Wednesday, 4 January 2017

புங்கை மக்கள் புலம் பெயர...

பனை மரங்கள் நிற்ப தென்னே!

கார் மேகம் குடை பிடிக்க
      கழனி யெங்கும் மழை துமிக்க 
நீர் நிறைந்து வயல் செழிக்க
      நில மெங்கும் வளம் கொழிக்க
சீர் கண்ட உயிர் அனைத்தும்
      சேர்ந் திருந்து உடன் வாழ
பார் எனப் பெயர் சூட்டி
      பார்த் திருந்த மனிதன் எங்கே!

ஆறு குளம் வறண்ட தேனோ
      ஆற்று மணல் போன தெங்கோ
சேறு சகதி எமக்கு ஏனோ
      செழித்து வளருங் காடு தானே
மாறு கொண்டு மரத்தை வெட்டி
      மனிதர் நிற்க நிழலும் இன்றி
பேறு என்றே பொருளைப் போற்றி
      பேணிக் காக்கும் மடமை இங்கே!

போர் என்னும் மகுடி கேட்டு
      புங்கை மக்கள் புலம் பெயர
ஊர் எங்கும் பசுமை போச்சு
      உறவைக் கூட மறந்தே போச்சு
நீர் அற்ற நிலமே ஆச்சு
      நிலம் வறண்டு பாறை ஆச்சு
பார் என்று பசுமை போர்த்தி
      பனை மரங்கள் நிற்ப தென்னே!

                                                                                   - சிட்டு எழுதும் சீட்டு 131

இனிதே,
தமிழரசி.

Sunday, 1 January 2017

புங்குடுதீவின் கள்ளிக்காட்டின் பெருமை


அகிலம் தமிழனின் சொத்து. அதலேயே தமிழன் அகிலமெங்கும் பரந்து வாழ்கின்றான் என்றும் சொல்லலாம். உலகை அகிலம் என்ற சொல்லால் அழைத்தவன் தமிழன். அகிலம் என்ற சொல்லை எப்படி தமிழன் உருவாக்கினான்? அச்சொல் உருவாக எது காரணம்? அகிலம் என்ற சொல்லை தமிழுக்குக் கொடுத்த பெருமை கள்ளிக்காடுகளுக்கே உரியதாகும். அதனால் புங்குடுதீவின் கள்ளிக்காடும் அந்தப் பெருமையைப் பெற்றுக்கொள்கிறது. எப்படி கள்ளிக்காடுகளுக்கு அப்பெருமை கிடைக்கும் என நினைக்கிறீர்களா! 

ஏனெனில் இந்தப்பூமியில் இருக்கும் கற்பாறைகளைக் கனியவைத்து மண்ணாக மாற்றித் தருவதில் கள்ளி இனத்துக்கும் ஒருசிறிய பங்கு இருக்கிறது. இப்பூமி தோன்றி கிட்டத்தட்ட 4.5 பில்லியன் வருடங்கள் என்றும் மண் பிறந்து [Pedogenesis] 410 மில்லியன் வருடங்கள் எனவும் கூறும் இன்றைய விஞ்ஞானிகள், வேர்விடும் தாவரங்கள் தோன்றி 375 மில்லியன் வருடங்கள் என்கின்றனர். விஞ்ஞானிகள் தமக்குக் கிடைத்த ஆதாரங்களைக் கொண்டே இவற்றைச் சொல்கின்றனர். அவர்களுக்குக் கிடைத்த ஆதாரங்களின் படி கள்ளி இனம் தோன்றி ஏறக்குறைய 35 மில்லியன் வருடங்கள். ஆனால் மனித இனம் தோன்றி 1.8 மில்லியன் வருடங்களே.

“கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு
முன்தோன்றி மூத்த குடி”                                         
                                                  - (பு. வெ. மாலை: 35: 3- 4)
இவ்வுலகில் மலை உண்டாகி [கல்தோன்றி] மண் உண்டாக முன், அதாவது உலகின் பெரும்பகுதி குறிஞ்சிநிலமாக இருந்தகாலத்தில் முதலில் தோன்றிய மூத்தகுடி நம் தமிழ்க்குடி எனப்பெருமை பேசுகிறது புறப்பொருள் வெண்பாமாலை. 

உலகம் தோன்றிய காலத்தில் உலகின் பெரும்பகுதி கற்காடாக இருந்தது.  மலை மண்ணாக மாறமுன், பாறைக்கற்களாய் கற்காடுகளாய் இருந்த இடங்களை ‘கடறு’, ‘கடம்’ என்ற பெயர்களால் நம் முன்னோர் அழைத்தனர். அதனைச் சீத்தலைச் சாத்தனாரும்
“வள் எயிற்றுச் செந்நாய் வருந்து பசிப் பிணவொடு
கள்ளி அம் காட்ட கடத்திடை”                                     
                                                 - [அகநானூறு: 53]
என அகநானூற்றில் கூறுவதால் அறியலாம். இதிலே ‘கள்ளிஅம் காட்ட கடத்திடை’ எனக் கடறு இடையே [கடத்திடை] அழகிய கள்ளிக்காடு இருந்ததைக் கூறியுள்ளார்.

கடறுக் காடு     [Photo: source - nationalgeographic.com] 

கல்லால் ஆன இந்த உலகத்தின் கடறை அரையில் கட்டிய மிகப்பழைய ஓர் ஊரை
“கல் பிறங்கு வைப்பின் கடறு அரை யாத்த
தொல்புகழ் மூதூர்”
                                                 - [ப.பத்து: 6: 53: 4 - 5]
எனப்பதிற்றுப்பத்து காட்டுகிறது. அந்தக் கடறுகளையே கள்ளிகள் தமது வேர்களால் நல்ல மண்ணாக மெல்ல மாற்றின. இன்றும் கல்லை மண்ணாக்கிக் கொண்டு கடறு இடையே இருக்கும் கள்ளிச் செடியை கீழே உள்ள படத்தில் பாருங்கள். கள்ளிவேர்களின் ஆற்றலே கல்லை மண்ணாக மாற்றுகிறது. 

மரவேர்கள் கல்லை, பாறைகளை கனியவைத்து உடைக்கும் என்தை நம் தமிழ் முன்னோர் அறிந்திருந்தனர். அதை
“வெட்டனவை மெத்தனவை வெல்லாவாம் வேழத்தில் 
பட்டுருவும் கோல்பஞ்சில் பாயாது - நெட்டிரும்பு
பாரைக்கு நெக்குவிடாப் பாறை பசுமரத்தின்
வேருக்கு நெக்கு விடும்”                                    
                                         - [நல்வழி: 33]
“வெட்டக்கூடியவை மென்மையானவற்றை வெற்றிகொள்ள முடியாது. யானையின் உடலை ஊடுருவிக் கொல்லும் வேல், பஞ்சை ஊடுருவிச் செல்லாது. இரும்பால் செய்த கடப்பாரைக்கு இளகாத கற்பாறை, பச்சை மரங்களின் வேருக்கு இளகும்” என்று ஔவையார் கூறியுள்ளார். ஔவையாரின் இக்கூற்றை, ‘பாறைகளை கள்ளிவேர்கள் நெகிழ்விக்கும்’ என்ற Dr Yoav Bashan அவர்களின் இன்றைய கண்டுபிடிப்பு உண்மையாக்கியுள்ளது. 

[Photo:  Dr Yoav Bashan] 

கள்ளி இனங்களை ஆய்வு செய்த தாவரவியல் விஞ்ஞானியான Dr Yoav Bashan “அனேகமான தனிப்பட்ட கள்ளி இனங்கள் மண்ணற்ற பாறைகளில் மட்டுமல்ல செங்குத்தான பாறைகளிலும் வளர்வதை அவதானித்தோம். கள்ளி இனங்களின் விதைகளில் இருக்கும் பற்றீரியாவே பாறைகளை நெகிழவைத்து வேர்கள் செல்ல வழிவகுக்கிறது. வேர்கள் பாறையைத் துளைத்துச் செல்ல பாறை வெடித்துச் சிதறுகிறது. கள்ளிகளும் பாறையில் இருந்து மண் உருவாக உதவுகின்றன” எனக் கூறுகிறார், [BBC Earth News - 2009]. எனவே கள்ளி இனங்கள்  கற்பாறைகளை மண் ஆக மாற்றும் வேலையை 35 மில்லியன் வருடங்களாகச் செய்து வருகின்றன.

இன்றைய உலகில் கள்ளி இனங்களின் பிறப்பிடம் தென் அமெரிக்கா என்று கூறப்பட்டாலும் பண்டைய உலகில் கிழக்காபிரிக்கா, மடகஸ்கார், இலங்கை இந்தியா போன்ற இடங்களிலும் பல நூற்றுக்கணக்கான கள்ளி இனங்கள் இருந்தன. இன்றும் இருக்கின்றன. ஆனால் அவை பற்றிய ஆய்வுகள் எதுவும் முழுமையாக நடத்தப்படவில்லை என்பதே உண்மை. இவ்விடங்களிலும் ஆய்வுகள் நடத்தப்பட்டால் கள்ளி இனங்களின் வயதை மேலும் அவை கூட்டக்கூடும்.

சங்கச் சான்றோர்கள் தம் பாடல்களில் கள்ளிகள் பற்றிய பல அரிய செய்திகளைக் கூறியிருக்கிறார்கள். நாம் ஆலமரநிழலில் இருக்கும் பிள்ளையாரை வணங்குவது போல சங்ககாலத்தில் வாழ்ந்த தமிழர் கள்ளிச்செடி நிழலில் இருந்த கடவுளை வணங்கியதை
“கள்ளி நீழற் கடவுள் வாழ்த்தி”  
                                              - [புறநானூறு: 260: 6]
எனப் புறநானூறு காட்டுகிறது. எனவே கடவுளை வைத்து வணங்கக் கூடிய அளவிற்கு கள்ளிச் செடி உயர்ந்து வளர்ந்து நிழல் தரும் மரமாய் இருந்ததை நாம் அறியலாம். ஆயிரத்து ஐஞ்ஞூறு வருடப் பழமைவாய்ந்த தேவாரப் பாடல் பெற்ற தலமான திருக்கள்ளில் கோயில் தலவிருட்சம் கள்ளிமரமே. நம் தமிழ் முன்னோர் கள்ளிமரத்தின் கீழே கடவுளை வைத்து வணங்கியதற்கு இன்றும் எடுத்துக்காட்டாகத் திருக்கள்ளில் கோயில் விளங்குகிறது.

இப்போ நாம் வளர்க்கும் கற்றாழையில் கூட எத்தனையோ வகைகள் இருந்தன. அவை வருடங்கள் செல்லச் செல்ல மரம் போல வளரும். நாமோ அவற்றை அதிக வருடங்களுக்கு வளர விடுவதில்லை. பத்து வருடங்களுக்கு 1.5 அங்குலம் வளருகின்ற கள்ளி இனம், 25 வருடத்தில் 8 அடி உயரத்தை அடைந்து 50 வருடத்தில் 30 - 40 அடி உயரத்தைக் கூட அடையும். புல் இனத்தைச் சேர்ந்த தென்னை, பனை போன்றவை உயர்ந்து வளர்வதால் நாம் அவற்றை மரம் என அழைப்பது போல கள்ளிச் செடியையும் கள்ளிமரம் என்கிறோம்.

கள்ளியில் குடியிருக்கும் ஜோடிப்புறா

சங்ககாலப் பெண்பாற்புலவரான வெண்பூதியார் ‘மழை அற்றுப்போன வறண்ட நிலம். அங்கே கிளைவிட்ட முட்களையுடைய கள்ளிக் காய் பெரிய ஒலியோடு வெடித்துச் சிதறுகிறது. அந்த ஒலியைக் கேட்டு அக்கள்ளிச் செடியில் குடியிருந்த ஜோடிப் புறா பறந்து போகும்’ என்கின்றார்.
“பெயன்மழை துறந்த புலம்புறு கடத்துக்
கவைமுட் கள்ளிக் காய்விடு கடுநொடி
துதைமென் தூவித் துணைப்புற விரிக்கும்…”     
                                                     - [குறுந்தொகை: 174: 1 - 3]
வறண்ட நிலங்களில் மட்டுமல்ல காடும் காடு சார்ந்த முல்லை நிலத்திலும் [புறவு] குறுகிய கிளைகளும் [குண்டைக் கோடு] குறுகிய முட்களுமுள்ள கள்ளி வகைகள் வளரும் என்பதை
“வெண்பிடவு அவிழ்ந்த வீகமழ் புறவில்
குண்டைக் கோட்ட குறுமுள் கள்ளி” 
                                                     - [அகநானூறு: 184: 7 - 8]
என மதுரை மருதன் இளநாகனார் சுட்டிக் காட்டியுள்ளார். 

மரங்கொத்திப் பறவையும் அதன் தலை போன்ற கள்ளியும்

‘பாறைக்கற்கள் [பரற்கற்கள்] நிறைந்த நிலத்தில் மரங்கொத்திப் பறவையின் [சிரல்] தலை போல இருக்கும் கள்ளிச் செடிகளின் மேலே மிக்க நறுமணமுள்ள முல்லைமலர்க் கொடிகள் படர்ந்திருக்கும்’ என்கிறது நற்றிணை.
“பரற்றலை போகிய சிரற்றலைக் கள்ளி
மீமிசைக் கலித்த வீநறு முல்லை” 
                                                   - [நற்றிணை: 169: 4 - 5]

