Wednesday 28 May 2014

குறள் அமுது - (90)

குறள்:
கெடுவல்யான் என்பது அறிக தன்நெஞ்சம்
நடுஒரீஇ அல்ல செயின்                                - 116

பொருள்:
நெஞ்சம் நடுவுநிலைமை தவறி தவறான செயல்களைச் செய்யத் தொடங்குமானால் ‘நான் கெட்டு அழியப் போகிறேன்’ என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

விளக்கம்:
தாம் செய்வது சரியா பிழையா என்பதை சிந்தித்து அறியும் தன்மை உள்ளோருக்கு அவர்கள் செய்யும் தவறுகளை அவரது நெஞ்சம் அவர்களுக்கு உணர்த்தும். நாம் செய்வது தவறு என்பதை நெஞ்சம் அறிந்து உணர்ந்தாலும், செய்யும் செயலின் மேல் உள்ள விருப்பத்தால் அதைச் செய்ய நம் மனம் நாடும். செய்த தவறை மீண்டும் மீண்டும் செய்யத் தூண்டுவதும் எமது நெஞ்சமே.

அதனாற்றான் திருவள்ளுவர், நாம் செய்யும் தவறுகளை நம் நெஞ்சின் மேல் ஏற்றி ‘தன் நெஞ்சம் நடுஒரீஇ அல்ல செயின்’ என்றார். நடுநிலை இல்லாத் தன்மை நடுஒரீஇ என்று சொல்லப்படும். நடுநிலை உடையவர் நெஞ்சம் பாகுபாடு அற்று இருக்கும். பூமியில் மேடு பள்ளம் இருப்பது போல் மனிதவாழ்வில் ஏற்றத் தாழ்வுகள் இருக்கும். எனவே நாம் மற்றவர்களைவிட உயர்ந்த வாழ்க்கை வாழவேண்டும் என்பதற்காக நெஞ்சின் நடுநிலைமையை இழக்காக் கூடாது. 

நடுநிலையுள்ள நெஞ்சோடு வாழ்பவரின் நெஞ்சம் நடுநிலைவிட்டு தவறான செயல்களைச் செய்யத் தூண்டுமானால் அந்தக் கணமே ‘நான் கெட்டு அழிந்து போகப்போகிறேன்’ என்பதை அவர் அறிந்து கொள்ள வேண்டும். ஆதலால் நாம் கெட்டு ஒழிந்து போகாதிருக்க நம் நெஞ்சை நடுநிலை தவறாது பாதுகாத்துக் கொள்ள வேண்டும். 

No comments:

Post a Comment