Monday, 19 January 2026

யாமறிய ஆனந்தத் தேன்நடம் காட்டு!


ஆனந்தத் தேனருந்த ஆசைகொண்ட நாளாய்
            ஆடிவிளையாடி பாடிமகிழ்ந்தே யுயர்
வானந்த மலைதோயும் வான்மதியம் சூடும்
            விண்ணவனாய் வேதமுதல்வனாய் விளங்கு ஒளியாய்
தானந்தம் இல்லாத் தன்மையைக் காட்டிட
            தனித்தே ஈமவனமே அரங்காய் ஆட்டுகப்பாய்!
யானந்தம் கண்டிலேன் யாதுசெய்வோம் 
            யாமறிய ஆனந்தத் தேன்நடம் காட்டு!
இனிதே,
தமிழரசி.

சொல்விளக்கம்:
ஆனந்தத்தேன் - திருவருட்தேன்
அருந்த - குடிக்க
உயர் - உயர்ந்த
வானந்தம் [வான் + அந்தம்] - வானத்து முடிவு 
மலைதோயும் - மலை முட்டும்
வான்மதியம் - சந்திரன்/பிறைச்சந்திரன்
விளங்கு ஒளியாய் - மிளிர்கின்ற ஒளியாய்
தானந்தம் - தனக்கு முடிவு
ஈமவனம் - சுடுகாடு
அரங்காய் - மேடையாய்
ஆட்டுகப்பாய் - ஆடிமகிழ்வாய்
யானந்தம் கண்டிலேன் - நான் முடிவைக் காணவில்லை
யாது செய்வோம் - என்ன செய்வோம்
யாமறிய - நாம் காண/அறிந்துகொள்ள
ஆனந்தத் தேன்நடம் - திருவருட்தேன் நடனம்

No comments:

Post a Comment