Monday, 11 June 2012

குறள் அமுது - (35)


குறள்:
“பயனில் சொல் பாராட்டுவானை மகனெனல் 
மக்கட் பதடி எனல்”                                             - 196

பொருள்:
பயன் இல்லாத சொற்களைப் பாராட்டிப் பேசுபவனை மனிதன் எனச் சொல்ல வேண்டாம். மனிதருள் பதர் என்று சொல்லுக.
விளக்கம்:
திருவள்ளுவர் இக்குறளில் பயனில்லாத சொற்களைப் பாராட்டிப் பேசுபவரை எப்படி அழைக்கலாம் என்பதை எமக்குச் சொல்லிச் சென்றுள்ளார். ஒன்றைப் புகழ்ந்து பேசுதலே பாராட்டுதலாகும். இக்குறளில் மகன் என்ற சொல் மனிதன் என்ற கருத்திலேயே வருகின்றது. 
பதடி என்பது உள்ளீடு இல்லாத சோத்தி. நெல்லினுள் இருக்கும் அரிசியே அதன் உள்ளீடு. உள்ளீடாகிய அரிசி இல்லாத நெல்லை நாம் சாவி அல்லது பதர் என்று சொல்வோம். நெல்லைத் தூற்றும்போதோ புடைக்கும் போதோ காற்றில் தூசுடன் பறந்து போவது நெற்பதர். பதர் உள்ளீடு அற்றதால் காற்றில் பறக்கும். நெல்லைப் போல் ஏனையவற்றிலும் பதர் உண்டு. பதரை மிருகங்களோ, பறவைகளோ உணவாக உட்கொள்ளவும் மாட்டா. நெல்லுக்கு அரிசி உள்ளீடாக இருப்பது போல மனிதருக்கு இருக்கும் உள்ளீடு என்ன? அறிவே மனிதரின் உள்ளீடு. எவரிடம் அறிவு என்னும் உள்ளீடு இல்லையோ அவரும் மனிதரில் பதடே.
வேண்டாத விடயங்களை, விதண்டா வாதங்களை, அவதூறுகளை எமது காது கொப்பளிக்க மிக்க ஆர்வத்துடன் சிறப்பித்துப் பேசுபவரை மனிதன் என்று சொல்லவேண்டாம் மனிதப்பதடி எனச் சொல்லுக என்கிறார். பயனில்லாத சொற்களைச் சொல்பவரைக் கூட திருவள்ளுவர் மன்னிப்பார் போல் தெரிகிறது. ஆனால் ஒருவர் சொன்ன வீண்சொற்களைக் கேட்டு தாமும் சொஞ்சம் போட்டு, அதைப் பெரிதாகப் புகழ்ந்து போற்றி கதைத்துத் திரிபவர் மேலேயே வள்ளுவருக்கு தீராக்கோபம். அதனாலேயே அப்படிப்பட்டோரை எமக்கு இனம்காட்ட பயனில் சொல் பாராட்டுவான் எனக் கோடிட்டுக் காட்டுகிறார். அத்துடன் பதடி எனவும் இழித்துக் கூறுகிறார்.
மனிதர் சொல்லும் சொற்கள் தேனீக்கள் போன்றன. அவை தேனையும் சொரியும். கொடுக்கால் கொட்டி நஞ்சையும் சொரியும். எமக்குப் பயனுள்ள தேன் வேண்டுமா? பயனற்று எம்மை வருத்தும் நஞ்சு வேண்டுமா என்பதை நாமே முடிவு செய்ய வேண்டும். பயனில் சொல் நஞ்சு போன்றது. எம் வாழ்நாளை வீணாக்கி எம்மை அழிக்கக் கூடியது. நஞ்சை எவராவது பாராட்டிப் புகழ்ந்து பேசுவரா? அப்படிப் பேசுபவர் அறிவிலிதானே! அறிவிலியே மனிதப் பதடி.
எவருக்கும் பயந்தராதவற்றை மிக விரிவாகப் புகழ்ந்து கூறுபவர் மனிதருள் பதடி என இக்குறள் கூறுகிறது.

Friday, 8 June 2012

வலைச்சி மக வருவாளா!

