Saturday, 29 November 2025

வெள்ளத்துள் நின்றாடும் ஈசனே!


வெள்ளத்துள் நின்றாடும் ஈசனே வினை
                வெள்ளத்துள் நாம் ஆடலாகுமோ
கள்ளத்துள் கரந்தாடக் கற்றனையோ
                கள்ளத்துள் நாமாடிக் களிப்பதென்னே
பள்ளத்துள் பாய்ந்தாடும் பரமனே படு
                பள்ளத்துள் நாமாடக் கூடுமோ
உள்ளத்துள் உவந்தாடும் பாதனே உன்
                உள்ளத்துள் நாமாடல் ஒன்னுமோ
இனிதே,
தமிழரசி.

சொல்விளக்கம்:
கள்ளத்துள் - வஞ்சனையாக
கரந்தாடக் - மறைந்தாடக்
கள்ளத்துள் நாமாடி - பொய்யாக நாமாடி
களிப்பதென்னே - மகிழ்வது என்னவோ?
பள்ளத்துள் -தாழ்ந்த நிலத்தில்
படு பள்ளம் - மிகமிக ஆழமான குழியில்
நாமாடக் கூடுமோ - நாம் ஆட முடியுமா?
உள்ளத்துள் - மனத்துள்
உவந்து - மனம் மிக மகிழ்ந்து
பாதனே - பாதத்தையுடையவனே
உன் உள்ளத்துள் - உனது நெஞ்சத்துள்
ஒன்னுமோ - உறுதியாய் நிகழுமோ?

குறிப்பு
காட்டாற்று வெள்ளமாய் கல்லும் மலையும் குதித்து படு பாதாளத்தில் பாய்ந்து வீழ்ந்தோடி கட்டிடங்களைத் தகர்த்து உயிர்களைக் கொன்று குவித்த இயற்கையின் சீற்றத்தை பார்த்த தாக்கத்தால் எழுந்த பாடல்.

Saturday, 8 November 2025

எம் நிதியே! நானில்லா நேரத்தில் எங்குற்றாய்!


என் தந்தை பண்டிதர் மு ஆறுமுகன் அவர்களின் தம்பி - அமரத்துவம் அடைந்த முத்துக்குமாரு பாலசுந்தரம், புனிதவதி பாலசுந்தரம் ஆகியோரின் அருமை மகளும் திரு சிவச்சந்திரன் அவர்களின் அன்பு மனைவியும் எனது ஆருயிர்த் தங்கையுமான சிவகலாநிதி சிவச்சந்திரன் அவர்கள் 03/11/2025 திங்கட்கிழமை நயினை நாகபூசணி அம்மன் திருவடித் தாமரைத் தேனுடன் கலந்தார். அப்போது நான் நம் நாட்டிற்குச் சென்றிருந்ததால் அந்நிகழ்வு எனக்கு பேரதிர்ச்சியைத் தந்தது. என்னைதமிழ்’, ‘தமிழ் அக்காஎன்றெல்லாம் அழைத்துக் கொஞ்சி மகிழ்ந்த தங்கையின் உடலைப்பார்க்கப் போகிறேன். தாய்த் தாய் தேடிச் செல்லும் இவ்வுலகின் மாறாத சட்டம் இது. எனினும் மாபெரும் வெற்றிடமே என்னுள் எஞ்சி நிற்கிறது. நயினை நாகபூணிசக்கு எம் குடும்பத்துநிதிஉடனே தேவைப்பட்டதோ! வைப்பில் இட்டாளோ!! எங்கே தேடுவேனோ!!!

இனிதே,

தமிழரசி.




Monday, 22 September 2025

கலைமகளே கருணைக்கண் பாரம்மா!


பிள்ளை உள்ளத்தாமரையில் பொற்புடனே நின்றவளே
            பல்கலையும் பைந்தமிழும் பயிற்றுவித்த தாயவளே
வெள்ளை மனத்தாமரையில் வீற்றிருக்க வருவாயா
            வேண்டும்வரம் வேண்டுவோர்க்கு வேண்டுவன அருள்வாயா
கள்ளை விண்டுந்தாமரையின் கருவண்டெனக் கற்றிட
            கல்வியெனும் கோதிலா அமுதைக் கற்கண்டாய் தருவாயா
கொள்ளை இன்பகோமளக் கொழுந்தே கோதாட்டியெம்மை
            கருதிவளர்க்குங் கலைமகளே கருணைக்கண் பாரம்மா!
இனிதே,
தமிழரசி.

சொல்விளக்கம்:
பிள்ளை - சிறுபிள்ளைப் பருவத்தில்
உள்ளத்தாமரையில் - உள்ளமாகிய தாமரையில்/உள்ளுதல்[நினைத்தல்-நிலைத்திருக்கும்]
பொற்புடன் - மிளிர
பயிற்றுவித்த - கற்பித்த
தாயவளே - தாயே
வெள்ளை - அழுக்கற்ற/வஞ்சனை இல்லாத
மனத்தாமரையில் - மனமாகிய தாமரையில்/சிந்தனை[கற்பனை-மாறுபடும்]
வேண்டும் வரம் - கேட்கும் வரம்
வேண்டுவோர்க்கு - கேட்போர்க்கு
வேண்டுவன - தேவையானவற்றை
கள்ளை - தேனை
விண்டும் - சிந்தும்
கருவண்டென - கருநிற தேன்வண்டு போல[பெருந்தேனி மீண்டும் மீண்டும் சுழன்று தேன்                                   அருந்துவது போல]
கற்றிட - படிக்க
கோதிலா - குற்றமில்லாத/ குறையில்லாத
அமுதை - அமிழ்தத்தை
கற்கண்டு - பலவகையாக சுவைத்து [கடித்து விரைவாக/உமிந்து மெதுவாக] உண்ணலாம்
கொள்ளை இன்பக்கோமளம் - அளவிடமுடியாத பேரின்ப அழகான
கொழுந்தே - தளிர் நெருப்பே [மேல் நோக்கி எரியும் தீச்சுடர்]
கோதாட்டி - பெருமைப்படுத்தி
எம்மை - எங்களை
கருதிவளர்க்கும் - கருத்தில் கொண்டு வளர்க்கின்ற

Sunday, 21 September 2025

வாழ்வாங்கு வாழ்வோர்!


பாவியர் தம்மையும் படைத்தவன் நீயோ
            பரமன் எனும் பெயரைத் தந்ததுயாரோ
ஆவியை வைத்தாய் அனைத்துமே தந்தாய்
            ஆணவம் அற்று வாழவும் வைத்தாய்
கூவி அழைத்தே கும்பிட்டு நின்றேன்
            குணங்கெட்ட செயலை செய்பவர் தம்மை
வௌவி அழித்திடு! வையகம் எங்கும்
            வாழ்வாங்கு வாழ்வோர் வாழ்ந்திட நன்றே
இனிதே,
தமிழரசி.

சொல்விளக்கம்:
பாவியர் - குற்றம் செய்வோர்/தீயவர்
பரமன் - மேன்மையான பண்புகளைக் கொண்டவன்
ஆவியை - உயிரை
அனைத்துமே - தேவையான அனைத்தையும்
அற்று - இல்லாது
குணங்கெட்ட - கெட்டதை
வௌவி - பற்றியெடுத்து
வையகம் - உலகம்
வாழ்வாங்கு - உலக ஒழுக்கத்தின் படி/மனிதப்பண்புடன்
வாழ்வோர் - வாழ்கின்றவர்கள்
வாழ்ந்திட - வாழ

Monday, 1 September 2025

வித்தக விநாயக!


பாதச் சிலம்பு பலவிசை பகர
நாத நர்த்தன மாடிடு நாயக!
வேத மந்திர வித்தக விநாயக!
பேத மறுத்து பெருவினை போக்கிடு.
பேதித்திடு மென் பேதமை எல்லாம்
ஆதி அந்தத்து அகத்தினுள் அடக்கி
நீதியாய் ஆக்கி நித்தலும் நின்
பாத மலர்ப் பதத்தினுள் அமர்த்திடு

இனிதே,
தமிழரசி.

Friday, 1 August 2025

மயக்கும் தமிழ்


இன்பத்தமிழே எம் இதயத்து வாழ்வே
பன்னெடுங்  காலம்  பழமையாய்  போயுமே
கன்னியாய்த்  திகழும்  கவின்  அழகாலே
மன்னிய  காதலில்  மயங்கி  நின்றோமே

உருகிடும்  உணர்வினில்  ஊறிடும்  தமிழை
பருகிடும்  ஆசையால்  பாடியும்  ஆடியும்
பெருகிடும்  இன்பொடு  பேணியே  பெரிதாய்
தருகுவம்  உவந்தே  தாரணி  தழைக்க
இனிதே,
தமிழரசி.

Saturday, 5 April 2025

வியந்து நாம்காண விரைந்து நீயாடு


மணிமிடற் றந்தண மயக்கங்கள் போக்கவே

மனதினிற் தங்கியே மாயையை காட்டவே

அணிநிழல் காட்டினை அரங்கது ஆக்கியே

அனைத்துயிர் வாழவே ஐம்பூ தமொடு

பணிவளை குலுங்கிட பறையது ஆர்ப்ப

பலவிசை இயம்ப பல்லுருவம் பெயர்த்து

வேணிமுடித்த சடை விண்திசை அலம்ப

வியந்து நாம்காண விரைந்து நீயாடு

இனிதே,

தமிழரசி.


சொல்விளக்கம்:

மணிமிடறு - நீலமணி போன்ற கழுத்து [நஞ்சுண்டதால்]

அந்தணன் - செந்தன்மை பூண்டொழுகும் சிவன்

மயக்கங்கள் - தடுமாற்றங்கள்

மாயை காட்டல் - பொய்யா? மெய்யா? எனும் உண்மையைக் காட்ட

அணிநிழல் காடு - மரநிழலால் செறிந்த காடு

அரங்கம் - மேடை

அனைத்துயிர் - எல்லா உயிரும்

ஐம்பூதம் - நிலம், தீ, நீர், காற்று, வான்வெளி

பணிவளை - பாம்பாலான காப்பு

பலவிசை இயம்ப - பலவகை இசைகளின் ஒலி எழ

பல்லுருவம் பெயர்த்து - பல உருவங்களை மாறி மாறி எடுத்து

வேணிமுடித்த சடை - முடித்த கூந்தல் சடை

விண்திசை அலம்ப -வானத்துத் திசையெங்கும் அலைய

வியந்து - வியப்போடு