Wednesday, 10 October 2012

உண்மையான கடம்பமலர் எது?

முருகன் அணிந்த வெண்கடம்ப மரப்பூ


சங்க இலக்கியம் சொல்லும் கடம்பமலரை, விக்கிபீடியா (Wikipedia) கடம்ப மலர் என்று சொல்லவில்லை. கிருஷ்ணன் கோபியருடன் ஆடி மகிழ்ந்த மரத்தை ஹிந்தியில் “கடம்ப்” என்பார்கள். அதனையே விக்கிபீடியா சொல்கிறது. அதன் தாவரவியற் பெயர் கடம்ப(Cadamba) என முடிவதால் இந்திய மொழிகளில் எல்லாம் அதனை கடம்ப (Neolamarchia Cadamba) என அழைப்பர். அந்த மரத்தை சங்க இலக்கியம் சொல்லும் கடம்பமரம் (kadamba) என பலரும் நினைக்கிறார்கள். அப்பூவை கீழேயுள்ள படத்தில் பாருங்கள். உருண்டையாக கோளமாக இருக்கின்றது.  அதன் நிறமோ மஞ்சளும் வெள்ளையும் சேர்ந்தே இருக்கின்றது.

கிஷ்ணன் கோபியருடன் ஆடிய கடம்பா[கடம்ப்] மரப்பூ

எமது சங்ககாலப்புலவர்கள் சங்க இலக்கியங்களில் கூறியிருக்கும் கடம்பமரத்தில்  வெண்கடம்பு (Barrintonia Calyptrata), செங்கடம்பு(Barringtonia Acutangula) என இருவேறு கடம்பமரங்கள் இருக்கின்றன. கடம்பமரத்தை மராமரம் என்றும் தமிழில் சொல்வர். கடம்பமலர் எப்படி இருக்கும் என்பதை சங்க இலக்கியப் பாடல்களால் அறிவோமா?

“நெடுங்கான் மரா அத்துக் குறுஞ்சினை பற்றி
வலஞ்சுரி வால் இணர் கொய்தற்கு”               
                                             - (ஐங்குறுநூறு: 383)

வலமாகச் சுழன்று ஒவ்வொரு பூவாக கீழிறங்கி வந்து, தொங்குகின்ற வெள்ளைநிறப் பூங்கொத்தைப் பறிக்க உயர்ந்த கடம்பமரத்தின் சிறுகிளையைப் பற்றிப் பிடித்ததாக ஐங்குறுநூறு சொல்கிறது. ‘வலஞ்சுரி வால் இணர்’ எனும் சொல் வலமாகச் சுரித்த வெள்ளைநிற(வால்) பூந்துணரை கடம்பம் பூந்துணராகச் சுட்டுகின்றது. வெண்கடம்ப மரம் இருந்ததையும் அதன் மலர் பூந்துணராகத் தொங்குவதையும்  இந்த ஐங்குறுநூற்றுப் பாடலால் அறியலாம்.

முருகன் அணிந்த செங்கடம்ப மரப்பூ

“செங்கான் மராஅத்து வரிநிழல் இருந்தோர்”     
                                             - (ஐங்குறுநூறு: 381)
சிவந்த பூ(செங்கான்) உள்ள கடம்பமர நிழலில் இருந்தவர்களை இப்பாடல் வரிகாட்டுகிறது. ஆதலால் செங்கடம்பு மரமும் இருந்தை நாம் தெரிந்து கொள்ளலாம். 

விக்கிபீடியா காட்டும் கடம்பபூப் போல் கோளமாக, சங்க இலக்கியம் சொல்லும் கடம்ப பூந்துணர் இருக்காது என்பதை முருகனின் மார்பில் அசையும் கடம்பபூமலையை 
“இருள்படப் பொதுளிய பராரை மராஅத்து 
உருள் பூந்தண்தார் புரளும் மார்பினன்”     
                                          -(திருமுருகாற்றுப்படை: 10 -11)
என்று நக்கீரர் சொல்வதும் எடுத்துக் காட்டுகிறது.

