Wednesday 2 July 2014

குறள் அமுது - (93)

குறள்:
“இளியவரின் வாழாத மானம் உடையார் 
ஒளிதொழுது ஏத்தும் உலகு”                           - 970

பொருள்:
தமக்கு இழிவு வந்த போது, உயிர்வாழாத மானம் உடையவரின் புகழை இந்த உலகம் வணங்கிப் போற்றும்.

விளக்கம்:
நாம் வாழும் மனிதவாழ்வுக்கு ஓர் அர்த்தம் வேண்டும். அந்த அர்த்தத்தை எமக்கு ஊட்டுவது மானமே. ஏனெனில் ஆண்டியாக வாழ்ந்தால் என்ன? அடிமையாக வாழ்ந்தால் என்ன? உயிர் சுமந்து வாழ்ந்தால் போதும் என்று தமிழர் வாழவில்லை. அதனால் எம் தமிழ் மூதாதையர் “மானம் அழிந்த பின் வாழாமை முன் இனிதே” என வாழ்ந்தனர். அவர்களது கொள்கைப்படி உயிரைவிட மானமே சிறந்தது. 

தாம் வாழும் வாழ்க்கையில் பிறரால் வரும் இழிநிலை தமக்கு வந்தாலும், தம் இனத்துக்கு வந்தாலும் மானமுள்ளோர் தமக்கு வந்ததாகவே கருதுவர். ஏனெனில் வாழ்வு நிந்தம் வசை பங்கல்லவா? நம் தமிழினம் அல்லற்படும் போது நாமெப்படி சுவைத்து சுகித்து வாழமுடியும்?  என நினைந்து தமிழினத்தின் மானம் காக்க தம்முயிரை துச்சமாக மதித்து, தமிழ் மண்ணில் விதையானோர் எண்ணில் அடங்கார். அதனாலேயே திருவள்ளுவரும் மானத்திற்காக இறந்தோரை, ‘இளியவரின் வாழாத மானம் உடையார்’ என பன்மையில் கூறியுள்ளார். 

நம் தமிழினம் மெல்ல மெல்ல அடக்கி ஒடுக்கப்படும் இழிநிலை கண்டு மனம் வெதும்பி, தமிழினத்துக்கு வந்த தாழ்வைப் பொறுக்கமுடியாது கடலைபோல் பொங்கி எழுந்து ஆரவாரித்துச் சென்று கடல் மடியில் வீரகாவியமாய் நிலைத்தோரும் இழிவுவந்த போது வாழாத மானமுடையாரே. அத்தகைய மானமுடையோரின் புகழின் சிறப்பை இவ்வுலகே கைதொழுது வாழ்த்தும் என்று திருவள்ளுவரே கூறியுள்ளார். தமிழராகிய நாமும் உலகுடன் சேர்ந்து ஒளிதொழுது [விளக்கு ஏற்றித் தொழுது] போற்றுவோம். 
இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment