Thursday 13 December 2018

குறள் அமுது - (140)



குறள்:
எற்றென்று இரங்குவ செய்யற்க செய்வானேல்
மற்றன்ன செய்யாமை நன்று"                       - 655

பொருள்: 
பின்னர் நினைத்துக் கவலைப்படக் கூடிய செயல்களச் செய்ய வேண்டாம். நினைத்துக் கவலைகொண்டாலும் மீண்டும் அது போன்ற செயலைச் செய்யாதிருப்பது நல்லது.

விளக்கம்:
இத்திருக்குறள் வினைத்தூய்மை என்னும் அதிகாரத்தில் உள்ள ஐந்தாவது குறளாகும். நற்செயல் செய்வதை வினைத்தூய்மை என்பர். எற்று - நினைத்து, எற்றுதல் - நினைத்தல். பிறர்படும் துன்பத்தைக் கண்டு இரங்குதல் நற்செயலே ஆகும். ஆனால் நாம் ஒரு தீயசெயலை செய்துவிட்டு அதை நினைந்து நினைந்து தன்னிரக்கம் கொள்ளுதல் நல்ல செயலல்ல. 

பிறருக்குத் தீமை செய்யாமல் இருப்போர் மிகச்சிலரே. தாம் தீமை செய்கின்றோம் என்பதை உணராமலேயே தீமை செய்வாரும் உளர். அறிந்தோ அறியாமலோ ஒழுக்கம் தவற நேரிட்டாலோ, கெட்ட வழிகளில் செல்ல நேரிட்டாலோ பிறருக்குத் தீமை செய்ய நேரிட்டாலே காதலியோ காதலனோ கைவிட்டாலோ அவற்றை ஓயாமல் எண்ணுவது தவறு. அது சில வேளைகளில் அப்படி நினைப்போரது மனநிலையைப் பாதிக்கும். அது புத்திப் பேதலிப்பை ஏற்படுத்தி தன்னிலை மறந்து தகாத செயல்களைச் செய்யத் தூண்டும்.

பணத்தை செலவு செய்தாலும் மனத்தை செலவு செய்யாதே
மனம் வாசனையானால் வாய்ப்பது முத்து
இது என் தந்தை கூறும் பொன்னான ஒரு சொற்றொடர். பணத்தை மட்டுமல்ல நம்மை நாமே தீயவழியில் செலவு செய்ய நேரிட்டாலும் கழிவிரக்கம் கொள்ளக்கூடாது. [நடந்ததை எண்ணி ஒருவர் தன்மேல் கொள்ளும் பேரிரக்கம் கழிவிரக்கமாகும்.] தன்னிரக்கம் எம்மை மனநோயாளர்களாக்கும். மனதை செலவு செய்தால் மனநோயாளர் ஆவோம். மன அழுக்குகள் மன அழுத்தத்தை ஏற்படுத்தும். எம்மை மன அழுத்தத்தில் இருந்து காத்துக் கொள்வதற்காகவே திருவள்ளுவர் இக்குறளில் செய்தவற்றை எண்ணி தன்னிரக்கம் கொள்ளவேண்டாம் என்கிறார்.

அப்படி நினைப்போமேயானால் திரும்பவும் [மற்று] அதுபோன்ற [அன்ன] செயலைச் செய்யதிருப்பது நன்று.

No comments:

Post a Comment