Saturday, 7 May 2022

சித்திரமும் கைப்பழக்கம்

 பதினைந்து வருடங்களுக்கு முன் கீறிக் கசக்கியது

இயற்கையையும் இயற்கையின் பல்வகைப்பட்ட ஆற்றல்களையும் பார்த்து மகிழ்ந்த பண்டைய தமிழர் அவற்றை குகைகளில் சுவர்களில் சித்திரமாக வரைந்து மகிழ்ந்தனர். அதனால் பிறந்தவையே

கண் இரண்டும் விற்று சித்திரம் வாங்குவரோ

சுவர் இருந்தாற்றான் சித்திரம் வரையமுடியும் போன்ற பழமொழிகள். 


சங்க இலக்கியம் சித்திரத்தை ஓவியம், ஓவம், எழுத்து போன்ற பெயர்களால் சுட்டுகிறது.  மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச்சாத்தனார் என்ற சங்ககாலப் புலவர் பாண்டியன் சித்திரமாடத்து துஞ்சிய மாறனைப் பாடியுள்ளார். அப்பாடல் புறநானூற்றின் 59வது பாடலாக இருக்கிறது. எனவே அக்காலத்தில் சித்திரங்களை வரைந்து காட்சிப்படுத்திய சித்திர மாடங்கள் இருந்ததை அறியலாம். அதனால் சித்திரம் என்ற சொல்லும் சங்ககாலப் பழமையதே. பட்டினதாரும் திருக்கழுமல மும்மணிக் கோவையில் சித்திரக்காரரைஓவியப்புலவன்என்று கூறிமகிழ்கிறார். 


ஔவையார் பாடிய தனிப்பாடல் ஒன்று

சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்

வைத்ததொரு கல்வி மனப்பழக்கம் - நித்தம்

நடையும் நடைப்பழக்கம் நட்பும் தயையும்

கொடையும் பிறவிக் குணம்

என்கின்றது.

எவ்வளவுக்கு எவ்வளவு மீண்டும் மீண்டும் கீறிப் பழகிறமோ அவ்வளவுக்கு அவ்வளவு மிக அழகாக சித்திரம் வரையலாம். தமிழைப் பேசிப்பேசி, பாடிப்பாடிப் பழக செந்தமிழாகப் பேசவரும். கற்ற கல்வியும் மீண்டும் மனதில் நினைத்துப் பார்ப்பதால் என்றும் மறவாமல் நிலைத்து நிற்கும். அவரவரது ஒழுக்கமும் [நடை] ஒழுகும் தன்மையால் - பழக்கத்தால் மாறாதிருக்கும். ஆனால் எல்லோருடனும் நட்பாக இருப்பதும் பிறருக்காக இரங்குவதும் கொடுப்பதும் பிறப்போடு வருவது. சில மாங்கனி நாராக இருக்கும், சில புளிக்கும், சில இனிக்கும். அவை போல நட்பும் தயையும் கொடையும் பிறவிக் குணமாக இருக்கும். அவற்றையும் நமது பழக்கத்தல் சிறிது மாற்றலாம்.


தமிழ்  மிகவும் இனிமையான மொழிஆனால் அதனைப் பேசிப் பழகும் பொழுது நன்கு பேசிப்பழக வேண்டும். ஏனெனில் தமிழில் எட்டு மயங்கொலி எழுத்துக்கள் உள்ளன. அந்த எட்டு எழுத்துக்கள் வருகின்ற சொற்களை முறையாகச் சொல்லிப் பழகப் பழக தமிழை நன்கு பேசலாம். அதனாலேயே செந்தமிழும் நாப்பழக்கம் எனக்கூறினர்.


தமிழில் உள்ள மூவகை லகர, ளகர, ழகர எழுத்துக்களையும் மூவகை நகர, ணகர, னகர எழுத்துக்களையும் இருவகை ரகர, றகர எழுத்துக்களையும் மயக்கொலி எழுத்துக்கள் என்பர். அவற்றின் வேறுபாடு தோன்ற பேசிப்பழக்க நம் முன்னோர் பல பாடல்களை சிறுவர்க்கு கற்றுக்கொடுத்தனர்.

