Sunday, 29 June 2014

அடிசில் 83

தேங்காய்ப்பூ இனிப்பு
- நீரா -      

தேவையான பொருட்கள்:
உலர்ந்த தேங்காய்ப்பூ - 200 கிராம்
டின் பால் [Condensed Milk] - 200 கிராம்
ஐசிங் சுகர் [Icing Sugar] - 200 கிராம்
வனிலா - 1 தேக்கரண்டி
கலரிங் - ½ தேக்கரண்டி
பட்டர் - 1 தேக்கரண்டி

செய்முறை: 
1.  ஒரு தட்டத்தில் பட்டரைப் பூசி வைக்கவும்
2. ஒரு வாயகன்ற பாத்திரத்தில் சீனி, டின்பால், வனிலா மூன்றையும் சேர்த்து மரக்கரண்டியால் மென்மையாக வரும்வரை நன்றாகக் கலக்கவும்
3. அக்கலவைக்குள் தேங்காய்ப்பூச் சேர்த்து கலந்து உங்கள் கையால் ரொட்டிக்கு மா குழைப்பது போல் பிசைந்து கொள்க.
4.  அதனை இரண்டு பகுதிகளாகப் பிரித்து இரண்டு பாத்திரத்தில் எடுத்துக் கொள்க.
5.  ஒரு பாத்திரத்தில் இருக்கும் தேங்காய்ப்பூக் கலவையுள் கலரிங்கை விட்டு, தேங்காய்ப்பூ முழுவதும் அந்த நிறத்தில் வரும்வரை நன்றாகப் பிசையவும்.
6.  பட்டர் பூசிய தட்டில் அக்கலவையைக் கொட்டி அழுத்திப் பரவவும்.
7.  அதன் மேல் வெள்ளைக் கலவையைக் கொட்டி மட்டமாகப் பரவி அழுத்தி வைக்கவும்.
8.  அதனை மூடி 5 - 6 மணி நேரம் வைக்கவும்
9.  விரும்பிய வடிவில் துண்டுகளாக வெட்டிக் கொள்க.

குறிப்பு:
1. இந்த இனிப்பைச் செய்ய அடுப்போ நெருப்போ தேவை இல்லை. 
2. தேங்காய்ப்பூவை மூன்றாகப் பிரித்து விரும்பிய நிறங்களைக் கலந்தும் செய்யலாம்.

Friday, 27 June 2014

தமிழிசை - 1


மனிதமனம் அழகுணர்ச்சி உடையது. இனிமையை விரும்புவது. அந்த இனிமையை இசையில் கண்டவன் மனிதன். இசை மனிதமனத்தைப் பண்படுத்துகின்றது. மொழியிணர்வைக் கடந்து மனிதரை ஒன்றுபடச் செய்யவல்லதும் இசையே. இசைக்கு மொழிவேறுபாடு கிடையாது. ஆதலால் இவ்வுலகின் தனிமொழி இசையாகும். இசை என்ற சொல்லானது மனதை வயப்படுத்துவது, அசைவிப்பது என்ற கருத்தைத் தரும். அது உள்ளத்தை உருக்கும் தன்மை வாய்ந்தது. அதுமட்டுமல்லாமல் இன்பத்தைத் தருவது, எழில்மிக்கது, எழுச்சியைக் கூட்டுவது, வீரத்தை ஊட்டுவது, இறையுணர்வை பெருக்குவது யாவும் இசையேயாகும்.

இசையால் இறைவனை இசைவித்தவன் இராவணன். அதாவது இறைவனை தன்வயப்படுத்தியவன். ஆதலால் சமயகுரவர் நால்வராலும் போற்றப்பட்டவன். சிறுகுழந்தையான சம்பந்தரின் மழழையில் “ஏழிசையாழ் இராவணன்” எனப்பாடப்பட்டவன். திருநீற்றின் பெருமையை கூறிய இடத்திலும் “இராவணன் மேலது நீறு” என்று மந்திரம் செய்திருக்கிறார். அவரின் கண்ணுக்கு மற்றைய எல்லோரது உடம்பிலும் பூசிய திருநீற்றைவிட, இராவணன் உடம்பில் இருந்த திருநீறே தெரிந்திருக்கிறது. ஏன்? அவன் தூய்மையான சிவபக்தன். அத்தகைய சிவபக்தனும், இசைவல்லவனுமான இராவணன் வாழ்ந்த நாடு, நம் நாடு. எனவே இசையைப் போற்றி, இசையோடு [புகழோடு] வாழவேண்டியது எமது கடமை.

திருநாவுக்கரசரும் சூலைநோயின் வயிற்றுவலியால் 
“தேற்றாதென் வயிற்றின் அகம்படியே குடரோடு
             துடக்கி முடக்கியிட  
ஆற்றேன் அடியேன்”
எனக் கதறுகிறார். அந்த ஆற்றா நிலையிலும்
“சலம்பூவொடு தூப மறந்தறியேன்
           தமிழோடு இசைபாடல் மறந்தறியேன்”
என்று தமிழோடு இசைபாடுவதை தான் மறப்பதில்லை என அழுத்திச் சொல்லி இருக்கிறார். 

அதன் உண்மையை சுந்தரமூர்த்தி நாயனார் 
“நீர் தமிழோடு இசை கேட்கும் 
           இச்சையால் காசு நித்தம் நல்கினீர்”
என்று திருவீழிமிழலையில் இறைவன் திருநாவுக்கரசரின் தமிழிசையைக் கேட்டு, காசு கொடுத்ததைச் சொல்லுமிடத்தில் உறுதிப்படுத்துகிறார். 

தமிழ் இசை அது மிகமிகப் பழமையானது. பழந்தமிழ் உரைஆசிரியர்கள் தரும் உரையிலிருந்து தமிழிலே பல தமிழிசை நூல்கள் இருந்திருப்பதை அறியலாம். இசை நூல், இசை நுணுக்கம், இசைக்கூறு, இசை விளக்கம், பாட்டும் பண்ணும், பாடற் பண்பு, பண் அமைதி, பண்வரி விளக்கம், தாள சமுத்திரம், தாளவகையோத்து, சிற்றிசை, பேரிசை போன்ற பலவகைப்பட்ட இசைநூல்கள் அந்நாளில் இருந்ததை பட்டியலிட்டிருக்கிறார்கள். எத்தகைய உன்னத நிலையில் தமிழிசை இருந்திருந்தால் இத்தனை தமிழிசை நூல்கள் உருவாகியிருக்கும்?

பண்டைத் தமிழ்மக்கள் சுரங்களையும் சுருதிகளையும் இராகம் உண்டாக்கும் விதிகளையும், நன்கு உணர்ந்து பன்னிரண்டாயிரம் இராகங்களைப் பாடிவந்தார்கள் என்று பழந்தமிழ் இசை நூல்கள் கூறுகின்றன. பழந்தமிழ் இசைநூல்களில் அழிந்ததாகக் கருதப்பட்ட பஞ்சமரபு என்ற நூலில் கிடைத்த பாடல்களைத் தொகுத்து ‘பஞ்சமரபு’ என்ற பெயருடன் வெளியிட்டிருக்கிறார்கள். வாத்திய மரபு என்ற நூல் ஓலைச்சுவடியாக கன்னியாகுமரி மாவட்டத்தில் கிடைத்திருக்கிறது. இன்றைய இசையறிவுக்கும் எட்டாத பல அரிய கருத்துக்களை இந்நூல்கள் தருகின்றன. பண்டைய தமிழிசை நூல்கள் மட்டுமல்ல கல்வெட்டுக்கள், சிற்பங்கள், ஓவியங்கள் யாவுமே தமிழிசையின் தொன்மையைப் புலப்படுகின்றன. இவற்றுக்குக் காரணம் என்ன?  சிந்திப்போமா?
இனிதே,
தமிழரசி.

Wednesday, 25 June 2014

காலை நேரக் கடற்கரைக் காட்சி

- எழுதியது வாகீசன் -

கடற்கரையில் நின்றுகொண்டு கதிரவன் உதிப்பதைக் கண்குளிரப் பார்க்க வேண்டும் என்ற பெரிய ஆசை என்னுள்ளே பலகாலமாக இருந்தது.  அந்த ஆசையைத் தீர்ப்பதற்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. என் நண்பன் ஒருவன் தன் வீட்டில் என்னை வந்து நிற்கும்படி கேட்டுக் கொண்டான். அவன் வீடு கன்னியாகுமரிக்கு அருகே இருந்ததால் நான் அங்கு சென்றேன்.

அதிகாலையிலே விடிவெள்ளி கிழக்கு வானிலே பவனி வந்தது. கோழிகள் கூவின. குருவிகள் கீச்சு கீச்சு என சத்தம் போட்டன. சங்குகள் முழங்கின.  ஆலயமணிகளின் ஓசை பக்தர்களை அழைத்தன. நான் மெல்லக் கண் விழித்து, என் நண்பனையும் அழைத்துக் கொண்டு கடற்கரைக்குச் சென்றேன்.

குளிர் காற்று என் உடலை வருடிச் சென்றது.  அக்காற்றை நுகர்ந்த போது உடலிலே ஒரு புத்துணர்ச்சி ஏற்பட்டது. கிழக்கு வானம் சிவந்திருக்க அந்தக் கடல் நடுவே குன்றின் மேல் தெரிந்த விவேகானந்த மண்டபமும், கடற்கரையில் இருந்த குமரி அன்னையின் திருக்கோயிலும், மகாத்மா காந்தி நினைவு மண்டபமும் பார்க்கப் பார்க்கப் பரவசம் ஊட்டின.


அவை மட்டுமா? நீலக்கடல் அலைகள் ஏறி நுரை சீறி ‘ஓ’ என்று கதறி ஓலமிட்டு விழுந்தன. பாவம் அந்தக் கடலலைகள். இராமனுடன் வந்த வானரர்கள் கடலைக் கடந்து இலங்கை செல்ல மிதித்த வருத்தம் தாங்கமாட்டாது இன்றும் ‘ஓ’ என அழுகின்றன. 

கடற்கரையை அடுத்திருந்த மீனவக் குடிசைகளும், கடற்கரையில் கட்டப்பட்டிருந்த படகுகளும் அந்தச் செவ்வானத்தின் ஜாலத்தில் ஒரு திறமை மிக்க ஓவியன் வரைந்த காட்சியாய் விரிந்தன. நடுக்கடலிலே மிகமிகச் சிறிய புள்ளிகளாய்த் தோன்றிய படகுகள், கரையை நோக்கி விரைந்து வந்தன. அமைதியாக இருந்த கடற்கரை படகுகளின் வரவால் மீனவர்களின் சுறுசுறுப்பைப் பெற்று விழித்து எழுந்தது.

கடலில் முத்துக் குளித்து எழுந்து வருபவன்போல சூரியன் செக்கர் வானத்திடையே எழுந்து வந்தான். சூரியனும் தன் இலட்சியத்தை நாடிச் செல்ல, கன்னியாகுமரிக் கடற்கரையில் இருந்த மக்களும் தத்தமது இலட்சியத்தை நாடி நடைபோட்டனர்.

குறிப்பு:
[இது 9 வயதுச்சிறுவன் எழுதிய கட்டுரை. இலண்டனில் நடைபெறும் GESE தமிழ்ப் பரீட்சையை அவனது 10 வயதில் எடுத்து, A தரத்தில் சித்தியடைந்தான். அவன் எழுதிய கட்டுரைகள் GESE தமிழ் பரீட்சை எடுப்போருக்கு மாதிரிக் கட்டுரையாகப் படிக்க உதவும் என்பதால் எனது வலைத்தளத்தில் இடுகிறேன். தமிழ் படிக்கும் பிள்ளைகள் இருப்போர் இதனைப் பயன் படுத்தலாம்]

இறைவனை அடைய சிறந்த வழி என்ன?


உலக உயிர்கள் யாவும் உயிர் எனும் தன்மையால் ஒன்றுபடுகின்றன. உயிர் என்னும் தன்மை எங்கே  இருக்கிறது? அதாவது உயிர்நிலை எங்கே தங்கி இருக்கிறது? உயிரே அன்பில் தங்கி நிற்கிறது என்கிறார் திருவள்ளுவர்.
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு’
அன்பு என்பது ஓர் இன்ப ஊற்று. நீர் ஊற்றுக்கள் இடத்துக்கு இடம் நிலத்துக்கு நிலம் மாறுபடுவது போல அன்பும் உயிர்களுக்கு உயிர் மாறுபடுகிறது. ஆனால் அன்பின் வழிப்பட்டதாக உயிர்நிலை இருப்பதால் அன்பெனும் இன்ப ஊற்றில் திளைக்கும் உயிர்கள் அன்பு வடிவாய் இருக்கின்றன. 'அப்படி அன்பை வெளிப்படுத்த முடியாதோர், உயிர் அற்ற வெற்று எலும்புக் கூட்டை தோலால் போர்த்தியிருக்கும்  பிணமே' என்கிறது இந்தத் திருக்குறள். 

இன்னொரு விதத்தில் சொல்வதானால் அன்பு என்னும் இன்ப ஊற்றாம் அருள் வெள்ளம் பாய்கின்ற வழி உயிராகும். அன்பே சிவம் ஆதலால் சிவத்தின் அருள் வெள்ளம் பாயும் வழியே உயிராகும் என்றும் சொல்லலாம். அதனால் அன்பெனும் சிவத்தின் அருள் வெள்ளம் பாயும் உடலே உயிருள்ள உடம்பாகும். அப்படியில்லாத உடம்பு வெறும் பிணமே. எனவே உடல் இருப்பது அன்பு பாய்ந்து செல்லும் வழியாகிய உயிரைப் பாதுகாக்கவே.

அன்பென்னும் இன்ப ஊற்று பாய்ந்து பாய்ந்து உணர்வோடு ஒன்ற - உள்ளே பாயும் அருள் வெள்ளத்தில் உடல் என்னும் தன்மை கரைந்து உருகிப் போக அதனுள் நின்ற உயிர் அன்பாய் சிவமாகும்.

நாம் நாமாக வாழ்ந்து கொண்டு, நம் அன்பை பிற உயிர்கள் இடத்தில் பெருக்கினால் போதும் இறைவனை அடையும் வழியில் நாம் எட்டி நடைபோடத் தொடங்கிவிடுவோம். அதனை மகாகவி சுப்பிரமணிய பாரதியாரும் 
உயிர்களிடத்தில் அன்பு வேண்டும் - தெய்வம் 
உண்மை என்று தான் அறிதல் வேண்டும்” 
என்றார். தெய்வம் நம்மோடு அன்புவடிவாய் இருக்கும் உண்மையை நாமேதான் அறிந்து கொள்ள வேண்டும்.

எமக்குள் இருக்கும் அன்பாம் சிவனை உணர்ந்து அறிய முடியாதவர்களாக நாம் வாழ்கிறோம். ஆனால் எம்மைப்போல் மானுடனாய்ப் பிறந்த திருமூலர், ‘எலும்பை விறகாக எரித்து, தசையை அறுத்து பொன்போல எரியும் அந்த நெருப்பில் பொரியலாக வறுத்தாலும் அன்போடு உருகி மனம் குளிர்வார்க்கு அல்லாமல் தன்னைப்போல் தெய்வமணியை [இறைவனை] அடையமுடியாது’ என்று தனது மார்பில் தட்டிச் சொல்கிறார்.

என்பே விறகா இறைச்சி அறுத்திட்டுப்
பொன்போல கனலில் பொரிய வறுப்பினும்
அன்போடு உருகி அகம் குளிர்வார்க்கு அன்றி
என்போல் மணியினை எய்தல் ஒண்ணாதே          
                                                -  (திருமந்திரம்: 272)

இறைவனை அடைவதற்கு அன்போடு உருகி மனம் குளிர்வதே சிறந்த வழியாகும் என்கிறது இத்திருமந்திரம். எனவே கோயில்களிலும், குருக்களிடமும், சுவாமிமாரிடமும் இறைவனை அடையும் வழியைத் தேடுவதை நீக்கி, திருமூலர் சொல்வது போல் 'நாமும் அன்போடு உருகி எமது உள்ளத்தே இறைவனைத் தேடுவோம்'.
இனிதே,
தமிழரசி
.

Tuesday, 24 June 2014

கடிந்தாண்டு கொள்வாயா!