தொலைக்காட்சியின் Discovery Channelல் புலி  மானைப் பிடித்துத் தின்று மிஞ்சிய இறைச்சியை விட்டுச்செல்வதப் பார்த்திருப்பீர்கள். ஆனால் கள்ளிக் காட்டில் புலி வேட்டை ஆடுவதைப் பார்த்திருக்க மாட்டீர்கள். ஏனெனில் மனிதர்களாகிய நாம் காலங்காலமாக இருந்த கள்ளிக் காட்டையே அழித்துவிட்டோமே! எப்படி அங்கே புலி, மானை வேட்டையாடுவதைப் பார்ப்பது? ஆனால் கள்ளிக்காட்டில் புள்ளிமானைத் துரத்திச் சென்று, மானின் கொம்பு உதிர்ந்து விழ வேட்டையாடித் தின்ற மிச்ச இறைச்சியை விட்டுச் சென்ற [துறந்த], புலியைப் பார்த்த மாமூலனார் [2250 வருடங்களுக்கு முன்] அதனை எமக்காக எழுதிவைத்துள்ளார்.
“கள்ளிஅம் காட்ட புள்ளிஅம் பொறிக்கலை
வறன்உறல் அம்கோடு உதிர, வலம்கடந்து
புலவுப்புலி துறந்த கலவுக்கழிக் கடுமுடை”
                                                 - [அகநானூறு: 97]

இலங்கையும் ஒரு காலத்தில் கடறாக இருந்தது. இலங்கையின் கடற்கரை ஓரமாக நடந்து பார்த்தால் பண்டைய கடறுகளின் எச்சங்கள் தேய்வடைந்த நிலையில் மணலுள் புதையுண்டு இருப்பதை இன்றும் பார்க்கலாம். திரிகோணமலை, காலி கடற்கரை ஓரம்மெங்கும் கடறுத் தேய்மானங்களை அதிகம் காணலாம். உலகிற்கு அகிலம் என்ற பெயரை சூட்டக் காரணமாய் இருந்தவை கடறுக்காட்டுக் கள்ளிகளே. கள்ளிச்செடிகள்  முள் நிறைந்தவை. முள் என்பதை அக்கு என்றும் சொல்வர். வன்னி மக்கள் மரமுட்களால் ஆன வேலியை அக்கு வேலி என்பர். அக்கு + இல் =  அக்கில் ஆகி அகில் ஆயிற்று.

கள்ளியிலிருந்து அகில் பிறப்பதை
“கள்ளி வயிற்றில் அகில் பிறக்கும் மான்வயிற்றில்
ஒள்அரிதாரம் பிறக்கும் பெருங்கடல் - உள்
பல்விலைய முத்தம் பிறக்கும் அறிவார்யார்
நல்ஆள் பிறக்கும் குடி” 
                                                - [நான்மணிக்கடிகை: 6]
என விளம்பி நாகனார் கூறியிருப்பதால் அறியலாம். 

 கள்ளிமரத்தின் வெளிப்பகுதி உக்கிப்போக பேயைப் பிளந்தது போல்அகில்பிளவு தெரிகிறது

கள்ளி மரத்தின் நடுவே எப்படி அகில் கட்டை உண்டாகும் என்பதைக் கம்பரும்
“பேய் பிளந்து ஒக்க நின்று உலர் பெருங் கள்ளியின்
தாய் பிளந்து உக்க கார் அகில்களும்”
                                                 - [கம்பராமாயணம்: 1: 7: 8: 1-2]
பேயின் உடலை பிளந்தது போல நிற்கும், உலர்ந்து போன பெரிய கள்ளியின் முதிர்ந்த மரம், பல பிளவுகளாகப் பிளவுபட, தாய் மரத்தின் வெளிப்பக்கம் உக்கி விழும், அப்படி விழும்பொழுது உள்ளே இருந்து கரிய அகில் கட்டைகள் கிடைக்கும் என விரிவாக இராமாயணத்தின் பாலகாண்டத்தில் கூறுகிறார். இன்றும் கம்பர் கூறியது போல நிற்கும் கள்ளிமரத்தையும் அதன் நடுவேயிருக்கும் அகில் பிளவுகளையும்  மேலேயுள்ள படத்தில் பாருங்கள்.

கற்காடாக - கடறுகளாக இவ்உலகம் இருந்த போது கள்ளிக்காடுகள் யாவும்  அகில் மணத்தது. அகில் நிறைந்த உலகைத் தமிழர் ‘அகிலம்’ என அழைத்தனர். [அகில் + அம் = அகிலம்]. கள்ளி வயிற்றில் பிறந்த அகிலே, அகிலம் என்ற பெயரை உலகிற்குக் அளித்ததால் கள்ளிக்காடுகள் பெருமை பெற்றன. அகிலம் என்பது சமஸ்கிருதச் சொல் எனச் சிலர் சொல்கிறார்கள். அது பிழையான கருத்து. சமஸ்கிருதத்தில் அகரு என்பர்.

“நிரைகழல் அரவம்” என்ற தேவாரத்தில் திருக்கோணேச்சரக் கடற்கரையில் 
கரைகெழு சந்தும் காரகிற் பிளவும்”
                                              - [ப.திருமுறை: 3: 123: 1: 5]

வந்து மோதுகின்றன என திருஞானசம்பந்தர் குறிப்பிடுகிறார் அல்லவா! அந்தக் ‘கார் அகில் பிளவை’ கள்ளிச் செடிகளே தந்தன. இன்றும் திரிகோணமலையின்  China Bay, Marble Point, Malay cove, திருக்கைக் குடா போன்ற பகுதிகளில் கள்ளிமரங்களைக் காணலாம். நானும் திரிகோணமலை நிலாவெளிக் கடற்கரை மணலில் ‘அகிலம்’ என எழுதி மகிழ்ந்தேன்[முதற்படம்]. 

புங்குடுதீவின் கள்ளிக்காட்டின் பெருமை இன்று எப்படி இருக்கிறது? அகிலின் பெருமையை உலகம் மறந்தது ஏன்? தெரியுமா? கதறும் கள்ளியின் நிலை காண்போம்.... 
இனிதே,
தமிழரசி.

Saturday, 31 December 2016

குறள் அமுது - (127)


குறள்:
“வலிஇல் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று”                   - 273

பொருள்:
மனதை அடக்கும் வலிமையில்லாக் குணமுடையவனின் தவக்கோலம், பசு புலியின் தோலைப் போர்த்துக்கொண்டு வயலை மேய்ந்தது போலாகும்.

விளக்கம்:
இத்திருக்குறள் கூடாஒழுக்கம் என்னும் அதிகாரத்தின் மூன்றாவது குறளாகும். திருவள்ளுவர் கூடாஒழுக்கம் எனும் இந்த அதிகாரத்தில் தவம் செய்பவர்களுக்குப் பொருந்தாத ஒழுக்கம் பற்றியே கூறுகிறார். இரண்டாயிர வருடங்களுக்கு முன்னரே திருவள்ளுவர் இக்குகுறளில் தவவேடதாரிகளை, கள்ளச் சுவாமிமார்களை எமக்குக் காட்டித் தருவதற்காக  பசு, புலியின் தோலைப் போர்த்து பயிர் மேய்ந்த கதையைக் கூறியுள்ளார். அப்படி வெளிச்சம் போட்டுக் காட்டியும் இன்னும் நாம் திருந்தவில்லையே. அது ஏன்?

தவம் செய்வோர் எவராக இருந்தாலும் அவர்களுக்குத் தமது மனதை அடக்கி ஆளும் வலிமை இருக்கவேண்டும். அப்படி தனது மனதை அடக்கி ஆளும் தன்மை அற்றவனையே ‘வலிஇல் நிலைமையான்’ என்று வள்ளுவர் அழைக்கிறார். நோயுற்ற ஒருவரைப்பற்றி விசாரிக்கும் பொழுது அவரின் நோயின் தன்மை, உடல்நிலை எப்படி இருக்கிறது, என்பதை அறிய ‘நிலைமை எப்படி இருக்கிறது?’ என்று கேட்பது எமது வழக்கமல்லவா! இக்குறளிலும் ‘நிலைமை’ தவம் செய்வோரின் தன்மையை, குணத்தைச்சுட்டி நிற்கிறது. 

உண்மையாகத் தவத்தை மேற்கொள்வோர் விருப்பு வெறுப்பு அற்றவராய் உலகப் பற்றுக்களை நீக்கி கருணை நிறைந்த நெஞ்சத்துடன் இருப்பர். தமக்குவரும் துன்பங்களைப் பொறுத்துக் கொண்டு, பிற உயிர்களுக்குத் துன்பம் செய்யாமல் இருப்பதே தவத்தின் உருவம்[தவத்திற்கு உரு] என்று திருவள்ளுவரே ‘தவம்’ என்னும் அதிகாரத்தில் சொல்கிறார். இத்தகைய குணங்கொண்ட தவவடிவை ‘வல்லுருவம்’ என இக்குறளில் குறிப்பிடுகிறார். தவத்தோருக்கு இருக்க வேண்டிய இந்த வலிய குணங்கள் இல்லாது தவவேடமிட்டுப் போலியாக வாழும் தவவேட தாரிகளை திருவள்ளுவர் ‘வலிஇல் நிலைமையான்’ எனச் சாடுகிறார். 

பசுவைப் ‘பெற்றம்’ என்றும் சொல்வர். பிறரது வயலிலுள்ள பயிரை மேய்வதற்கு தம் பசுவை விடுவோர் புலித்தோலைப் போர்த்தி அனுப்புவர். பசு புலித்தோல் போர்த்தி நிற்பதை அறியாத வயலின் சொந்தக்காரர் புலி பயிரை மேயாது என நினைப்பர். அத்துடன் புலி தம்மைக் கொன்றுவிடும் என்ற பயத்திலும் இருப்பர். தவவடிவத்தில் இருப்போரை நம்பி பெண்களை அனுப்புவோரும் சுவாமியார் தானே பெண்களை ஏறெடுத்துப் பார்க்க மாட்டார் என நினைத்தும் அவர் சாபம் இட்டுவிடுவார் என்ற பயத்திலும் இருக்கின்றனர்.

பசு புலியின் தோலை போர்த்துக் கொண்டு பயிரை மேய்வது போல மன அடக்கமற்ற போலிச் சுவாமிமார் மேலான தவவடிவத்தில் புகுந்திருந்து பிறரது பெண்களை இன்ப நுகர்ச்சிக்காகத் துன்புறுத்துவர்.

Tuesday, 27 December 2016

சொக்கலிங்கம் இருக்கார்


சோழநாட்டில் ஆலந்துறை என்ற ஊரில் முதுசூரியர், இளஞ்சூரியர் என்ற இருவர் வாழ்ந்தனர். அண்ணனின் மகன் முதுசூரியர். தங்கையின் மகன் இளஞ்சூரியர். அதாவது அம்மான் மகனும் அத்தை மகனும் ஆவர். முதுசூரியர் காலில்லாத முடவர். இளஞ்சூரியர் கண்ணில்லாத குருடர். காலில்லா முடவரான முதுசூரியரை இளஞ்சூரியர் தன் தோளில் சுமந்து கொள்வார். இளஞ்சூரியருக்குக் கண்ணில்லாத காரணத்தால் முதுசூரியர் வழிகாட்ட இருவரும் ஒருவராய் எல்லா இடங்களுக்கும் சென்றுவருவர். பாலகராய் பள்ளி சென்ற காலத்தில் இருந்து ஒருவர் போலவே வாழ்ந்தனர். அதனால் இருவரும் இரட்டையர் என அழைக்கப்பட்டனர்.

கல்விகற்றுப் பெரும் புலவராய் மாறினர். ஒரு பாட்டின் முதல் இரு அடியை ஒருவரும் பின்னிரு அடியை மற்றவரும் பாடுவர். இருவரும் சேர்ந்து பலவகையான பாடல்களைப் பாடியுள்ளனர். அதனால்
“கண்பாய கலம்பகத்திற்கு இரட்டையர்கள்”
என்று போற்றப்பட்டனர். பெருமை மிக்கது என்பதைக் கண்பாய என்பர். பலவகைப் பூக்களாலான பூச்சரத்தைக் கதம்பம் என்போம். அதுபோல் பலவைப் பாக்களாலும் பாவகைகளாலும் இயற்றப்படும் இலக்கியம் கலம்பகம் என அழைக்கப்படும். இரட்டையர் இருவரும் 
1. கச்சிக் கலம்பகம்
2. தில்லைக் கலம்பலகம்
3. திரு ஆமாத்தூர்க் கலம்பகம்
எனப்பல கலம்பகங்களைப் பாடியிருக்கின்றனர்.

ஒருமுறை இரட்டைப் புலவர் இருவரும் சோழநாட்டில் இருந்து மதுரைக்குச் சென்றனர். அங்கே வைகை ஆற்றில் குளிக்கச் சென்றனர். வைகை ஆற்றங்கரைப் படித்துறையில் குளிப்பதற்கு முடவரை இறக்கி வைத்துவிட்டு குருடர் தமது துணிகளைத் தண்ணியில் தோய்த்து எடுத்து தப்பித்தப்பி துவைத்துக் கொண்டிருந்தார். ஆற்றுவெள்ளம் ஒரு துணியை இழுத்துச் சென்றது. அதைக் கண்டார் முடவர். அவரால் நீரில் நீந்தமுடியாது. வெள்ளம் எடுத்துச் செல்லும் துணியை குருடரால் பார்க்க முடியாது. ஆதலால் வெள்ளத்தோடு போனதுணி கிடைக்கப்போவதில்லை.

