Sunday 2 May 2021

குறள் அமுது - (146)


குறள்: மனம்மாணா உட்பகை தோன்றின் இனம்மாணா

  ஏதம் பலவும் தரும் - 884


பொருள்மனவேறுபாட்டால் உட்பகை தோன்றினால் அது இனவேறுற்றுமையை உண்டாக்கும் பல தீமைகளைத் தரும்.


விளக்கம்: உட்பகை என்னும் அதிகாரத்தில் உள்ள நான்காவது குறள்  இது. மாணுதல் என்றால் நன்மை தருவது. மாணா என்பது அதற்கு எதிர்க் கருத்தில் வருகிறது. திருவள்ளுவர் எமது மனதில் உண்டாகும் தீமைகளையே மனம்மாணா எனக்குறிப்பிடுகிறார். 


மனிதரின் மனத்தைப் பொறுத்து எத்தனையோ வகைகளில் தீமைகள் பிறக்கின்றன. பொய் பேசுதல், கடுங்கோபம் கொள்ளுதல், மற்றவர் நன்றாக வாழ்வதைப் பார்த்துப் பொறாமைப்படுதல், அடுத்துக் கெடுத்தல், பிறரைத் துன்புறுத்தி இன்பங்கொள்ளல், தெருட்டுதல், பொருளுக்காகப் பணத்துக்காகப் பிறரைக் கொலை செய்தல், பிறர் பொருளைக் கொள்ளையடித்தல் போன்றவை யாவும் மனங்கோணுவதால் உண்டாகின்றன. 


மனமாறுபாடு தோற்றுவிக்கும் தீச்செயல்கள் பலவகைத் தீமைகளை உருவாக்குகின்றன. தீமைகளால் துன்பப்படுவோர் தீமை செய்தோரை வெறுப்பர். அதுவே உட்பகையாய் மாறி மனிதரின் இன்பவாழ்க்கையை சீரழிக்கிறது. அப்படி உண்டாகும் உட்பகை உறவுகள் இடையேயும், அயலவரிடமும், ஊர்களுக்குள்ளும், இனங்களுக்கு இடையேயும், நாட்டிலுமாக பரந்து விரிந்து எங்கும் கணப்படுகிறது.


மனிதன் தோன்றிய காலந்தொட்டு உட்பகையும் இருக்கிறது. அது நிறம் என்றும் சாதி என்றும் சமயம் என்றும் கடவுள் என்றும் இனம் என்றும் மொழி என்றும் பல்வகைபட்ட  காரணங்களால் வெடிக்கிறது. இந்த உட்பூசல்களே சதிச்சண்டை, சமயச்சண்டை மொழிச்சண்டை என மெல்ல மெல்ல வளர்ந்து இனச்சண்டையாய் பெரும் போர்களாக மாறி பல்லாயிரக் கணக்காணோரின் உயிர்களை, உடைமைகளைப் பறிக்கிறது. அப்போர்களால் ஊனமுற்றோரும் உற்றாரும் பெற்றோரும் இன்றித் தவிப்போருமாக உலகம் மெல்ல நடை போடுகிறது. அதனையே திருவள்ளுவரும் இத்திருக்குறளில்இனம்மாண ஏதம் பலவும் தரும்என பொறித்துக் காட்டியுள்ளார்.


இந்த திருக்குறளை விளங்கிக் கொள்ள நம் நாட்டையே எடுத்துக் காட்டாகச் சொல்லலாம். ஆங்கிலேயர் இலங்கையை ஆட்சி செய்த காலத்தில் 1915 ஆம் ஆண்டு கேகாலையில் இனங்களிடையே முகிழ்ந்த மனமாறுபாடு இனச்சண்டையானது. 1956ல் உருவாக்கப்பட்ட தனிச்சிங்கள மசோதாவால் பெரும்பான்மை இனத்துக்கும் சிறுபான்மை இனத்துக்கும் இடையே உண்டான மனவேறுபாடு 1958ல் அநுராதபுரம், பொலநறுவை, கொழும்பு போன்ற இடங்களில் இனக்கலவரமாகியது. மீண்டும் அநுராதபுரத்தில் 1977ல் இனக்கலவரம் உண்டாகி 19 பேரூந்துகளில் சிறுபான்மையினர் யாழ் நகர் வந்து சேர்ந்தனர். 1983ல் கொழும்பில் உண்டான இனக்கலவரமே எல்லா இனக்கலவரங்களினதும் உச்சத்தைத் தொட்டது எனலாம்.


இவற்றின் விளைவே தமிழீழத் தோற்றத்திற்கு வித்திட்டது. அது 30 வருடப் போராய் இலங்கை, இந்திய இராணுவம் மட்டுமல்ல பின்னர் உலக நாடுகளின் துணையோடு முள்ளிவாய்க்காலில் பல்லாயிரம் உயிர்களைக் காவு கொண்டது.


மனவேற்றுமை இனவேற்றுமையை எழச்செய்யும் அழிவுகளை ஏற்படுத்தும் எனும் உண்மையை எடுக்காட்டிய பேரறிஞனாக உலகத் தமிழர் வரலாற்றில் திருவள்ளுவர் நிலைத்து நிற்கிறார். மனநலம் இன்மையால் ஏற்பட்ட போர்கள் பல இனங்களைச் சிதைத்து சின்னாபின்னம் ஆக்கியதைக் கண்டே சிற்றினம் சேராமை எனும் அதிகாரத்திலும்

மனநலம் மன்னுயிர்க்கு ஆக்கம் இனநலம்

எல்லாப் புகழும் தரும் - 457

எனக்கூறிச் சென்றுள்ளார்.

இனிதே,

தமிழரசி.

No comments:

Post a Comment