குழலினிது யாழினிது என்பர் தம்மக்கள்

மழலைச் சொற்கேளா தவர் 

எனும் இத்திருக்குறளைச் சொல்லிப் பழக லகர, ழகர ளகர வேறுபாடுகளை சிறுவர் புரிந்து கொள்வர்.


மயக்கொலியைக் கற்க திருஞானசம்பந்தர் பாடிய இரண்டாம் திருமுறையில் உள்ளதென் திருமுல்லைவாயில் பதிகத்தில்இருக்கும் இத்தேவரங்களைப் பாடிப் பழக்குவது நன்று.


பண்: பியந்தைக்காந்தாரம் [இராகம்: நவரோசு]

வாராத நாடன் வருவார் தம் வில்லின்

  உரு மெல்கி நாளும் உருகில்

ஆராத இன்பம் அகலாத அன்பன்

  அருள்மேவி நின்ற அரன் ஊர்

பேராத சோதி பிரியாத மார்பின்

  அலர் மேவு பேதை பிரியாள்

தீராத காதல் நொதி நேர நீடு

  திரு முல்லை வாயில் இதுவே      - (தி.முறை: 2: 954)


ன்று ஒன்றொடு ஒன்றும் ஒருநான்கொடு ஐந்தும் 

  இரு மூன்றொடு ஏழும் உடனாய்

அன்று இன்றொடு என்றும் அறிவு ஆனவர்க்கும்

  அறியாமை நின்ற அரன் ஊர்

குன்று ஒன்றொடு ஒன்று குலையொன்றொடு ஒன்று

  கொடி ஒன்றொடு ஒன்று குழுமிச்

சென்று ஒன்றொடு ஒன்று செறிவால் நிறைந்த

  திரு முல்லை வாயில் இதுவே      - (தி.முறை: 2: 955)


ஊன் ஏறு வேலின் உருவேறு கண்ணி

  ஒளி ஏறு கொண்ட ஒருவன்

ஆன் ஏறு அதுஏறி ஆழகேறு நீறன்

  அரவு ஏறு பூணும் அரன் ஊர்

மான் ஏறு கொல்லை மயில் ஏறிவந்து

  குயில் ஏறு சோலை மருவித்

தேன் ஏறு மாவின் வளம் ஏறியாடு

  திரு முல்லை வாயில் இதுவே      - (தி.முறை: 2: 957)


அத்துடன்

ஒழுகலரிது அழிகலியில் உழியுலகு 

               பழிபெருகு வழியை நினையா

முழுதுடலில் எழுமயிர்கள் தழுவுமுனி 

               குழுவினொடு கெழுவுசிவனைத்

தொழுதுலகில் இழுகுமலம் அழியும்வகை 

                கழுவும்உ ரை கழுமலநகர்ப்

பழுதிலிறை யெழுதுமொழி தமிழ்விரகன் 

                வழிமொழிகள் மொழி தகையவே

      - (தி.முறை: 3:725)


எனும் மூன்றாம் திருமுறையில் உள்ள திருப்பிரமபுரப் பதிகத்திலிருக்கும் இத்தேவாரத்தை பாடிப்பழக செந்தமிழும் நாப்பழக்கமாகி  விரைவாகப் பேசவரும்.

இனிதே,

தமிழரசி.


குறிப்பு:

சிறுவர்க்கு தமிழ், இசை போன்றவற்றைக் கற்பிப்போர் இத்தேவாரங்களை சமயம் என்ற வரம்பைக் கடந்து தமிழைக் கற்பிப்பதற்கு பயன்படுத்தினால் மிகவிரைவாகத் தமிழை சரியான உச்சரிப்புடன் பேசவைக்கலாம்.

Thursday, 5 May 2022

மறையது பகர்வாய் மறையோளே!

ஒருவளென நினைந்து உருகு மடியவர்

  உளம் உறை உமையோளே

திருவென வந்து திகழ்விழி மலர

  திருவருள் பொழியும் அழகோளே

பெருவரை வெற்பின் அரையன் றன்மகளாய்

  பிறந்தருள் புரிந்த இறையோளே

முருகென நின்று முறுவலது மிளிர

  மறையது பகர்வாய் மறையோளே

இனிதே,

தமிழரசி.


குறிப்பு:

சொல்விளக்கம்

ஒருவள் - ஒருத்தி

உமையோள் - உமையவள்

திருவென - இலட்சுமி

திகழ்விழி - ஒளிபொருந்திய கண்

மலர - விரிய

அழகோளே - அழகையுடையவள்

பெருவரை - மாமேரு

வெற்பு - மலை

அரையன் - அரசன்

இறையோள் - இறைவி

முருகென - அழகாக

முறுவல் - சிரிப்பு

மிளிர - பற்கள் ஒளிர

பகர்வாய் - சொல்வாய்/உணர்த்துவாய்

மறை - வேதம் [அறம், பொருள், இன்பம், வீடு]

மறையோள் - வேதங்களை அறிந்தவள்.

Sunday, 1 May 2022

தொழிலாளி எனும் ஒரு சொல் மட்டுமா உண்டு?


ஒரே ஒரு கணம் என் கண்கள் விரிய மேலே படத்தில் இருப்பதைப் படித்தேன்.    என்னால் நம்பமுடியவில்லை. தமிழில் உள்ள லகர, ழகர, ளகர என்ற மூன்று எழுத்துக்களையும் உடைய ஒரே சொல்தொழிலாளிஎன்ற கூற்றுச் சரியா? இன்னும் அந்த அளவுக்கு தமிழ்மொழி தன் சொல்வளத்தில் வறண்டு போய்விடவில்லை.

இன்று தொழிலாளர் தினம். ஆதலால் தொழிலாளரை முதன்மைப்படுத்த அப்படி எழுதினாரா! விளங்கவில்லை. ஏனெனில் தொழிலாளர் தினத்தில் எழுதிய தொழிலாளி என்ற சொல்லையே எடுத்துக்கொள்வோம். தொழில் என்ற சொல்லின் அடியில் இருந்தே

1. தொழில்கள்

2. தொழிலாளி

3. தொழிலாளன்

4. தொழிலாளர்

5. தொழிலாளர்கள்

எனச் சொற்கள் பிறப்பது தெரியவில்லையா? இந்தச் சொற்களிலேயே , , என்ற மூன்று எழுத்துக்களும் வருகின்றனவே. அப்படியிருக்க எப்படி ஒரே சொல் தொழிலாளி என எழுதமுடியும்? 

குழல் ஊதும் கண்ணனின் பெயர்களில் ஒன்று குழலாளன். பெரியாழ்வார் பெரிய திருமொழியில் கண்ணனை

பனியிருங் குழலாளன் என்கிறார். அவரே இன்னொரு பாசுரத்தில்

பாண் தேன் வண்டு அறையும் குழலார்கள் பல்லாண்டு இசைப்ப 

- (பெரிய திருமொழி: 1462)

எனப் பெண்கள் பல்லாண்டு பாடியதையும் பதிவுசெய்துள்ளார். குழலார்கள் போல கள் விகுதியில் முடியும் குழல்கள், கழல்கள், மழலைகள், பலாப்பழங்கள் எத்தனை எத்தனை சொற்கள் தமிழில் இருக்கின்றன. இவை மட்டுமா!

1. நிழலளி - காடுகளின் குளிர்ச்சியான நிழல்

2. அளிநிழல் - குளிர் நிழல்

3. சுழலளறு - சேற்றுச் சுழி

4. களத்தழல் - களத்தின் வெப்பம்

5. மழலைமேளம் - ஒரு இசைக்கருவி

6. குதலைமொழியாள் - பெயர்

7. மலர்விழியாள் - பெயர்

8. எழில்வேள் - பெயர்

9. மொழியியலாளர்

10. வளையெழில் - தோள்வளையின் அழகு 

இப்படித் தொடர்ந்து எழுதலாம்.


கவிஞர் கண்ணதாசனும்

வண்ணமார்பும் வளையெழில் தோள்களும்

  வார்த்து வைத்த சிலையெனுந் தோற்றமும்

என வளையெழிலைப் பாடி மகிழ்ந்தார். ஆதலால் நாம் அறியாத எத்தனையோ சொற்கள் தமிழில் புதையுண்டு கிடக்கின்றன. அதனை மனதிற் கொண்டு தேடிப்பார்த்து எழுதுவது தமிழுக்கும் எமக்கும் தமிழைப் படிப்போருக்கும் கைகொடுக்கும்.

இனிதே,

தமிழரசி.