Saturday 28 September 2013

பக்கிச்சிமிழ் - 66

அழுதால் உன்னைப் பெறலாமே!
- சாலினி -

மானுட வாழ்க்கையின் நோக்கம் இன்பம் காணுதல் என்றே நாம் கருதுகின்றோம். எது உண்மையான இன்பம் என்பதில் பலருக்கும் பலவிதமான கருத்துக்கள் இருக்கின்றன. ஒருவர் படிப்பில் இன்பம் காண்பார். மற்றவர் தூங்குவதில் இன்பம் காண்பார். இன்னொருவருக்கு உண்பதே இன்பமாக இருக்கும். பிறரை அடிப்பதில், திட்டுவதில், இல்லாதது பொல்லாது சொல்லித் தூற்றுவதில் கூட இன்பம் காண்போர் பலராவர். இவைமட்டுமல்ல களவெடுப்பதும் கொலைசெய்வதும் கூட சிலருக்கு இன்பத்தைக் கொடுக்கும். 

இன்பமென ஆசையுடன் எமக்கு வேண்டியதைத் தேடியலைந்தலைந்து கடைசியில் அவற்றால் துன்பப்படுகிறோம். உலக இன்பங்களின் மேல் எமக்கிருக்கும் ஆசையே துன்பங்களுக்கு காரணம் என்னும் உண்மையை நாம் உணர்வதில்லை. எம் அறிவு அதனை உணர்த்தினாலும் இன்பப்பற்றால் இழுப்புண்டு மீண்டும் மீண்டும் துன்பப்படுகிறோம். 

எம் துன்பங்களைப் போக்கி உண்மையான இன்பம் எது என்பதை எமக்கு உணர்த்துவது எமது ஆன்ம சக்தியாகும். அது எமக்குள்ளே இருக்கிறது. அதனை நாமே அறிய வேண்டும். அச்சக்தியை அறியும் போது அது சித்தத்துள் தித்திக்கும் தேனாய், தெவிட்டாத இன்னமுதாய் எமக்குத் தெரியும். அந்த சக்தியை கடவுள் என்கிறோம். அந்த ஆத்ம சக்தியை எமக்குள் எப்படி உருவாக்குவது? அதற்கான வழியை மாணிக்கவாசகர்
யான் ஏதும் பிறப்பு அஞ்சேன்
          இறப்பு அதனுக்கு என் கடவேன்
வான் ஏயும் பெறில் வேண்டேன்
          மண் ஆள்வான் மதித்தும் இரேன்
தேன் ஏயும் மலர்க் கொன்றைச்
         சிவனே எம்பெருமான் எம்மானே
உன் அருள் பெறும் நாள்
         என்று என்றே வருந்துவனே”                (திருவாசகம்: 5: 12)
எனத் திருவாசகமாகச் சொல்லியிருக்கிறார்.

துன்பங்கள் நீங்கி நிலையான பேரின்பம் வேண்டுமா?
“எம்மானே உன் அருள் பெறுநாள்
          என்றென்றே வருந்துவனே”
எனக் கதறிக் கூப்பிடுங்கள். இறையருள் கிடைக்கும். சுவாமிமார் கால்களிலும், ஐயர்மார் கால்களிலும் இறையருள் இல்லை. அவன் அருளாலே அவன் தாள் வணங்க வேண்டும். அது எம்மிடமே இருக்கிறது. அதனைப் பெற அழவேண்டும் என்று தனது அநுபவ உண்மையை மாணிக்க வாசகர் திருவாசகத்தில் சொல்லிச் சென்றுள்ளார்.

“யானேபொய் என் நெஞ்சும்
          பொய் என் அன்பும்பொய் 
ஆனால் வினையேன் அழுதால் 
          உன்னைப் பெறலாமே
தேனே அமுதே கரும்பின் 
          தெளிவே தித்திக்கும்
மானே அருளாய் அடியேன்
          உனைவந்து உறும்ஆறே”
தேன் போன்றவனே! அமுதமானவனே! கரும்புச் சாற்றின் தெளிவே! இனிமையானவனே!
நான் பொய்யானவன். எனது நெஞ்சும் பொய்யானது. நான் செலுத்தும் அன்பும் பொய்யானது. ஆனால் தீவினையுடயவனாகிய நான் அழுதால் உன்னை பெறலாம். உன்னை வந்து அடையும் அந்த வழியை அருளமாட்டாயா? என மாணிக்கவாசகரே கதறி இருக்கிறார். எமது சித்தத்துள் இருக்கும் தேனைச் சுவைத்து பேரின்பம் காண மாணிக்கவாசகர் போல அழலாம்.

சொல்விளக்கம்:
கரும்பின் தெளிவே - கருப்பஞ்சாற்றின் தெளிவு 
தித்திக்கும் மானே - இனிமையானவனே
உனைவந்து - உன்னை வந்து
உறும் - அடையும்
ஆறு - வழி 

No comments:

Post a Comment