எல்லாப் பிழை தனையும்
எனதாக்கிக் கொண்டேனை
சொல்லாமல் வந்து நற்
சோதியும் காட்டி
வல்ல இறைவன் நின்
வகையெலாம் காட்டி
கல்லாய் இருப் பேனைக்
கடிந்தாண்டு கொள்வாயா!

இனிதே,
தமிழரசி.
சொல்விளக்கம்;
சோதி -  மலம் நீங்கிய ஆன்ம அறிவு
நின் வகையெலாம் - இறைவனின் பலவடிவங்கள்
கல்லாய் - உணர்ச்சியற்ற கல்போல்
கடிந்து - கண்டித்து

Monday, 23 June 2014

பரிதவித்தேனே!
















ஏரிக்கரை ஓரத்திலே
ஏறிநின்றேன் மரத்தின் மேலே 
மாரிமழைக் காற்றினிலே 
மாறிமாறிக் கிளையசையயிலே 
வீரிக்கொண்டு பாறயிலே 
வேரோடு மரம்வீழ குளத்தினுளே 
நாரிநானும் கிடக்கயிலே 
ஆள்விழுங்கும் வெண்கரடி ஒன்றே 
பீரிக்கொண்டு பீறயிலே 
பாழுடலும் மாள பரிதவித்தேனே!
                                         - சிட்டு எழுதும் சீட்டு 88 

சொல்விளக்கம்:
ஏரி - குளம்
வீரிக்கொண்டு - சத்தத்துடன்
பாறுதல் - சிதருதல் / நொறுங்குதல்
நாரி - பெண்
பீரிக்கொண்டு - வலிமை கொண்டு
பீறல் - பிளத்தல்
பாழுடல் - அழியும் உடல்
மாள - அழிந்துகொண்டிருக்க
பரிதவித்தேனே - துன்பப்பட்டேனே 

Friday, 20 June 2014

ஆசைக்கவிதைகள் - 91


சொன்ன சொல்லை அளந்தோம் இல்லையே!

பெண் மனம் ஆழம் காணமுடியாத கடல் என்பது ஆண்கள் கண்ட முடிபு. உண்மையில் எந்த ஒரு மனித மனத்தின் ஆழத்தையும் எவராலும் கண்டறிய முடியாது.

மாந்தையில் வாழ்ந்த இளைஞன் ஒருவன் ஒரு இளநங்கையைக் காதலித்தான். ஏதோ ஒரு காரணத்தல் அவள், அவனது காதலை ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால் ஏற்பட்ட மனவேதனையால் விண்ணையளந்து எங்கெங்கே கோள்கள், நட்சத்திரங்கள்  நிற்கின்றன? என்பதையும், கடலையளந்து கடலடி மண்ணில் என்னென்ன இருக்கின்றன என்பதையும் அறிந்து விட்டோம் ஆனால் பெண்ணின் சொல்லை அளக்க முடியவில்லையே எனக் கலங்கிய நாட்டுப்பாடல் இதோ.

காதலன்: விண்ணை அளந்தோம் கடல்
            மண்ணை அளந்தோம்
       பெண் சொன்ன சொல்லை 
            அளந்தோம் இல்லையே
                                       -  நாட்டுப்பாடல் (மாந்தை)
                                                        (பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து)

இந்த நாட்டுப்பாடல் சொல்வது போல் ஈழத்தமிழர் விண்ணையும் கடலையும் அளந்தார்களா? என்பதற்கான விடையை எமக்கு திருஞானசம்பந்தர் தமது தேவாரத்தில் இராவணனைக் கூறும் இடத்தில்
"மயங்கு மாயம் வல்லராகி
           வானினொடு நீரும்
இயங்குவோருக்கு இறைவனா
           இராவணன் தோள் நெரித்த
புயங்கரா மாநடத்தன்..."                    
- (ப.திருமுறை: 1: 53: 7)

என பிறரால் விரும்பப்படும் புதியனவற்றை செய்யும் வல்லமை உடையவராய் வானிலும் நீரிலும் இயங்கித் திரிவோருக்கு அரசனான இராவணன் என்கின்றார். 

இராவணனாகியோர் விண்ணையும், கடல் மண்ணையும் அளந்து அறிந்திருந்தால் தானே வானிலும் நீரிலும் இயங்கித் திரிந்திருந்திருக்க முடியும்?