Monday 2 February 2015

எடா! அடடா!!


தமிழில் எத்தனையோ இனிய சொற்கள் இருக்கச் சிலர் நம் காது கைக்கும்படி இனிமை இல்லாத சொற்களையே பேசி கேட்போர் மனதை நோகச் செய்வர். அப்படிப்பட்டோருக்குத் திருவள்ளுவர்
“இனிய உளவாக இன்னாது கூறல் 
கனியிருக்க காய்கவர்ந் தற்று”
எனக் கூறுகிறார்.

திருவள்ளுவர் கூறியது போல் 'எடா' என்ற சொல்லும் எமக்கு இனிமை தராத சொல்லே. எடா! என்றும் எடேய்! எனவும் அடேய்! என்றும் அழைத்தால் எமக்கு கோபம் வருவது இயல்பு. அதனால் எடா! என்ற சொல்லைக் கீழ்த்தரமான சொல்லாகப் பலரும் கருதுவர். 

ஆனால் ஒருதாய் தன் மகனைப்பார்த்து அன்போடு “என்னடா! இவ்வளவு நேரமாய் சாப்பிடாமல் இருக்கிறாய் வந்து சாப்பிடடா” என்று எத்தனை எடா போட்டு கூப்பிட்டாலும் மகனுக்கு கோபமோ எரிச்சலோ வராது. காயாய் இன்னாத சொல்லாய் இருந்த ‘எடா’ தாயின் அழைப்பில் கனியாய் இனிய சொல்லாய் மாறி தாயன்பை மிளிரச் செய்கிறது.

தாயைப்போல் யாரெல்லாம் எவ்வெப்போது எடா போட்டு அழைத்தால் கேட்பவர்க்கு கோபம் வராது என்பதைச் சொல்லும் பாடலைப் பார்ப்போம்.
கடாவிடுஞ்சமர்க் களத்திலும் மடந்தையர் இடத்தும்
விடாமலோதிய கவிதை பாராட்டிய இடத்தும்
நடாவிடுஞ்சிறு பிள்ளையை நவிலும் இடத்தும்
அடாவெனுஞ் சொல்லை இன்சொலாய் மதிப்பர்

போர்க்களத்தில் எதிரியைச் சாடும் போது தன்னோடு சேர்ந்த போர் வீரரை உயர்வு தாழ்வு பார்க்காது விளித்து ‘எடா’ என்று பேசுவது வழக்கம். அதனால் போர்க்களத்தில் ‘எடா’ இனிமையாய் இருந்து வீரத்தைக் கூட்டுகிறது.

காதலன் காதலியை, கணவன் மனைவியை எடா என அழைப்பதும் இன்பமே. விடாமல் கவிதை பாடியதைக் கேட்ட போதும் அடடா! என்ன கவிதை எனப் பாராட்டும் போதும் இனிமையைத் தரும். மெல்ல மெல்ல கால்பதித்து தத்தி தத்தி நடை போடும் சிறு குழந்தையை ‘என்னடா!’ எனக் கேட்பதும் இனிமையாகும். இப்படி எடா - அடா என்ற சொல்லை இன்சொல்லாய் மதித்துப் போற்றுவர். காயாய் கசக்கும் சொல்லும் கனியாய் இனிப்பதுண்டு.
இனிதே, 
தமிழரசி.

No comments:

Post a Comment