Sunday 15 May 2016

வாழ்க கலசம் நிறைந்தே!

சித்திரக் கவிதை - 4
தேர்ப்பிணையல்

இன்றைய தமிழர்களாகிய நாம் செய்யும் அசட்டையால் எமது கலைகளும் அவற்றின் அரிய கலைநுணுக்கங்களும் அழிந்து ஒழிந்து வருகின்றன. அவற்றில் ஒன்று சித்திரக்கவிதை. கலையார்வம் மிக்க தமிழன் தான் வணங்கும் தெய்வம் கொலுவிருக்கும் இடத்தை கோலங்களால் அழகுபடுத்தினான். தன் தெய்வத்தின் பெருமைகளை அக்கோலத்தினுள் எழுதி மகிழ்ந்தான். அவற்றிற்கு சிதிரக்கவிதை என்று பெயரிட்டான். சித்திரக்கவிதை எழுதுவதற்கு இலக்கணமும் வகுத்தான். அதனை எமது குழந்தைகளாவது அறிந்து கொள்ளவேண்டும் என்ற அவாவில் நான் புனைந்த இச்சித்திரக் கவிதை 1995ம் ஆண்டு ‘கலசம்’ இதழில் ‘சாலினி’ என்ற பெயரில் வெளிவந்தது.

சித்திரக்கவிதை புனைவதில் பெண்களே சிறந்து விளங்கினார்கள். பெண்களின் அழகுணர்ச்சியும் கோலம் போடும் திறமையும் அதற்கு வழிவகுத்திருக்கலாம். தொல்காப்பியரின் மாணவி எனத் தமிழ் அறிஞர்களால் கருதப்படும் 'காக்கைபாடினியார்' எழுதியது 'காக்கைபாடினியம்' என்னும் கவிதை இலக்கண  நூலாகும். அதில்  அழியாதிருக்கும் சில நூற்பாக்கள் சித்திரக்கவிதை பற்றியும் சொல்கிறன. அக்காலப் பெண்கள் ஆழிக்கட்டு [சக்கரபந்தம்], இரு நாகப்பிணையல், நால் நாகப்பிணையல், எண்ணாகப்பிணையல் [அட்டநாகபந்தம்] தேர்க்கட்டு அல்லது தேர்ப்பிணையல் [ரதபந்தம்] போன்ற சித்திரக்கவிதைகளைப் புனைந்திருக்கிறார்கள். அந்தப் பழந்தமிழ்ப் பெண்டிரின் ஆற்றலை அறிந்து நாமும் பெருமை கொள்வோம்.

கலசம் இதழில் மகளிர்பகுதிக்கு ஆசிரியராக இருந்த காலத்தில் உலகெங்கும் உண்மையான [போலியான மூடக்கொள்கை அற்ற] சைவசமயம் தலைத்தோங்கி கோயிற் கோபுர கலசங்கள் நிறைந்து விளங்க வேண்டும் என்ற பெருவிருப்பில் இந்தத் தேர்ப்பிணையல் சித்திரக்கவிதையைப் புனைந்தேன். 
“மாதேநீ எந்நேரமுறை செய்ததவ நினைவால்எப்
போதும் வண்ணத்தமிழ் சைவசமயப் - போது
ஓங்கவுலகில் கோபுரமெங்கணுமே உயர்க இசைசூழ்க
வாழ்க கலசம் நிறைந்தே”

மேலே தேர்ப்பிணையலினுள் இருக்கும் செய்யுளை வாசிக்கும் முறை:
தேரின் இடது சில்லில் தொடங்கி மேலேறி வலது சில்லில் இறங்கி, அடித்தட்டின் வலது நுனியில் ஏறி அத்தட்டின் இடப்புறமாகச் சென்று, அதற்கு மேற்றட்டின் இடது நுனியில் நின்று வலப்புறம் சென்று…. இவ்வாறு வலமும் இடமுமாக மாறிமாறி ஒவ்வொரு தட்டாக ஏறி உச்சிக்குச் சென்று அங்கிருந்து நடுவழியாக நேரே கீழிறங்கி வரவும்.

தேர்ப்பிணையல் கவிதையின் சிறப்பு:
இச்சித்திரக் கவிதையின் நான்காவது அடியிலுள்ள எழுத்துக்கள் முதல் மூன்று அடிகளிலும் ஏறுவரிசையில் மறைந்து கிடப்பதே இச்செய்யுளின் சிறப்பாகும்.
இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment