Tuesday 15 June 2021

காற்றே என்றன் கதைகேளு!

photo: Sierra

காற்றே என்றன் கதைகேளு

  கவிதையிற் சொல்வேன் உனக்காக

மாற்றாள் தாயின் மகனாக

  மண்ணை நினைத்த மானிடரும்

ஊற்றாய் பாய்ந்து நிலந்னனைத்து

  ஊருகள் யாவும் செழிப்புறவே

ஆற்றா தோடிக் களித்தநல்

  ஆறுகள் யாவும் சிதைத்திட்டார்


ஆற்றின் அருகே நிழல்கவித்த

  அழகு மரங்கள் அறுத்தெடுத்தார்

ஆற்றின் மருங்கே பாய்விரித்த

  அருங்குரு மணலும் அரித்தெடுத்தார்

போற்றி இயற்கையைப் பேணாதே

  பொழுதைக் கழித்து மகிழ்கின்றார்

காற்றில் உள்ள நீரினையும்

  களவு கொண்டு களிக்கின்றார்


காற்றே உன்றன் தினமெனவே

  காகிதத் தெழுதி வைத்தே

 ஆற்றும் ஆய்வு அறிவாயோ

  ஆறறி வுள்ள மானிடரே

காற்றே நின்றன் நீரினையும்

  கறந் தெடுத்து குடித்திட்டு

காற்றாம் கனலிடை மாய்வாரோ 

  கதறும் எனதுளம் ஆற்றாயோ!  

இனிதே,

தமிழரசி.  

குறிப்பு:

ஜூன் மாதம் 15ம் திகதி உலகக் காற்றின்  தினம். உலகின் எந்த நாட்டில் காற்று தூய்மையாக இருக்கிறது? காற்றில் இருக்கும் நீரையும் பிரித்து எடுத்து குடிக்கின்றனர். இன்னும் சில வருடங்களில் அது உலகெங்கும் நடைமுறைக்கு வரும். அப்போது அனற்காற்று வீசும். அனற்காற்றில் மரங்கள் எரிவது போல மானுடமும் மாயப்போகிறதா? 

பண்டைத் தமிழர் பனிக்காலத்தில் [fog] பயணம் செய்யும் பொழுது செம்பு வலையை விரித்து வைத்து அதில்படியும் நீரை அருந்தியதாக நெடுந்தொகைப் பாடல் ஒன்று சொல்லும். அவர்கள் காற்றிலிருந்து பிரித்து எடுக்கவில்லை.

No comments:

Post a Comment