‘தண்ணியில் நனைத்து நாம் அதை அடுத்தடுத்து அடித்தால் அது எம்மிடம் இருந்து தப்பியோடாதோ’ என ஆற்றுவெள்ளத்தில் துணி போய்விட்டது என்பதை 
“அப்பிலே[தண்ணீர்] தோய்த்திட்டு அடுத்தடுத்து நாமதனைத்
தப்பினால் நம்மையது தப்பாதோ[தப்பிஓடாதோ]”
எனக் குருடருக்குச் சொன்னார். 

குருடரும் அதற்குக் கவலைப்படாமல் இந்தத் துணி போனால் என்ன? எமக்கு மாமதுரைச் சொக்கலிங்கம் இருக்கார்’ என்பதை
                                                            "- இப்புவியில்
இக்கலிங்கம்[துணி] போனாலென் ஏகலிங்க மாமதுரை
சொக்கலிங்கம் உண்டே துணை” 
என்று சிரித்துக் கொண்டே சொன்னார். ஒருவகைத் துணியைக் கலிங்கம் என்பர்.

‘இடுக்கண் வருங்கால் நகுக’ என்ற வள்ளுவரின் சொற்களுக்கு இணங்க இரட்டைப் புலவர் பாடிய அந்த வெண்பா
“அப்பிலே தோய்த்திட்டு அடுத்தடுத்து நாமதனைத்
தப்பினால் நம்மையது தப்பாதோ - இப்புவியில்
இக்கலிங்கம் போனாலென் ஏகலிங்க மாமதுரை
சொக்கலிங்கம் உண்டே துணை”
இனிதே,
தமிழரசி.

Saturday, 17 December 2016

புதுமை என்ன சொல்லுவீர்!



மாற்றாந் தோட்ட மல்லிகையின்
         மணம் நுகரும் மானுடரே
காற்றும் மழையும் வந்தாலும்
         குடிலே எங்கள் சொந்தமாம்
நேற்று முளைத்த காளானும்
         நாளை இருப்ப தில்லையாம்
போற்றும் மானுட வாழ்க்கையின்
         புதுமை என்ன சொல்லுவீர்!
இனிதே,
தமிழரசி.

Friday, 16 December 2016

பாடையிலே படுத்தூரைச் சுற்றும் போதும்


கோடையிலே கொடுவேயிற் காயும் போதும்
          கொழுந்தமிழ் பாமழையிற் தோயவேண்டும்
வாடையிலே வெற்றுடல் நடுங்கும் போதும்
          வண்டமிழின் கதகதப்பிற் காயவேண்டும்
பாடையிலே படுத்தூரைச் சுற்றும் போதும்
          பைந்தமிழில் அழுமோசை கேட்கவேண்டும்
ஓடையிலே ஒண்சாம்பர் கரையும் போதும்
          ஒண்தமிழே சலசலத்து ஓயவேண்டும் 
                                                        - மட்டக்களப்பு புலவர்

என்கின்ற இந்தப்பாடலுக்கு சொந்தக்காரர் விபுலானந்தர் காலத்தில் வாழ்ந்த மட்டக்களப்பைச் சேர்ந்த ஒரு தமிழ்ப்புலவரே. அப்புலவரின் பெயர்  ஞாபகமில்லை. ஆனால் அவர் மட்டக்களப்பை பிறப்பிடமாகக் கொண்டவர் என்பது தெரியும். அவரின் பெயர் என்ன என்பதை மட்டக்களப்பு மக்களே உலகிற்கு அறியத்தர வேண்டும்.

இப்பாடலில் ஓர் இடத்திலும் என், என்னை, என்றன் போன்ற சொற்களை இப்பாடலை எழுதியபுலவர் எழுதவில்லை. சிறுவயதில் நான் பாடித்திரிந்த பாடல் இது. அத்துடன் என் தந்தை பண்டிதர் ஆறுமுகன் அவர்கள் மேடைகளில் எடுத்துச் சொன்ன பாடல்களில் இதுவும் ஒன்று. அதனாலேயே மிக்க துணிவுடன் இதனை இங்கு பதிவு செய்கிறேன்.

