Saturday 16 May 2015

புலம்பிடுமோ புங்குடுதீவு எனும் பழம்பதியே!



கண்ணழகு கவிதை சொல்ல
      காவியமாய் நின்ற கன்னிதனை
புண்ணழகு நெஞ்சப் புலையர்கூடி
      புணர்ந்தனரே வன்புணர்ச்சி என்று
எண்ணும் போதே உள்ளம்
      எரிதழலில் வேகின்றதையோ
மண்ணுலகு உள்ளவரை
      மாளாவசை எமக்கு ஈந்தமைந்தர்!

பெண்மையென்னும் புதுமலரை
       பருவவயதில் பொசிக்கியவர் யார்?
ஆண்மையற்ற ஈனர்களாய்
      ஆறறிவு படைத்த மானிடராய்
பெண்மைதனைச் சீரழித்தோரையும்
      பெற்றதும் புங்குடுதீவு எனும் 
உண்மை நிலைகண்டு நாம்
      உளம் குமைந்து நாணுகிறோம்

சித்திரைத் தேரென திரிந்த
      சிங்காரச் செல்வியை மகா
வித்தியாலயம் சென்ற வித்தியாவை
      வலிந்து புணர்ந்து கொன்ற
எத்தரைப் பெற்றதுவும் நானே
      என்று எண்ணி எண்ணி
பித்துக்கொண்டு புலம்பிடுமோ
      புங்குடுதீவு எனும் பழம்பதியே! 
இனிதே,
தமிழரசி

3 comments:

  1. ஊன்தின்னும் மிருகங்கள் உலவும் காட்டில்
    ஒருபோதும் அகிம்சைவழி உதவல் ஆகா!
    தேன்பேச்சு எங்கேனும் செவிடன் காதில்
    தங்கிடுமோ? குருடரொளி காண்ப துண்டோ?
    வான்புகழ வாழ்ந்தகுடி எங்கே எங்கே?
    வன்மறவர் கண்டதிர்ந்த வையம் எங்கே?
    கூன்விழுந்து போயினவோ தமிழத் தோள்கள்?
    கொன்றபகை வென்றுபதில் கூறும் காலம்!

    வேதனை!

    ReplyDelete
    Replies
    1. கண்ணீர்க் காவியம்.

      Delete
  2. சித்திரம் தான்சிதைய சிறுநரிகள் காரணமோ
    பத்திரமாய் சென்றுவர பள்ளிக்கு பாதகர்கள்
    பித்துப் பிடித்தவர்கள் பேயாட்டம் ஆடியவர்
    செத்து மடிவதுவே மேல் !

    கோல மயிலுனைக் கொண்டு செல்ல
    குமுறுதம்மா உள்ளம்!
    நீலமயில் வாகனனும் நீக்கவில்லை நின்துயரம்......

    வேதனையில் வார்த்தைகளே வரவில்லை.
    முடிந்தால் இதை பாருங்கள். பதிவுக்கு நன்றி ! தொடர வாழ்த்துக்கள் ...!

    நெஞ்செரித்து நீறாக்கி நில்லாமல் செய்திடவே நெஞ்சுறைந்து தீய்க்கும் நினைவு!
    http://kaviyakavi.blogspot.com/


    ReplyDelete