Saturday 19 March 2022

எந்தமிழர் தாயானாள்

திருமணக்கோலத்தில் காரைக்கால் அம்மையார்

முத்தமிழின் தாயாகி

  மூதறியஞர் தொழநின்றாள்

பத்திமையும் பழவினையும்

  பாங்குடனே சொல்லிச்சென்றாள்

சித்தமிசை குடியிருந்த

  சிவனவனின் தாயாகி

எத்திசையும் புகழ்பரப்பி

  எந்தமிழர் தாயானாள்


இன்று காரைக்கால் அம்மையார் குருபூசை ஆதலால் இப்பாடலை எழுதினேன். ‘முத்தமிழின் தாயவள்என்னும் ஓர் ஆய்வுக்கட்டுரையை முன்பு எழுதியுள்ளேன். இப்பாடலின் விளக்கத்தை காரைக்கால் அம்மையாரின் பாடல்களுடன் கீழே தருகிறேன்.


பக்தி இலக்கியத்தில் முத்தமிழின் சாற்றை  தன் பாடல்களில் முதன்முதல் வடித்துத் தந்திருப்பவர் காரைக்கால் அம்மையாரே. காரைக்கால் அம்மையார் பிறந்த காரைக்கால் மண்ணை மிதிக்கவும் திருஞானசம்பந்தர் பயப்பட்டார் என்று பெரியபுராணம் கூறுகிறது. சுந்தரமூர்த்தி நாயனார், சேக்கிழார் போன்ற மூதறிஞர் பலரும் அம்மையாரைப் புகழ்ந்து பாடியுள்ளனர். 


காரைக்கால் அம்மையார் தாம்பாடிய திருஇரட்டை மணிமாலையில் பக்திசெய்வது எப்படி என்பதை 

ஈசன் அவன் அல்லாது இல்லை யெனநினைந்து

கூசி மனத்தகத்துக் கொண்டிருந்து - பேசி

மறவாது வாழ்வாரை மண்ணுலத்து என்றும்

பிறவாமை காக்கும் பிரான்

- (திருஇரட்டைமணிமாலை: 2)

என மிக்கதெளிவாகக் கூறிச் சென்றுள்ளார். கடவுளை மனதில் வைத்து எமக்கு வேண்டிய யாவற்றையும் கடவுளுடன்  பேசமுடியும் என முதலில் தொட்டுக் காட்டியவரும் காரைக்கால் அம்மையாரே. பழவினையை அகற்ற அம்மையார்

தொல்லை வினைவந்து சூழாமுன் தாழாமே

ஒல்லை வணங்கி உமையென்னும் - மெல்லியல்ஓர்

கூற்றானை கூற்றுருவங் காய்ந்தானை வாய்ந்திலங்கு

நீற்றானை நெஞ்சே நினை 

- ( திருஇரட்டைமணிமாலை: 12)

தன் நெஞ்சிற்குக் கூறியதை  இப்பாடல் சொல்கிறது.

சிவமெருமானால் 'அம்மையே' என அழைக்கப் பெற்ற பெருமை மிக்கவர் என்கிறார்சேக்கிழார். காரைக்கால் அம்மையார் தன் சிந்தையில் சிவம் இருப்பதை

காண்பார்க்குங் காணலாந் தன்மையனே கைதொழுது

காண்பார்க்குங் காணலாம் காதலால் - காண்பார்க்குச்

சோதியாய்ச்  சிந்தையுளே தோன்றுமே தொல்லுலகுக்கு

ஆதியாய் நின்ற அரன்

- (அற்புதத்திருவந்தாதி: 17)

எனப்பாங்குடன் பாடிவைத்துள்ளார்.

முத்தமிழை நன்கு அறிந்த தாயாக மிக நுட்பமான அறிவு உடையோர்களாகிய திருஞானசம்பந்தர், சுந்தரர், சேக்கிழார் போன்றோர்[மூதறிஞர்] வணங்க நின்றவளும்  எப்படி பக்தி செய்யவேண்டும்[பத்திமையும்] என்பதையும் நாம் முற்பிறவியில் செய்தவினை[பழவினையும்] பற்றியும் அழகாகக்[பாங்குடனே] கூறிச்சென்றவளும். தனது சித்தத்தில்[சித்தமிசை] குடியிருந்த சிவனிற்குத் தாயாகி[சிவனவனின் தாயாகி] எல்லாத் திசைகளிலும் தன்புகழைப் பரப்பி [இலங்கையிலும், கம்போடியாவிலும், மெக்சிக்கோவிலும்] தமிழர்களின் தாயாக விளங்குபவளும் காரைக்கால் அம்மையாரே ஆவார். 

இனிதே,

தமிழரசி.

No comments:

Post a Comment