இப்பாடல் எப்படியெல்லாம் நிறம்மாறி வருகிறது என்பதை நீங்களும் கொஞ்சம் பாருங்களேன். சிலர் இப்பாடலை வலைத்தளங்களில்
“கோடையிலே கொதி வெயிலில் காயும் போதும்
           கொப்பளிக்கும் தமிழ் வெள்ளம் தோயவேண்டும்
வாடை தருமூதலிலே நடுங்கும் போதும்
           வயங்கு தமிழ் கதிரென்னை காயவேண்டும்
பாடையிலே படுத்தூரை சுற்றும் போதும்
           பைந்தமிழில் அழுமோசை கேட்க வேண்டும்
ஓடையிலே என் சாம்பல் கரையும் போதும்
           ஒண் தமிழே சலசலத்து ஓடவேண்டும்” 
என எழுதுகின்றனர்.

தமிழ் விக்கிபீடியா ‘தமிழ்ப் பற்று’ என்னும் தலைப்பில் வெளியிட்டுள்ள பாடல்களில் இப்பாடலும் ஒன்று. அதில்
“சாகும் போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும் - என்றன் உடல்
சாம்பலும் தமிழ்மணந்து வேகவேண்டும்
பாடையிலே படுத்தூரைச் சுற்றும்போதும்
பைந்தமிழில் அழும் ஓசை கேட்கவேண்டும்
ஓடையிலே என்சாம்பல் ஓடும்போதும்
ஒண்தமிழே சலசலத்து ஓடவேண்டும்” 
என்று எழுதி அதனை மலையாளத்தைச் சேர்ந்த சச்சிதானந்தம் எழுதியதாகக் குறித்துள்ளது. அந்தக் கவிஞரின் படத்தையும் தமிழ்விக்கிப்பீடியாவில் சச்சிதானந்தம் என்று அடித்துப் பார்க்கலாம்.  

வல்லமை வலைத்தளத்தில் “செம்மாந்த நோக்கர் சிலம்பொலி செல்லப்பனார்” என்ற தலைப்பில் மறவன்புலவு ச சச்சிதானந்தன் அவர்கள் எழுதிய கட்டுரையை வாசித்தேன். அதில் 
“சாவில் தமிழ் படித்துச் சாகவேண்டும்
என் சாம்பல் தமிழ் மணந்து வேகவேண்டும்
ஓடையிலே என் சாம்பல் கரையும் போது
ஒண்தமிழே சலசலத்து ஓடவேண்டும்”
என்ற வரிகளைப் பாரதிதாசன் இயற்றிய வரிகளாகத் தமிழ்நாட்டு மேடைகளில் ஓங்கி உரத்துச் சொல்வோர் சிலர் இருந்தனர். அந்த வரிகள் பாரதிதாசனுடையவை அல்ல, தவறாகச் சொல்கிறார்கள். ஈழத்துக் கவிஞர் மாவிட்டபுரம் பண்டிதர் க சச்சிதானந்தன் எழுதிய வரிகள் என அடிக்கடி முழங்குபவர் சிலம்பொலி செல்லப்பனார்’ என்று மறவன்புலவு ச சச்சிதானந்தன் எழுதியிருந்தார். சிலம்பொலி செல்லப்பனார் முழங்கும் பாடல் என மறவன்புலவு ச சச்சிதானந்தன் குறிப்பிட்ட  பாடலின் முதல் இரு வரிகளின் தன்மையும் கடைசி இருவரிகளின் தன்மையும் (எதுகை, மோனை) மாறுபடுகிறதே. அந்த மாறுபாடே அப்பாடல் ஒரு பண்டிதரின் பாடல் இல்லை என்பதைக் காட்டும். 

எண்பது வருடங்களுக்கு முன்வாழ்ந்த ஈழத்துத் தமிழ்ப்பற்றாளரின் அற்புதவரிகளை இராஜபாரதி, காசியானந்தன், பாரதிதாசன், மலையாளத்து சச்சிதானந்தம் போன்ற பல கவிஞர்களின் பெயரில் பலவித மாற்றங்களுடன் எழுதுகின்றனர். அவை தவறு என்பதை இன்றைய ஈழத்தலைமுறையினருக்கு எடுத்துச் சொல்ல வேண்டிய கடப்பாடு அப்பாடலைப் பாடித்திரிந்த எனக்கு இருக்கிறது என்பதனால் எழுதுகிறேன்.
இனிதே,
தமிழரசி.

Wednesday, 14 December 2016

நேர்நின்று கேட்டனன்!


வண்டாடும் மலர்ச்சோலை வயலூரின் பதிவாழும்
கொண்டாடும் அடியவரின் குலம்வாழ அருள்செய்யும்
தண்டாடும் பாணியவன் தண்டமிற் சுவையதனை
நண்டாடும் குளக்கரையில் நேர்நின்று கேட்டனன்.