Thursday, 28 October 2021

மெய்சிலிர்த்தல் என்பதை புல்லரித்தல் எனலாமா?

எமது உடலில் உள்ள மயிர் குளிர், பயம், வியப்பு, மிக்க மகிழ்ச்சி போன்றவற்றால் சிலிர்க்கும். அதனை உடல் சிலிர்த்தல், மயிர் சிலிர்த்தல் என அழைப்பர். தோலின் உணர்வின் சமநிலையைப் பேணுவதற்காக உடலின் மயிர் எழுந்து குத்திட்டு சிலிர்த்து நிற்கும் நிலையை உடல் சிலிர்த்தல் என்கின்றோம்.  உடலை மெய் எனச் சொல்வதால் மெய்சிலிர்த்தல் என்றும் கூறுவர். இச்செயல்பாட்டை புளகம் கொள்ளல், மயிர்க்கூச்செறிதல், புள்ளெறிதல் என்ற பெயர்களாலும் அழைப்பர். புளகம் = புள் + அகம். புள் என்பது பறவை. பறவைகள் கூரான சொண்டால் கொத்துவத்தால்[குத்துவதால்] புள் என அழைத்தனர். மன எழுச்சியால் ஏற்படும் மெய்சிலிர்ப்பையே நம் முன்னோர் புளகம் கொள்ளல் என்றனர். அது அகத்துள்[மனத்துள்] நடைபெறுவது.

ஆனால் தற்காலத்தில் பலரும் மயிர்க்குச்செறிதல், புல்லரித்தல் என்றும் எழுதுகின்றனர். இந்தத் தவறை பத்திரிகைகளும், பதிப்பகத்தேரும், வலைத்தளங்களும் செய்வதைக் காணமுடிகிறது. அதற்குக் காரணமாக வலைத்தளங்களில் இருக்கும் அகராதிகளும் இருக்கலாம். எனவே அவர்கள் தரும் சொற்கள் சரியான கருத்தைத் தருகின்றனவா என்பதைப் பார்ப்போம்.

  1. மயிர்க்குச்செறிதல்: இச்சொல்லைப் பிரித்து எழுதினால் அவர்கள் விடும் பிழை தெரியும். மயிர் + குச்சு + எறிதல் = மயிர்க்குச்செறிதல் ஆகும். இதில் வரும்குச்சுஎனும் வேர்ச் சொல் எதனைக் குறிக்கிறது? குச்சு - குச்சி. குச்சிக்கும் மெய்சிலிர்த்தலுக்கும் என்ன தொடர்பு உண்டு? சிந்தித்துப் பாருங்கள். இதை மயிர்க்கூச்செறிதல் என எழுதவேண்டும்மயிர் + கூச்சு + எறிதல் = மயிர்க்கூச்செறிதல் எனப் புணரும். ‘கூச்சு’ - கூரான முனை என்ற கருத்தைத் தரும். ‘எறிதல்’ -  நிமிர்தல் என்ற பொருளில் வருகிறது. மயிரின் கூரான முனைகள் குத்திட்டு நிற்பதையே மயிர்க்கூச்செறிதல் என்கிறோம்.
  2. புல்லரித்தல்: புல் + அரித்தல் = புல்லரித்தல் எனப் புணரும். புல், அரித்தல் எனும் இந்த இருசொற்களும் தமிழர்களாகிய எமக்குத் தெரிந்த சொற்களே. இவை புணர்ந்துவரும் புல்லரித்தல் செருக்கிய புல்லை மண்ணில்லாது அரித்து எடுப்பதைக் குறிக்கும். புல் அரித்தலுக்கும் மெய்சிலிர்த்தலுக்கும் ஏதாவதுதொடர்பு உண்டா? இவற்றை சிந்தனை செய்து பார்க்க மாட்டோமா? நமது மொழியை நாமே இழிவுபடுத்துகிறோமா? அழிக்கிறோமா? தெரியவில்லை. இதனை புள்ளெறிதல் என எழுதவேண்டும். உடலின் மயிர் குத்திட்டு நிமிர்ந்து நிற்பதையே புள்ளெறிதல் குறிக்கிறது. இவற்றை திருத்தி எழுதுவது தமிழராகிய நமது கடமையாகும்.

இனிதே,

தமிழரசி.

Monday, 25 October 2021

ஞாலமெலாம் நீயாகி



ஞாலமெலாம் நீயாகி நின்றவாறென்னே

ஞாயிற்றின் ஒளியாகி நயந்தவாறென்னே

காலமெலாம் கருவாகி களித்தவாறென்னே

காற்றினின் அசைவாகி கரந்தவாறென்னே

கோலமெலாம் உருவாக்கி கொடுத்தவாறென்னே

கனன்று எரியாகி கலந்தவாறென்னே

மூலமெலாம் முகிழ்வாகி முளைத்தவாறென்னே

மூலமாய் ஞாலமாய் மூண்ட காலகாலனே

இனிதே,

தமிழரசி.

Thursday, 21 October 2021

நீணிலத்தைக் காத்தருள்வாய்!


