Sunday 1 May 2022

தொழிலாளி எனும் ஒரு சொல் மட்டுமா உண்டு?


ஒரே ஒரு கணம் என் கண்கள் விரிய மேலே படத்தில் இருப்பதைப் படித்தேன்.    என்னால் நம்பமுடியவில்லை. தமிழில் உள்ள லகர, ழகர, ளகர என்ற மூன்று எழுத்துக்களையும் உடைய ஒரே சொல்தொழிலாளிஎன்ற கூற்றுச் சரியா? இன்னும் அந்த அளவுக்கு தமிழ்மொழி தன் சொல்வளத்தில் வறண்டு போய்விடவில்லை.

இன்று தொழிலாளர் தினம். ஆதலால் தொழிலாளரை முதன்மைப்படுத்த அப்படி எழுதினாரா! விளங்கவில்லை. ஏனெனில் தொழிலாளர் தினத்தில் எழுதிய தொழிலாளி என்ற சொல்லையே எடுத்துக்கொள்வோம். தொழில் என்ற சொல்லின் அடியில் இருந்தே

1. தொழில்கள்

2. தொழிலாளி

3. தொழிலாளன்

4. தொழிலாளர்

5. தொழிலாளர்கள்

எனச் சொற்கள் பிறப்பது தெரியவில்லையா? இந்தச் சொற்களிலேயே , , என்ற மூன்று எழுத்துக்களும் வருகின்றனவே. அப்படியிருக்க எப்படி ஒரே சொல் தொழிலாளி என எழுதமுடியும்? 

குழல் ஊதும் கண்ணனின் பெயர்களில் ஒன்று குழலாளன். பெரியாழ்வார் பெரிய திருமொழியில் கண்ணனை

பனியிருங் குழலாளன் என்கிறார். அவரே இன்னொரு பாசுரத்தில்

பாண் தேன் வண்டு அறையும் குழலார்கள் பல்லாண்டு இசைப்ப 

- (பெரிய திருமொழி: 1462)

எனப் பெண்கள் பல்லாண்டு பாடியதையும் பதிவுசெய்துள்ளார். குழலார்கள் போல கள் விகுதியில் முடியும் குழல்கள், கழல்கள், மழலைகள், பலாப்பழங்கள் எத்தனை எத்தனை சொற்கள் தமிழில் இருக்கின்றன. இவை மட்டுமா!

1. நிழலளி - காடுகளின் குளிர்ச்சியான நிழல்

2. அளிநிழல் - குளிர் நிழல்

3. சுழலளறு - சேற்றுச் சுழி

4. களத்தழல் - களத்தின் வெப்பம்

5. மழலைமேளம் - ஒரு இசைக்கருவி

6. குதலைமொழியாள் - பெயர்

7. மலர்விழியாள் - பெயர்

8. எழில்வேள் - பெயர்

9. மொழியியலாளர்

10. வளையெழில் - தோள்வளையின் அழகு 

இப்படித் தொடர்ந்து எழுதலாம்.


கவிஞர் கண்ணதாசனும்

வண்ணமார்பும் வளையெழில் தோள்களும்

  வார்த்து வைத்த சிலையெனுந் தோற்றமும்

என வளையெழிலைப் பாடி மகிழ்ந்தார். ஆதலால் நாம் அறியாத எத்தனையோ சொற்கள் தமிழில் புதையுண்டு கிடக்கின்றன. அதனை மனதிற் கொண்டு தேடிப்பார்த்து எழுதுவது தமிழுக்கும் எமக்கும் தமிழைப் படிப்போருக்கும் கைகொடுக்கும்.

இனிதே,

தமிழரசி. 

No comments:

Post a Comment