Wednesday 12 September 2012

அடியிணைக்கு வாய்த்த மலரெதுவோ!



மனித இனம் ஒன்று. ஆனால் அது தனக்குத்தானே உருவாக்கிக் கொண்ட கடவுளர் எத்தனை? எத்தனை? கடவுளர் பலராக, மதங்களும் பல ஆயின. அம் மதங்களின் பேரால் எத்தனை? எத்தனை? போர்கள். மதங்கள் தம்மிடையே ஒன்றோடு ஒன்று மதங்கொண்டு பொருதாமல் இருக்குமானால் இவ்வுலகில் எத்தனையோ அற்புதமான உயிர்கள் மகிழ்ந்து வாழ்ந்திருக்கும். 

கடவுளை நாடியே எல்லா மதமும் செல்கின்றன. ஆனால் எவையும் முழுமையாக எதனையும் சொல்லவில்லை. ஆதலால் இனிமேலாவது போரின்றி இவ்வுலகம் வாழவேண்டுமானால் மதங்களின் அறியாமை ஒழிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு மதமும் தம்மிடம் உள்ள மூடநம்பிக்கைகளை கைவிட்டால் அவற்றின் அறியாமை தானே ஒழிந்துவிடும்.

ஏதோ ஒருவிதத்தில் மதங்களோடு மலர்கள் ஒன்றுபடுகின்றன. மலர்களிலும் மதங்களைப்போல் எத்தனை விதங்கள்? எத்தனை நிறங்கள்? எத்தனை மணங்கள்? கடவுளுக்கு வேண்டியது மல்லிகையா? சண்பகமா? தாமரையா? வாசமலரா? வெள்ளை மலரா? சிவனுக்கு வில்வமா? திருமாலுக்கு துளசியா? பிள்ளையாருக்கு அருகம்புல்லா? இன்ன கடவுளுக்கு, இன்ன பூ என்று சொன்னது யார்? இந்த மலர்களும், இலைகளும் இல்லாத இடத்தில் கடவுளை வணங்க முடியாதா? இல்லையேல் அப்படிப்பட்ட இடத்தில் கடவுளே இல்லையா? மலர்களின் மேல் மதங்கள் கட்டும் மூடக்கட்டுக்கள் அறுத்து எறியப்பட வேண்டும்.

எமது மனம் பொய், களவு, சூது, வாது, பொறாமை, வஞ்சகம் போன்ற கயமையால் கறைபடியாது இருந்தால் அது கோடானுகோடி மலர்களுக்கு சமமாகும். இதனை விபுலானந்த அடிகள் மிக அழகாக கூறியிருக்கிறார். ‘உயிர்களுக்கு வேண்டிய யாவற்றையும் அள்ளி வழங்கும் வள்ளலான கடவுளின் திருவடிக்கு ஏற்ற மலர் எதுவாக இருக்கும்? வெள்ளை நிறமான மல்லிகைப் பூவா? அதைவிட உயர்ந்த மலர் வேறெந்த மலரோ?’ என விபுலானந்தர் தமக்கு தாமே கேள்வி கேட்டுக்கொண்டார். உத்தமன் ஆகிய கடவுள் விரும்புவது - வெள்ளை நிறப்பூவும் அல்ல, வேறெந்த மலருமல்ல என்று சொல்லி; எமது மனம் எனும் தாமரை மலரையே [உள்ளக் கமலம்] கடவுள் விரும்புவதாக விடையையும் தருகிறார். அவரது கேள்வியையும் பதிலையும் பாருங்கள். 
"வெள்ளை நிற மல்லிகையோ வேறெந்த மாமலரோ
வள்ளல் அடியிணைக்கு வாய்த்த மலரெதுவோ
வெள்ளை நிறப் பூவுமல்ல வேறெந்த மலருமல்ல
உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது”
எம்மைத் தவிர எவராலும் பறிக்கமுடியாத, கறைபடுத்த இயலாத வாசமலர் எமது மனமே. அதைவிடச் சிறந்த மலரை எங்கு தேடியும் நாம் பெறமுடியாது. எனவே அதைப் போற்றுவோம். மனம் வாசனை ஆனால் வாய்ப்பது முத்து - முத்தி. 
இனிதே,
தமிழரசி.

1 comment:

  1. From my experience what controls our life is Karma. When we come into this world we choose our parents and our karma influence in this. There after what we created our good and bad Karma. Therefore do good karma and meditate. Almighty leads us to our determined destiny.

    ReplyDelete