Monday 7 July 2014

கீதை சொல்வதென்ன?

பக்திச்சிமிழ் 81


‘வீரவேல் …. உண்டே துணை’ என்பது எமது மூலமந்திரம். உருவென அருவென உளதென இலதென அருமறை இறுதியும் அறிவரு நிலையென நின்றவனைத் துணையென உணர்வீரேல் வேறு துணையை உலகில் நீர் எதிர் நோக்கத் தேவையில்லை. 

உயர்ந்த வேதாந்தத் தத்துவங்களைப் புகட்டும் நூலுக்கு “பிரஸ்தானத் திரயம்” என்று பெயர். பிரஸ்தானத் திரயம் என்றால் முத்தத்துவம் என்று பொருள். உபநிடதங்கள், பகவத்கீதை, பிரம்ம சூத்திரம் என்ற மூன்று நூல்களையும் பிரஸ்தானத் திரயம் என்பர். வேதாந்தம் சொல்வது இந்துசமயத் தத்துவம். சித்தாந்தம் என்பது சைவசமயத் தத்துவம். இந்த இரண்டு தத்துவங்களும் வெவ்வேறானவை. 

பிரஸ்தானத் திரயம் கூறும் உண்மைகளிற் சில. “அர்சுனா! ஆரியனுக்கு அடாததும், சுவர்க்கத்தைத் தடுப்பதும், புகழைப் போக்குவதுமான இவ்வளவு சோர்வு இன் நெருக்கடியில் எங்கிருந்து உன்னை வந்து அடைந்தது. பார்த்தா! அலியின் இயல்பை அடையாதே. அது உனக்குப் பொருந்தாது. எதிரியை வாட்டுபவனே! இழிவான உள்ளத் தளர்வைத் துறந்துவிட்டு எழுந்திராய். வாழ்க்கைத் திறவு கோலை கிருஷ்ணன் இக் கோட்பாட்டில் கொடுத்துவிடுகின்றான்.

பிரபஞ்ச (உலக) வாழ்க்கை ஒரு முடிவில்லாத போராட்டம். எதைப் பெறவிரும்பினாலும் உயிர்கள் அதன் பொருட்டுப் போராடியாக வேண்டும். கீதையின் முதல் ஆறு அத்தியாயங்களும் சீவ தத்துவத்தையும் கர்மயோக தத்துவத்தையும் புகட்டிக் கொண்டு போகின்றன. எல்லாக் கர்மங்களும் சங்கல்பத்தை அல்லது மனவுறுதியை அடிபடையாகாக் கொண்டிருக்கின்றன. நடமான - உண்ண - உறங்க - எழுந்திருக்க மனிதன் முதலில் சங்கற்பத்தைச் செய்கிறான். பின்பு தான் எண்ணியதைச் செய்கிறான். சிருஷ்டி முழுவதும் சங்கற்பத்தில் இருந்து விரிந்தது. 

ஸத், சித், ஆனந்தம் - சச்சிதானந்தம். இந்த சத்து, சித்து, ஆனந்தம் என்பனவற்றை விளக்கும் நூலே  பகவத்கீதை. 

ஸத்:- 
சொரூபத்தை விளக்குவதற்கான சாஸ்திரமாகும். உணர்ச்சியைப் பயன்படுத்தும் அளவுக்கு மனிதன் மேலோன் ஆகிறான். ஸத், ஆகிய ‘சீவனைப்’ பற்றி பகவத்கீதையின் முதல் ஆறு அத்தியாயங்களும் விளக்குகின்றன.

சித்:-
கடவுள் தன்மையைப் பற்றியது. பகவத்கீதையின் ஏழாம் அத்தியாயம் முதல் பன்னிரெண்டாம் அத்தியாயம் முடிய ‘சித்’ ஆகிய கடவுள் தன்மையைப் பற்றி விளக்குகிறது. பக்தியையும் அப்பகுதி வளர்க்கிறது. ‘தூய உணர்ச்சியின் திரள்’ பக்தி என்னும் பெயர் பெறுகிறது. தீய [கேடுடைய] உணர்ச்சிகள் எல்லாவற்றையும் நலம் வாய்ந்த உணர்ச்சிகளாக மாற்றுவது பக்தியாகும். கடவுளுடைய மகிமை விளங்குமளவிற்கு அன்பை ஊற்றெடுக்கச் செய்வதும் பக்தியே. கீதையின் இந்த இரண்டாவது ஷட்கம் அதாவது ஏழாவது தொடக்கம் பன்னிரெண்டாவது அத்தியாயம் வரை ‘சித்’தைப்பற்றி விளக்க ஈசுவர இலக்கணங்கள் அவற்றில் பேசப்படுகின்றன.

ஆனந்தம்:-
அன்புடைய உயிர் தெய்வத்திடம் கவரப்படுகின்றது. அன்பே கடவுள் என்பதை அது உணர்கிறது. அன்பு என்னும் கவர்ச்சி ஓங்குதற்கு ஏற்ப இனிமை மிளிர்கிறது. அது ஆனந்தமாகப் பரிணமிக்கிறது. ஆனந்தம் வளர வளர அது உவப்பிலா ஆனந்தமாகிறது. ஆனந்தமே இறைவன். இறைவனின் உருவமே ஆனந்தம். இந்த ஆனந்தத்தை நாடியே உயிர்கள் வாழ்க்கையில் பற்று வைக்கின்றன. ஆனந்தம் இல்லாவிட்டால் உயிர்கள் கணப்பொழுதும் வாழ்ந்திருக்க மாட்டா. ஆக ஆனந்தம் எப்போதும் ஆத்ம சொரூபத்தை வளர்ப்பது.

பதின்மூன்றாவது அத்தியாயம் பொடங்கி பதினெட்டாவது அத்தியாயம் முடியவுள்ள மூன்றாவது ஷட்கம் ஞானத்தை வளர்ப்பதற்கான வழிகளைப் பகர்கின்றது.


அத்வைதம் என்பதற்கு இரண்டல்ல என்பது பொருள். நதி கடலில் லயமாவது போல ஞானமடைந்த சீவன் பரத்தில் கலக்கிறான். இது அத்துவிதம் புகட்டும் முத்தி. அதை இன்னும் நன்றாகப் புகட்டுமிடத்து கடலில் தோன்றி கடலில் நிலை பெற்றிருக்கும் அலையானது தனது நாம ரூபத்தை அழித்து விடும் பொழுது பழையபடி கடலாகி விடுகிறது. அப்படி, முத்தி நிலையில் சீவன் இறைவனுடன் கலந்து விடுகிறான்.

குறிப்பு:
என் தந்தை பண்டிதர் மு ஆறுமுகன் அவர்கள் 11-06-1980 அன்று எனக்கு எழுதிய கடிதத்தில் எழுதியது.
இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment