Wednesday 25 May 2016

ஆத்திரம் தீர்ந்திட விழித்திடுவீர்!



சைவர்கள்
மேலை நாட்டு சைவர்தம்
       மேன்மை சொல்லுவன் கேட்டிடுவீர்

சாலையோரம் எங்கணுமே
       சைவக் கோயில் எழுப்பிடுவார்
மாலை போட்டுப் படமெடுத்தே
       மமதைதனைப் பறையறைவார்

நாளைய உலகின் நாயகர்தாமென
       நாத்தழும்பேறிடக் கூறிடுவார்
பாளம் பாளமாய் பணமிருந்தால்
       பல்லிளித்துக் கதைத்திடுவார்

கூழைக் கும்பிடு போட்டு
       குருக்களுக்கு பணமிறைப்பார்
ஏழை எளியரைக் கண்டிடினே
       ஏறெடுத்தும் பார்த்தறியார்

கோயிலினுள்
மூலை முடுக்கு எங்கணுமே
       மூடைநாற்றம் வீசவைப்பார்
சேலை கொண்டு கொடுத்திடுவார்
       சேவிக்கத் தானறியார்

பாலைத் தேனை கலந்துடனே
       பாகும்சேர்த்து படையென்பார்
காலை மாலை பூசையென்பார்
       காதலால் கனிந்துருகார்

வாயிலில் உண்டியல் வைத்தே
       வக்கனையாகப் பேசிடுவார்
கோயில் கோயில் என்றிடுவார்
       குருக்கள் காலில் விழுந்தெழுவார்

ஆதலால்
சூத்திரர் சண்டாளர் என்றிங்கும்
       சொல்லிடும் கூட்டத்தைப் பாரீரோ!
சாத்திரம் இங்கு சமைத்தவர் யார்
       சைவரே எனக்கதைச் செப்பிடுவீர்!

மானமிழந்து மதியை இழந்து
       மண்ணில் வாழ்வது வாழ்வெனலாமோ
மோனத்திருந்தவன் மொய்கழலை
       மோகித்தே இதைச் சொல்லுகிறேன்

பானமினிக்குது என்று நச்சுப்
       பானமதைப் பருகிடலாமோ
ஞானமிக்க சைவ மதத்தீர்
       நியாயமதைச் சொல்லிடுவீர்

அன்று
ஒன்றே குலம் ஒருவனே
       தேவன் என்றே உலகிற்கு
அன்றே பகன்ற கொள்கை
       பொன்றே போன தென்னே

இன்று
மேன்மை கொள் சைவநெறி
        மிண்டோங்கி வளர்ச்சியுற
பான்மை மிகு சைவநீதி
       பக்குவமாய் சமைத்திடுவோம்

அதுவரை
நேத்திரம் மூன்றுடை நிர்மலனை
தோத்திரம் செய்து தொழுவதற்கே
கோத்திரம் கேட்கும் கீழரை
ஆத்திரம் தீர்ந்திட விழித்திடுவீர்!
அவனியோர் மேல் ஆணையிட்டே!!
                                           - சிட்டு எழுதும் சீட்டு 117
குறிப்பு:
இலண்டனில் முதற்கோயிலான ஆச்வே 'உயர் வாயிற்குன்று முருகன் கோயில்' உருவான நாளில் இருந்து இங்குள்ள கோயில்களில் நடப்பதைப் பார்த்து மனம் குமைந்தேன். அந்த நேரம் கனகதுர்க்கை அம்மன் கோயில் குருக்கள் ஒருவர் அப்போது அங்கு வரும் பக்தரை சூத்திரர் எனச் சொன்னதை அறிந்தேன். அந்நிகழ்வே இதனை எழுதவைத்தது. 2009ம் ஆண்டு எழுதியது.

No comments:

Post a Comment