Sunday 20 January 2019

மனதினில் இருத்தி வைப்போம்!

புங்கைப்பதி வாழ் மக்களாய் நம் 
          புன்னமை யெலாம் போட் டெரிப்போம்
மங்கலங்கள் நிறைந்து வாழ்வதற்கு நல்
          மானுடப் பிறவி எடுத்து வந்தோம்
பங்கங்கள் அள்ளிச் சொரிந்திடி னவை
          பாங்குடன் வந்தே யெமைச் சேரும்
எங்களுயிர் மூச்சே மரஞ்செடி கொடி
          என்பதை மனதினி லிருத்தி வைப்போம்.

நன்றே செய்யினும் இன்றே செய்க
          நானிலம் எங்கனும் எம் ஊரே
அன்றே சொன்ன மெய்யுரை எனினும்
          அகமது நாடும் நம் ஊரை
கன்றே பசுவை அழைத்திடல் போல்
          கனிந்தே காணும் நற்கனவில் மன
மன்றினி லாடும் புங்குடுதீவி னுயர்
          மாண்பே எம்முயிர்க் காற்றதுவாய்!
இனிதே,
தமிழரசி.

குறிப்பு:
நேற்றைய முகநூல் செய்தி தந்த தாக்கத்தால் பிறந்த கவிதை. நான் கடந்த 40 வருடங்களாக வெளிநாட்டில் வாழ்ந்த போதும் எந்நாளும் என் மனமேடையில் அலைமோதுவது நம் நாடே. என் முன்னோரே புங்குடுதீவில் பிறந்தார்கள். நான் பிறக்கவும் இல்லை வளரவும் இல்லை. ஆனால் என் கால்கள் புங்குடுதீவைச் சுற்றி பலமுறை 'அடி' அளந்திருக்கின்றன. ஒவ்வொரு இடமாகக் கீறிக்காட்டி புங்குடுதீவின் வரலாற்றை என்னால் சொல்ல முடியும். உலக உயிர் நேயத்தையும் புங்குடுதீவு என்னும் எம்முயிர்க்காற்றையும் என்னுள் சுவாசிக்க வைத்த என் முன்னோர்க்கு இக்கவிதையை புங்குடுதீவாளாகப் படைக்கிறேன். புங்குடுதீவிலேயே பிறந்து வாழ்வோர் நம்மூரின் வளர்ச்சிக்குத் தடை செய்வது நன்றல்ல.

No comments:

Post a Comment