Friday 3 February 2017

மடையரைப் பாடவோ!


‘மடையரைப் பாடவோ’ என்று நான் கூறவரவில்லை. இராமச்சந்திரக் கவிராயர் என்பவர் பொதிகைமலை பெரியம்மை கோயிலில் நின்று அந்த அம்மனிடம் கேட்ட கேள்வியே இது. 

கடந்த மார்கழி மாதம் ஒரு விழாவுக்குச் சென்றிருந்த போது ஒரு கவிஞர், “தான் என்றும் பார்த்தோ கேட்டோ அறியாதவர்களைப் பற்றி அவர்களின் பிறந்த நாளுக்குப் பாட்டு எழுதித்தரும் படி கேட்கிறார்கள்” எனச் சொன்னார். அப்போது ‘சொல்லுக்கட்டும் புலவரைக் கண்டால் சொல்லு கவிசொல்லு எனக்கேட்பர்’  என இராமச்சந்திரக் கவிராயரின் அடியையும் சேர்த்து நினைத்துக் கொண்டேன். இராமச்சந்திரக் கவிராயரை கதவைப் பூட்டி அடைத்துவைத்து 'தங்களைப் புகழ்ந்து பாடும்படி' மல்லுக்கட்டி இருப்பார்களோ! அதனால் அந்தப்பாடலைப் பாடினார் போலும்.

புல்லுக்கட்டும் விறகும் சுமந்து வாழ்க்கை நடத்தினோர் முற்பிறவியில் செய்த புண்ணியத்தால் பெரும் பணக்காரர் ஆகிவிட்டார்கள். நெல்லு மூட்டையும் பணமூட்டையும் சேர்ந்தததால் தமது மதிப்பைக் காட்ட நீலக்கல்லில் கடுக்கனும் போட்டுக் கொள்கிறார்கள். சொற்களால் கவிதை கட்டும் புலவரைக் கண்டால் கிட்டப் [தூரிப்] பாய்ந்து கதவையடைத்து எதிர்த்து சண்டைக்கு வருகிறார்கள். இத்தகைய மடையரைப் பாடவா? எனப் பொதிகை[மலயம்] மலைச்சாரற் கோயிலில்  வாழும் பெரியம்மையைக் கேட்டுள்ளார்.

புல்லுக் கட்டும் விறகும் சுமந்தபேர்
  புண்ணிய வசத்தினால்
நெல்லுக் கட்டும் பணக்கட்டும் கண்டபின்
  நீலக்கல்லில் கடுக்கனும் போடுவார்
சொல்லுக் கட்டும் புலவரைக் கண்டால்
  தூரிப் பாய்ந்து கதவை அடைத்தெதிர்
மல்லுக் கட்டும் மடையரைப் பாடவோ
  மலயச் சாரலில் வாழ் பெரியம்மையே

தற்கால தமிழக அரசியலைப் பார்த்திருந்தால் இராமச்சந்திரக் கவிராயர் எப்படிப்பாடி இருப்பாரோ!!
இனிதே,
தமிழரசி.

1 comment:

  1. அருமையான இலக்கிய விளக்கம்
    பாராட்டுகள்

    ReplyDelete