமிழரை  நாகர்கள் என்றும் பரிபாடல் கூறுகின்றது. சிலப்பதிகார மங்கல வாழ்த்தும் 
“நாகநீள் நகரொடு நாகநாடு அதனொடு”
என மதுரையைச் சொல்கிறது. ஆதலால் நாகர்கள் எனத் தமிழரையே அழைத்தனர் என்பதும் தெளிவாகின்றது..

பண்டை நாளில் திருக்கேதீஸ்வரத்தில் இருந்த திருக்கோயில் ‘மா எந்தை’  கோயில் என அழைக்கப்பட்டது. அதனை
மா எந்தை கோயில் நண்ணி மலரடி தொழுவார்க் கெல்லாம்
மறுமையும் இன்பம் நல்கும் மணிமிடற் றந்தணாளன்”
என்று அக்கோயில் இறைவனை மாந்தை மாண்மியம் கூறுகின்றது. ‘மா எந்தை’ கோயிலை மயன் கட்டினான் எனவும் அவனின் மகள் வண்டோதரி ‘மா எந்தை’ இறைவனை காதலால் கசிந்துருகி வணங்கினாள் எனவும் மாந்தை மாண்மியம் சொல்கிறது. 'மாஎந்தை' கோயில் இருந்த இடமே இன்று 'மாந்தை' என அழைக்கப்படுகிறது.

மாந்தையில் வாழ்ந்த மயனின் மகளுக்கு சிவன் நித்தமும் திருமணக்கோலத்துடன் காட்சி கொடுத்தாராம். சிவனின் கீர்த்திகளை திருவாசகத்தின் ‘கீர்த்தித்திருவகவல்’ சொல்கிறது. அதில் மாணிக்கவாசகர்
“தேவூர் தென்பால் திகழ்தரு தீவில்
கோஆர் கோலங் கொண்ட கொள்கையும்            
                                            - (ப.திருமுறை: 8: 2: 71 - 72)
என்று இறைவனின் கீர்த்திகளில் ஒன்றைச் சொல்கிறார்.

இத்திருவாசகத்தில் இலங்கையை மணிவாசகர் ‘திகழ்தரு தீவு’ எனக் கூறுகிறார். குமரி ஆற்றுக்கிடையே ஆற்றிடைக்குறையாக திகழ்ந்ததால் - இலங்கியதால் அதற்கு இலங்கை என்று பெயர். [ஆற்றுக்கு இடையேயுள்ள நிலப்பரப்பு, தமிழில் இலங்கை என அழைக்கப்படும்]. இலங்குதலும் - திகழ்தலும் ஒத்த கருத்துள்ள சொற்களேயாகும். கொள்கை என்றது இங்கு இறைவனின் தன்மையைக் குறிக்கின்றது. அதாவது தேவூருக்குத் தெற்கே இலங்குகின்ற தீவில் [திகழ்தரு தீவு] சிவன் பேரழகு பொருந்திய மணவாளக்கோலம் [கோஆர் கோலம்] கொண்ட தன்மையை [கொள்கையை] புகழ்கிறார்.

அதனால் மாணிக்கவாசகர் ‘நித்தமணாளர்’ என்று சிவனைப் பெயரிட்டு அழைத்தார். அதை
“நித்த மணாளர் நிரம்ப அழகியர்
சித்தத்து இருப்பரால் அன்னே என்னும்
சித்தத்து இருப்பவர் தென்னன் பெருந்துறை
அத்தர் ஆனந்தரால் அன்னே என்னும்”               
                                              - (ப.திருமுறை: 8: 17: 3)
என அன்னைப்பத்து காட்டுகின்றது.

இந்த திருவாசகத்தில் மணிவாசகர் பெருந்துறை என்று சொல்வது தமிழகத்தில் உள்ள திருப்பெருந்துறையையா? ஈழத்தில் உள்ள பெருந்துறையையா? என்ற கேள்வி எழுகின்றது. ஈழத்தில் பெருந்துறை இருக்கிறதா? என்னும் கேள்வி இதைவாசிக்கும் உங்களில் பலருக்கு இப்போது எழலாம். ஈழத்திலும் பெருந்துறை இருந்தது. இப்போதும் இருக்கிறது. 

ஈழத்து பெருந்துறையை சங்க இலக்கியங்களும் சொல்கின்றன. குமரி ஆற்றுக்கு இடையே  இலங்கை இருந்தகாலத்திலும் இந்தப் பெருந்துறை ஈழத்தில் இருந்தது. அதனை
குமரிஅம் பெருந்துறை அயிரை மாந்தி
வடமலைப் பெயர்குவை ஆயின்”           
                                                     - (புறம்: 67: 6)
என அன்னச்சேவலுக்கு, பிசிராந்தையார் புறநானுற்றில் சொல்வதால் அறியலாம். பிசிராந்தையார் கூறிய அயிரை மீன் நன்னீரில் வாழும் மீன். ஆதலால் அவ்விடம் கடல்கோளுக்கு முன்னிருந்த குமரியாற்றுப் பெருந்துறை என்பதும், அது இன்றைய கன்னியாகுமரி அல்ல என்பதும் தெளிவாகிறது. அன்று குமரிஅம் பெருந்துறை என்ற பெயருடன் இருந்த பெருந்துறையே, கடல் கோளின் பின் மணிவாசகர் காலத்திலும் அரேபியக் குதிரைகள் வந்து இறங்கும் பெருந்துறையாக இருந்தது. அந்தப் பெருந்துறையே இன்றைய மாதோட்டம் ஆகும்.

பெருந்துறை என்ற பெயர் மாதோட்டம் ஆக மாறியது.  அதுபோல் இலங்கையில் இருந்த சம்பான் + துறை = சம்பாந்துறை என்ற பெயரும் சம்பான் + தோட்டம் = சம்பாந்தோட்டமாகி இப்போது அம்பாந்தோட்ட ஆகி நிற்கிறது. சம்பான் என்பது தோணி, படகு என்பவற்றைக் குறிக்கும் சொல்லாகும். சம்பு என்பது நாவல் மரத்தின் பெயர்களில் ஒன்று. நாவல் மரத்தால் செய்த படகு, தோணி என்பவை சம்பான் அழைக்கப்பட்டன. தமிழரின் கப்பல் கட்டும் கலைச்சொல் தொகுதி; இன்றும் கூட  நாவல் மரம், கப்பல் கட்ட பயன்படுவதைச் சொல்கிறது. படகுகள் நிறைந்த துறைமுகம் என்ற கருத்தில் சம்பாந்துறை என ஈழத் தமிழ் முன்னோர் அழைத்தனர்.
“குரை கடலுக்கொரு சம்பானாய் வருவடிவேலா
என்று திருப்புகழில் முருகனை சம்பான் என அருணகிரிநாதர் அழைக்கின்றார்.

மணிவாசகரும் பெருந்துறையைக் கூறும் இடங்களில் தென் பெருந்துறை’ ’தென்னன் பெருந்துறை’ ‘பெருந்துறை’ என்றெல்லாம் கூறுவதைக் காணலாம். அவர்காலத்தில் மட்டுமல்ல இக்காலத்திலும் பல பெருந்துறைகள் தமிழகம் எங்கும் இருக்கின்றன. அப்படியிருக்க எப்படி மாதோட்டத்தை மணிவாசகர் சொன்ன பெருந்துறை என்று சொல்வது?

மேற்கே தமிழகத்தில் இருந்து கிழக்கே இருக்கும் பெருந்துறையைப் பார்க்க வரும் மணிவாசகரின் பார்வையில் கதிரொளியானது பெருந்துறையில் இருந்த மலைக்கு [பெருந்துறை வரை] மேலே திசைதோறும் விரிந்து செல்வது தென்படுகின்றது. அதனை திருவண்டப் பகுதியில்
“கருமா முகிலின் தோன்றி
திருஆர் பெருந்துறை வரையில் ஏறி
திருத்தகு மின் ஒளி திசை திசை விரிய”                         
                                                  - (ப.திருமுறை: 8: 3: 67 - 69)

என்று கூறியுள்ளார். அவர் மட்டுமல்ல அவருக்குப் பின்னே வாழ்ந்த திருஞானசம்பந்தர் தாம் பாடிய திருக்கேதீஸ்வரப் பதிகத்தில்
“மாடெலாமண முரசெனக் கடலின் ஒலிகவர் மாதோட்டம்”      
                                                 - (ப.திருமுறை: 2: : 11)
என்று பாடியுள்ளார். கடலலையின் ஒலி மணமுரசு போல கேட்பதற்கு அது மோதும் இடம் மலையாக - கல்லாக இருந்திருக்க வேண்டும். அவர்கள் வாழ்ந்த காலத்தில் கடல் நீர்மட்டம் மிகவும் தாழ்ந்து இருந்ததையும் நாம் கருத்தில் கொள்வது நன்று. எனவே மணிவாசகர் பெருந்துறை என்று கூறியது மாதோட்டத்தை எனக் கொள்ளலே ஏற்புடையது.

இறைவனின் பெருமைகளைக் கூறி, இறைவனை இனிய குரலில் அழைக்க ஆசைப்பட்ட மணிவாசகர் “கீதமினிய குயிலே!” எனக் குயிலைக் கூப்பிட்டு
“ஏர்தரும் ஏழ் உலகு ஏத்த எவ்வுருவும் தன் உருவாய்
ஆர்கலி சூழ் தென் இலங்கை அழகு அமர் வண்டோதரிக்குப்
பேர் அருள் இன்பம் அளித்த பெருந்துறை மேய பிராணைச்
சீரிய வாயால் குயிலே தென் பாண்டி நாடானைக் கூவாய்!”       
                                                        - (ப.திருமுறை: 8: 18: 2)

எனப் பாடச் சொல்கின்றார். முதன்முதல் கீதமினிய குரலில் கேட்க அவர் ஆசைப்பட்டது ‘மயனின் மகளாய் பிறந்து, இராவணனின் மனைவியான வண்டோதரிக்கு பேரின்ப பெருவாழ்வு அளித்த பெருந்துறைச் சேர்ந்த மா எந்தை இறைவனையே!’  அத்துடன்
தென்பாண்டி நாடானைக் கூவாய்!’
என இலங்கையை தென்பாண்டி நாடாகக் காட்டுவதையும் இத்திருவாசகம் சொல்கிறது. 

பூ இதழ்களால் கட்டிய மாலையை [இதழி], இறைவன் வண்டோதரிக்குக் கொடுத்ததை திருநாவுக்கரசு நாயனார்
“மங்கை காணக்கொடார் மண மாலையை
கங்கை காணக்கொடார் தலைக் கண்ணியை
நங்கைமீர் இடை மயனரின் நங்கைக்கே
எங்கு வாங்கிக் கொடுத்தார் இதழியே”           
                                              - (ப.திருமுறை: 5: 15: 6)

எனக் கேட்கிறார். இத்தேவாரத்தின் மூன்றாம் அடியில் “மயனரின் நங்கைக்கே” என்றும் “மருதரின் நங்கைக்கே” என்றும் பாட பேதம் உண்டு. மயனை - மருத நிலத் தலைவனாக மாந்தை மாண்மியம் சொல்லும். இன்றும் மாந்தைப் பகுதி மருதநிலமாகவே இருக்கிறது.

சிவனின் மேல் தீராக் காதல் கொண்டவள் வண்டோதரி என்பதும் அவளுக்கு இறைவன் அருள் புரிந்தார் என்பதையும் திருநாவுக்கரசரின் இந்தத் தேவாரம் மட்டும் அல்ல உத்தரகோச மங்கை புராணமும், மாந்தை மாண்மியமும் சொல்வதோடு, திருக்குற்றாலக் குறவஞ்சியில்
“தென்னிலங்கை வாழுமொரு கன்னிகைமண்
       டோதரியாள் மானே - அவர்
பொன்னடியில் சேர்ந்தணைய என்னதவம்
       செய்தாளோ மானே”                        
                                                     - (தி. குறவஞ்சி: 23: 2)
என திரிகூடராசப்ப கவிராயர் குற்றாலத்து இறைவனைக் கூற, 

கடந்த நூற்றாண்டில் வாழ்ந்து, திருக்கோணேஸ்வர நாதரைப் பாடிய பாடலில் பண்டிதர் ஆறுமுகன் அவர்களும்
“மயனாரின் மகளாய் மாந்தைபதி வாழ்ந்தவருள்
         மங்கை மனமகிழ் நாதராய்”
என்று திருக்கோணேஸ்வர இறைவனை வணங்குகிறார்.

வண்டோதரியின் கதையை திருவாசகத்தில் பல இடங்களில் கூறியதால் இவர்களுக்கு முன்னோடியாக மணிவாசகர் இருந்ததை திருவாசகம் மிக நன்றாக எடுத்துச் சொல்கிறது.
“வந்து இமையோர்கள் வணங்கி ஏத்த
        மாக் கருணைக் கடலாய் அடியார்
பந்தனை விண்டு அற நல்கும் எங்கள் 
       பரமன் பெருந்துறை ஆதி அந்நாள்
உந்து திரைக் கடலைக் கடந்து அன்று
       ஓங்கு மதில் இலங்கை அதனில்
பந்து அணை மெல் விரலாட்கு அருளும்
       பரிசு அறிவார் எம்பிரான் ஆவாரே”            
                                                     - (ப.திருமுறை: 8: 43: 5)
என்கின்றது மணிவாசகரின் திருவார்த்தை.

ஆதிகாலம் தொடக்கம் பெருந்துறையில் இருக்கும் எங்கள் இறைவன் [பரமன்] தேவர்கள் வந்து வணங்கிப் போற்ற, பெரிய கருணைக் கடலாய் இருந்து அடியவரின் பந்த பாசங்களை நீக்குபவர். அவர் அந்த நாளில் உந்தும் அலைகடலைக் கடந்து சென்று, ஓங்கி எழுகின்ற மதில் [தூங்கு எயில்] உள்ள இலங்கையில், பந்து விளையாடிய மென்மையான விரல்களை உடைய வண்டோதரிக்கு கொடுத்த அருட்பரிசு என்ன என்பதை அறிந்தவர் பெருந்துறை இறைவன் என்கிறது இத்திருவாசகம்.

வண்டோதரிக்கு இறைவன் அருளிய அருட்பரிசை நினைந்து நினைந்து, தனக்கும் அதுபோல் கிடைக்குமா என ஏங்கிய ஏக்கமே ‘மணிவாசகர் வாக்கில் வண்டோதரி’ வரக் காரணமாய் இருந்ததை இந்தத் திருவாசகம் காட்டுகிறது அல்லவா!
இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment