Monday, 22 September 2025

கலைமகளே கருணைக்கண் பாரம்மா!


பிள்ளை உள்ளத்தாமரையில் பொற்புடனே நின்றவளே
            பல்கலையும் பைந்தமிழும் பயிற்றுவித்த தாயவளே
வெள்ளை மனத்தாமரையில் வீற்றிருக்க வருவாயா
            வேண்டும்வரம் வேண்டுவோர்க்கு வேண்டுவன அருள்வாயா
கள்ளை விண்டுந்தாமரையின் கருவண்டெனக் கற்றிட
            கல்வியெனும் கோதிலா அமுதைக் கற்கண்டாய் தருவாயா
கொள்ளை இன்பகோமளக் கொழுந்தே கோதாட்டியெம்மை
            கருதிவளர்க்குங் கலைமகளே கருணைக்கண் பாரம்மா!
இனிதே,
தமிழரசி.

சொல்விளக்கம்:
பிள்ளை - சிறுபிள்ளைப் பருவத்தில்
உள்ளத்தாமரையில் - உள்ளமாகிய தாமரையில்/உள்ளுதல்[நினைத்தல்-நிலைத்திருக்கும்]
பொற்புடன் - மிளிர
பயிற்றுவித்த - கற்பித்த
தாயவளே - தாயே
வெள்ளை - அழுக்கற்ற/வஞ்சனை இல்லாத
மனத்தாமரையில் - மனமாகிய தாமரையில்/சிந்தனை[கற்பனை-மாறுபடும்]
வேண்டும் வரம் - கேட்கும் வரம்
வேண்டுவோர்க்கு - கேட்போர்க்கு
வேண்டுவன - தேவையானவற்றை
கள்ளை - தேனை
விண்டும் - சிந்தும்
கருவண்டென - கருநிற தேன்வண்டு போல[பெருந்தேனி மீண்டும் மீண்டும் சுழன்று தேன்                                   அருந்துவது போல]
கற்றிட - படிக்க
கோதிலா - குற்றமில்லாத/ குறையில்லாத
அமுதை - அமிழ்தத்தை
கற்கண்டு - பலவகையாக சுவைத்து [கடித்து விரைவாக/உமிந்து மெதுவாக] உண்ணலாம்
கொள்ளை இன்பக்கோமளம் - அளவிடமுடியாத பேரின்ப அழகான
கொழுந்தே - தளிர் நெருப்பே [மேல் நோக்கி எரியும் தீச்சுடர்]
கோதாட்டி - பெருமைப்படுத்தி
எம்மை - எங்களை
கருதிவளர்க்கும் - கருத்தில் கொண்டு வளர்க்கின்ற

Sunday, 21 September 2025

வாழ்வாங்கு வாழ்வோர்!


பாவியர் தம்மையும் படைத்தவன் நீயோ
            பரமன் எனும் பெயரைத் தந்ததுயாரோ
ஆவியை வைத்தாய் அனைத்துமே தந்தாய்
            ஆணவம் அற்று வாழவும் வைத்தாய்
கூவி அழைத்தே கும்பிட்டு நின்றேன்
            குணங்கெட்ட செயலை செய்பவர் தம்மை
வௌவி அழித்திடு! வையகம் எங்கும்
            வாழ்வாங்கு வாழ்வோர் வாழ்ந்திட நன்றே
இனிதே,
தமிழரசி.

சொல்விளக்கம்:
பாவியர் - குற்றம் செய்வோர்/தீயவர்
பரமன் - மேன்மையான பண்புகளைக் கொண்டவன்
ஆவியை - உயிரை
அனைத்துமே - தேவையான அனைத்தையும்
அற்று - இல்லாது
குணங்கெட்ட - கெட்டதை
வௌவி - பற்றியெடுத்து
வையகம் - உலகம்
வாழ்வாங்கு - உலக ஒழுக்கத்தின் படி/மனிதப்பண்புடன்
வாழ்வோர் - வாழ்கின்றவர்கள்
வாழ்ந்திட - வாழ

Monday, 1 September 2025

வித்தக விநாயக!


பாதச் சிலம்பு பலவிசை பகர
நாத நர்த்தன மாடிடு நாயக!
வேத மந்திர வித்தக விநாயக!
பேத மறுத்து பெருவினை போக்கிடு.
பேதித்திடு மென் பேதமை எல்லாம்
ஆதி அந்தத்து அகத்தினுள் அடக்கி
நீதியாய் ஆக்கி நித்தலும் நின்
பாத மலர்ப் பதத்தினுள் அமர்த்திடு

இனிதே,
தமிழரசி.

Friday, 1 August 2025

மயக்கும் தமிழ்


இன்பத்தமிழே எம் இதயத்து வாழ்வே
பன்னெடுங்  காலம்  பழமையாய்  போயுமே
கன்னியாய்த்  திகழும்  கவின்  அழகாலே
மன்னிய  காதலில்  மயங்கி  நின்றோமே

உருகிடும்  உணர்வினில்  ஊறிடும்  தமிழை
பருகிடும்  ஆசையால்  பாடியும்  ஆடியும்
பெருகிடும்  இன்பொடு  பேணியே  பெரிதாய்
தருகுவம்  உவந்தே  தாரணி  தழைக்க
இனிதே,
தமிழரசி.

Saturday, 5 April 2025

வியந்து நாம்காண விரைந்து நீயாடு


மணிமிடற் றந்தண மயக்கங்கள் போக்கவே

மனதினிற் தங்கியே மாயையை காட்டவே

அணிநிழல் காட்டினை அரங்கது ஆக்கியே

அனைத்துயிர் வாழவே ஐம்பூ தமொடு

பணிவளை குலுங்கிட பறையது ஆர்ப்ப

பலவிசை இயம்ப பல்லுருவம் பெயர்த்து

வேணிமுடித்த சடை விண்திசை அலம்ப

வியந்து நாம்காண விரைந்து நீயாடு

இனிதே,

தமிழரசி.


சொல்விளக்கம்:

மணிமிடறு - நீலமணி போன்ற கழுத்து [நஞ்சுண்டதால்]

அந்தணன் - செந்தன்மை பூண்டொழுகும் சிவன்

மயக்கங்கள் - தடுமாற்றங்கள்

மாயை காட்டல் - பொய்யா? மெய்யா? எனும் உண்மையைக் காட்ட

அணிநிழல் காடு - மரநிழலால் செறிந்த காடு

அரங்கம் - மேடை

அனைத்துயிர் - எல்லா உயிரும்

ஐம்பூதம் - நிலம், தீ, நீர், காற்று, வான்வெளி

பணிவளை - பாம்பாலான காப்பு

பலவிசை இயம்ப - பலவகை இசைகளின் ஒலி எழ

பல்லுருவம் பெயர்த்து - பல உருவங்களை மாறி மாறி எடுத்து

வேணிமுடித்த சடை - முடித்த கூந்தல் சடை

விண்திசை அலம்ப -வானத்துத் திசையெங்கும் அலைய

வியந்து - வியப்போடு

Friday, 14 March 2025

சக்திவேல் ஏந்தும் சண்முகா!


சக்திவேல் ஏந்தும் சண்முகா சரவணா
            சித்தமதில் குடியிருக்க சித்தமிரங்கி வா
பக்திவேல் ஏந்தும் பக்தர்கள் நாமென்றே
            பத்திமை அறியாது பத்தராய் தடுமாறி
உத்திவேல் ஏந்தி உண்மை உணராதே
            உவந்து உழன்று உழைத்து அழிவேமை
தத்தி வேலேந்தி தத்துவம் உரைக்க
            தளர்நடை இட்டுவா தண்டபாணி தெய்வமே
இனிதே,
தமிழரசி.

சொல்விளக்கம்:
சக்திவேல் - ஆதிசக்தி கொடுத்தவேல்
சண்முகா - அழகிய முகத்தை உடையவன். சண் - அழகு.
                    சண்+முகன் = சண்முகன், முருகன்.
சரவணா - சரவணம் - ஒருவகை நாணல் புல். சரவணப் பாயில்                              பிறந்தவன், முருகன்.
சித்தமதில் - மனதில்
சித்தமிரங்கி - மனமிரங்கி
பக்திவேல் - பக்தியாகிய வேல்
பக்திமை - பக்தியின் தன்மை
பக்தராய் - பக்தர் எனக்கூறி
தடுமாறி - மனம் ஒன்றாது
உத்திவேல் - உந்தி எழும் நுண்ணறிவாகிய வேல்
உண்மை உணராது - மெய்ப்பொருள் உண்மையை உணராது
தத்தி - தத்தி தத்தி
தத்துவம் - மெய்ப்பொருள் உண்மையை [கடவுள் உண்மை]
உரைக்க -  சொல்ல
தளர்நடை இட்டு - தத்தித்தத்தி குழந்தை நடக்கும் நடைநடந்து
தண்டபாணி தெய்வம் - முருகன்[தண்டக்கோல் வைத்திருப்போன்]

Wednesday, 26 February 2025

பண்ணிய புண்ணியமேது?


சிவனவன் திருக் கேதீச்சரத்தான் 

  செந்தமிழோர் போற்றும் செய்யுளி லுளான்

அவனவன் எண்ணும் எண்ணத்துள் உளான்

அணுமுதல் அண்டம் அனைத்து முளான்

அயனவன் அரியவன் காணா நீள்

அனலுருவாய் முகிழ்ந்த முதல்வன்

சிவனவன் சிவ ராத்திரியான் எம்

சிந்தை நிறைய பண்ணிய புண்ணியமேது

இனிதே,

தமிழரசி.


சொல்விளக்கம்:

சிவனவன் - சிவனாகிய அவன்

திருக்கேதீச்சரத்தான் - திருக்கேதீச்சரத்தில் உள்ளான்

எண்ணும் - நினைக்கும்

அண்டம் - univers

அயனவன் - பிரம்மாவும்

அரியவன் - விஷ்ணுவும்

காணா - பார்க்க முடியாமல்

நீள் அனல் - நீண்ட தீ

உருவாய் - வடிவாய்

முகிழ்ந்த - தோன்றிய

முதல்வன் - எல்லாவற்றுக்கும் காரணன்

சிவராத்திரியான் - சிவராத்திரிக்கு உரியவன்

நிறைய - நிறைந்திருக்க

பண்ணிய - செய்த

புண்ணியம் - நல்வினைப் பயன்.

ஏது - என்ன?


குறிப்பு:

சிவராத்திரியான இன்று திருக்கேதீச்சரத்து மகாசிவலிங்கம் முன்பு உருவான பாமாலை இது.