Sunday, 28 March 2021
Thursday, 25 March 2021
வந்தருள்வாய் கந்தா!
Sunday, 14 March 2021
குறள் அமுது - (145)
குறள்: “இழைத்தது இகவாமைச் சாவாரை யாரே
பிழைத்தது ஒறுக்கிற் பவர்” - 779
பொருள்: செய்த சபதத்தை முடிப்பதற்காகச் சென்று சாகும் வீரரை அது நடக்கவில்லை என இகழக்கூடியவர் யார்?
விளக்கம்: இத்திருக்குறள் படைச்செருக்கு என்னும் அதிகாரத்தில் உள்ள ஒன்பதாவது குறளாகும். போர் வீரர்களின் செருக்கையே படைச்செருக்கு என்பர். போர் வீரர்களுக்கு தமது வீரத்தின் மேல் இருக்கும் அளவுகடந்த நம்பிக்கையால் வருவதே படைச்செருக்கு.
ஒரு செயலைச் செய்வேன் எனச்சூளுரைப்பது இழைத்தது எனக் கூறப்படும். தப்பாமல் முடிப்பேன் என்பதை இகவாமை என்பர்.
தப்பாமல் செய்து முடிப்பேன் எனச் சூளுரைப்பதை இழைத்தது இகவாமை என்றார். சூளுரைத்து போருக்குச் செல்லும் வழக்கம் பண்டைக் காலம் தொட்டு இருந்து வருகிறது.
பாண்டியன் தலையாலங்கானத்து செருவென்ற நெடுஞ்செழியன் போருக்குப் புறப்பட முன்னர்
“ஓங்கிய சிறப்பின் உயர்ந்த வேள்வி
மாங்குடி மருதன் தலைவன் ஆக
உலகமொடு நிலைஇய பலர் புகழ் சிறப்பின்
புலவர் பாடாது வரைக என் நிலவரை”
எனச் சூளுரைத்துச் சென்றதைப் புறநானூறு காட்டுகின்றது. சூளுரைத்துப் போருக்குச் செல்வோர் வெற்றி பெறுவதும் உண்டு. வீரமரணம் அடைவதும் உண்டு.
ஏன் சூளுரைத்துப் போர் செய்யச் சென்றனர்? மனிதவாழ்வின் தேவைகளை இன்பங்களை மற்றவர்கள் சுரண்டும் போதும் அழிக்கும் போதும் நெஞ்சம் தொதிக்கின்றது. எடுத்துக்காட்ட தாயகத்தில் யாழ் நூலகம் எரியூட்டப்பட்டதைக் கூறலாம். அச்செயல் இன மத வேறுபாடு அற்று அன்று வாழ்ந்த கற்றோர் மனதை எரித்தது.
இத்தகைய சீண்டல்கள் தமிழரை
“நல்லோர் இல்லாத் தொல்பதி வாழ்தலில்
கொல்புலி வாழும் காடு நன்றே”
என்னும் கோட்பாடு உடையவர்கள் ஆக்கியது. ஆம் இலங்கையும் ஒரு தொல்பதியே. மூவாயிரத்து இருநூறு வருடங்களுக்கு முற்பட்ட இருக்கு வேதத்தில் இலங்கையின் பெயரும் உண்டு. அத்தகைய பெருமை மிக்க தொல்பதியான இலங்கையில் நல்லோர் இன்மையாலேயே இந்நிகழ்வுகள் நடக்கின்றன.
ஓர் இனத்தின் பண்பாட்டை இழிவு படுத்திய பொழுதும் இனவழிப்புகளின் போதும் உண்டாகிய மானமே சூளுரைத்து போருக்குச் செல்லத் தூண்டியது. தம்மினதுக்காக சபதம் செய்து செல்வோரில் இறந்தோர் தொகை, வெற்றி அடைந்தோர் தொகையிலும் கூடுதாலாக இருப்பினும் அவர்களை யாரும் இகழ்ந்து பேசுவதில்லை.
எந்தச் செயலானாலும்
"சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்" - 664
என்ற உண்மையையும் திருவள்ளுவரே எமக்குக் கற்றுத் தந்துள்ளார்.
இனிதே,
தமிழரசி.
Friday, 12 March 2021
ஆழ்கடலில் தத்தளித்த ஆறுமுகன்
அந்நாளில் புங்குடுதீவின் மிகச்சிறந்த சுழிகாரரான நாகனாதி என்பவரோடு வள்ளத்தில் புங்குடுதீவு திரும்பிய அன்று பெருஞ் சூராவளி வீசியது. 1931ல் வீசிய அச்சூராவளி தென்கிழக்கு ஆசியாவையே கதிகலக்கியது. அதில் சிக்குண்டு வள்ளம் உடைந்து கடலினுள் மூழ்க, கடலின் சுழியலையில் அகப்பட்டு தத்தளித்து குலதெய்வமான குமரவயலூர் முருகனை நினைத்துக் கதறினார்.
“ஆழிக்குள் வீழ்ந்தஎனைச் சுழியலை அமிழ்த்திட
அதல பாதால மருவியே
ஆசைக்கோர் மூச்சுவிட வழியின்றி அலையுண்டு
அதினின்று மேலேற நான்
வாழ்விக்க வேண்டுமென நின்பாத நம்பியே
வழிபட்டு அவல முற்றேன்
வானோர் தொழும்வள்ளலே மகரமீனாக வந்து
வாயினிற் பற்றி வந்தாய்
நாழிக்கொரு நெற்கொண்டு நானில வுயிர்காத்த
நங்கையுமை தந்த நாதா
நாதமுடிவான வொருசோதி நடராசர் பெற
வேதபொருள் ஓது குருவே
வாழிதிரு வடிகளென ஓதிமுனிவோர்க டொழ
வேல்கடவு வேத முதலே
வானவர்க் கரசந்தரு யானையும் குறவர்பெறு
மானையும் மணந்த பெருமானே”
- இயற்றியவர் பண்டிதர் மு ஆறுமுகன்
இப்பாடலில் பாடியுள்ளார்.
இந்த நிகழ்வுக்குப் பின்னர் எதற்கும் பயப்படாத நெஞ்சத் துணிவுள்ளவராக இருந்தார்.
“அஞ்சினர்க்குச் சதமரணம் அஞ்சாத நெஞ்சத்து
ஆடவனுக் கொருமரணம் அவனிமிசைப் பிறந்தோர்
துஞ்சுவரென் றறிந்திருந்தும் சாதலுக்கு நடுங்கும்
துன்மதிமூடரைக் கண்டால் புன்னகை செய்பவன் நான்.
என்றபாடல் அவரின் மந்திரமாக இருந்தது.
சிறுவயதில் இருந்தே தன் குடியும் நாடும் கல்வியில் முன்னேற வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு இருந்ததால்
“குடிசெய்வல் என்னும் ஒருவர்க்குத் தெய்வம்
மடிதற்று தான்முந் துறும்”
என்னும் திருவள்ளுவன் வாக்குப்படி இயற்கையின் சீற்றமும் அரவணைப்பும் அவரைப் புடம்போட்டு மிளிரச்செய்தனவோ!
என் தந்தைக்கு சுழியோடக் கற்றுக் கொடுத்ததோடு கல்விகற்க வள்ளத்தில் இந்தியாவுக்கு அழைத்துச் சென்று வந்த சுழிகாரர் நாகனாதி பாடித்திரிந்த “வலச்சி மக வருவாளா” என்ற நாட்டுப் பாடலை என் தந்தையின் 107வது பிறந்தநாளான இன்று புங்குடுதீவு உறவுகளுக்கு அறியத்தருகிறேன்.
“ஏலேலங்கடி ஏலேலோம்! ஏலேலங்கடி ஏலேலோம்!
பாட்டுப்பாட மனமிருக்கா! ஏலேலங்கடி ஏலேலோம்!
பாட்டுப்பாட மனமிருக்கு! பக்கதுணைக்கு யாரிருக்கா!
ஏலேலங்கடி ஏலேலோம்! ஏலேலங்கடி ஏலேலோம்!
பக்கதுணைக்கு படகிருக்கு! ஏலேலங்கடி ஏலேலோம்!
பக்குவமாய் பாத்து துடுப்பு போடணுமே!
ஏலேலங்கடி ஏலேலோம்! ஏலேலங்கடி ஏலேலோம்!
துடுப்பெடுத்து போடயில ஏலேலங்கடி ஏலேலோம்!
தூக்கும்ந்த கடலலய அடுத்தடுத்து மடக்கணுமே!
ஏலேலங்கடி ஏலேலோம்! ஏலேலங்கடி ஏலேலோம்!
அடுத்தடுத்து மடக்கயில ஏலேலங்கடி ஏலேலோம்!
அள்ளிவரு மீனலய வலவீசி பிடிக்கணுமே!
ஏலேலங்கடி ஏலேலோம்! ஏலேலங்கடி ஏலேலோம்!
வலவீசி பிடிக்கயில ஏலேலங்கடி ஏலேலோம்!
வலயறுந்து போகாம வாரி எடுக்கணுமே!
ஏலேலங்கடி ஏலேலோம்! ஏலேலங்கடி ஏலேலோம்!
வாரி எடுக்கயில ஏலேலங்கடி ஏலேலோம்!
வாளமீனு வளத்திமீனு வகவகயாய் பிரிக்கணுமே!
ஏலேலங்கடி ஏலேலோம்! ஏலேலங்கடி ஏலேலோம்!
வகவகயாய் பிரிக்கயில ஏலேலங்கடி ஏலேலோம்!
வலச்சிமக வருவாளா! வலகைய தருவாளா!
ஏலேலங்கடி ஏலேலோம்! ஏலேலங்கடி ஏலேலோம்!
- நாட்டுப்பாடல் (புங்குடுதீவு)
இனிதே,
தமிழரசி.