Sunday 6 July 2014

பொன்கைநகர் இளவழகனே!

புங்குடுதீவு மடத்துவெளி பாலமுருகன் 
வணக்கப் பாமலர்
-இயற்றியவர் பண்டிதர் மு ஆறுமுகன் -


 வெண்பா
தேங்குபுகழ் பொன்கைநகர் சேரும் மடத்துவெளி
ஓங்க எழுந்தருளும் உத்தமனார் - பாங்கா
மயிலேறும் பால அழகன்  பதம்பாட
கயிலாய ஐங்கரனே காப்பு

  ஆசிரியப்பா
வடஆழியில் தோன்றி நடமாடி வளர்தென்றல்
       வலம்வந்து துதி பாட
மங்கையர்கள் நிறைகுடங் கொண்டு நன்னீர்மொண்டு
       மயிலன்ன மென நடப்பர்
மடமாது வள்ளியும் மகிழ்தெய்வ யானையும் 
       மருவியிரு பாக மேவ
மணமார்ந்து பொன்கைநகர் வடபால் மடத்துவெளி
       வாழ்வா யமர்ந்த பெருமான்
நடமாடு வரதர்கட் பொறியாகி நளினமலர்
       வந்தசர வண வமுதனே
நம்பியழும் அடியவர்துயர் வெம்பிவிழ வேல்தொடும்
       நாதமுடி வான பொருளே
மடமானைத் தொடரென்ற மடமானின் சொற்கேட்ட
       ரகுராமற் கொரு மருகனே
மங்கலம் தங்கிவிளை அதிகாரி புலமேவி
       வளருமொரு இள வழகனே!
இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment