Monday, 29 September 2014

தென்றல் அசையக் கற்றது யாரிடம்?


காற்று வீசுகிறது. அதாவது ஓரிடத்தில் இருந்து இன்னோர் இடத்துக்கு அசைந்து - இயங்கிச் செல்கிறது. அப்படி காற்று இயங்கும் திசையை வைத்து அத்தத்திசையில் இருந்து வீசும் காற்றுக்கு நம்முன்னோர் ஒவ்வொரு பெயர் வைத்துள்ளனர்.
கிழக்கில் [குணக்கில்] இருந்து வீசும் காற்றை ‘கொண்டல்’ என்றனர்.
தெற்கில் இருந்து வீசும் காற்றை ‘தென்றல்’ என்றனர்.
மேற்கில் [குடக்கில்] இருந்து வீசும் காற்றை குடக்காற்று என்றனர். அதுவே கோடைக்காற்று.
வடக்கில் இருந்து வீசும் காற்றை ‘வாடை’ என்றனர். 

மதுரை நகரில் நடைபெற்ற காதல்விழா பற்றி சொல்லும் இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் ‘கொண்டற்காற்று பாண்டிய மன்னனின் கூடல் நகரிலே புகுந்து நெடுவேள் என்று சொல்கின்ற மன்மதனின் வில்விழாவைக் [ காதல்விழாவைக்] காணும் பின்பனிக்காலத்து [பங்குனி] பனியரசன் எங்கே உள்ளான்?’ எனக் கேட்டதாம் என்கிறார். அதனை

“கொண்டலொடு புகுந்து கோமகன் கூடல்
வெங்கண் நெடுவேள் வில்விழாக் காணும்
பங்குனி முயக்கத்து பனியரசு யாண்டுளன்”     - (சிலம்பு: 14:110 - 112)
எனும் சிலப்பதிகார வரிகள் சொல்கின்றன. இது கிழக்கே இருந்து வீசிய பின்பனிக்கால கொண்டல் காற்றை எடுத்துச் சொல்கிறது.

ஆனால் பண்டைத் தமிழரால் காற்றுகளிலே மிகச்சிறந்த இடத்தில் புகழ்ந்து கூறப்படும் காற்று தென்றல் காற்றாகும். தம் முன்னோர் வாழ்ந்த தென்திசையிலிருந்து வீசுவதாலோ அன்றேல் என்றும் தென்கடலே தமிழருடைய கடலாக இருந்ததாலோ தென்றல் காற்றின் மேல் பற்று அதிகமாகவே இருந்திருக்கிறது. தென்கடற்கரையில் நின்று மெத்தென எம் உடலை வருடித் தழுவிச் செல்லும் தென்றற்காற்றை நுகர்ந்தோருக்குத் தெரியும் அதன் இதமான சுகத்தின் உண்மை. அந்தத் தென்றல் வந்து எம்மைத் தொடும் போது தோணும் இன்பத்திற்கு ஈடேது? மென்மையாக பய பக்தியோடு இயங்கத் தென்றல் யாரிடம் கற்றது?

கிழக்கே இருந்து வந்த கொண்டலும் மதுரை நகரில் வில்விழாக்காணவந்த பனியரசன் எங்கே உள்ளான்? எனக்கேட்டது என்றாரே இளங்கோவடிகள். அதுபோல தெற்கே இருந்து வந்து மதுரைக் ‘சோலையில் நுழைந்து, வாவிக்குள் புகுந்து, தாமரைமலரைத் தடவிப் பார்த்து, பசுமையான இருவாட்சி, முல்லை, மல்லிகைப் பந்தர்களில் எல்லாம் தாவிச் சென்று மகரந்தங்கள் விரிந்த மலர்களின் நறுமணத்தைச் சேகரித்து, குளிர்ச்சியோடு மென்மையாய் இயங்கும் தென்றலானது அங்கங்கே பல இடங்களிலும் சென்று அந்தக்கலை என்ன சொல்கிறது? இது என்ன சொல்கின்றது? என கலைகளை ஆராய்ந்து கற்று அறியும் மாணவனைப் போல இயங்குமாம்’ என்கின்றது திருவிளையாடற் புராணம்.

“பொங்கரில் நுழைந்து வாவி புகுந்து பங்கயம் துழாவிப் 
பைங்கடி மயிலை முல்லை மல்லிகைப் பந்தர் தாவிக்
கொங்கலர் மணங்கூட்டு உண்டு குளிர்ந்து மெல்லென்று தென்றல்
அங்கங்கே கலைகள் தேரும் அறிவன் போல் இயங்கும் அன்றே” 
                                  - (திருவிளையாடற் புராண திருவாலவாய்க் காண்டம்: 19) 

“பொங்கரில் [சோலையில்] நுழைந்து வாவி புகுந்து பங்கயம் [தாமரை] துழாவிப் [தடவி]
பைங்கடி [பசுமையான] மயிலை [இருவாட்சி] முல்லை மல்லிகைப் பந்தர் [பந்தல்] தாவிக்
கொங்கலர் [மரந்தம் விரிந்த] மணங்கூட்டு [மணத்தை] உண்டு [சேகரித்து] குளிர்ந்து மெல்லென்று [மென்மையாகத்] தென்றல்
அங்கங்கே [பல இடங்களிலும்] கலைகள் தேரும் [தேர்ச்சிபெறும்] அறிவன் [மாணவன்] போல் இயங்கும் அன்றே”

கலைகள் பல கற்கும் மாணவர் பொறுமையோடு பாடசாலை, கல்லூரி, பல்கலைக்கழகம் நூலகம் என்று சென்று தேடி ஓடித் திரிந்து படித்து, ஒவ்வொன்றாய் ஆராய்ந்து குறிப்பெடுத்து நல்லனவற்றைச் சேகரித்து கற்று மகிழ்வோடு மென்மையாகத் திரிதல் போல தென்றலும் இயங்கித் திரிகிறதாம். கற்கும்  மாணாக்கர் போல் தென்றல் அசைகிறதாம். 
இனிதே,
தமிழரசி.

Sunday, 28 September 2014

பாரின் பசுமை மீண்டிடுமோ!!


காட்டுமரம் தேடிவெட்டி
காலை மாலை சமையல் செய்தோம்
துட்டுநிதம் காணவேண்டி
துனை ஆலை காகிதம் செய்தோம்
கட்டுமரம் கட்டிகொண்டு
கடல் மேலை கப்பல் செய்தோம்
நாட்டுமரம் யாதுமில்லை
நாளை வேளை யாது செய்வோம்
வீட்டுமரம் நடுவாரில்லை
வேலை வேலை யாது செய்வோம்
பட்டமரம் காணவில்லை
பாலை நிலை ஆகச் செய்தோம்
பட்டமரம் தளைத்திடுமோ!
பாரின் பசுமை மீண்டிடுமோ!!
இனிதே,
தமிழரசி

சொல் விளக்கம்:
துட்டு - வெட்டப்பட்ட காசு (துள் - வெட்டு, துட்டு - வெட்டப்பட்டது)
துட்டுநிதம் - காசைநாளும்
துனை - விரைவு
துனை ஆலை - விரைவான ஆலை
பாலை - பாலை நிலம்
நிலை - தன்மை
பாலை நிலை - பாலை நிலத்தின் தன்மை

Saturday, 27 September 2014

தளிர்க்கரம் நீட்டவல்லாய் அல்லாயோ!


என்போடு கசிந்துருகி
இன்னிசை பாடவல்லேன் அல்லேன்
அன்போடு  ஒருதரம்
அலர்மலர் சூட்டவல்லேன் அல்லேன்
இன்போடு உன்நாமம்
            இதயத்தே மீட்டவல்லேன் அல்லேன்
துன்போடு துவழாது
             தளிர்க்கரம் நீட்டவல்லாய் அல்லாயோ!
இனிதே,
தமிழரசி.

Thursday, 25 September 2014

ஆசைக்கவிதைகள் - 95


ஆண்: விழிகள் இரண்டும் மூடியே
வார்த்தை ஏதும் பேசாது
மௌனமாக நின்றாளே
மனதை தட்டி சென்றாளே!
- நாட்டுப்பாடல் (ஈழம்)
                                                       (பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து)

Wednesday, 24 September 2014

குறள் அமுது - (95)

குறள்:
பயந்தூக்கார் செய்த உதவி நயந்தூக்கின்
நன்மை கடலின் பெரிது                                         - (குறள்: 0103)

பொருள்:
எதுவித எதிபார்ப்பும் இல்லாமல், ஒருவர் செய்த உதவியின் அளவைச் சீர்தூக்கிப்பார்த்தால் அதன் நன்மை கடலைவிடப் பெரிதாக இருக்கும்.

விளக்கம்:
பிறருக்கு உதவி செய்யும் பொழுது அதனால் தனக்குப் பயன் கிடைக்கும் என்று எதிர்பாராது செய்கின்ற உதவியின் தன்மை எப்படிப்பட்டது என்பதை இத்திருக்குறள் எடுத்துச் சொல்கிறது. நாம் இவருக்கு உதவி செய்தோமேயானால் இவர் எனக்குப் பின்னர் உதவுவார் என எதிர்பார்த்து உதவுவோர் பலராவர். அத்தகைய எதிர்பார்ப்பு சிறிதும் இன்றி பிறருக்கு உதவுவோரும் இருக்கின்றனர்.

தாம் செய்யும் உதவிக்கு எத்தகைய பயன் திரும்பக் கிடைக்கும் என்று எண்ணாது, ஒருவர் மற்றவருக்கு செய்கின்ற உதவியின் பெருமதியை அளவிட்டுப் பார்ப்போமேயானால் அதனால் கிடைக்கும் நன்மை கடலைவிடப் பெரிதாய் இருக்கும்.

இந்த உலகில் தன்னலம் கருதாப் பெருங்கொடையாளி இயற்கை அன்னையே. உலக உயிர்கள் வாழ்வதற்கு தேவையான அனைத்தையும் அள்ளிக் கொடுப்பது இயற்கையே. கடலும் இயற்கையின் ஒரு கூறே. இன்றைய மனிதர்களாகிய எமக்கு இயற்கையின் தொழிற்பாடுகள் அந்நியமாய்ப் போய்விட்டன. ஐபாட், ஐபோன் என மணிக்கணக்கில் மூழ்கிக் கிடக்கும் எமக்கு காடென்ன? மலையென்ன? கடலென்ன? எல்லாமே வேண்டாப் பொருளாய் மாறிவிட்டதில் என்ன வியப்பு?

கடற்கரையில் நின்று கடலை, கடலலையைப் பார்த்து இரசித்து, கடற்காற்றை நுகரும் நாம் எப்போதாவது கடல் எமக்கு அள்ளித்தரும் பொருட்களைப்பற்றிச் சிந்திக்கிறோமா? கடல் எம்மிடமிருந்து எதுவித பயனையும் எதிர்பாராது மீன், நண்டு, இறால், கணவாய், சிப்பி, சங்கு, முத்து, பவளம் என எத்தனையோ பொருட்களை எமக்குத் தருகிறது. அத்தகைய கடலைவிட பயனைச் சிறிதும் எண்ணிப்பாராமல் செய்கின்ற உதவி பெரிதாகும்.

Tuesday, 23 September 2014

அடிசில் 84

அவித்த முட்டைப்பொரியல்
 - நீரா -      

தேவையான பொருட்கள்:
முட்டை - 6
மிளகு தூள் - ¼ தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - ½ தேக்கரண்டி
எலுமிச்சம் பழச்சாறு - ½ தேக்கரண்டி
எண்ணெய் - பொரிப்பதற்கு  
உப்பு - தேவையான அளவு

