Wednesday 27 May 2015

குறள் அமுது - (107)

குறள்:
“நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால்
நாண்துறவார் நாண்ஆள் பவர்”                             
                                               - 1017

பொருள்:
நாணத்தை ஆள்பவர், நாணத்தால் உயிரை விடுவாரே தவிர, உயிர்வாழ்வதற்காக நாணத்தை விடமாட்டார்.

விளக்கம்:
நாம் செய்யும் செயல்களை மனிதவாழ்க்கைக்கு தகுந்த செயல்கள், தகாத செயல்கள் என இருவகையாகப் பிரிக்கலாம். தகாத செயல்களைச் செய்ய நாணப்படுவதை திருவள்ளுவர் ‘நாண் உடைமை’ என்னும் அதிகாரத்தில் கூறியுள்ளார். அதில் நாணத்தை மதிப்பவர் எப்படிப்பட்டவராய் இருப்பார் என்பதை இக்குறளில் சொல்கிறார். 

நாணம் என்பது தனிமனிதப் பண்புகளிலே மிகமிக உயர்ந்த தனிச்சிறந்த பண்பாகும். நாணம்  என்னும் பண்பை எத்தகைய நிலையிலும் தனதாக வைத்திருப்பவரே நாண் ஆள்பவர் ஆவர். உடற்கூச்சத்தால் பெண்களுக்கு வரும் நாணம் வேறு, தகாத செயல்களைச் செய்ய மனம் கூசி, வெட்கிப் பின்வாங்கி நாணுவது வேறு. அத்துடன் தனக்கு தன்குடும்பத்துக்கு, தன் இனத்துக்கு நேர்ந்த பழியை, மாசை எண்ணி மனங்கூசி நாணுவதும் வேறு. இத்திருக்குறள் நாணம் என்று மனிதரின் மனக்கூச்சத்தையே குறிக்கிறது. சிலருக்கு தகாத செயல்களைச் செய்ய நாணப்படும் தன்மை இயல்பாகவே இருக்கும்.

இத்தகைய நாணம் உடையோர் உயிர்வாழ வேண்டும் என்ற நோக்கத்தில் செய்யத்தகாத செயல்களைச் செய்தும், மாற்றானிடம் கைகட்டி, வாய்பொத்தி நாணத்தை காற்றில் பறக்க  விட்டு உயிர் சுமந்து வாழமாட்டார்கள். அப்படி நாணத்தை ஆளும் பண்புடையோர், தாம் வாழும் வாழ்க்கைக்கும் நாணத்திற்கும் இடையே பெரும் சோதனை ஏற்படும் போது நாணம் எனும் உயர் பண்பை காப்பாற்றிக் கொள்வதற்காக தமது உயிரையே விட்டுவிடுவார்கள். 

நாணம் எனும் நற்பண்பை தன் உயர்பண்பாகக் கொண்ட பார்த்திபன் என்ற இயற்பெயர் கொண்ட திலீபனும் தன் இனத்துக்கு வந்த துன்பத்தைக் கண்டு நாணி, அதைத் துடைத்து எறிய ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து உயிர் துறந்து நாணத்தை ஆள்பவனாக திருவள்ளுவரின் இக்குறளுக்கு இலக்கியமானான்.

திருவள்ளுவர் இக்குறளில் நாணம் உடையோருக்கு அவரது உயிரைவிட நாணம் மிகப் பெரியது என்று மிக  நுட்பமாகச் சொல்கிறார். 

No comments:

Post a Comment