Friday 27 September 2013

தமிழினம் ஆராய்ந்து கண்ட நிலப்பிரிவு

மனித இனங்களுள் தமிழினம் மிகவும் பழமையானது என்பதற்குச் சான்றாகப் பண்டைய தமிழர் நிலத்தை ஆறுவகையாகப் பிரித்து வைத்திருப்பதைச் சொல்லலாம். வேடுவராக காட்டிலும் மேட்டிலும் அலைந்த பண்டைத்தமிழர் பூமி முழுவதும் நீரும் நிலமுமாக இருப்பதைக் கண்டு பூமியை இருநிலம் என அழைத்தனர். 

பண்டைத்தமிழினம் காடுவாழ் சமூகமாக இருந்த பொழுது இயற்கையை நன்றாக ஆராய்ந்து அறிந்தனர். நிலத்தின் தன்மையைப் பொறுத்து அதில் வாழும் அசையும் உயிரினமாகிய விலங்குகளும், அசையா உயிரினமாகிய தாவரங்களும் வேறுபடுவதைக் கண்டனர். எனினும் தாவரங்கள் தாம் வாழும் நிலத்தைவிட்டு மற்ற நிலத்திற்கு தாமாகப் பெயர்ந்து செல்வதில்லை என்பதையும் உணர்ந்தனர். நிலமெங்கும் மலைகளும், காடுகளும், வயல்களும், கடல்களுமாய் இருப்பதைக் கண்டனர். பூமியின் நிலப்பரப்பு மலை, காடு, வயல், கடல் என நான்குவகையாக இருப்பதைக் கொண்டு அதனை நான்காகப் பிரித்தனர். அதனால் பூமியை நானிலம் என அழைத்தனர். நானிலமாகப் பிரித்த போது மலைகளில் குறிஞ்சியும், காடுகளில் முல்லையும், வயல்களுக்கு நீரைத்தரும் ஆற்றோரங்களில் மருதமும், ஆறும் கடலும் கலக்கும் கழிமுகங்களில் நெய்தலும் வளர்ந்ததோடு, அவை அந்தந்த நிலங்களிலே நிலைத்து நிற்பதையும் கண்டு, அந்நிலங்களை அத்தாவரங்களின் பெயர்களால் அழைத்தனர். 

தமிழுக்கு இலக்கணம் செய்த தொல்காப்பியரும்
“முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறையால் சொல்லவும் படுமே”
                                                - (தொல்: பொ: 5: 5 - 6)
என பண்டைத்தமிழரின் நானிலப்பிரிவை தமக்கு முன் வாழ்ந்தோர் வழிவழியாகச் சொல்லி வருவதாகாக் கூறுகிறார்.

அத்துடன் பாலை நிலத்தையும் சேர்த்து நிலத்தை ஐந்தாகப் பிரித்து ஐந்திணை என்றனர். திண் - திண்மையானது என்ற கருத்தில் நிலத்தை, பூமியை திணை என்றனர். ஐந்து நிலம் என்ற கருத்தையே ஐந்திணை தருகிறது. பாலைத்திணையை தொல்காப்பியர் நடுவு நிலைத்திணை என்கிறார். அதனை
நடுவுநிலைத் திணையே நண்பகல் வேனிலொடு
முடிவுநிலை மருங்கின் முன்னிய நெறித்தே”
                                              - (தொல்: பொ: 11)
என்று தொல்காப்பிய நூற்பா சொல்கிறது.
[Photos: source - Wikipedia]
Mesopotamie

மேலே சொல்லப்பட்ட நானிலமும் உச்சிவெய்யிலின் வெப்பத்தால் [நண்பகல் வேனிலொடு] வறண்டு கடைசியில் [முடிவுநிலை மருங்கின்] பாலைநிலமாக மாறும். நானிலமாக முன்னாளில் செழிப்புடன் இருந்த மெசப்படோமியா, மெக்சிக்கோ போன்ற பண்டைய நாகரிகத்தைப் பறைசாற்றும் இடங்கள் யாவும் நானிலம், பாலையாக மாறியதற்கு சான்றாக நிற்கின்றன. 
Red Sea
எனினும் சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள்
“முல்லையும் குறிஞ்சியும் முறைமையிற் திரிந்து
நல்பியல் பிழந்து நடுங்குதுயர் உறுத்துப்
பாலை என்பதோர் படிமம் கொள்ளும்” 
                                - (சிலம்பு: காடுகாண்: 64 - 66)
என்று கூறியிருப்பதால் முல்லை நிலமான காடுகளும், குறிஞ்சி நிலமான மலைகளும் மட்டுமே பாலையாகும் என நினைப்பது தவறு. மருத நிலமாக ஆறுகளுக்கு நடுவே நிமிர்ந்து இருந்த மெசப்படோமியாவின் நிலை என்ன ஆனது? நெய்தல் நிலமாக இருந்த dead sea பகுதி என்ன ஆனது? பாலை நிலமாகத்தானே இன்று காட்சிதருகின்றன. அவற்றைக் கொஞ்சம் நாம் நினைத்துப் பார்த்தால் தொல்காப்பியர் சொன்ன உண்மை புரியும். நானிலங்களும் பாலைநிலமாக மாறுவதால் தொல்காப்பியர் பாலைத்திணையை நடுவு நிலைத்திணை என்றார். பாலை நிலத்தில் வளரும் பாலை மரங்கள் முல்லை நிலத்திலும், குறிஞ்சி நிலத்திலும் மட்டுமல்ல மருத நிலத்திலும், நெய்தல் நிலத்திலும் கூட வளர்கின்றன.  

பூமியை ஐவைகை நிலமாகப் பகுத்த தமிழினம் இவற்றைவிட கடலால் சூழப்பட்ட நிலப்பகுதி இருப்பதையும் கண்டது. பண்டைத் தமிழரால் கடல், அளக்கர் என அழைக்கப்பட்டதால் கடல்சூழ்ந்த நிலம் அளக்கர் திணையென அழைக்கப்பட்டது. பூமியின் நிலப்பரப்பை பண்டைய தமிழர்  
  1. முல்லைத் திணை 
  2. குறிஞ்சித் திணை
  3. மருதத் திணை
  4. நெய்தல் திணை
  5. பாலைத் திணை
  6. அளக்கர் திணை 
என அறுதிணையாகப் பகுத்தனர். 

தமிழினம் காடுவாழ் சமூகமாக இருந்து, நாடுவாழ் சமூகமாக மாறிய போதே பூமியை நானிலமாக, ஐந்திணையாக, அறுதிணையாக வகுத்து உலகச்சுற்றுச் சூழலுக்கு தன் கடமையைச் செய்திருக்கிறது.  

அந்த அறுதிணையையும் சற்றுப் பார்ப்போம்:
காடுகளில் முல்லைக் கொடியும் உண்டு. முல்லை மரமும் உண்டு. ஆதலால் முல்லை மரம் வளர்ந்த காடும் காடுசார்ந்த நிலமும் முல்லை எனப்பெயர் இடப்பட்டது. 
மலைகளிலே குறிஞ்சிச்செடி  வளர்ந்து பன்னிரெண்டு வருடங்களுக்கு ஒருமுறை பூத்தது. குறிஞ்சிப் பூத்தேனை குறுந்தொகை 
“கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே” 
எனக் காதல் ஓவியமாய்க் காட்டுகிறது. எனவே குறிஞ்சி வளர்ந்த மலையும் மலைசார்ந்த நிலமும் குறிஞ்சி எனப் போற்றப்பட்டது.
ஆற்றங்கரை ஓரங்களில் மருதமரம் வளரும். அதனை மருதை எனவும் அழைப்பர். வயலும் வயல்சார்ந்த நிலமும் மருதம் எனப்பெயர் பெற்றது.
நெய்தல் நிலத்தில் ஆறும் கடலும் கலக்கும் ஆற்றுக்கழிமுக நீரில் வளரும் ஒருவகை அல்லி இனமே நெய்தலாகும். கடலும் கடல்சார்ந்த நிலமும் நெய்தல் என அழைக்கப்பட்டது.

சூரியனின் வெப்பத்தால் நானிலமும் அவற்றின் தன்மையில்  இலிருந்து திரிந்து பாலைவனமாய் மாறிய நிலம் பாலை எனப்பெயர் சூட்டப்பட்டது. காட்டிலும் மேட்டிலும் வளரும் பாலைமரம் சூரியவெப்பத்தையும் தாங்கி பாலை நிலத்திலும் வளரும்.

அளக்கர் நிலத்தை நாம் இப்போது தீவு என அழைக்கின்றோம். எல்லாவகை நிலமும் தீவில் இருப்பதால் அதற்கென தனியாக மரம் கூறப்படவில்லை. இருப்பினும் எருக்கம் செடி தீவுக்குரியதாக சுட்டப்படுவதைக் காணலாம். அளகம் வெள்ளெருக்கம் செடியின் பெயராகும். அளக்கர் திணை என அழைக்கப்பட அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். கடல் சூழ்ந்த நிலம் அளக்கர் நிலம் என வழங்கப்பட்டது.

தமிழினம் பூமியை இருநிலமாய், நானிலமாய், ஐந்திணையாய், அறுதிணையாய் ஒரு கூர்ப்புப் போல இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்பே ஆராய்ந்து பகுத்து வைத்திருப்பது போற்றுதலுக்கு உரியதாகும்.

தமிழினம் காடுகளில் வாழ்ந்த காலத்திலேயே பூமியை இவ்வளவு நேர்த்தியாக ஆறுவகையாகப் பிரித்து, அந்தந்த நிலங்களில் வாழும் தாவரப் பூக்களின் பெயரால் அந்நிலங்களை அழைத்து, அதனை சங்க இலக்கியங்களில் பதிவு செய்தும் வைத்திருக்கிறது. இத்தனை காலம் ஆகியும் பண்டைத்தமிழர் பாகுபடுத்திய நிலப்பிரிவுகளிலேயே அந்தந்தப் பூக்கள் இன்றும் மலர்வது உங்களை வியப்பில் ஆழ்த்தவில்லையா?
இனிதே, 
தமிழரசி.

No comments:

Post a Comment