புன்மலமே போந்து நின்று

  புறங்காட்டி மதி மயக்க

எம்மலமே எமை ஆட்ட

  ஏங்கித் தவித் துழன்று

வன்மலமே வகுத்த வழிஇ

  வாழ்வதற்கா நாம் பிறந்தோம்

நின்மலனே நின் அருளால்

  நீணிலத்தைக் காத் தருள்வாய்

இனிதே,

தமிழரசி.

Friday, 15 October 2021

சக்தி இன்றேல் உலகேது


இயற்கையின் எல்லாவடிவிலும் சக்தி கலந்திருக்கிறது. காற்று, நீர், விண், மண், மலை, நெருப்பு, உயிர்கள் யாவிலும் சக்தி இருக்கிறது. ஒரு சக்தி இன்னொரு சக்தியாக மாறும். வெப்பசக்தி எரிசக்தியாகவும் எரிசக்தி வெப்ப சக்தியாகவும் மாறுவதை அறிவோம். அதனால் இயற்கையில் இருந்து சக்தியைப் பிரித்து எடுக்க முடியாது. சக்தியே உலகை இயக்குகிறது.


காட்டில் வாழ்ந்த மனிதன் குளிரிலும் வெப்பத்திலும் உணவு தேடித் கொடுத்தும் பிற கொடிய உயிரினங்களிடம் இருந்து தன்னைக் காப்பாற்றி வளர்த்த தாயின் சக்தியை மதித்தான்.  சிறுவயதிலேயே தாயின் சக்தியைக் கண்டு வியந்த மனிதன் அவளைப் போற்றினான். அதுவே தாய் தெய்வ வழிபாடாக சக்திவழிபாடக முகிழ்ந்தது. அது பின்னர் சிவவழிபாடாக ஆண்தெய்வ வழிபாடாகக் கிளைவிட்டுப் படர்ந்ததை சங்க இலக்கியங்கள் காட்டுகின்றன.


அந்த உண்மையை சங்க இலக்கிய நூலான ஐங்குறுநூற்றின் கடவுள் வாழ்த்தும் 

நீலமேனி வாலிழை பாகத்து ஒருவன்

இருதாள் நிழற்கீழ் மூவகை

உலகும் முகிழ்ந்தன முறையே

- (ஐங்குறுநூறு: கடவுள் வாழ்த்து)


எனக் கூறுகிறது. பிற்கால நூல்கள் சிவன் தனது இடது பாகத்தில் சக்தியை வைத்ததாக சொல்வதற்கு முற்றிலும் மாறாக அம்பாளின் பாகத்தில் சிவன் இருப்பதாகச் சொல்கிறது. இது சக்திவழிபாட்டில் இருந்து சிவவழிபாடு தோன்றியதைக் காட்டுகிறது. “சக்தி இன்றேல் சிவன் இல்லைஎனும் முதுமொழி தோன்ற இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.


இப்பாடல்சக்தியின் பாகத்தில் இருக்கும் சிவனின் இரு திருவடிகளின் நிழலின் கீழே மூவகை உலகும் முறையாகத் தோன்றினஎன்கின்றது. இக் கடவுள் வாழ்த்துச் சொல்லும்மூவகை உலகும்எது? இதற்கு விளக்கம் எழுதியவர்கள் மேல், கீழ், நடு என மூவகை உலகு தோன்றியதாக எழுதியுள்ளனர். அது பிழையான கருதுகோளாகும். 

1. மேல் உலகு

2. கீழ் உலகு

3. நடு உலகு 

என மூவகைப்பட்ட உலகு இருக்கிறதா? எங்கே இருக்கின்றது? ஒன்றிலிருந்து ஒன்றாக முறையே தோன்றியதா? என்கின்ற கேள்விகளுக்கு இவை விடை தருமா?


மூவகை என்பது இங்கே பொருளின் தன்மையை, பண்பைக் குறிக்கிறது. உலகம் எப்படித் தோன்றியது என்னும் உண்மையை இரண்டாயிர வருடங்களுக்கு முன்பே சொன்ன ஓர் அரிய பாடல் இது. 


ஐங்குறுநூறு உலக தோற்றத்திற்குக் காரணமான பொருட்களின் நிலைகளை மூவகை  [The three states of matter] எனக் கடவுள் வாழ்த்தில் சொல்கிறதுதிண்ம [Solid], திரவ [Liqud], வாயு [Gas] ஆகிய மூன்றாலான உலகம் ஒன்றிலிருந்து ஒன்றாக முறையே தோன்றியது [முகிழ்ந்தது] என்கிறது.


அதாவதுதிண்ம, திரவ, வாயு எனும் மூவகைப் பொருளாலான உலகம் நீலமேனியும் வெள்ளை அணியும் பூண்டவளின் பாகத்தில் இருக்கும் ஒருவனின் இரண்டு திருவடிகளின் நிழலில் இருந்து முகிழ்ந்ததுஎன உலக தோற்றத்தை அறிவியல் கருத்துடன் சொல்கிறது. இம்மூவகைப் பொருட்களின் சக்தி இன்றேல் உலகேது?

இனிதே,

தமிழரசி.