Saturday 5 March 2022

சமய நெறிகள் பலவாயினும் அறம் ஒன்றே

 

இயற்கையின் சீற்றத்திற்கு பயந்து வாழ்ந்த மனிதன் தன்னைவிட ஆற்றலுள்ள இயற்கையை வழிபடத் தொடங்கினான். தன் வாழ்க்கையில் இன்பமும் துன்பமும் வண்டிச்சக்கரம் போல் சுழன்று சுழன்று மாறி மாறி மீண்டும் மீண்டும் வருவதைக் கண்டான். இவற்றை மனிதனுக்கு செல்வமும் வறுமையும், வெற்றியும் தோல்வியும், நட்பும் பகையும் கொடுத்தன. அதனால் தான்படும்  துன்பம் மற்றவர் அடையக்கூடாது எனக்கருதி இல்லாதோருக்கு கொடுத்து வாழத்தொடங்கினான். அது களவு, கொள்ளை, போட்டி, பொறாமை எனப்பல வடிவங்களில் அவனை வாட்டி வதைத்தது. அவற்றைக் கண்டு சிந்தித்த மனிதர் பலராவர். அவற்றுக்கு பேராசையும் ஒரு காரணம் என்பதை உணர்ந்தனர். அவர்களால் பிறந்ததே பலவித சமயக் கொள்கைகள்.

எல்லாவித சமயக் கொள்கைகளின் நோக்கமும் இறைவனை அடைதலே ஆகும். சமயக்கொள்கைகள் சமயநெறிகளை - மதங்களை உருவாக்கின. எல்லா சமயநெறிகளும் பெரும்பாலும் உலக உயிர் நேயத்தைப் பேணுகின்றன. சைவம், சாக்தம், வைஷ்ணவம், பௌத்தம், இஸ்லாம், இந்துமதம், கிறிஸ்த்தவம் யாவுமே அறத்தைப் போற்றுகின்றன. உலக உயிர்களைக் காத்து அவற்றை இன்பமாக வாழவைக்கஅறம் செய்எனத் தூண்டுகின்றன. அறம் செய்வது கொடுப்போருக்கும் பெறுவோருக்கும் பேராசையைக் குறைத்தது.

அறம்  பலவழிகளில் செய்யப்பட்டாலும் அறம் என்பது ஒன்றே. சமய நெறிகள் பலவாயினும் அவையாவும் ஒரு அறத்தையே கூறுகின்றன. எப்படி அறம் ஒன்று என்பதை அறிவது?

ஆவேறு உருவின ஆயினும் ஆபயந்த

பால்வேறு உருவின அல்லாவாம் - பால்போல்

ஒருதன்மைத்து ஆகுமறம் நெறி ஆபோல்

உருவு பலகொளல் ஈங்கு - (நாலடியார் - 180)

பசுவை என்பர். பசுக்கள் வெள்ளை, கறுப்பு, சிவப்பு, கட்டை, உயரம். சீமைப்பசு, நாட்டுப்பசு எனப் பல உருத்தில் இருந்தாலும் பசு தரும் பால் (பயந்த பால்) வேறு வேறு வடிவத்தில் இருப்பதில்லை (அல்லாவாம்). பாலைப் போல ஒரு தன்மை உடையது அறமாகும். ஆனால் இங்கே சமயநெறிகள் பசுக்களைப் போல பல வடிவங்களில் இருக்கின்றன, என்கின்றது நாலடியார்.

அறங்கள் முப்பத்திரண்டு எனச்சொல்லப்பட்டாலும் அவை உலக உயிர் நேயத்தை ஊட்டும் தன்மையால் ஒன்றாகின்றன. எத்தனை எத்தனை பாத்திர வடிவங்களில் அள்ளி அள்ளி பாலைச் சொரிந்தாலும் பால் ஒன்றே. பாலைப் போல அள்ளி அள்ளிக் கொடுக்கும் அறமும் ஒன்றே. ஆதலால் சமயநெறிகள் பலவாயினும் அறம் ஒன்றே! இன்றே செய்க! நன்றே செய்க!!

இனிதே,

தமிழரசி.

பக்க்திச்சிமிழ்-6

No comments:

Post a Comment