Saturday 4 March 2017

உள்ளம் எனும் மாளிகையில்

புங்குடுதீவின் முதுபெரும் மூதாட்டி தனது 106வது வயதில் இன்று இறைபதம் அடைந்தார் 
 தோற்றம்: 17/08/1910                                மறைவு: 04/03/2017

“நெருநல் உளன்ஒருவன் இன்றுஇல்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் உலகு”

புங்குடுதீவின் முதுபெரும் மூதாட்டியும் எனது அம்மம்மாவின் தங்கையுமான திருமதி இராசமணியம்மாள் வேலாயுதம் அவர்கள் தனது 106 வயதில் இன்று இயற்கையோடு கலந்தார். இவர் காலஞ்சென்றவர்களான மானிப்பாயைச் சேர்ந்த Dr கனகசபைக்கும் புங்குடுதீவைச் சேர்ந்த தெய்வயானைக்கும் கடைசி மகளாகப் பிறந்தவர். நவாலியைச் சேர்ந்த ஓவசியர் வேலாயுதம் என்பவரை மணந்து பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள் எனப்பெருவாழ்வு வாழ்ந்தவர். 

நூற்றியாறு வயதிலும் தன் உறவினரை நினைவில் வைத்திருந்தவர். தன் வேலைகளை தானே செய்தவர். இந்த வயதிலும் 60 மைல் வேகத்தில் சென்ற காரில் இருந்து 150 மீற்றர் தூரத்திற்கு முன்பே “அது வரக்காப்பொல ஆஸ்பத்திரி தானே” எனக் கேட்ட அவரது பார்வையின் கூர்மையைப் பார்த்து நான் வியப்படைந்தேன். மனதில் களங்கமில்லா நிறைந்த வாழ்வு, தெளிந்த பார்வை, அன்பின் கனிவு, அகன்ற ஞானச்செருக்கு, சொல்லில் மென்மை, விருந்தோம்பல் பண்பு, பொக்கைவாய்ச் சிரிப்பு யாவும் ஒன்றாய் வடித்த வடிவமே இராசமணி அம்மாள்.

ஏழுமாதத்தில் பிறந்த என்னை கண்ணாடிப்பெட்டியில் வைத்திருந்த போது எனக்கு வேளை தவறாது தனது முலைப்பாலை ஊட்டிய மாண்புக்குரியவர். ஆதலால் எனக்குத் தாயுமானவர். என்னைப்போல் அவரின் அன்புக்குப் பாத்திரமானவர்களின் உள்ளம் எனும் மாளிகையில் என்றும் வீற்றிருப்பார்.
இனிதே,
தமிழரசி.

3 comments:

  1. துயர் பகிருவதோடு
    தங்கள்
    துயரிலும் பங்கெடுக்கின்றோம்!

    ReplyDelete
  2. ஆழ்ந்த இரங்கல்கள்

    ReplyDelete