Sunday, 15 February 2026

கண்ணில் அமுதூறுமே

திருக்கேதீச்சர திருவாசகமட நடராசர்

திருநின்று வளர்கின்ற தில்லைப்பதி வாழ்மன்னன்

  தருகின்ற அறிவெல்லாம் தண்ணளியே துணையாக

மருவுகின்ற மயக்கமோ மமதைதனை மேலாக்க

  மால்கொண்ட திருமாலும் மலரவனும் அடிமுடிகாணா

எரிகின்ற நீளுருவை ஏங்கியேத்தி அடிபரவு

  ஏற்றமிகு சிவராத்திரி நன்னாளில் கேதீச்சர

திருவாசக மடந்நண்ணி திருக்கூட்டச் சிவனடியார் 

  தேனுந்துமாநடங் காண கண்ணில் அமுதூறுமே

இனிதே,

தமிழரசி.


சொல்விளக்கம்:

திருநின்று - அறிவுச்செல்வம் நின்று

தில்லைப்பதி - சிதம்பரம்

வாழ்மன்னன் - சிதம்பர நடராஜர்

தண்ண்ளியே - கருணையே

மருவுகின்ற - சேர்கின்ற

மயக்கமோ - மனக்குழப்பமோ

மமதை - நானே பெரியவன் எனும் எண்ணம்

மேலாக்க - மேலோங்கச் செய்ய

மால்கொண்ட - மயக்கம் கொண்ட

திருமால் - விஷ்ணு

மலரவன் - பிரம்மா

எரிகின்ற - எரியும்

நீளுருவை - நீளமான உருவை

ஏங்கிஏத்தி - ஏக்கத்துடன் வாழ்த்தி

அடிபரவ - அடியை வணங்க

திருவாசக மடம் - திருக்கேதீச்சரத்தில் இருக்கும் மடம்

நண்ணி - சென்று

தேனுந்து மாநடம் - ஆனந்தத் தேன் சிந்தும் சிவனின் திருநடம்


குறிப்பு:

விண்ணை நோக்கிப் பார்க்கும் நடராஜ வடிவம் மிகவும் அரிய ஒன்றாகும். சிறுவயதில் நான் பார்த்து இரசித்து மகிழ்ந்த ஒர் அற்புத நடனராசர் சிலையே இது. இச்சிலை [மேலே படத்தில் உள்ளது] அந்நாளில் திருவாசக மடத்தில் இருந்தது. பெரும்பாலும் நடராசர் சிலைகள் கடைக்கண்ணால் அம்பாளை பார்ப்பது போல் இருக்கும். அவற்றுக்கு மாறாக விண்ணை நோக்கியபடி இருப்பதே இச்சிலையின் சிறப்பாகும்

No comments:

Post a Comment