Thursday 10 November 2016

கோயில்கள் எவை? கோட்டங்கள் எவை?

புங்குடுதீவு கண்ணகி அம்மன் திருவிழா
தமிழகத்தைப் பிறப்பிடமாக்கக் கொண்ட பேராசிரியர் கோவிந்தராசனார் நம் ஈழத்திருநாட்டின் இசைப்பேரறிஞரான விபுலானந்த அடிகளிடம் சிலப்பதிகாரத்தைக் கற்றவர். அவர் சிலப்பதிகாரத்தின் உண்மையை உலகிற்கு எடுத்துக்காட்ட சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்குக் கட்டிய பத்தினி கோட்டத்தைத் தேடத்தொடங்கினார். அதன் விளைவாகத் தன் வாழ்நாளின் பெரும்பகுதியை மதுரையில் இருந்து சேர நாடு நோக்கி ‘கண்ணகி சென்ற பாதையில்’ தேடி அலைந்து, நடந்து திரிந்து தொலைத்தவர்.

பத்தினி கோட்டக் கல்வெட்டு

கடைசியில் அவர் சேரன் செங்குட்டுவன் கட்டிய பத்தினி கோட்டத்தையும் அங்கிருந்த கல்வெட்டொன்றையும் கண்டுபிடித்தார். அக்கோட்டம் தமிழக கேரள எல்லையில் இருக்கிறது. அது இப்போது மங்கல தேவி கோயில் என்று அழைக்கப்படுகிறது. இலங்கையில் கஜபாகு மன்னன் கண்ணகிக்குப் ‘பத்தினி கோட்டம்’ கட்டியதை ‘இராஜவளிய’ சொல்கிறது.

மங்கலமடந்தை கோட்டத்து நுழைவாயில்

சிலப்பதிகாரத்தில் கண்ணகியை ‘மங்கல மடந்தை’ என்று கூறும் இளங்கோஅடிகள் வரந்தரு காதையில் கண்ணகி கோட்டத்தை 
“மங்கல மடந்தைக் கோட்டத் தாங்கண்” - (சிலம்பு: 30: 88)
என மங்கல மடந்தை கோட்டம் என்றும் குறிப்பிட்டுள்ளார். மங்கல மடந்தையே பின்னாளில் மங்கல தேவியாக மாற்றமடைந்துள்ளார். மங்கல தேவி கோட்டம் இப்போது கோயில் என அழைக்கப்படுவதற்கு ஊடகங்களும் காரணமாகும். ஊடகங்கள் அக்கோயிலில் ஒவ்வொரு வருடமும் நடைபெறும் சித்திரா பௌர்ணமி விழா ‘மங்கல தேவி கோட்டத்தில்’ நடைபெறும் என்று சொன்னால், எழுதினால் மக்களும் அதனைப் பின்பற்றுவர் அல்லவா? நாம் வாழும் வீடுகளை மாளிகை என்று சொல்ல முடியுமா? கொஞ்சம் சிந்தித்துப் பார்க்கலாமே! இருபத்தியோராம் நூற்றாண்டில் வாழும் எமக்கு கோயில்கள் எவை? கோட்டங்கள் எவை? என்ற வேறுபாடு தெரியாது. அதனாலேயே கோட்டத்தைக் கோயில் என்கிறோம்.

வள்ளுவர் கோட்டம்

கலைஞர் கருணாநிதி 1976ல் கட்டிய வள்ளுவர் கோட்டத்தை கோயில் என்று சொல்கிறோமா? இல்லையே! அப்படியிருக்க கண்ணகி கோட்டத்தை - பத்தினி கோட்டத்தை - மங்கலதேவி கோட்டத்தை ஏன் கோயில் என்று  சொல்ல வேண்டும்? பண்டைத் தமிழர் எம்மைப் போல் இல்லாது ஒவ்வொரு தமிழ்ச்சொல்லையும் தமது தேவைக்கு ஏற்றவாறு காரணத்தோடு நன்கு தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தினர். எமது அறியாமையால் நாம் செய்யும் இந்தத் தவறு தமிழ் மொழிச் சொற்களின் ஆழ அகலங்களை சுருங்கச் செய்கின்றது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ‘ஐயோ’ [aiyo] என்ற சொல் ஒக்ஸ்போட்[Oxford] ஆங்கில அகராதியில் இடம்பெற்றுவிட்டது என்று துள்ளிக் குதிக்கும் நாம் கோட்டம் என்ற சொல் போல எத்தனையோ அரிய தமிழ்ச் சொற்களை பயன்படுத்தாமலே குழி தோண்டிப் புதைக்கிறோம்.

புராண இதிகாசக் கதைகளில் வரும் எல்லாத் தெய்வங்களுக்குமே கோயில்கள் கட்டி குடமுழுக்குச் செய்கிறோம். அதுவே புலம் பெயர்ந்து வாழும் தமிழராகிய எமது நாகரீகமாக இருக்கிறது. அப்படி இருந்தும் எந்தெந்த தெய்வங்களின் இருப்பிடத்தைக் கோயில் என்று அழைக்க வேண்டும் என்னும் மரபு தெரியாது வாழ்கிறோம். இது கோயில். இது இப்படி இருக்க வேண்டும், அது கோட்டம் அது அப்படி இருக்க வேண்டும் என்று எடுத்துச் சொல்ல எமது மடாதிபதிகளுக்கும், சுவாமிமார்களுக்கும், கோயில் அறக்காவளர்களுக்கும், சமய மகாநாடுகள் நாடாத்துவோருக்கும் தெரியாதிருப்பது பெரும் வேடிக்கையாகும்.

நம் பண்டைத்தமிழ் முன்னோர்கள் தாம் வணங்கும் தெய்வங்களை பெருந்தெய்வம், சிறு தெய்வம் எனப் பிரித்து வைத்திருந்தனர். பெருந்தெய்வங்களுக்கு வானுயரக் கோபுரங்கள் அமைத்து கோயில்கள் கட்டிய நம் முன்னோர் சிறு தெய்வங்களுக்கு கோபுரங்கள் கட்டி குடமுழுக்குச் செய்யவில்லை. இக்காலத் தமிழரே அப்படிச் செய்கின்றனர். சிறு தெய்வமான மன்மதனை வணங்கக் கண்ணகி மறுப்பதை சிலப்பதிகாரம் சொல்கிறது. 

புங்குடுதீவு ஶ்ரீ இராஜ ராஜேஸ்வரி அம்மன் கோயில் வரலாறு ஒன்றே போதும் பெருந்தெய்வ, சிறுதெய்வ வழிபாட்டை எமக்கு எடுத்துச் சொல்ல. 


புங்குடுதீவில் சிறுதெய்வமான கண்ணகிக்கு கோயில் கட்டிக் குடமுழுக்குச் செய்ய நம்மவர்கள் முற்பட்ட போது, அது தமிழர் வழக்கம் அல்ல என்று அறிஞர் பலரும் சொன்னதற்கு அமைய, ‘ ஶ்ரீ இராஜ ராஜேஸ்வரி அம்மன்’ கோயிலாகவே கட்டப்பட்டு குடமுழுக்குச் செய்யப்பட்டு ராஜகோபுரத்துடன் நிற்கிறது. புங்குடுதீவுக் கண்ணகி அம்மன் கோயில் என நாம் அழைப்பினும் கருவறையில் ஶ்ரீ இராஜ ராஜேஸ்வரி அம்மன் சிலையே இருக்கிறது. அங்கு கண்ணகி சிலை இல்லை என்பதே உண்மை. இரண்டாம் மண்டபத்தில் வடக்குப்புறமாக தெற்கே கடலை நோக்கியபடி இருக்கும் சிலையே கண்ணகி சிலை.

அத்துடன் பெருந்தெய்வக் கோயில்களில் இருக்கும் சிறு தெய்வங்களுக்கு ஊஞ்சல் பாடல்களும் பாடுவதில்லை. வித்துவான் சி ஆறுமுகம் [மாமா] அவர்கள் பாடிய ஊஞ்சற்பாட்டில் ‘ராஜராஜேஸ்வரி அம்மே ஆடீர் ஊஞ்சல்’ எனவும் ‘ராஜேஸ்வரி ஆடீர் ஊஞ்சல்’ என்றும் சொல்கிறார். மூன்றாவது பாடலில்
“தென்னவனார் செறுக்கறுத்த செல்வி கற்பின்
         தீரமிகு கண்ணகியெம் தெய்வப்பாவை
முன்னாக அமர்ந்தவளே ஆடீர் ஊஞ்சல்
        மோகினி ராஜேஸ்வரியே ஆடீர் ஊஞ்சல்”
என கண்ணகியையும் ராஜேஸ்வரியையும் பிரித்துக் காட்டுகிறார். அப்படிப்பட்ட புங்குடுதீவில் இப்போது சிறு தெய்வங்கள் யாவுமே ராஜகோபுரத்துடன் எழுந்து கோயில்களாக நிற்கின்றன. கோட்டமும் இல்லாது மரத்தின் கீழ் கல்லாய் நின்றவர் கூட கற்சிலையாய் குடமுழுக்கு செய்யப்பட்டு பாலாபிசேகத்தில் நனைகிறார். ஆனால் பால் கறக்கும் பசுக்கள் குடிக்கும் நீருக்கும் புல்லுக்கும் அலைகின்றன.

பொகுட்டு

சங்க இலக்கியத்தில் சங்ககாலப் புலவர்கள் கோயிலையும் கோட்டத்தையும் மிக அழகாக எடுத்துச் சொல்லி இருக்கிறார்கள். உயர்ந்த கோபுரங்களுடன் கட்டும் அரண்மனைகளையும் கோயில் எனச் சங்கத்தமிழர் அழைத்ததை பரிபாடலில் உள்ள பரிபாடல் திரட்டு 
“மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரை
பூவொடு புரையும் சீரூர் பூவின்
இதழகத் தனைய தெருவம் இதழகத்து
அரும்பொகுட் டனைத்தே அண்ணல் கோயில்”
                                                                - (பரிபாடல் திரட்டு 7: 1 - 4)
எனச் சொல்வதால் அறியலாம். மாயவன் ஆன திருமாலின் கொப்பூழில் மலர்ந்த தாமரைப் பூப்போல இருப்பது செல்வம் நிறைந்த மதுரை[சீர் + ஊர் = சீரூர்]. தாமரைப்பூவில் உள்ள இதழ்களைப் போன்றன தெருக்கள்[தெருவம்]. இதழ்களின் இடையே உயர்ந்து பீடம் போல் கொட்டைகளைத் தாங்கி நிற்கும் பொகுட்டு போன்றதே அரசனின்[அண்ணல்] அரண்மனை[கோயில்]. 

கோட்டம் என்றால் மேல்வீடு என்ற கருத்தை தரும். படிகளில் ஏறிச்சென்று மேல்வீட்டில்[கோட்டத்தில்] இருக்கும் தேவர்களை வணங்கினர். பெருந்தெய்வங்கள் கைகளில் தாங்கியிருந்த வாள், வேல் போன்ற ஆயுதங்களை கோட்டங்களில் நிறுத்தி வைத்து வணங்கினர். [வள்ளுவ கோட்டத்தைப் போல்] தமது பொழுது போக்கும் இடங்களையும் கோட்டங்களாகக் கட்டினர். கோட்டங்கள் மிக அழகாக உயரமாகக் கட்டப்பட்டாலும் உயர்ந்த கோபுரங்கள் அற்று இருந்தன. வானத்து நட்சத்திரங்களைப் பார்க்கவும் உயரமாய் கோட்டங்களைக் கட்டியிருந்தனர் என்பதை
“மழை நீங்கிய மா விசும்பில்
மதி சேர்ந்த மக வெண்மீன்
உரு கெழு திறல் உயர் கோட்டத்து”
                                                  - (பட்டினப்பாலை: 34 - 36)
‘மழை முகில் அற்ற வானத்தில் சந்திரனைச் சேர்ந்த மக நட்சத்திரத்தின் [மக வெண்மீன்] ஒளியைப்[உருகெழு திறல்] பார்க்கும் இடமாகிய உயர்ந்த கோட்டம்’ என்று பட்டினப்பாலை சொல்கிகிறது. திருமாலின் அவதாரங்களையும் பால முருகனையும் அவனது வேலையும்  கோட்டத்தில் வைத்து வணங்கியதைக் காணமுடிகிறது.

எந்தெந்த தெய்வங்கள் கோயிலில் இருப்பார்கள், யார் யார் கோட்டங்களில் இருப்பார்கள், கோட்டங்களில் வேறு என்னென்ன இருக்கும் என்பதை மிகவிரிவாக இளங்கோ அடிகள் தந்திருக்கிறார்.

இந்திரவிழவூரெடுத்த காதையில்
“பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும்
அறுமுகச் செய்வேள் அணிதிகழ் கோயிலும்
வால்வளை மேனி வாலியோன் கோயிலும்
நீல மேனி நெடியோன் கோயிலும்
மாலை வெண்குடை மன்னவன் கோயிலும்”
                                                              - (சிலம்பு: 5: 169 - 173)
“பிறவா யாக்கைப் பெரியோன்[சிவன்] கோயிலும்
அறுமுகச் செய்வேள்[முருகன்] அணிதிகழ் கோயிலும்
வால்வளை மேனி வாலியோன்[பலராமன்] கோயிலும்
நீல மேனி நெடியோன்[திருமால்] கோயிலும்
மாலை வெண்குடை மன்னவன்[இந்திரன்] கோயிலும்”
என்று  பண்டைத்தமிழர் வழிபட்ட கோயில்களைப் பட்டியலிட்டுச் சொல்லும் அவரே கனாத்திறம் உரைத்த காதையில்
“அமரர் தருக்கோட்டம் வெள்யானைக் கோட்டம்
புகர்வெள்ளை நாகர்தங் கோட்டம் பகல்வாயில்
உச்சிக் கிழான்கோட்டம் ஊர்க்கோட்டம் வேற்கோட்டம்
வச்சிரக் கோட்டம் புறம்பணையான் வாழ்கோட்டம்
நிக்கந்தக் கோட்டம் நிலாக் கோட்டம்"
                                                            - (சிலம்பு: 5:  9 -13)
“அமரர் தருக்[கற்பகதருக்] கோட்டம் வெள்யானைக்[ஐராவதம்] கோட்டம்
புகர்வெள்ளை நாகர்தங் [தேவ] கோட்டம் பகல்வாயில்
உச்சிக் கிழான் [சூரியன்] கோட்டம் ஊர்க் [ஊராரின்] கோட்டம் வேற் [முருகனின் வேல்] கோட்டம்
வச்சிரக் [இந்திரனின் வச்சிராயுதக்] கோட்டம் புறம்பணையான் [ஐயனார்] வாழ்கோட்டம்
நிக்கந்தக் [அருகன்] கோட்டம் நிலாக் [சந்திரன்] கோட்டம்
எனக் கோட்டங்களையும் சிலப்பதிகாரத்தில் பட்டியல் போட்டுக் காட்டியுள்ளார். 

பாருங்கள் பனைமரத்தை, வெள்ளையானையை, தேவர்களை, சூரியனை, ஐயனாரை, அருகனை, சந்திரனை எல்லாம் கோட்டங்களில் வைத்தே வணங்கினர். முருகனுக்கு கோயிலும் அவன் கை வேலுக்கு கோட்டமும் கட்டியது போல இந்திரனுக்குக் கோயிலும் இந்திரனின் வச்சிராயுதத்திற்கு கோட்டமும் கட்டியுள்ளனர். அதனாலேயே கதிர்ககாமமும் இன்றும் கோயில் ஆகாமல் இருக்கின்றது. ஊர்க்கோட்டம் என்பது பூஞ்சோலைகளின் இடையே, வாவிகளின் அருகே காற்றை நுகரவும் இயற்கையின் அழகைப் பார்த்து மிகிழவும் கட்டப்பட்ட கோட்டமாகும். நிலாக் கோட்டம் மேலே பட்டினப்பாலை சொல்வது போல நட்சத்திரங்களை பார்த்து மகிழக் கட்டியதாகவும் இருக்கலாம். பெருந்தெய்வங்களை கோயில் கட்டி வணங்கியதோடு சிறு தெய்வங்களை கோட்டங்களில் வைத்து வணங்கினர் என்ற உண்மையை சிலப்பதிகாரம் எமக்கு எடுத்துக்கூறியும் நாம் கண்டுகொள்ளவில்லை. 

எல்லாத் தெய்வங்களுக்கும் கோயில் கட்டுவத்தோடு மட்டுமல்லாமல் உள்வீதி வெளிவீதி எங்கும் ஓரடிக்கு ஒரு தெய்வமாக எல்லாத் தெய்வங்களையும் வைத்து எல்லோருக்கும் பாலும் பழமும் கொட்டி குளிப்பாட்டுவதை விட ஓரிரு கடவுளரை வைத்து மனமுருகி வணங்கினால் என்ன? 

எட்டுமணிப் பூசை என்று முருகன் முன் நின்று கண்மூடி மனம் ஒன்றமுன் குருக்கள் பிள்ளையார் திருமுன் நின்று மணியடிப்பார். அங்கே செல்ல முன் அடுத்த பாலமுருகனிடம் போய்விடுவார். இப்படி ஓடி ஓடி ஆலயத்தை சுற்றி வர வேண்டுமா? ஆன்மா இறைவனோடு ஒன்றும் இடமல்லவா ஆலயம். குருக்கள் மணியடித்தபடி ஓடினால் எங்கே மனம் ஒன்றிக் கடவுளை வணங்க முடியும்? நூற்றுக்கு எத்தனை பேர் குருக்களின் பூசை ஓட்டத்தில் சளைக்காது ஓடி மனம் ஒன்றி சுவாமி கும்பிட்டோம் என்று சொல்வோம்? கும்பிடக்கூடியவர் யாராயினும் மற்றவர்கட்கும் அதனைச் சொல்லித்தரலாமே. நீங்கள் பெறும் இன்பம் நாமும் பெறலாமே!

எனவே இயற்கை கொஞ்சி விளையாடும் அமைதியான இடமாய் காற்று ஓட்டமுள்ளதாகத் தமிழரின் கலையை பண்பாட்டை எடுத்துச்சொல்ல ஒரு கோயில் என்றாலும் ஒரு கோட்டம் என்றாலும் கட்டுங்கள். இப்படிக் கட்டுவோர் யாராயினும் உண்டியலை மட்டும் வைக்காதீர்கள். அங்கே எல்லாக் கடவுளரும் வந்து நடனம் புரிவர்.
இனிதே,
தமிழரசி.

4 comments:

  1. அருமையான இலக்கியப் படைப்பு

    ReplyDelete
  2. தேடிய கேள்விக்கு மிக நுண்ணிய விளக்கத்தை தங்கள் பதிவில் கிடைக்கப்பெற்றேன். நன்றி.

    ReplyDelete