ஆசைக் கவிதைகள் - 34
Photo courtesy - The Telegraph




















ஏலேலங்கடி ஏலேலோம்! ஏலேலங்கடி ஏலேலோம்!
பாட்டுப்பாட மனமிருக்கா? ஏலேலங்கடி ஏலேலோம்! 
பாட்டுபாட மனமிருக்கு பக்கதுணைக்கு யாரிருக்கா?
ஏலேலங்கடி ஏலேலோம்! ஏலேலங்கடி ஏலேலோம்! 
பக்கதுணைக்கு படகிருக்கு ஏலேலங்கடி ஏலேலோம்!
பக்குவமாய் பாத்து துடுப்பு போடணுமே!
ஏலேலங்கடி ஏலேலோம்! ஏலேலங்கடி ஏலேலோம்!
துடுப்பெடுத்து போடயில ஏலேலங்கடி ஏலேலோம்! 
தூக்குமந்த கடலலய அடுத்தடுத்து மடக்கணுமே!
ஏலேலங்கடி ஏலேலோம்! ஏலேலங்கடி ஏலேலோம்!
அடுத்தடுத்து மடக்கயில ஏலேலங்கடி ஏலேலோம்!
அள்ளிவரு மீனலய வலவீசி பிடிக்கணுமே!
ஏலேலங்கடி ஏலேலோம்! ஏலேலங்கடி ஏலேலோம்!
வலவீசி பிடிக்கயில ஏலேலங்கடி ஏலேலோம்! 
வலயறுந்து போகாம வாரி எடுக்கணுமே!
ஏலேலங்கடி ஏலேலோம்! ஏலேலங்கடி ஏலேலோம்!
வாரி எடுக்கயில ஏலேலங்கடி ஏலேலோம்! 
வாளமீனு வளத்திமீனு வகவகயாய் பிரிக்கணுமே!
ஏலேலங்கடி ஏலேலோம்! ஏலேலங்கடி ஏலேலோம்!
வகவகயாய் பிரிக்கயில ஏலேலங்கடி ஏலேலோம்! 
வலச்சிமக வருவாளா! வலகைய தருவாளா!
ஏலேலங்கடி ஏலேலோம்! ஏலேலங்கடி ஏலேலோம்!
                                                                      -  நாட்டுப்பாடல் (புங்குடுதீவு)
                                           - (பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து) 
குறிப்பு:
புங்குதீவில் 1939ல் வாழ்ந்த சுழிகாரர் நாகனாதி என்பவர் பாடித்திரிந்த பாடல் 

Thursday, 7 June 2012

தோண்டி எடுப்பதென்ன?

கணேசபுரத்து உடல்கள்




காடு வெளிகள் எல்லாம்
          கனன்று எரிவதென்ன
வீடு மனைகள் எல்லாம்
           வீழ்ந்து கிடப்பதென்ன
நாடு நகர்கள் எல்லாம்
           நலிந்து போனதென்ன
தேடுமிடங்கள் எல்லாமுடல்
          தோண்டி எடுப்பதென்ன?
                                      - சிட்டு எழுதும் சீட்டு 32

Wednesday, 6 June 2012

அடிசில் 26

மாம்பழப் பானம் (Mango juice)

                                                                            - நீரா -

















தேவையான பொருட்கள்:
மாம்பழம்  -  2
இளநீர்  -  2 கப்
தேன்  -  1  மேசைக்கரண்டி
எழுமிச்சம் சாறு  -  1  தேக்கரண்டி
ஏலத்தூள்  -  1  சிட்டிகை
செய்முறை:
1.  மாம்பழத்தின் தோலைச் சீவி கொட்டையை நீக்கி துண்டுகாளாக வெட்ட, எலுமிச்சம் சாறு விட்டு கலந்து கொள்க.
2.  இளநீர், தேன், வெட்டிய மாம்பழத்துண்டுகள் மூன்றையும்  லிக்குடைசருள் (liquidiser) இட்டு நன்கு அடிக்கவும்.
3.  அடித்தெடுத்த மாம்பழப் பானத்தை கிளாசில் விட்டு ஏலத்தூள் தூவிப் பரிமாறவும்.
குறிப்பு:
பண்டைய தமிழர் குடித்த மாம்பழப் பானம் இது. கோடையின் வெப்பத்தால் வரும் நோய்களைத்  தடுக்கும் மருந்தாக இதனைக் குடித்து நோயற்று வாழ்ந்தனர்.
1.  இளநீர் வழுக்கை இருந்தால் அதனைச் சிறுதுண்டுகளாக வெட்டிப் போட்டு குடிக்க சுவையாக இருக்கும்.
2.  எலுமிச்சம் சாறு இல்லாமல், தேன் சேர்க்காது சீனி சேர்த்தும் செய்யலாம்.

Monday, 4 June 2012

ஆனந்தத் தாண்டவம் ஏனையா!


                     சரணம் 
ஆனந்தத் தாண்டவம் ஏனையா
அடிமை எம்மைப் பார்த்தே நிதம்
                                             - ஆனந்த
                   அனுபல்லவி
பானகம் அருந்திட வழியின்றி 
பாவியோர் படுதுயர் பார்த்து 
                                             - ஆனந்த                    
                      பல்லவி
ஊனவராய்ப் பிறந்து உவந்து
உலகினில் உழலும் உயிரனைத்தும்
தீனகமே இல்லாது திண்டாட 
தீம் தீம் தீம் என்றே பரவசமாய்
                                           - ஆனந்த

-தமிழரசி-

Sunday, 3 June 2012

தோல் அழகு 1


சுகமான வாழ்வே மனிதனுக்கு நிரந்தரமான அழகைக் கொடுக்கும். சுகத்தோடு அழகாக வாழ்வதற்கு ஒவ்வொரு மனிதனும் தன்னைத்தான் காதலிக்கப் பழகிக்கொள்ள வேண்டும். தம்மைக் காதலிப்போரே தம்முடலைப் பாதுகாப்பர். மனித உடலின் பாதுகாப்பிற்கு தோல் மிகவும் அவசியம். அதனை நம்மில் பலர் புரிந்து கொள்வதில்லை. 

நம் உடலின் பாதுகாப்பிற்கு அதிகமாக உழைப்பது தோலே. சாதாரண மனிதனின் உடல் ஏறக்குறைய இரண்டு சதுர மீற்றர் தோலால் மூடப்பட்டுள்ளது. எந்நேரமும் எமது உடலை தோல்; கொட்டும் மழை, எரிக்கும் வெய்யில், வீசும் காற்று, கடுபனி போன்ற இயற்கைக் காரணிகளில் இருந்து காக்கின்றது. மேற்குலக நாடுகளில் நிறைந்திருக்கும் தூசிலும் போலூசனிலும் இருந்து காக்கிறது. தோல் மிகவும் அற்புதமாக தன்னைத்தானே எப்போதும் புதுப்பித்துக் கொள்கிறது. அத்துடன் காற்றிலும் தூசிலும் இருக்கும் நோய்க் கிருமிகள் எம்மைத்தாக்காது இடைவிடாது தடுக்கின்றது. நாம் நம் தோலில் ஏற்படுத்திக்கொள்ளும் கீறல், வெட்டுக்காயம், தீக்காயம் போன்றவற்றைக்கூட புதுத்தோலை உண்டாக்கி மாற்றிக்கொள்கிறது. எனவே தோலை பாதுகாக்க வேண்டியது எமது கடமையாகும்.
தோலில் வெளித்தோல் (epidermis), உட்தோல் (dermis) என இரண்டு அடுக்குகள் உண்டு. வெளித்தோலுக்கு நீர் மிகவும் அவசியம். தோலில் உள்ள நீரின் அளவு குறைந்தால் தோல் வறண்டு சுருக்கங்கள் ஏற்படுவதோடு, வெடித்து செதில் போல் உரியவும் செய்யும். இதனைத் தடுப்பதற்கு நாளொன்றுக்கு குறைந்தது ஆறு கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும். அதனால் தோல் பொலிவாகும். மலச்சிக்கலும் நீங்கி முகப்பரு உண்டாவதும் குறையும். தோலுக்கு மட்டுமல்லாமல் எம் உடல் உறுப்புக்கள் ஒழுங்காகத் தொழிற்படவும் நீர் தேவை. 
உட்தோலில் இருக்கும் ஒருவகைப் புரதப்பொருள் (Collagen), தோலின் மீள்சக்திக்கு (Elastic) உதவுகிறது. உட்தோலிலேயே இரத்தக்குழாய்கள், நரம்புமுடிவுகள், மயிர்வேர்கள், வியர்வைச் சுரபிகள் எல்லாம் இருக்கின்றன. வெளித்தோலின் ஈரத்தன்மைக்காகப் பூசும் எந்தவொரு கிறீமும் லோசனும் உட்தோலைச் சென்றடைவதில்லை. நீங்கள் சத்துள்ள உணவுகளை உண்ணாது, கொழுப்புள்ள உணவுகளை உண்டாலோ அல்லது உங்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டாலோ அதற்கு தக்கவாறு உட்தோல் பாதிக்கப்படும். 
எனவே மரக்கறி வகைகளையும் பழவகைகளையும் அதிகமாக உண்பது நல்லது. இவற்றிலுள்ள அன்டிஒக்சிடன்ஸ் (Antioxidants) எமது தோலை மென்மையாகவும், மினுமினுப்பாகவும் செய்து தோலில் வரக்கூடிய கான்சரைத் தடை செய்கிறது.    

Friday, 1 June 2012

திருவாசகத்தேன் தமிழுக்கும் கிரந்தமா?


சைவசயப் பெரியோர்களும் நாயன்மார்களும் தெள்ளுதமிழில் பல நல்ல கருத்துக்களை எமக்காகப் பாடிவைத்துச் சென்றுள்ளனர். அவற்றை நாம் படித்துப் புரிந்து கொள்வதில்லை. தேவாரமும் திருவாசகமும் மிக இலகுவான தமிழால் ஆனவை. 

ஆனால் அவற்றுக்கு விளக்க உரை எழுதியோர் வடமொழி கலந்த தமிழில் எழுதியிருப்பதால், அவற்றைப் புரிந்து கொள்வது கடினம். எனவே அவற்றின் விளக்க உரையைப் படியாது, தமிழை வாசிக்க தெரிந்த எவரும் தேவாரத்தையும் திருவாசகத்தையும் எடுத்து மேலோட்டமாக வாசித்தாலே அவற்றை மிக இலகுவாக விளங்கிக் கொள்ளலாம். உதாரணத்திற்கு 

வெள்ளம் தாழ்விரிசடையாய் விடையாய்
          விண்ணோர் பெருமானே எனக்கேட்டு வேட்டநெஞ்சாய்
பள்ளம் தாழ் உறுபுனலில் கீழ்மேலாகப்
          பதைத்து உருகும் அவர்நிற்க என்னை ஆண்டாய்க்கு
உள்ளம்தாள் நின்று உச்சியளவும் நெஞ்சாய்
         உருகாதால் உடம்பு எல்லாம் கண்ணாய் அண்ணா
வெள்ளம்தான் பாயாதால் நெஞ்சம் கல்லாம்
          கண் இணையும் மரமாம் தீவினையினேற்கே” 

என்று மாணிக்கவாசகர் பாடிய இந்த திருவாசகத்தை எடுத்துக் கொள்வோம்.  சுவாமி சித்பவானந்தர் திருவாசகத்திற்கு 1968ம் ஆண்டு எழுதிய விளக்கவுரையில், இத்திருவாசகத்தின் முதலிரண்டு வரிகளான  “வெள்ளம்தாழ்  விரிசடையாய் விடையாய் விண்ணோர் பெருமானே எனக்கேட்டு வேட்டநெஞ்சாய்” என்பதற்கு தந்த விளக்க உரையைப் பார்ப்போம். ‘கங்காதரா என்றும், ஜடாதரா என்றும், ரிஷபாரூடா என்றும், மஹாதேவா என்றும் உன்னை அழைப்பதைக் கேட்ட மாத்திரத்தில் உன் அன்பர்கள் அருள் வேட்கை எடுத்துப் பரவசமடைகின்றனர்’ என எழுதி இருக்கின்றார். இந்தத் திருவாசகத்தின் எந்த ஓர் இடத்திலாவது கங்காதரா என்றோ, ஜடாதரா என்றோ, ரிஷபாரூடா என்றோ, மஹாதேவா என்றோ மாணிக்கவாசகர் பாடி இருக்கிறாரா? கிரந்த எழுத்து ஏதாவது வருகிறதா? "வெள்ளம் தாழ்விரிசடையாய்! விடையாய்! விண்ணோர் பெருமானே!" என்றே பாடியிருக்கிறார். 
 தமிழில் பொதுவாக வெள்ளம் என்றால் வெள்ளப்பெருக்கை அல்லது பாய்ந்து ஓடும் புதுவெள்ளத்தை, குறிக்கும். அடக்கமுடியாது ஓடும் கண்ணீரையும் கண்ணீர் வெள்ளம் என்போம். பெரும்பாலும் ஆற்றில் வந்தாலும் கடலில் இருந்து வந்தாலும் வேகத்துடன் வருவதே வெள்ளம்.  அதுவே மலையாளத்தில் குவளைக்குள் இருந்தாலும், குடத்தில் இருந்தாலும், சிரட்டையுள் இருந்தாலும், அருவியாய் கொட்டினாலும், ஆற்றில் ஓடினாலும் யாவும் வெள்ளமே. தமிழில் அப்படியில்லை. 
சுவாமி சித்பவானந்தர் எழுதியது போல, 'வெள்ளம்தாழ்' என்பது கங்காதரன் எனக்குறிக்கும் பெயர்ச்சொல் அல்ல. வெள்ளம்தாழ் என்பது, முடிவு பெறாத  எச்சச்சொல். அது விரிசடையாய் என்னும் பெயரை எஞ்சி நிற்கின்ற ஒரு பெயரெச்சமாகும். ‘காலம் தாழ்த்திப் போ’ எனச்சொல்லுமிடத்தில் தாழ் என்பது கொஞ்சம் தங்கி என்ற கருத்தைத் தருவது போல ‘வெள்ளம்தாழ்’ கங்கையாகிய வெள்ளம் தங்கும் எனும் பொருளைத் தருகின்றது. 'கங்கை தங்கும் விரிந்த சடையவனே' என்பதையே மாணிக்கவாசகர் வெள்ளம்தாழ் விரிசடையாய்! என  அழைத்துள்ளார்.
வெள்ளம்தாழ் விரிசடையாய்! விடையவனே!  விண்ணோர் பெருமானே! என மற்றோர்  சொல்வதைக்  கேட்டு, மனம் அதில் ஈடுபட பள்ளத்தில் விழும் [பள்ளம் தாழ்] அருவி நீரில் [உறுபுனலில்] அகப்பட்ட பொருள் தலைகீழாகச் [கீழ்மேலாகப்] சுழல்வது போல பதறி [பதைத்து] நிலைதடுமாறி உருகும் அடியவர்கள் இருக்க, என்னை ஆட்கொண்டாய். உள்ளங்காலிலிருந்து உச்சிவரையும் நெஞ்சாய் உருகாமல், உடம்பு முழுவதும் கண்ணாகி கண்ணீர் வெள்ளம் பாயாமல் இருப்பதால் தீயவினையை உடையவனாகிய எனக்கு கல் நெஞ்சு, மரக்கண்கள் என்றே பாடியுள்ளார்.

பக்தர்களுக்கு, மெய்யடியார்களுக்கு இறைவன் பெயரைக்கேட்டால் உருகத்தெரியும். ஆனால் சரியெது? பிழையெது? என்பது தெரியாது. அதனை மாணிக்கவாசகர் இத்திருவாசகத்தில் அழகாகச் சொல்கிறார்.
பள்ளம் தாழ் உறுபுனலில் கீழ்மேலாகப்
          பதைத்து உருகும் அவர்நிற்க”
பக்தியாகிய அருவியில் வீழ்ந்து நிலைதடுமாறி பதறி உருகுகிறார்களே அல்லாமல், உள்ளத் தெளிவுடன் இறைவனை சிந்தை செய்யத் தெரியவில்லை. அதற்கான பக்குவம் அவர்களுக்கு வரவில்லை. பக்குவம் உள்ளவர்களாக பக்தர்கள் இருப்பார்களேயானால் கள்ளச்சுவாமிமார் கால்களில் விழுவார்களா? சுவாமிமார்கள் சிறைச்சாலைகளை நிரப்புவார்களா? ஆதலால் கீழ்மேலாகப் பதைக்கிறார்கள். 

மாணிக்கவாசகர்
உள்ளம்தாள் நின்று உச்சியளவும் நெஞ்சாய்
         உருகாதால் உடம்பு எல்லாம் கண்ணாய் அண்ணா
வெள்ளம்தான் பாயாதால்”
எனப்பாடி இறைவனையடையும் வழியையும் காட்டித்தந்துள்ளார். எமது உள்ளங்காலில் இருந்து உச்சிவரையும் நெஞ்சாய் பாவித்து மெய்மறந்து கடவுளை நினைந்து உருகி, உடம்பெல்லாம் கண்ணாய், கடவுளே உன்னை நான் காண்பது எப்போது என அழுது, மணிவாசகர் அண்ணா! எனக் கதறுவது போலக் கதறவேண்டும். எம் சிந்தையின் தெளிவாக பாலில் இருக்கும் வெண்ணெய் போல் கடவுள் வெளிப்படுவான். 

திருவாசகத் தேன் தமிழுக்கும் கிரந்த, சமஸ்கிருத உரைகள் தேவை தானா!
இனிதே,
தமிழரசி.