Saturday 9 May 2015

குறள் அமுது - (106)



  குறள்:
"கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய
  கோடி உண்டாயினும் இல்"                                            - 1005

பொருள்:
பிறருக்குக் கொடுத்தும் தான் அநுபவித்தும் வாழாதவர்க்கு அடுக்கடுக்காகப் பல கோடி பொருள் இருந்தாலும் இல்லாததேயாகும்.

விளக்கம்:
பல கோடி செல்வத்தை அடுக்கி வைத்திருப்போர்  அவற்றில் எதனையும் மற்றவர்கட்குக் கொடுக்காது தானும் அநுபவிக்காது இருப்போராயின் யாவும் இருந்தும் இல்லாதோரே. அதனைத் திருவள்ளுவர் நன்றிஇல் செல்வம் என்னும் அதிகாரத்தில் சொல்கிறார். செல்வத்தைக் குவித்து வைத்திருப்போருக்கு அச்செல்வத்தால் எதுவித நன்மையையும் இல்லாது இருக்கும். அத்தகைய செல்வத்தை திருவள்ளுவர் நன்றிஇல் செல்வம் என்கிறார்.

ஒருவரிடம் கோடி கோடியாய்ப் பணமும் பொருளும் மாட மாளிகைகளும் விதவிதமாய் வாகனங்களும் வேலையாட்களும் எனப் பலவகைகளில் அடுக்கடுக்காய் உலக நாடுகள் எங்கும் கொட்டிக் கிடக்கிறது என வைத்துக் கொள்வோம். அவ்வளவு பணமிருந்தும் அவர் தான் சிறு வயதில் பட்ட வறுமையை நினைத்தோ அல்லது கஞ்சத்தனத்தாலோ உண்ணாது உறங்காது நல்ல ஆடை  அணியாது நல்ல வீட்டில் வாழாது தனது பணத்தைப் பொருளை எடுத்துச் செலவு செய்யாது பிறருக்கும் கொடாது வாழ்வர். இப்படித் தம்மிடம் இருக்கும் பொருளை பூதம் காப்பது போல் காப்போரிடம் உள்ள பொருள் இருந்தும் இல்லாததே என்பது வள்ளுவன் முடிவாகும்.

"கொடையும் தயையும் பிறவிக்குணம்" என்பது பழமொழி. தன்னிடம் உள்ளதைப் பிறருக்குக் கொடுப்பதும் பிறரது துன்பம் கண்டு மனம் இரங்குவதும் பரம்பரைக் காரணி என இப்பழமொழி சொல்கிறது. தயையாகிய மனஇரக்கம் உள்ளோரே தம்மிடம் இருப்பதை தேவைப்படுவோருக்குக் கொடுப்பர். பிறரது தேவை கருதிக் கொடுத்தலே கொடையாகும். அதனையே கொடுப்பதூஉம் என்று வள்ளுவர் இக்குறளில் கூறுகிறார். பிறர்  நிலை கண்டு இரங்குவது போல நம் தேவை என்ன என்பதையும் நாம் அறிந்து அவற்றை அநுபவிக்க வேண்டும். அப்படி அநுபவித்தலே துய்த்தலாகும். தாம் உழைத்த பொருட்களைத் தாமே அநுபவிக்காது சேர்த்து வைப்பதால் அப்பொருட்களுக்கும் அவற்றைச் சேர்த்தோர்க்கும் என்ன நன்மை உண்டாகப் போகிறது? அதனால் நன்மையைத் தராத செல்வம் கருத்தில் நன்மையில் செல்வம் என்றார்.

தம் பொருளைத் தாமே அநுபவியாதோர் எப்படி பிறருக்குக் கொடுப்பர்?  தம்மிடம் உள்ளதை தேவையானோருக்குக் கொடுத்து தாமும் அநுபவித்து வாழவேண்டும். அப்படி வாழமுடியாதோரிடம் பல கோடிப்பொருள் அடுக்கிக் கிடப்பினும் அவற்றால் ஏதும் நன்மை உண்டாகப் போவதில்லை.  

No comments:

Post a Comment