Monday 24 November 2014

விடுகதை - 1

1.எட்டுக்கால் ஊன்றி இருகால் படமெடுத்து 
வட்டக்குடை பிடித்து வாராராம் வன்னியனார், 
அவர் யார்?

2. எப்படித் தேடினாலும் கிடைக்காத கல்
யாரும் வாங்கவோ விற்கவோ முடியாத கல், 
அது என்ன கல்?

3. விரலும் நகமும் இல்லாக் கை
எல்லோருக்கும் வேண்டிய கை, 
அது என்ன கை?

4. பூப்பூத்து காய் காய்த்தும் பழம் பழுக்கா மரம், 
அது என்ன மரம்?

5. பொச்சுக் குடிசைக்குள்ளே ஓட்டு வீடு கட்டி அதனுள்ளே
வெண்பளிங்கு மாளிகை இட்டு தடாகத்தோடிருப்பேன், 
நான் யார்?

6. சாம்பல் ஆண்டியும் சந்தைக்குப் போனான், 
அவன் யார்?

7. ஆழக்குழிவெட்டி அதிலே ஒரு முட்டை இட்டு
அண்ணாந்து பார்த்தால் தொண்ணூறு முட்டை, 
அது என்ன?

8. இலை இருக்கு கிளை இல்லை
பட்டை இருக்கு கட்டை இல்லை
கன்று இருக்கு பசு இல்லை, 
அது என்ன?

9. கால் இருக்கு விரல் இல்லை
வாய் இருக்கு நாக்கு இல்லை, 
அது என்ன?

10. கிணற்றிலே அள்ளாத நீர்
கேணியிலே காணாத நீர்
சுவையிலே குறையாத நீர், 
அது என்ன?

[இவற்றின் விடைகளை அடுத்த விடுகதையில் பார்க்கலாம்]


இனிதே, 
தமிழரசி

No comments:

Post a Comment