செய்முறை: 
  1. முட்டை மூழ்கும் அளவுக்குத் தண்ணீர்விட்டு உப்பும் சேர்த்து, நன்கு வேகவைக்கவும்.
  2. வெந்ததும் தண்ணீரை வடித்து குளிர்ந்த நீரில் மூட்டையைப் போட்டுவைக்கவும்.
  3. முட்டை ஆறியதும் அதன் கோதை உரித்து முட்டையை எடுக்கவும்.
  4. அவித்தமுட்டையை முள்ளுக்கரண்டியால் சுற்றவரக் குத்திக்கொள்க.
  5. ஒரு கண்ணாடிப்பாத்திரத்தில் மிளகுதூள், மிளகாய்த்தூள், எலுமிச்சம் பழச்சாறு, உப்பும் சேர்த்து இரண்டு தேக்கரண்டி தண்ணீர் விட்டு கலந்து கொள்க.
  6. அக்கலவையுள் முட்டையைப் போட்டு புரட்டி 15 நிமிடம் ஊறவிடவும்.
  7. வாயகன்ற பாத்திரத்தில் எண்ணெய்விட்டுச் சூடானதும் முட்டைகளைப் போட்டுப் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.

Sunday, 21 September 2014

பரம் இருப்பது எவ்விடம்?



பரம் பொருள் எங்கே இருக்கின்றது? என்ற கேள்வி ஞானிகளுக்கும் சித்தர்களுக்கும் மட்டும் எழவில்லை. அது என்ன? இது என்ன? என்று கேள்வி கேட்கும் சிறு குழந்தைகளும் கேட்கும் கேள்வியே? எங்கள் வீட்டு சுவாமி அறையில் தங்கையுடன் விளையாடிக்கொண்டிருந்தான் என் மகன். அவன் சுவாமி படத்துக்குக் காலை நீட்டிக் கொண்டிருப்பதைக் கண்ட நான் ‘சுவாமிப்படத்துக்குக் காலை நீட்டக் கூடாது’ என்றேன். ‘ஏன்?’ என்றான். ‘இறைவன் பரம்பொருள் அல்லவா? பரம்பொருளுக்கு நமது காலை நீட்டுவது நல்லதா?’ என்றேன். 

‘பரம்பொருள் படத்தில் மட்டுமா இருக்கிறார்? எத்தனை கடவுளின் படங்கள் காற்றில் பறக்கின்றன. குப்பைத் தொட்டிக்குள் நிறைகின்றன. அவர் எங்கும் நிறைந்தவர் தானே! தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் தானே! நான் நின்றாலும் நடந்தாலும் ஓடினாலும் பரம்பொருள் என் காலடிக்குக் கீழேயும் இருக்கிறார் என்று நினைத்தேன். அம்மா! பரம்பொருள் இல்லாத இடம் இருக்கிறதா காலை நீட்ட’ என்றான். ஏழு வயதுச் சிறுவனாக இருந்த போதும் அவன் கேட்ட கேள்வி என்னைச் சிந்திக்க வைத்தது. அவன் கேட்ட கேள்வியில் எத்தகைய பெரிய உண்மை அடங்கி இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டேன். நாம் சற்றும் சிந்தித்துப் பாராது எதனையும் சிறுபிள்ளைகள் என்று சொல்லக்கூடாது என்பதையும் உணர்ந்து கொண்டேன். எனினும் அவனிடம் எமது காலில் அழுக்குகள் இருக்கும் அல்லவா. கடவுளும் குழந்தைகளும் இருக்கும் இடம் சுத்தமாய் புனிதமாக இருக்க வேண்டும் அதற்காகச் சொல்வது என்றேன்.

ஆனால் என் மனமோ சிவவாக்கியர் என்னும் சித்தர் சொன்ன 

பரமிலாத தெவ்விடம் பரமிருப்ப தெவ்விடம்
அறமிலாத பாவிகட்குப் பரமிலை யதுண்மையே
கரமிருந்தும் பொருளிருந்தும் அருளிலாது போதது
பரமிலாத சூன்யமாம் பாழ் நரகமாகுமே                  
                                        - (சித்தர் பாடல்: சிவவாக்கியர்: 501)

என்ற பாடலை அன்று முழுவதும் இசைபோட்டது.

பரம் இ(ல்)லாதது எவ்விடம் பரம் இருப்பது எவ்விடம்
அறம் இ(ல்)லாத பாவிகட்டு பரம் இ(ல்)லை அது உண்மையே
கரம் இருந்தும் பொருள் இருந்தும் அருள் இ(ல்)லாது போது அது
பரம் இ(ல்)லாத சூன்யமாம் பாழ் நரகம் ஆகுமே

பரம்பொருள் இல்லாத இடம் எந்த இடம்? பரம் பொருள் இருக்கும் இடம் எந்த இடம்? மனித வாழ்க்கையின் முறைமை என்று சொல்லப்படும் அறத்தைச் செய்யமுடியாத பாவிகளுக்குப் பரம்பொருள் என்று ஒன்று இல்லை என்பது உண்மையாகும். பண்டைத் தமிழர் தமது வாழ்க்கையை அறம் எனக்கொண்டு வாழ்ந்தனர். அதனால் அறத்தை - வாழ்க்கையை இல்லறம், துறவறம் என இரண்டாகப் பிரித்து வாழ்ந்தனர். இல்லறத்துக்கு உரிய கடமையைச் செய்து வாழ்தல் ஒருவகை அறம். துறவறத்துக்குரிய கடமையைச் செய்து வாழ்தல் இன்னொரு வகை அறமாகும். இல்லற வாழ்க்கையில் ஈடுபட்ட போதும் இல்லறத்துக்குரிய செயல்களைச் செய்யாது இருப்போரையும்  துறவறம் பூண்ட சுவாமிமார் என்று கூறியவாறு துறவறத்துக்குரிய செயல்களைச் செய்யாது செய்வது போல நடித்து உலகை ஏமாற்றுவோரையும் அறமில்லாத பாவிகள் என சிவவாக்கியர் திட்டித் தீர்த்துள்ளார். அடுத்து அறமில்லாத அந்தப் பாவிகளால் பரம்பொருளைக் காணமுடியாது என்பதும் உண்மையே என்று சத்தியம் செய்துள்ளார்.

அறம் என்றால் என்ன என்பதை திருவள்ளுவர் இனியவை கூறல் எனும் அதிகாரத்தில் மிக நேர்த்தியாக எடுத்துக் காட்டுகிறார். அவர் காட்டும் அறம் மிக அற்புதமானது. பாருங்கள்.
“முகத்தான் அமர்ந்துஇனிது நோக்கி அகத்தான்ஆம்
இன்சொல் லினிதே அறம்”                                  - (குறள்: 93)

'ஒருவரைக் கண்டதும் முகமலர்ச்சியுடன் அன்புடன் பார்த்து மனம் கனிந்து இனிய சொற்களைச் சொல்வதே அறம்' என அறத்துக்கு ஒரு வரைவிலக்கணம் தந்திருக்கிறார். இத்தகைய அறமாகிய மனமில்லாத பாவிகளுக்கு பரம்பொருள் இல்லை என்பதும் உண்மைதான். 

அள்ளி அள்ளிக்கொடுக்கக் கரம் இருந்தும்  பொருளிருந்தும் அருள் என்று சொல்லப்படும் இரக்ககுணம் இல்லாத போது அது பரம்பொருள் இல்லாத சூன்யமாகும். அதுவே பாழ் நரகமாகும். 

அதாவது பரம்பொருள் இல்லாத இடம் எது? பரம்பொருள் இருக்கும் இடம் எது என்ற உண்மையை சிவவாக்கியர் இப்பாடலில் கூறியுள்ளார். அன்போடு மனம் கனியக்கனியப் பேசமுடியாத பாவிகளுக்கு பரம்பொருள் தெரியாது. தன்னைப்போல் மற்ற உயிர்களையும் எண்ணிப் பார்க்கும் அருள் நிறைந்த மனம் இல்லாது, கையிருந்தும் கொடுக்காது, பொருளிருந்தும் பிறருக்குக் கொடுக்க நினைக்காது இருப்போரின் மனம் பரம்பொருள் இல்லாத சூன்யமாய் பாழ் நரகமாகுமாம்.

ஆதலால் மனங்கனியப் பேசி, கருணையோடு தன்னிடம் இருக்கும் பொருளைத் தேவையானோருக்குக் கொடுப்போர் மனமே பரம்பொருள் இருக்கும் இடமாகும் என்பதை சிவவாக்கியர் சொல்லாமல் சொல்லியிருக்கிறார்.
இனிதே,
தமிழரசி.