“உருள்பூந்தண்தார்” என்பது உருளை வடிவான பூந்தார் என்பதையே குறிக்கின்றது. அது உருண்டை (கோளம்) வடிவான பூந்தாரைக் குறிக்கவில்லை. மேலே படத்தில் உள்ள வெண்கடம்பு மலரும் செங்கடம்பு மலரும் உருளையாக இருப்பதைப் பாருங்கள். அத்துடன் இன்று திருப்பதி என அழைக்கும் இடம் அந்நாளில் வெண்கடம்புக் காடாக இருந்ததால் வெண்கடம் என்றும் வேங்கடம் என்றும் அழைக்கப்பட்டது. அதனை திருப்பதி இறைவனை வெங்கடேஸ்வரன் என்றும் வேங்கடேஸ்வரன் என்றும் சொல்வதால் அறியலாம். 

உடம்பெனும் மனையகத்துள் உள்ளமே தகளியாக
மடம்படும் உணர்நெய் அட்டி உயிரெனும் திரிமயக்கி
இடம்படும் ஞானத்தீயால் எரிகொள இருந்து நோக்கில்
கடம்பமர் காளைதாதை கழல் அடி காணலாமே
                                                            - (பன்.தி: 4: 75:4)
இத்தேவாரத்தில் திருநாவுக்கரசு நாயனார் காட்டும் கடம்பமர் காளையான முருகனின் கழுத்தில் எப்படி உண்மையான கடம்பமலர் மாலையைக் காண்பது? அதை மட்டுமா இழந்தோம்? கள்ளிமரத்தின் உள்ளே இருக்கும் அகில் பிளவு, அகில் குறடுகள் எம்மைவிட்டு போய் தற்போது அகில் எனும் போர்வை போர்த்தி அகரு மரக்கட்டைகள் வலம் வருகின்றன. கடம்பமரம் 'கடம்ப்' மரமாக உருமாற, கள்ளியின் அகில் அகருமரமாக காட்சிதர, உண்மையான கறிவேப்பிலையும் கண்ணை விட்டு மறைய போலிக் கறிவேப்பிலையும் ஒருவருடமாக வலம்வரத் தொடங்கிவிட்டது. இப்படி நோய் தீர்க்கும் மரங்கள் பலவற்றை எம்மை அறியாமலேயே நாம் இழந்து கொண்டு இருக்கிறோம்.  தமிழர் மரங்களை மறக்கும் மனிதர் என்பதை உலகம் நன்கு அறிந்து வைத்துள்ளது.

எனவே நம் முன்னோர் சொன்ன உண்மையான கடம்பமலர் எது என்பதை நாம் அறிந்துகொள்வதோடு அதனை எமது இளம் தலைமுறயினர்க்கு எடுத்துச் சொல்வோமா!
இனிதே,
தமிழரசி.

Monday, 8 October 2012

அடிசில் 37

பேரீச்சம்பழக் கேக்

                                               - நீரா -
















தேவையான பொருட்கள்:
விதையற்ற பேரீச்சம் பழம்  -  500 கிராம்
தேயிலைச் சாயம்  -  1 கப் 
பட்டர்  -  250 கிராம்
சீனி  -  250 கிராம்
ரவை  -  250 கிராம் 
முட்டை  -  4
திராட்சை வற்றல் (currants) - 50 கிராம்
வெட்டிய முந்திரிப் பருப்பு  -  50 கிராம்
அப்பச்சோடா  -  2  தேக்கரண்டி
வனிலா  -  1½ தேக்கரண்டி 

செய்முறை:
1.  பேரீச்சம் பழத்தை சிறு துண்டுகளாக வெட்டி தேயிலைச் சாசத்தில் 6 - 7 மணி நேரம் ஊறவிடவும்.
2.  பட்டரையும் சீனியையும் சேர்த்து அடிக்கவும்.
3.  அவற்றுடன் ஒவ்வொரு முட்டையாகச் சேர்த்து அடிக்கவும்.
4.  ரவையுடன் அப்பச்சோடாவைக் கலந்து அரித்துக்கொள்க.
5.  அரித்த ரவையை சிறிது சிறிதாக முட்டைகலவையுடன் சேர்த்து கலந்து கொள்க.
6.  அக்கலவையுள் முந்திரிப்பருப்பு, திராட்சை வற்றல், வனிலா மூன்றையும் சேர்த்து மெதுவாக கலந்து கேக்டின் உள் இட்டு மட்டப்படுத்தவும்.
7.  அதனை 180°C யில் சூடேறிய அவணில் 50 நிமிடம் வேகவிட்டு எடுக்கவும்.

Sunday, 7 October 2012

நயினை சிவ நாகராஜ நாயகி


கீதமேடையில் பாடுவாள் - தினம் 
           கீதநாத சொரூபினி
வேதமேடையின் வித்தகி - நல்ல 
            வேதஞான ரூபினி

பாதகிண்கிணி ஆர்க்கவே - பதம் 
            பாடியாடு பாவகி
நாதமேடையில் ஆடுவாள் - நிதம் 
            நாகபூசண நாதகி

மோகமேடையின் மோகினி -மன 
           மோனராக மாயகி
நாகமேடையில் தூங்கிடும் - சிவ
            நாகராஜ நாயகி
இனிதே,
தமிழரசி.

Saturday, 6 October 2012

ஆசைக்கவிதைகள் - 44

மடியிருத்தி காண்பதெப்போ!


இலங்கை வரலாற்றைப்பற்றி இருக்கு வேதத்திலும் பேசப்பட்ட ஓரிடம் புலத்தியநகர். அதனை நாம் இன்று பொலநறுவை என அழைக்கின்றோம். இருக்கு வேதகாலத்திற்கு முன்பே நாகரீகச் செழுமை உடையவர்களாக தமிழர் அங்கு வாழ்ந்ததை இருக்கு வேதம் எமக்கு அறியத்தருகின்றது. பன்னெடுங் காலமாக மனிதநாகரீகத்தில் பண்பட்ட இடத்தில் வாழ்ந்த ஒர் இளைஞன் தன் மச்சாளின் அழகைக் கூறி ஏங்கும் நாட்டுப்பாடலே இது.

ஆண்: முத்து முத்தாப் பல்லழகு
                    முல்லை போல சிரிக்கயில 
          சொக்கத் தங்க நிறத்தழகு
                     சொக்கி என்ன இழுக்குதல்லோ!

           மை எழுது கண்ணழகு
                      மயக்கி என்ன அழைக்கயில 
           பையப் பைய நடையழகு
                      பாக்க மனம் ஏங்குதல்லோ!

            கத்தும் குயில் குரலழகு
                      காதோரம் கேக்கயில 
            நித்திரையில் உன் அழகே
                       நினைவாக நீளுதல்லோ!

            பூச்சூடும் பின்னல் ஆடயில
                       பின்னி மனம் கிரங்குதல்லோ
             மச்சாளே! மயக்குமுன் அழகெலாம் 
                       மடியிருத்தி காண்பதெப்போ!
                                         -  நாட்டுப்பாடல் (பொலனறுவை)
                                        (பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து) 


எஸ் ஏ ராஜ்குமார் இசையில் ஹரிஹரன் பாடிய கண்ணுபடப் போகுதையா படப்பாடலும் இந்நாட்டுப் பாடலைப் போல, காதலியின் அழகை எடுத்துக் கூறும். அப்பாடலில் இருந்து சில வரிகள்.


"மூக்குத்தி முத்தழகு மூணாம்பிறை பொட்டழகு
பொள்ளாச்சி மண்ணில் விளைஞ்ச நெல்லுமணிப் பல்லலகு
                                                                       - மூக்குத்தி முத்தழகு 
பத்துவிரல் பூவழகு பாதம் தங்கத் தேரழகு
வானம் விட்டு மண்ணில் வந்தாள் நிலவல்ல பெண்ணழகு
மருதாணிக் கொடிபோல மவுசாக அவ நெரமா
ஆஹா என்ன நடையோ ஆஹா அன்ன நடையோ 
மழை பெஞ்ச தரை போல பதமாக நானிருப்பேன்
ஆஹா என்ன அழகோ ஆஹா வண்ண மயிலோ
வலை வீசும் கண்ணழகு வளைந்தாடும் இடையழகு
கருநாகக் குழல் அழகு கற்கண்டு குரல் அழகு ....
                                                                         - மூக்குத்தி முத்தழகு "

Friday, 5 October 2012

குறள் அமுது - (45)


குறள்:
“உயிர்ப்ப உளரல்லர் மன்ற செயிர்ப்பவர்
செம்மல் சிதைக்கல் ஆதார்”                        - 880

பொருள்:
தமது பகைவரின் செருக்கை, அழிக்க முடியாதவர் சுவாசிப்பவராக இருந்தாலும் நிச்சயமாக இறந்தவரே.

விளக்கம்:
இத்திருக்குறள் 'பகைத்திறம் தெரிதல்' என்னும் அதிகாரத்தில் உள்ளது. பகைத்திறம் தெரிதல் என்றால் பகையை வெல்வதற்கான தன்மையை அறிதலாகும். மூச்சை உள்ளிழுத்து வெளிவிடுவதை உயிர்த்தல் என்பர். ஒருவர் மூச்சு விடுவதால் மட்டும் அவரை உயிரோடு வாழ்கிறார் என்று சொல்ல முடியாது. மரக்கட்டை போல் படுத்திருந்து கொண்டு, ஒருவன் மூச்சுவிட்டு உயிர்வாழ்வதால் அவன் அடையும் பயன் என்ன? அத்தகையோர் சுவாசிப்பதற்காகவே [உயிர்ப்ப] வாழ்கிறார்கள்[உளர்]. 

பெரும் துன்பத்தை தந்தோரும் மறக்கமுடியாத தீமையை, கொடுமையை செய்தோருமே செயிர்த்தோர். தமக்கு ஆராத்துயரை அள்ளித்தந்தோரின் பெருமையை, மமதையை சிதைத்து சீரழிக்க முடியாதார் சுவாசிப்பதற்காகாவே இவ்வுலகில் வாழ்கிறார்கள். தமது பகைவரின் ஆணவத் தலைமைத் தன்மையை அடித்து ஒடிக்க முடியாதோர் மூச்சு இழுத்து விடுவாராயினும் இறந்தோர் என்பதே திருவள்ளுவரின் கணிப்பு.

திருவள்ளுவரின் கூற்றுப்படி இன்றைய உலகில் வாழும் பத்துக்கோடி தமிழரும் மூச்சு விடுவதற்காகவா வாழ்கிறோம்? நினைத்துப் பாருங்கள் நம் நெஞ்சம் சுடுவது புரியும்? எப்போது நம் பெருமையை ஈடழித்தோரின் செம்மலைச் சிதைத்து, உடல் சுமந்து உயிர் வாழும்   உண்மையை உலகுக்கு உணர்த்தப் போகிறோம்?

பகைவரின் ஆணவச் செருக்கை, தலைமைத் தன்மையை தூள் தூளாக நொருக்கி அழித்து ஒழிக்க முடியாதவர், மூச்சை உள்ளும் வெளியும் இழுத்துவிடுவதால் உயிரோடிருக்கிறார் என்று நிச்சயமாகக் கூறமுடியாது. எனவே அப்படிப்பட்டடோர் இறந்தவருக்கு சமமாவர் என்பதை தமிழர்களாகிய எமக்கு இத்திருக்குறள் மூலம் திருவள்ளுவர் தெளிவுபடுத்தியுள்ளார். 

Thursday, 4 October 2012

பவனிவரும் மானிடரே!

















தார் உருகும் வீதியில்
தகிக்கும் வெய்யிலென
குளிரூட்டிய பேரூந்தில்
மிடுக்காகப் பவனிவரும்
மானிடரே!

கருங்கல்லை பொளிந்து
நல் அம்மியும் குழவியும்
வடிக்கத் தெரிந்த 
என் தாய்க்கு,

உங்கள் மனமெனும்
நெஞ்சப் பாறைகளைப் 
பொளிய கூர் உளியும்
சுத்தியலும் கிடைக்கவில்லையே!
                                                     - சிட்டு எழுதும் சீட்டு 42

Monday, 1 October 2012

தமிழரின் நான்மறை எது? - பகுதி 2


றைவன் வேதங்களைச் சொன்னார் என்னும் பொழுது, எங்கே? யாருக்கு? எப்போது? சொன்னார் என்பன போன்ற கேள்விகள் கூடவே எழும். சங்க இலக்கிய கால வரலாற்றுப் பதிவுகளை தந்த சங்க இலக்கியச் சான்றோர்களிலே பரணர் மிகவும் நேர்த்தியாகவும் நுணுக்கமாகவும் அன்றைய தமிழரின் வரலாறுகளை பதிவு செய்திருக்கிறார். பூம்புகார்த் துறையில் ஆலமரமுற்றத்தே நான்மறை முதுநூல் உடைய மூன்றுகண் இறைவன் இருந்த வரலாற்றையும் பதிவுசெய்துள்ளார். அதனைப் பரணர் ‘உலகெலாம்[ஞாலம்] மணம் பரப்பும்[நாறும்] நல்ல செழுமையான[நலங்கெழு] புகழ் உள்ள [நல்லிசை], நான்மறையாகிய பழையநூலை[முதுநூல்]  உடைய மூன்றுகண் இறைவனின்[முக்கட் செல்வன்] ஆலமர முற்றம் அழகுபெறுவதற்கு[கவின்பெற], பொய்கை சூழ்ந்த பொழிலில் வீட்டுப் பெண்கள்[மனை மகளிர்] கையால்செய்த[கைசெய்] பாவைகள் இருந்த துறையை’
"ஞாலம் நாறும் நலங்கெழு நல்லிசை
நான்மறை முதுநூல் முக்கட் செல்வன்
ஆலமுற்றம் கவின்பெறத் தைஇய
பொய்கை சூழ்ந்த பொழில்மனை மகளிர்
கைசெய் பாவைத் துறை”                      (அகம்: 181: 15 - 19)
எனக் குறிப்பிடுவதால் அறியலாம். முதற்பகுதியில் எடுத்துக்கூறிய புறநானூற்றுப் பாடைலைப் பாடிய ஆவூர் மூலங்கிழார் போலவே இப்பாடலிலும் பரணரும் 'நான்மறை முதுநூல்' என நான்கு மறையையும் ஒரு நூலாகவே சுட்டுகிறார். இப்படி நம் முன்னோர் எடுத்துச் சொல்லியும் அவற்றை ஏற்றுக்கொள்ளாது பிறர் கூறும் இருக்கு, யசுர், சாம, அதர்வணங்களை நான்மறை எனக்கூறல் தகுமா?

சிறுபாணாற்றுப்படையும் 
“நீல நாகம் நல்கிய கலிங்கம் 
ஆலமர் செல்வற்கு அமர்ந்தனன் கொடுத்த”    (சிறுபா: 96 - 97)
என்று ஆலமர நிழலில் இருந்த இறைவனைச் சொல்கிறது .

“ஆறறி அந்தணர்க்கு அருமறை பலபகன்று”     
                                                     (கலி: கடவுள் வாழ்த்து)
என கலித்தொகை கடவுள் வாழ்த்தும் சொல்லும். 

ஆலமர் செல்வரையே நாம் இன்று தட்சணாமூர்த்தி என்கிறோம். வடமொழியில் தட்சிணம் என்றால் தெற்கு. தெற்கே இருக்கும் கடவுள் என்பதை தட்சணாமூர்த்தி என்னும் சொல் சொல்கிறது. கோயில்களில் தெற்கே தென்முகக் கடவுளாக இருப்பவர் என்பதை அது சொல்லவில்லை. திருக்கோணேச்சரத்தைக் தட்சண கைலாயம் என்றும் கூறுவர். அங்கிருந்த ஆலமரநீழலில் இருந்து இறைவன் அருமறை சொன்னார் என்பது பண்டைய ஈழத்தமிழரின் நம்பிக்கையாகும். ‘தென்னாடுடைய சிவனே போற்றி’ என நாம் வழுத்துவதும் அதனைக்காட்டுகிறது. அந்தத் தென்நாடே கடல்கொண்ட தென்நாடு. அங்கிருந்து ஆலமர்செல்வர் சொன்ன அருமறைகள் என்ன?
படம்: நன்றி; வரலாறு (திரு கலைக்கோவன்)
திருஞானசம்பந்தக் குழந்தை அதற்கு அறிவுப்பசி. அந்த அறிவுப்பசியைப் போக்க அக்குழந்தை  தனது தேவாரத்தில்
“நூலடைந்த கொள்கையாலே நுன்னடி கூடுதற்கு
மாலடைந்த நால்வர் கேட்க நல்கிய நல்லறத்தை
ஆலடைந்த நீழல் மேவி அருமறை சொன்னதென்ன?”           
                                                   - (பன்.திருமுறை: 1: 48: 1)
என்று இறைவனிடம் கேள்வி எழுப்புகிறது. சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர் நால்வருக்கும் ஆலமர நிழலில் சொன்ன அருமறை என்ன? எனக்கேட்கும் அக்குழந்தை இன்னொரு தேவாரத்தில் 
"அழிந்த சிந்தை அந்தணாளர்க்கு அறம் பொருள் இன்பம் வீடு
மொழிந்த வாயான்"
                                                  - (பன்.திருமுறை: 1: 53: 1)
என்று இறைவனப் போற்றுகிறது. திருஞானசம்பந்தரின் இந்தத் தேவாரம் சங்கத் தமிழரின் மறையான முதுநூலின் நான்கு பிரிவையும் அறம், பொருள், இன்பம் வீடு எனக்காட்டுகிறது. இவையே தமிழரின் நான்மறையாகும். இறவனால் அருளப்பட்டதாக இன்பத்தைக் கூறும் ‘இறையனார் அகப்பொருள்’ இந்த நான்கில் ஒன்றாக இருக்கக்கூடும். புறநாநூறு சொல்லும் நான்மறை-முதுநூலின் சாற்றையே எமது சங்க இலக்கியங்களும், பக்தி இலக்கியங்களும் தருகின்றன எனச்சொல்லலாம்.

பொய்யாமொழிப் புலவரை, ஒருவர் புலவர் என அழைத்ததற்கு 
“அறம் உரைதானும் புலவன் முப்பாலின்
திறம் உரைத்தானும் புலவன் - குறுமுனி
தானும் புலவன் தரணி பொறுக்குமோ
யானும் புலவன் எனில்”
எனக்கூறினாராம். 

அவரது கூற்றுப்படி திருவள்ளுவர் அறம், பொருள், இன்பம் ஆகிய முப்பாலையே சொன்னார். மேலோட்டமாகப் பார்க்கும் போது அதுவே சரி. ஆனால் என் ஐயன் வள்ளுவன்  
“எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு”                            
                                                 - (திருக்குறள்: 43: 3)
என்கிறாரே. அவர் சொன்னதுபோல் மெய்ப்பொருளை அறிய திருக்குறனினுள் நுழைந்து ‘வீடாம் மெய்ப்பொருள்’ பற்றி ஏதும் சொல்லி இருக்கிறாரா எனப்பார்ப்போம். 

திருக்குறளின் முதலாவது அதிகாரமான கடவுள் வாழ்த்தே வீடுபேற்றின் சிறப்பை எடுத்துச் சொல்வதாகவே இருக்கின்றது. எமது உயிர் இறைவனுடன் சேர்தலே வீடுபேறாகும். 
“பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்”              - (திருக்குறள்: 1: 10)
இதில் எங்கே அவர் கடவுளை வாழ்த்தியுள்ளார்?

நிலையாமை அதிகாரத்தில் 
“நில்லாதவற்றை நிலையின என்றுஉணரும்
புல்லறிவு ஆண்மை கடை”               - (திருக்குறள்: 34: 1)
என்கிறார்.

துறவு அதிகாரத்தில்
“யான்எனது என்னுஞ்செருக்கு அறுப்பான் வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும்”                    - (திருக்குறள்: 35: 6)
என வானவரும் அடையமுடியாத முத்தியை அதாவது வீடுபேற்றை உயர்ந்த உலகமாக படம்பிடித்துக் காட்டுகிறார். 

கடைசியில் நிலையாமையைப் போக்கும் வழியை
“பற்றுக பற்றற்றான் பற்றினை”         - (திருக்குறள்: 35: 10)
எனத் தெளிவுபடுத்துகிறார். 

அடுத்து, நிலையான பொருளான இறைவனின் உண்மையை அறிவதை ‘மெய்யுணர்தல்’ என்ற அதிகாரத்தில் சொல்கிறார். இந்த அதிகாரமே இறைவனை உணர்வதைப் பற்றியே சொல்கிறது. அதில் மெய்ப்பொருளை உணராத மயக்கத்தாலேயே பிறப்பு ஏற்படுகிறது என்றும், ஐயத்தின் நீங்கித் தெளிந்தவர்க்கு இந்த உலகத்தை விட வீடு பேற்றைதரும் முத்தி மிக அருகில் இருக்கும் என்றும், அது இன்பத்தைக் கொடுக்கும் என்றும் பலவாறு கூறுகிறார்.

“பிறப்புஎன்னும் என்னும் பேதமை நீங்கச் சிறப்புஎன்னும்
செம்பொருள் காண்பது அறிவு”         - (திருக்குறள்: 36: 8)
வீடுபேற்றை அடைய இதைவிடச் சிறந்த வழியை மிகச்சுருக்கமாக எவரால் சொல்ல முடியும்? திருவள்ளுவன் சொன்ன அந்தச் செம்பொருளையே நாம் செந்நிறத்து அம்மானாக சிவனாகக் காண்கிறோம். 

அவாஅறுத்தல் என்ற அதிகாரத்தில் ஆசையே நாம் பிறப்பதற்குக் காரணம் என்பதையும் ஆசையை நீக்கிய கணமே முத்தி கிடைக்கும் என்பதையும் மிக அழகாகச் சொல்கிறார்.
“அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்
தவாஅப் பிறப்பீனும் வித்து”                  - (திருக்குறள்: 37: 1)
எனத் தொடங்கி
“ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே
பேரா இயற்கை தரும்”                       - (திருக்குறள்: 37: 10)
என வீடுபேற்றை 'பேராஇயற்கை' எனும் பெரும் பெயரால் புகழ்ந்துள்ளார்.

வீடுபேறு அடைதலுக்கு இன்னுமொரு அழகிய சொல்லாக ‘வாராநெறி' என்ற சொல்லைத் திருவள்ளுவர் தந்துள்ளார். 
“கற்றுஈண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி”                         - (திருக்குறள்: 36: 6)
மீண்டும் பிறவி வராத வழியே, வாரா நெறி. அதுவே தமிழர் கண்ட பெருநெறி. அதனை மணிவாசகர் தமது திருவெம்பாவையில்
“வாரா வழியருளி வந்தென் உளம் புகுந்து”
எனச் சொல்லுவார்.

இப்படி கடவுள் வாழ்த்து, நிலையாமை, துறவு, மெய்யுணர்தல், அவாஅறுத்தல் போன்ற அதிகாரங்கள் வீடு அடைதலைப் பற்றியே எடுத்துச் சொல்கின்றன. எனவே பண்டைத் தமிழரின் முதுநூல் ஆகிய நான்மறை சொன்ன அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கு பொருளையும் திருக்குறளும் சொல்கின்றது. இன்றைய தமிழர் கையில் இருக்கும் நான்மறை திருக்குறளே! 
இனிதே,
தமிழரசி.