Friday, 27 March 2026

மடத்துவெளி தன்னிலுறை வயலூரா!


மடமஞ்ஞை உடனாக மயிற்றோகை விரித்தாட

  மாலைக் கதிரொளியில் மதிமயக்கும்

  மடத்துவெளி தன்னிலுறை வயலூரா


தடமஞ்ஞை தடம்நாடி தனையர் செல்ல

  திரைவந்து தடமழிக்கும் ஊரதீவுமுனதாக

  தென்றல் சங்குபுக்கு தீம்பண்ணிசைக்க


மடமங்கையர் மனங்களித்து மருதயாழ் மீட்ட

  முன்னையோர் முகம்மலர்ந்து கேட்டிருந்த

  முத்தமிழின் சுவைநிறை புங்குடுதீவில்


வடபால் வடிவேலாய் வீற்றிருந்தருள் செல்வ

  வடிவேலனே விடிவெள்ளியாய் மிளிர்ந்தே

  வேண்டுவோர்க்கு வேண்டுவன தெரிந்தேநல்கு!

இனிதே,

தமிழரசி.


சொல்விளக்கம்:

மடமஞ்ஞை - பெண்மயில்

மயில் - ஆண்மயில்

கதிரொளி - சூரிய ஒளி

மதிமயக்கும் அறிவைமயக்கும்/ வியப்பைத்தரும்

தடமஞ்ஞை - கடற்கழியில் வாழும் மயில்

தடம் - சுவடு

தனையர் - பிள்ளைகள்

திரை - கடல் அலை

தடமழிக்கும் - சுவட்டை அழிக்கும்

சங்குபுக்கு - சங்கில் புகுந்து

மடமங்கையர் - இளமங்கையர்

மருதயாழ் - வயலும் வயல்சார்ந்த இடத்தில் வாழ்ந்த மக்கள் வாசித்த இசைக்கருவி.

மருதப்பண் - தற்போது கரகரப்பிரியா இராகம்

வடபால் - வடதிசையில்

வடிவேலாய் கூரான/அழகான வேல்வடிவில்

விடிவெள்ளியாய் - விடிகிறது என்னும் நம்பிக்கையைத் தரும் வெள்ளிபோல்

தெரிந்தே நல்கு - தெரிந்து எடுத்துத் தருக.


குறிப்பு:

"சடாச்சர மந்திர சொரூபா சிவசிவ தாண்டவ நந்தினி பாலா

கடாச்சர கிருபானந்த ரூபா கட கட கங்கை பிரபாநதி பாலா"
என்னும்  இவ்வரிகளைத் தொடக்கமாக உடைய 'பாட்டும் பதிகத்தை' மடத்துவெளி அதிகாரிபுலத்தில் இருந்த பாலமுருகனுக்கு எழுதியவர் ஊரதீவு வரகவி முத்துக்குமாரப் புலவர். அவர் ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தில் வாழ்ந்தவர் என்பதை அறியமுடிகிறது.
என் தந்தை பண்டிதர் மு ஆறுமுகன் அவர்கள் 1951ல் எழுதிய ஆய்வுக்கட்டுரையில் 'ஊரதீவு வரகவி முத்துக்குமாரப் புலவர்' 150 வருடங்களுக்கு முன் வாழ்ந்தவராகாக் குறிப்பிட்டுள்ளார். எனவே பாலமுருகனாய் - வயலூர் முருகனாய் - மடத்துவெளி வாழ் பாலமுருகனுக்கு முதன்முதல் பாட்டும் பதிகமும் பாடிய காலம் 150+75 = 225 வருடங்கள். என் தந்தையும் 
"மங்கலம் தங்கிவிளை அதிகாரி புலமேவி
வளருமொரு இள வழகேன!" எனப் பதிகம் எழுதியிருந்தார்.

ஆதலால் புங்குடுதீவு மடத்துவெளி வயலூர் அருள்மிகு ஶ்ரீபாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு [25/03/2026] அன்று நான் சென்ற பொழுது எழுதிய  மேலேயுள்ள பாடலில் நம் முன்னோர் முகம் மலர்ந்து கேட்டிருந்த முத்தமிழைக் குறிப்பிட்டுள்ளேன். மடத்துவெளியில் காலங்காலமாக ஒரு பாலமுருகன் வாழ்ந்து வருகிறார் என்பதையும் தெரிந்து கொண்டேன். 

No comments:

Post a Comment