Sunday 25 January 2015

பசுமை என்பது என்ன?



பசுமை என்பது என்ன?
பார்க்கும் இடம் யாவும்
பச்சைப் பசேல் காட்சியா?
பார்த்து மகிழ வாரீர்!

காடு மலைகள் எல்லாம்
மரஞ்செடி காட்சி ஆகவேண்டும்
தேன் சிந்து மலரும்
வண்டும் இணைந்து காணவேண்டும் 

வானம் எங்கும் பறவைக்
கூட்டம் பறந்து திரியவேண்டும்
மானும் மரையும் சேர்ந்து
மனம் மகிழ்ந்து பாயவேண்டும்

குயிலும் மயிலும் அங்கே
கூடிப் பாடி ஆடவேண்டும்
மலையில் வீழ் அருவி
மெல்லத் தவழ்ந்து ஓடவேண்டும் 

நீர் நிலைகள் எங்கும் 
நன்னீர் பொலிந்து நிறையவேண்டும்
வயல் வெளிகள் தோறும்
பயிர்கள் செழித்து வளரவேண்டும்

காயும் கனியும் ஒன்றாய்
மரத்தில் காய்த்துத் தொங்கவேண்டும்
வாயும் நல்ல உணவை
ரசித்துப் புசித்து ருசிக்கவேண்டும்

கூனும் குருடும் இன்றித்
தரணி காட்சி தரவேண்டும் 
வாழும் மனிதர் தாமும் 
வாழும் வாழ்வில் பசுமைவேண்டும்

போர்கள் அற்ற நிலையில்
உலகம் புதுமை காணவேண்டும்
அப்போ பசுமை எங்கும்
மலரும் உயிர்கள் வாழ்வுசிறக்கும்.
இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment