Monday 6 June 2016

குறள் அமுது - (116)



குறள்:
நுனிக்கொம்பர் ஏறினார் அஃதுஇறந்து ஊக்கின்
உயிர்க்கு இறுதியாகி விடும்                             - (குறள்: 476)

பொருள்:
ஒரு மரத்தின் நுனிக்கொம்பில் ஏறி நிற்பவர் அதற்கு மேலும் கடந்து சென்றால் அதுவே அவருடைய உயிர்க்கு முடிவை உண்டாக்கும்.

விளக்கம்:
இத்திருக்குறள் ‘வலி அறிதல்’ என்னும் அதிகாரத்தில் உள்ளது. இவ்வதிகாரத்தில் திருவள்ளுவர் ஒருவன் தன்னுடைய வலிமையை எப்படி தானே அறிந்து கொள்ளலாம் என்பதை விளக்கிக் கூறுகிறார்.

மரத்தின் உச்சியில் மென்மையான இளம் தழைகளையுடைய கொப்புகள் [கொம்பர்கள்] இருக்கும். மரஉச்சியில் மட்டுமல்ல ஒவ்வொரு கொப்புகளின் நுனியிலும் இருப்பதே நுனிக்கொம்பர்.  அக்கொம்பர்களில் சில எமது பாரத்தை தாங்க முடியாதவையாக இருப்பது இயல்பு. அதாவது ஒருமரத்தின் மேல் கிளைகளைவிட [கொம்பர்களைவிட] கீழ்க்கிளைகள் முற்றி வைரமாகா இருக்கும். மரத்தின் ஓரளவு முற்றிய கீழ்க்கிளையின் நுனிக்கொம்பர் வரை சென்று, அதற்கு மேலேயுள்ள மரக்கிளையைப் பிடிக்கவோ அல்லது பழத்தைப் பறிக்கவோ முற்படும் போது அக்கிளையை உந்துவோம். அப்படி உந்துவதையே வள்ளுவர் ‘ஊக்கின்’ என்கிறார்.

சிறுவயதில் என்னைப் போல் மாமரக்கிளைகளில் ஏறி நின்று உந்தி மாங்காய் பறித்தவர்களுக்கு இது புரியும். அப்படி உந்தும்[ஊக்கி] போது மரக்கிளை மேலும் மீழும் ஆடும். மரக்கிளை மேலே போகும் பொழுது மேல் கிளையில் உள்ள மாங்காயைப் பறித்துக் கொள்ளலாம். மரக்கிளையின் தன்மை மட்டும் அல்ல உந்தும் வலிமையையும் எமது பாரத்தையும் பொறுத்து கிளை முறிந்து நாம் கீழே விழுவோம். அதனால் உயிரை இழக்க நேரிடும். 

ஊஞ்சலில் இருந்து ஆடும் போது எம்மை ஊஞ்சலில் வைத்து ஆட்டுபவரைப் பார்த்து என்னை ‘ஊக்கு’ என்று தானே இன்றும் கூறுகிறோம். எனவே உந்தித் தள்ளு என்பதையே ஊக்கு என்னும் சொல் குறிக்கிறது. திருவள்ளுவர் இத்திருக்குறளில் ஒன்றைச் செய்து அதன் நுனிவரை சென்றவர், அதற்கு மேலும் கடந்து செல்லக் கருதினால் என்ன நடக்கும் என்பதை மரத்தை உதாரணம் காட்டி விளக்குகிறார். சில உரையாசிரியர்கள் சொல்வது போல ஊக்கின் என்பதை ஊக்கம் என்று வள்ளுவர் சொல்லவில்லை. ஊக்கின் என்பதை உந்தினால் என்றே பொருள் கொள்ள வேண்டும். 

ஒருவரின் வலிமைக்கு, ஆற்றலுக்கு, செய்யும் செயல் யாவுக்குமே ஓர் எல்லை உண்டு. அந்த எல்லையைக் கடந்து செயற்பட முற்பட்டால் உயிர்போகும் நிலை வரும். 

No comments:

Post a Comment