Thursday 23 June 2016

குறள் அமுது - (117)


குறள்:
உழந்துஉழந்து உள்நீர் அறுக விழைந்துஇழைந்து
வேண்டி யவர்க்கண்ட கண்                                     - 1177

பொருள்:
விரும்பி உள்ளம் நெகிழ்ந்து அவரைப் பார்த்த கண்ணே! துன்பத்தில் அழுந்தி உள்ள கண்ணீர் எல்லாம் அற்றுப்போ!

விளக்கம்:
இத்திருக்குறள் காமத்துப் பாலில் வருகிறது. அன்றைய உலகின் பார்வையில் ஒத்த அன்புடைய இரு உள்ளங்களின் ஈர்ப்பைக் காதல் என்றும் இரு உடல்களின் ஈர்ப்பைக் காமம் என்றும் கருதினர். அதனால் திருவள்ளுவர் காமத்துப்பாலில் எந்த ஓர் இடத்திலும் ஒருதலைக் காமத்தையோ, பொருந்தாக் காமத்தையோ சொல்லவில்லை. ஒத்த அன்புள்ள உண்மைக் காதலின் தேடலையே காமம் என்கிறார். இக்குறள் 'கண் விதுப்பு அழிதல்' என்னும் அதிகாரத்தில் உள்ளது. படிப்புக்காகவோ வேலைக்காகவோ பிரிந்து சென்ற கணவனைக் காண, கண் ஆசைப்படுவதால் ஏற்படும் மனத்துன்பத்தையே கண் விதுப்பு அழிதல் கூறுகிறது.

மனிதரின் ஆசைகளைத் தூண்டுவதில் ஐம்புலன்களுக்கும் பங்கு உண்டு. எனினும் அதிக ஆசைகளை உண்டாகுவது கண்ணே. பெண்ணின் கண்ணே காதலனை முதலில் அவளுக்குக் காட்டியது. அவனது அறிவு, ஆற்றல், அழகு, நடை, உடை யாவற்றையும் கண் காட்டக் காட்ட அவள் கண்டாள். இரசித்தாள். காதல் வசப்பட்டாள். கல்யாணமும் செய்து கொண்டாள். இப்போது  அவன் பிரிந்து சென்று விட்டான். அவன் மீண்டும் வருவான் என்பது அவளுக்குத் தெரியும். ஆதலால் அவள் அழவில்லையாம். அவளது கண்ணே அவனை மீண்டும் பார்க்க வேண்டும் என்ற ஆசையில் அழுகின்றதாம்.

உண்மைக் காதலில் ஏற்பட்ட பிரிவு அவளைத் தத்துவஞானி என்ற நிலைக்கு கொண்டுசென்றுவிட்டது. அதனால் அவள் தனது கண்ணுக்குச் சொல்கிறாள். ‘விழைந்து [விரும்பி], இழைந்து [உள்ளம் நெகிழ்ந்து] பார்க்க வேண்டும், பார்க்க வேண்டும் என்று அடம்பிடித்து அவரைப் பார்த்த கண்ணல்லவா! உன்னால் தானே நான் இப்போ பிரிவுத் துன்பத்தில் துயரம் அடைகிறேன். நீ காட்டவில்லை என்றால் நான் கண்டிருப்பேனா? எனக்கு இந்தத் துன்பம் வந்திருக்குமா? ஆனபடியால் துன்பத்தில் அழுந்தி அழுந்தி [உழந்துஉழந்து] அழுதழுது உள்ள கண்ணீர் எல்லாம் இல்லாது போ!’ என்கிறாள்.

‘ஆசை ஆசையாய் கணவரைப் பார்த்து மகிழ்ந்து அவரோடு இழைந்த கண்ணே! அழுதழுது துயரத்தில் மூழ்கி கண்ணீர் அற்றுப்போ’ எனக் கண்மேல் பழியைப் போட்டுத் தன் மனத்துயரை ஆற்றப்பார்க்கின்றாள்

No comments:

Post a Comment